அறியாத நிலம்- கடிதம்

புல்வெளி தேசம் வாங்க

அன்புள்ள ஜெ,

என் மனைவி அவுஸ்திரேலியாவில் தான் வசிக்கின்றாள். சென்ற ஆண்டே நானும் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்து விட்டேன் இனி அவர்கள் வீசா தந்தால் செல்வதுதான். எனக்கு வெண்முரசை அறிமுகப்படுத்திய நண்பர்களில் ஒருவன் “நீ போக முன்னம் ஜெயமோகன்ட அவுஸ்திரேலியா பயண அனுபவத்தின் புல்வெளி தேசம் எண்ட புத்தகம் இருக்கு வாசிச்சிரு” என்று சொல்லி இருந்தான். உண்மையில் அவன் “ஜெயமோகன்” என்ற வார்த்தையை பயன்படுத்த வில்லை. அது என்ன என்று இப்போது சொல்ல மாட்டேன் இறுதியில் சொல்லுவேன்.

ஐந்து மாதங்கள் கடந்திருந்தது. நான் என் அக்காவை பார்ப்பதற்காக மல்லாவியிலிருந்து யாழ்ப்பாணம் சென்றிருந்தேன். அவள் மெசையில் இருந்த புத்தகங்களுக்கு இடையில் புத்தகம் ஒன்றின் அடிப்பகுதி மட்டும் தெரிவது போல் ஒரு புத்தகம் இருந்தது. அதில் அடியில் கறுப்பான  நிழல் உருவில் புல்வெளியில் கங்காரு ஒன்று தாவ தயாரான நிலையில் பின்புலம் அந்திவானத்திற்குரிய மஞ்சள் சிவப்பு நிறங்களில் காணப்பட்டது. உள்ளுணர்வு தூண்ட அப்புத்கத்தை இழுத்து வெளியே எடுத்தவுடன் நினைத்து சரிதான் என்ற புன்னகையுடன் பார்தேன். அது 2009ம் ஆண்டு முதல் பதிப்பில் வந்த புல்வெளி தேசம் புத்தகம்.

அக்கா யாழ்ப்பாண பொது நூலகத்திலிருந்து இரவல் எடுத்து வந்திருந்தாள். நூலகத்திற்குரிய பாணியில் துணி மற்றும் கடினமான அட்டை வைத்து கட்டப்பட்டிருந்தது. புத்தகத்தை திறந்து முகர்ந்து பார்தேன் பழைய புத்தகங்களுக்கே உரித்தான கிளர்ச்சி ஊட்டும்  மணத்துடன் இருந்து. தாள்கள் இளம் பழுப்பு நிறத்தில் இருந்தது. அக்காவிடம் புத்தகத்தை கொண்டு சென்று வாசிக்க தருமாறு கேட்டேன். அவள் ” டேட்ட பார்,இருந்தா கொண்டு போ” என்றாள். பின் அட்டையின் உட்புறத்தில் பார்தேன் இது வரை பதினொருவர் முன்னமே எடுத்திருந்தனர். ஒப்படைப்புக்கான திகதி மே 14 என்று குறிக்கப்பட்டிருந்து. ” “இன்னும் நாலு நாள் இருக்கு வாசிச்சுட்டு தாரன்” என்று எடுத்துவந்து விட்டேன்.

நான் இதுவரை ஜெயமோகனின் பயணக்கட்டுரைகள் எதையும் வாசித்திருக்கவில்லை. ஆனால் கடந்த மூன்று மாதங்களாக ஜெயமோகனின் இணைய தளத்தின் தின பதிவுகள் அனைத்தயும் தினமும் காலையில்  காலைக்கடன் முடிக்கும் வேளையில் வாசித்து முடித்து விடுவேன். அதில் நான் வாசித்த கட்டுரைகள் பொதுவாக  சொல்ல வந்த விடயத்தை தெளிவாகவும் செறிவாகவும்  சொல்லப்பட்டதாக இருக்கும். இப்புத்தகத்திலும் அவுஸ்திரேலியா பற்றி அவ்வாறு இருக்கும் என்றுதான் நினைத்து வாசிக்க ஆரம்பித்தேன். வாசித்து முடித்த பின் அது சிறந்த அனுபவத்துடன் கூடிய பரந்த அறிதலாக இருந்து. 

அவுஸ்திரேலிய விமானநிலைய கட்டுப்பாடுகளையும் காரணத்தையும் சொல்லி ஜெட்லாக்கை முறியடிப்பதற்கான டிப்சுடன் ஆரம்பித்த புத்தகம் தாவரங்கள், விலங்குகள், நிலத்தோற்றம், குடியேற்றம், போர், பொருளாதாரம், மக்கள், ஆக்கிரமிப்பு, கலைகள்,  தமிழ் ஆளுமைகள் என்று புத்தகத்தில் அவுஸ்திரேலியாவை பற்றி மட்டும் அல்லாமல் இந்தியாவுடன் ஒப்பிட்டு  ஜெயமோகனுக்கே உரித்தான உருவகங்கள், தத்துவார்த்த சிந்தனைகளுடன் சிறந்த விவரணைகள் மூலம் விளக்கி இருந்தார். 

அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா இரண்டுமே நான் அறியா நாடுகள் இயலுமானவரை நான் இலங்கையில் உள்ள விடயங்களை வைத்தே புரிந்து கொண்டேன். பின்வரும் விடயங்களை உதாரணமாக சொல்லலாம்.

மக்கள் வாழும் மிகச் செறிவான இடங்கள் ( செரி), இரண்டு மூன்று ஏக்கர் இடைவேளி உள்ள வீடுகள், இடைப்பட்ட சிறிய நிலப்பரப்புடைய வீடுகள் பொன்ற வேறுபாடுகளை பொதுவாக இலங்கையில் உள்ள ஒரு மாவட்டத்திற்குள் ஒன்றரை மணித்தியால பயணத்திற்குள்ளாகவே பார்த்துவிடலாம். மற்றும் கங்காரு களை பற்றி சொல்லும் போது இந்திய மலை அணில் பற்றியும் சொல்லி இருப்பார் இலங்கையிலும் அவ்வகை அணில்கள் உண்டு மர அணில் என்று நாங்கள் அழைப்போம். பார்த்ததும் அவ்… என்று சோக்கி நிக்குமளவு adorable ஆக இருக்கும். அது இலங்கையில் மலையகத்தில் மட்டுமல்லாது அனைத்து காட்டு பிரதேசங்களிலும் உள்ளது. மல்லாவியில் உள்ள எங்கள் வீட்டிற்கு கிழமைகளில் குறைந்தது நான்கு தினங்கள்சரி வரும். பார்த்து விட்டேன் என்றால் அது போகும் வரை நானும் போவதில்லை. 

*இப் புத்தகத்தில் கூறப்பட்ட விடயங்களில்  90% ஆனவை எனக்கு தெரியாத விடயங்கள். குறிப்பாக ஒன்றை சொல்வதென்றால், இது வரை நான் கூவம் என்ற வார்தையை என்றால் பொதுவாக கழிவுநீர் மற்றும் குப்பை நிறைந்து இருக்கும் நீர் நிலை அல்லது ஆறு என்று தான் நினத்திருந்தேன். வாசித்த பின் தான் அது உண்மையான ஆற்றின் பெயர் என்று தெரிந்து.

எனக்கு இப்புத்தகம் அறிதலுடன் மட்டுமல்லாது அணுக்கம் ஆவதற்கு முக்கிய காரணம் இடையிடையே உள்ள நகைச்சுவை மற்றும் அவர் மனைவியுடனான செல்லச் சீண்டல்களும் என்று சொல்லலாம்.

இப்புத்தகம் அறிதல் ஆர்வம் உள்ளவர்களுக்கான Chocolate Multipack என்று சுருக்கமாக சொல்லாம்.

எனக்கு பல நண்பர்கள் ஆசானாக உள்ளார்கள். இப்புத்தகத்தை வாசித்து முடித்தபின் என் ஆசான் நண்பன் ஆனதாக உணர்கிறேன். 

ரொனால்ட் ஹாரிசன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 10, 2025 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.