தக் லைஃபும் தாக்குதல்களும்
“கடல்”- சினிமாவுக்குப் பத்தாண்டுகளுக்குப் பின் நாவல்…
அன்புள்ள ஜெ,
உங்கள் நண்பர் அரவிந்தன் கண்ணையனின் திரைவிமர்சனம் உங்கள் பார்வைக்கு. இணையத்தில் எழுதிக்குவிக்கப்பட்ட பலநூறு விமர்சனங்களுக்கு நேர் எதிரான விமர்சனம் இது. ஆனால் சென்ற சில நாட்களாக இத்தகைய விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.
முன்பு கடல் வந்தபோதும் இப்படி ஆக்ரோசமான எதிர்விமர்சனங்களும் டிரோல்களும் வந்தன. ஆனால் இன்று ஒரு சாரார் அது அபாரமான ஒரு படம் என்று சொல்வதைக் கேட்கமுடிகிறது. கடல் சினிமாவின் மூலவடிவம் நாவலாக வெளிவந்துள்ளது என்று அறிந்தேன். வாசிக்கவேண்டும்.
ராஜ்
Thug Life: ஒரு திரையனுபவம்
நேரம் போனதே தெரியவில்லை. அபாரமான படம். உண்மையில் டிரோல் செய்கிறவர்களும் நானும் ஒரே படத்தை தான் பார்த்தோமா என்றே படம் முழுதும் தோன்றியது. கமல் தான் மகா நடிகன் என்று போகிற போக்கில் காட்டிவிடும் இடங்கள் அநேகம். சிறை விடுதலைக்குப் பின் திரிஷாவை சந்திக்கும் அந்த காட்சி கவிதை. நடிகன், கலைஞன் என்றால் அவன் தான். கமலின் பல படங்களில் நாம் கமல் என்கிற தனி மனிதனின் வாழ்வின் கூறுகளை காண முடியும். Kamal’s movie have autobiographical traces. கமல்–திரிஷா–சிம்பு பற்றி அநேக கிண்டல்கள் ஆனால் வாழ்விலும், இலக்கியத்திலும் கானும் கவித்துவ முரண் அவர்கள் பிணைப்பு. திரிஷா மீது பெரும் காதலும் மனைவியான அபிராமி மீதும் மாறா காதல் அதிசயமல்லவே நம்மை சுற்றிய வாழ்விலும் காண்பது தானே அது? வரலாற்றிலும் உதாரணங்கள் உண்டே? மகாத்மா முதல் முத்தமிழ் அறிஞர் வரை பார்த்தது தானே அது?
திரைக்கதை எல்லாம் நேர்த்தியாகவே இருந்தது. கமல் ஒரு சினிமா ரசிகனாக தனக்கு இப்படம் முதலில் பிடித்தது என்றது உண்மை. இந்த படத்தை கழுவி ஊற்றுபவர்கள் என்னமோ காலையில் Bicycle Thief பார்த்து மதியம் பதேர் பாஞ்சாலி பார்த்து இரவு ஈரானிய திரைப்படத்தில் லயிப்பது போல் பேசுகிறார்கள். எல்லா படத்திலும் நிறை குறைகள் இருக்க தான் செய்யும் இதிலும் உண்டு. அதற்காக என்னமோ குப்பையை கொடுத்து விட்டது போல் எழுதி தள்ளுகிறார்கள். ஐயோ இத்தனை கஷ்டப்பட்டார்களே, இவ்வளவு கோடி செலவாச்சே என்று உங்களை பாராட்ட சொல்லவில்லை உண்மையாகவே மணி, கமல், ரஹ்மான் மீது ஒரு பரவலான ஒவ்வாமை இணைய உலகில் இருக்கிறது. பலருக்கு இம்மூவர் மீது தனித்தனியாகவோ கூட்டாகவோ வன்மமும் குரோதமும் இருக்கிறது.
நாயகனோடு படம் நன்றாகவே கனெக்ட் ஆகிறது. நாயகன் வந்த போது அதை வணிகத்தில் வீழ்த்தியது ரஜினி போட்ட குப்பை ஒன்று. காலப் போக்கில் தான் நாயகன் பாராட்டபட்டது. வரலாறு முக்கியம்.
இந்திய திரையிசையின் துருவ நட்சத்திரமாக ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் விளங்குகிறார் அல்லா ராக்கா ரஹ்மான். பாடல்களு பின்னணி இசையும் ஓ சுகானுபவம். ரஹ்மான் திரையிசைக்கு கொடுக்கும் உழைப்பு அபாரம் அவர் ஈடுபடுத்தும் டெக்னீஷியன்கள் ஒரு army. ஆம் அது தான் சர்வதேச தரம். தனி ஆவர்த்தனம் செய்யலாம் தான் ஆனால் அது குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவதற்கு ஒப்பானது. ரஹ்மானின் இசைக்கு சரியான விமர்சனம் எழுத நிச்சயம் தமிழகத்தில் ஆளே இல்லை. இந்தியாவிலும் எனலாம். கமலுக்கும் ரஹ்மானுக்கும் ஒரே பிரச்சனை தான். They are creative giants lost in a sea of mediocrity and given that they subject themselves to commercial needs they attempt to bow and scrape before intellectual pygmies. கமலின் பல பேட்டிகளும் உரையாடல்களும் சமீப காலத்தில் ஆசுவாசத்தையே தருகிறது அதற்கு முக்கிய காரணம் அவரை (ஏன், ராஜா, ரஹ்மான் கூட தான்) உருப்படியாக பேட்டி எடுக்க கூட ஒருவரில்லை. அந்த ஆடியோ லாஞ்ச் தொகுப்பாளர்கள் கமல், ரஹ்மானின் கால் தூசுக்கு சமானம், இந்த கும்பலை வைத்துக் கொண்டு தான் அவர்கள் சரக்கை சந்தைக்கு கொண்டு வர வேண்டி இருக்கிறது.
படம் முடிந்து வெளியே வருகிறேன் ஒரு கும்பல் கிண்டலும் கேலியுமாக பேசிக்கொண்டிருந்தது. படத்தில் கடுமையாக தாக்கப்பட்ட கமல் மலை உச்சியிலிருந்து தொலைவில் தெரியும் பௌத்த குடியிருப்பை பார்த்துக் கொண்டு எப்படி அடைவது என்று யோசிப்பார் அப்போது ஒரு பணிச் சரிவு அவரை அங்கு கொண்டு சேர்க்கும். இதை ஒருவன் கிண்டலடிக்கிறான், “ஆமா பெரிய லாஜிக்கா காமிக்கறாங்களாம்” என்று. இதே ஆள் மூன்று வாரம் முன்பு தாம் க்ரூஸைன் சாகசங்களுக்கு விசிலடித்திருப்பார்.
படம் எனக்கு நிச்சயம் பிடித்தது. எல்லா நடிகர்களும் மிக நேர்த்தியாக செய்திருக்கிறார்கள். வையாபுரி “நடித்த” படம் என்றால் ஹே ராமும் இதுவும் தான். அது தான் கமல் எனும் கலைஞன் மற்றவர்களின் திறனை வெளிக்கொணரும் வகை. கமலின் வாரிசாக சிலம்பரசனை நான் நினைத்த காலமுண்டு அந்த நம்பிக்கை மீண்டும் துளிர்த்தது. எம்.ஜி.ஆரின் வாரிசாக ரஜினியும் சிவாஜியின் வாரிசாக கமலும் வந்தனர். ரஜினி வாரிசாக விஜய் வந்தார் அடுத்து வேறு யாராவது வரக் கூடும் ஆனால் கமலின் இடம், நாளை அவர் இறந்தால், வெற்றிடம் தான். கமல் மரணம் பற்றி அதிகம் பேசியது “உத்தம வில்லன்” படத்தில், அதன் பிறகு இப்போது. ஓ ஆரம்ப காட்சிகளில் அச்சு அசல் குருதிப்புனல் கமலை காணலாம்.
இன்னும் ஒரு முறை கூட திரையரங்கில் பார்க்கலாம்.
அரவிந்தன் கண்ணையன் (முகநூலில்)
அன்புள்ள ராஜ்,
ஒரு கமல் ரசிகராக உங்கள் ஆதங்கம் புரிகிறது.
நான் சொல்லவிருப்பதை பொதுவாக திரையுலகுக்குள் உள்ள எவரும் சொல்ல மாட்டார்கள். அது உருவாக்கும் எதிர்வினைகளைச் சந்திப்பது மிகக்கடினம். நான் முழுச்சினிமாக்காரன் அல்ல, எழுத்தாளன், ஆகவே சொல்லலாம். (நாம் சொல்வதை எவரும் கவனிக்க மாட்டார்கள்.)
கங்குவா, ரெட்ரோ, தக்லைஃப் என பல சினிமாக்கள் தொடர்ச்சியாக திட்டமிட்டு வீழ்த்தப்படுகின்றன. முதன்மைக் காரணம் அரசியல். அரசியல் இயக்கங்கள் இன்று இணையத்தில் ஒற்றைப்பெரும் அமைப்பாகத் திரண்டுள்ளன.ஒரு படத்துக்காக அவர்கள் திரளவில்லை, தொடர்ச்சியாக ஆண்டுமுழுக்க ஒற்றைத்தரப்பாக திரண்டு செயல்பட்டுக்கொண்டே இருக்கின்றனர். அந்த பெரிய அமைப்பு ஒரு சினிமாவை அழிக்க நினைத்தால் அவர்களுக்கு அது ஒருநாள் வேலைதான்.
அரசியலமைப்புகளின் பிரச்சாரங்களை பொதுமக்கள் நம்புவதில்லை. ஆனால் அரசியலமைப்புகள் சினிமாக்களை வீழ்த்த செயல்படக்கூடும் என இன்னும் மக்களுக்குத் தெரியவில்லை. ஆகவே இவற்றை பொதுமக்களின் கருத்தாகவே எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்
தக்லைப் திரையரங்கில் வெளியாகி வெறும் இருபது நிமிடங்கள் ஆவதற்கு முன்னரே மிகக்கடுமையான பலநூறு எதிர்விமர்சனங்கள், டிரோல்கள், வெளியாகிவிட்டன. அனைவருமே படத்தை அமெரிக்காவில் பார்த்தோம், துபாயில் பார்த்தோம் என்று எழுதினார்கள். முதல்காட்சி முடிவதற்குள்ளேயே படம் பற்றிய எதிர்மறை கருத்து உருவாக்கப்பட்டுவிட்டது. காரணம் கமல்ஹாசனின் அரசியல்தான். சூரியாவுக்கும் இதே பிரச்சினைதான்.
இதில் பல நடைமுறை நுணுக்கங்கள் உள்ளன. ஒரு தரப்பு படத்தை வீழ்த்த முயன்றால் இன்னொரு தரப்பு தூக்க முயலலாமே என்று கேட்கலாம். அது சாத்தியமே இல்லை. எவரானாலும் ஒரு நுகர்வுப்பொருளைப் பற்றி எதிர்மறைச் சித்திரத்தை மட்டுமே உருவாக்கமுடியும். நேர்நிலைச் சித்திரத்தை உருவாக்க முடியாது. ஒரு தாக்குதலுக்கு எதிர்த்தாக்குதல் மட்டுமல்ல, தடுப்பு நிலைபாடுகூட எடுக்கமுடியாது. கமல்ஹாசனுக்கும் ரசிகர்படை உண்டு, அரசியல்தரப்பும் உண்டு, அவர்கள் செயலற்றவர்கள். அவர்கள் வேண்டுமென்றால் இன்னொரு படத்தை வீழ்த்தலாம்.
சிறிய படங்களை இப்படி வீழ்த்தமுடியுமா என்றால் அது சாத்தியமல்ல. சிறிய படங்களுக்கு இந்தவகை தாக்குதல்கள் விளம்பரம்தான் ஆகும். பெரிய படங்களை மட்டுமே தாக்கி வீழ்த்தமுடியும். பெரிய படங்கள் ஏற்கனவே பெரிய அளவில் பிரமோ செய்திருப்பார்கள். ஆகவே அனைவரும் அதைக் கவனிப்பார்கள். அந்தக் கவனத்தை அப்படத்தைத் தாக்குபவர்கள் மிக எளிதாக தங்கள்மேல் திருப்பிக்கொள்கிறார்கள்.அதாவது படத்தை தாக்குபவர்கள் அப்படம் அளிக்கும் விளம்பரத்தைப் பயன்படுத்தியே அதை வீழ்த்துகிறார்கள்.
சென்ற சில ஆண்டுகளில் பிரமோவே செய்யப்படாமல் வெளிவந்த படங்கள் சத்தமில்லாமல் தப்பித்துக் கொண்டன. சரி, அப்படியென்றால் பிரமோ செய்யாமலிருக்கலாம் என்றால் மிகப்பெரிய படத்தில் அது பெரிய ‘ரிஸ்க்’. ஏனென்றால் அத்தகைய படங்களுக்கு தொடக்கவிசை மிக முக்கியம்.
மிக அரிதான கதைக்கருவும், மிக வேறுபட்ட திரைக்கதையும் கொண்ட ஒரு படத்தை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றால் எந்த அளவுக்கு எதிர்மறை விமர்சனம் செய்தாலும் எடுபடாது. அதனால் அந்தப்படம் மேலும் ஆதரவைத்தான் பெறும். ஆனால் நூறு இருநூறு கோடி ரூபாய் முதலீடு கொண்ட ஒரு மிகப்பெரிய வணிகப்படத்தை அப்படி எடுக்க முடியாது. அனைவருக்கும் உகந்த படமாக அமையவேண்டும் என்றால் அதற்கு ஒரு சராசரித்தன்மை அவசியம். பொதுவாக கதைக்கரு, கதைக்களம் எல்லாமே கொஞ்சம் அறிமுகமானதாகவே இருக்கவேண்டும். கதைசொல்லும் முறை, நடிப்பு போன்ற சிறிய மாற்றங்களே சாத்தியம் ஹாலிவுட்டின் எந்தப் பெரிய படத்தைப் பார்த்தாலும் இதைப் புரிந்துகொள்ள முடியும். அத்தகைய சுவாரசியமான, நடுத்தரத் தன்மை கொண்ட ஒரு படத்தை எதிர்மறையாகச் சித்தரித்து, கேலி செய்து வீழ்த்திவிட முடியும்.
இந்தியில் தொடர்ச்சியாக படங்கள் இப்படி வீழ்த்தப்பட்டன. அத்தனை நடிகர்களும் அடிபணிந்தனர். அண்மையில் எம்புரானுக்குப்பின் மோகன்லால் காலடியிலேயே விழுந்து விட்டார். இங்கும் அந்த வகையான உச்சகட்ட அழுத்தம்தான் உள்ளது. இங்கும் தாக்குப்பிடிப்பது கடினம் என்பதே என் எண்ணம்.
தக் லைப் எனக்குப் பிடித்திருந்தது. ஒரு கேங்ஸ்டர் படம். ஆனால் ஆணவமும் அதன் விளைவான துரோகமும் ஊடாடும் சித்திரத்தை அளிக்கிறது. நீண்ட காலக் கதை. ஆகவே பல இடைவெளிகள் கொண்ட படம். வெவ்வேறு இடங்களில் தொடர்ச்சிகளை தொட்டுத்தொட்டு செல்கிறது. கொஞ்சம் கவனமாகப் பார்க்கப்படவேண்டிய படம். ஆனால் அக்கவனத்தை சிதறடித்துவிட்டால் மொத்தமாகவே பார்வையாளனிடமிருந்து அகன்றுவிடக்கூடியது.
*
கடல் மீதான விமர்சனங்கள் வேறுவகை. அந்நாவலின் அடிப்படைத்தளம் கிறிஸ்தவ இறையியல். அந்த உருவகங்கள் எதுவும் இங்கே எவருக்கும் பிடிகிடைக்கவில்லை. பாடல்கள் பெருவெற்றி அடைந்தபின் ரசிகர்கள் ஒரு காதல்படத்தைப் பார்க்க வந்திருந்தார்கள். அத்துடன் அந்தப்படம் ஒரு பெரிய கதையின் உச்சங்கள் மட்டுமே கொண்ட ஒன்று. அதைக் கோத்துக்கொண்டு படம் பார்ப்பது அவசியமாக இருந்தது. அந்தக்கவனம் அளிக்கப்படவில்லை.
கடல் நாவல் இப்போது கிடைக்கிறது. வாங்கிப் படிக்கலாம். நாவல் என்னும் கலை எப்படி சினிமா என்னும் கலையாக உருமாறுகிறது என்பதைக் காணலாம். சினிமா இன்னும் துலங்கும்.
ஜெ
கடல் வாங்க தொடர்புக்கு : contact@vishnupurampublications.comPhone : 9080283887
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

