காவியம் – 26
யக்ஷன், சாதவாகனர் காலம் பொமு 2 சாஞ்சிகானபூதி என்னும் பிசாசை அதன்பின் இரவுகளில் மட்டுமே நான் சந்தித்தேன். பகலில் நகரினூடாக வலுவிழந்த காலை இழுத்துக்கொண்டு, நீண்ட மூங்கில்கழிமேல் உடலின் முழு எடையையும் ஏற்றியவனாக நான் நகருக்குள் சென்று என் உணவை தேடிவந்தேன். இடிந்த மாளிகையின் புழுதி படிந்த படிகளில் சாக்குப்பை மேல் உடலைச் சுருட்டிப் படுத்துக் கொண்டேன். கானபூதியின் நிழலுருக்களில் ஒன்று பெரும்பாலும் என்னுடன் இருந்தது. தன் பெயர் சக்ரவாகி என அது அறிமுகம் செய்துகொண்டது.
“உன்னைப்போல் முட்டாளை நான் இதற்கு முன் சந்தித்ததே கிடையாது. சரியான முட்டாள் நீ. சொல்லப்போனால் நீ வாழ்நாள் முழுக்க முட்டாளாகவே இருந்திருக்கிறாய். நீ தவறவிட்ட தருணங்களை ஒவ்வொன்றாக எண்ணிப்பார்” என்று அது என்னிடம் பேசியபடியே வந்தது. “கானபூதியின் கதைகளின் புதிரை நீ விடுவிக்கவே முடியாது. ஒன்றிரண்டை தவறுதலாக நீ அவிழ்த்துவிடலாம். ஆனால் நீ தோற்பது உறுதி. தோற்றுவிட்டால் நீ என்ன ஆவாய்? முடிவடையாத அந்தக் கதை உன்மேல் ஒரு வேதாளம் போல ஏறிக்கொள்ளும். அதை நீ இறக்கி வைக்கவே முடியாது. அது உன்னை ஒவ்வொரு கணமும் துன்புறுத்திக் கொண்டிருக்கும். ஆறவே ஆறாத ரணம்போல…”
நான் அதனுடன் பேசுவதை தவிர்த்தேன். “ஏனென்று கொஞ்சம் யோசித்தாலே நீ உணர்ந்துகொள்ள முடியும். நீ யார்? காலமும் இடமும் எல்லையிடப்பட்ட வாழ்க்கை கொண்ட மானுடன். கானபூதி யார் தெரியுமா? அவன் காலமற்றவன், இடமற்றவன்… அவனால் எங்கும் செல்லமுடியும். எவருடைய உள்ளத்திற்குள்ளும் நுழையமுடியும்… அவன் அறிந்தவற்றை நீ எப்படி அறியமுடியும்?” அது என்னை தொட்டு உசுப்பியது. “மடையா, நீ இப்போதுகூட சென்று கானபூதியிடம் இந்த ஆட்டத்திற்கு நீ வரவில்லை என்று சொல்லிவிடலாம். வேறெதையாவது நீ அதனிடம் கேட்கலாம்… அவன் அளவில்லாத கருணை கொண்டவன்.”
“விலகு… தள்ளிப்போ. உன்னிடம் பேச எனக்கு மனமில்லை” என்று நான் கூவி அடிப்பதற்காக கழியை தூக்கினேன்.
சிரித்தபடி சக்ரவாகி என்னிடம் சொன்னது. “நான் நிழல், என்னை நீ என்ன செய்ய முடியும்? நான் உன்னிடம் பேசுவதை உன்னால் தடுக்கவே முடியாது… இந்நகரில் இப்படி பல்லாயிரம் பேரிடம் நாங்கள் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். அவர்கள் காதருகே பேசத்தொடங்குவோம். உண்மையிலேயே பேச்சு கேட்கிறதா அல்லது அது தங்கள் மனமயக்கமா என அவர்கள் குழம்புவார்கள். அந்தப்பேச்சை அவர்களால் கட்டுப்படுத்தவும் திசைமாற்றவும் முடிகிறதா என்று பார்ப்பார்கள். எந்த வகையிலும் அது அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை என்று தெரிந்ததும் பயந்துவிடுவார்கள். அவர்கள் எண்ணியே பார்க்காதவற்றையும் அவர்களுக்கு முற்றிலும் தெரியாதவற்றையும் நாங்கள் பேசத்தொடங்கும்போது நிலைகுலைந்துவிடுவார்கள்”
“அவர்களின் தூக்கம் அழிந்துவிடும். எங்களிடம் கெஞ்சவும் மன்றாடவும் தொடங்குவார்கள். எங்களை அதட்டுவார்கள், வசைபாடுவார்கள். நாங்கள் பேசுவனவற்றுக்கு எதிர்வினை ஆற்றுவார்கள். அப்போதுதான் அவர்களைச் சூழ்ந்திருப்பவர்கள் அவர்களை கவனிக்க ஆரம்பிப்பார்கள். அதுவரை அவர்களிடம் ஏதோ சிறு சிக்கல் இருப்பதாக நினைத்தவர்கள் இப்போது பைத்தியம் என நினைக்க ஆரம்பிப்பார்கள். பிடித்துக்கொண்டு சென்று மருத்துவர்களிடம் காட்டுவார்கள். தனியறைகளில் அடைத்துவைத்து நாட்கணக்கில் தூங்கச் செய்வார்கள். என்னென்னவோ சிகிச்சைமுறைகள் உள்ளன. எல்லாமே அபத்தமானவை. அந்தச் சிகிச்சையாலேயே அவர்கள் உடலும் உள்ளமும் தளர்ந்து வெறும் தசைக்குவியல்களாக ஆகிவிடுவார்கள். கண்களில் ஒளி அகன்றுவிடும். விழிகள் எங்கும் நிலைகொள்ளாமல் தாவிக்கொண்டே இருக்கும். முகம் வீங்கிப் பழுத்துவிடும். நாக்கு குழறும். ஓரிரு சொற்களுக்கே குரல் உடைந்து, கண்கலங்கி அழத்தொடங்கிவிடுவார்கள்”
“நாங்கள் அவர்களை விடவே மாட்டோம்… எங்களில் ஒருவர் ஒருவனை பற்றிக் கொண்டால் போதும், அவனை அத்தனைபேரும் சூழ்ந்துகொள்வார்கள். ஒருவன் விலகிச்சென்றால் இன்னொருவன் வந்துவிடுவான்… எங்களுக்கு மனிதர்கள் வேண்டும். மனிதர்களிடம்தான் நாங்கள் பேசமுடியும். பேசுவதன் வழியாகத்தான் நாங்கள் காலத்திலும் இடத்திலும் எங்களை பொருத்திக்கொள்ள முடியும்…” சக்ரவாகி சொன்னான். “நான் காலத்தையும் இடத்தையும் கடக்கும் ஆற்றல் கொண்டவன். ஆனால் கானபூதி போல எல்லையற்றவன் அல்ல. ஏனென்றால் நான் இந்த மண்ணில் உயிர் வாழ்ந்தவன், உன்னைப்போல ஒரு மானுடனாக இருந்தவன். இன்னும் மிஞ்சியிருக்கிறேன். என் உடல் எரிந்து அழிந்தது. அந்த உடலில் உருவான ஒன்று என் உடல் எரிந்தணைந்த பின்னரும் எஞ்சியிருக்கிறது. எந்த மரத்திலும் அமரமுடியாமல் வானிலேயே சிறகடித்துத் தவிக்கும் ஒரு பறவை. மனிதர்கள் எங்களுக்குச் சிறு இளைப்பாறல்கள்…”
“என்னிடமிருப்பது ஒரு எஞ்சும் ஆசை… வஞ்சம் உன்னிடம் எஞ்சியிருப்பதுபோல. சீற்றம், ஏமாற்றம், குழப்பம், கேள்வி என எது மிஞ்சியிருந்தாலும் அது அந்த உடலுடன் சேர்ந்தே தளர்ந்து வலுவிழக்கவேண்டும். அந்த உடலுடன் சேர்ந்து அதுவும் அழியவேண்டும்” சக்ரவாகி சொன்னான். “நீ செய்துகொண்டிருப்பது உன் உடலைவிடப் பெரிதாக உன் வஞ்சத்தை வளர்ப்பது… இதோ இப்போது எதிரில் ஒரு கார் வருகிறது. அதை குடிகாரன் ஒருவன் ஓட்டிக்கொண்டிருக்கிறான். நீ அதன் அடியில் விழுந்து சாகக்கூடும். உன்னில் எஞ்சும் அந்த உக்கிதமான வஞ்சம் எங்கே போகும்? என்னைப்போல் ஆகும்… நான் கொள்ளும் இந்த பெருந்தவிப்பை நீ புரிந்துகொள்ளவே முடியாது. இது ஆறவே ஆறாத தாகம் போல. நீ தேர்ந்தெடுத்திருப்பது அதைத்தான்.”
“நீ தேவியரை நேரில் பார்த்தாய். அதுவே நீ அடைந்த மிகப்பெரிய வாய்ப்பு. அதைத் தவறவிட்டாய். இப்போது கானபூதி அளிக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் தவறவிடுகிறாய். இன்று அவன் உன்னிடம் கதை சொல்லப்போகிறான்… அந்தக் கதையில் நீ ஒருவேளை வென்றால் அவனிடம் நீ உன் உள்ளம் அடங்கவேண்டும் என்று கேள். உன் உடலுடன் சேர்ந்து உன் வஞ்சமும் மட்கி அழியவேண்டும் என்று கேள். இன்னும் சில ஆண்டுகளில் நீ செத்து அந்த படிக்கட்டின்மேல் கிடப்பாய். உன்னை தோட்டிகள் அவர்களின் மண்வெட்டியால் மலத்தை எடுப்பதுபோலத்தான் அள்ளி எடுப்பார்கள். மனிதக் கை படாமலேயே நீ சிதைக்குச் செல்வாய்… அங்கே எரிந்து சாம்பலாவாய்… கோதாவரியின் புழுதிக்கரையில் உன் மண்டையோடு புதைந்து கிடக்கும்… அப்போது இங்கே உன்னிடமிருக்கும் எதுவும் எஞ்சக்கூடாது… அதுதான் மீட்பு.”
“ஆம்” என்று நான் சொன்னேன். நெஞ்சில் கைவைத்து கண்ணீருடன் “உண்மையிலேயே நான் ஆசைப்படுவது அதைத்தான்… எனக்கு வேறேதும் வேண்டியதில்லை” என்றேன்.
“யோசித்துப் பார். நீ என்னென்ன வாய்ப்புகளை உன் உணர்ச்சிகர மூடத்தனத்தால் தவறவிட்டாய் என்று நான் சொல்கிறேன். உன் தந்தை கொல்லப்பட்டார். அவரை இந்த நகரமே கொண்டாடியது. நீ அவருடைய மகன் என்று சொல்லியிருக்க வேண்டும். திரும்பத் திரும்ப அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் முன் சென்று நின்றிருக்கவேண்டும். அவர்கள் உனக்கு எதையாவது செய்தே ஆகவேண்டும் என்று கட்டாயம் உருவாகியிருக்கும். ஏனென்றால் அவரை மறக்காமல் அவர்களால் வாழமுடியாது. அவருடைய கொலையை கைவிடாமல் அவர்கள் அரசியலில் முன்நகர முடியாது. அவர்கள் எண்ணினாலும் ஏதும் செய்யமுடியாது என அவர்களுக்கே தெரியும். அவர்களுக்குக் குற்றவுணர்ச்சி இருந்தது. அதை நீ தூண்டியிருக்கலாம். அவர்கள் உனக்கு ஓர் இடத்தை உருவாக்கி அளித்திருப்பார்கள்”
“இல்லை, என்னால் அதைச் செய்ய முடியாது”
“சரி, அப்படியென்றால் இன்னொன்று செய்திருக்கலாம். நீ ராதிகாவை அழைத்துக்கொண்டு பைத்தானுக்கு வந்திருக்கலாம்… உன் தந்தையின் கட்சிக்காரர்களிடம் அடைக்கலம் புகுந்திருக்கலாம். அதை ஒரு கட்சிப்பிரச்சினையாக ஆக்கியிருக்கலாம். உன் தந்தைக்காக எதுவும் செய்யமுடியாத குற்றவுணர்ச்சியால் அவர்கள் உங்களைப் பாதுகாத்திருப்பார்கள்”
நான் படபடப்புடன் “இல்லை” என்றேன். ஆனால் அது உண்மை என்று தெரிந்துவிட்டது. “ஆமாம், அதைச் செய்திருக்கலாம்… செய்திகளில் வந்திருந்தாலே எங்களை அவர்கள் எதுவும் செய்ய முடியாது. அவள் தமையன் ஒரு போலீஸ் உயரதிகாரி என்பதையே நான் மறந்துவிட்டேன்… என் அறிவின்மை… நான் முட்டாள். அடிமுட்டாள்” தலையில் அறைந்துகொண்டு அழுதபடி நான் அமர்ந்துவிட்டேன். “ராதிகா! ராதிகா!” என ஏங்கி அழுதேன்.
“நடுச்சாலையில் அமர்ந்து அழுதுகொண்டிருக்கிறாய். ஆனால் ஒருவர்கூட உன்னை பொருட்படுத்தவில்லை. இப்படி நீ அழுவது வழக்கமாக நடப்பதுதான் என தோன்றுகிறது” என்று சக்ரவாகி சொன்னான்.
“ஆமாம், அவளை நினைக்கவே கூடாது என்றுதான் உறுதியுடன் இருக்கிறேன். நினைப்பதே இல்லை என்றுதான் எண்ணிக்கொண்டும் இருக்கிறேன். ஆனால் எப்போது எதற்காக அழுதாலும் அவளுக்காகத்தான் அழுகிறேன். நான் அழாத நாளே இல்லை”
“உன் அழல் அடங்கவேண்டுமா? ஒரு துளி மிச்சமில்லாமல் நீ அவளை மறக்கவேண்டுமா?”
“ஆமாம், வேண்டும். இப்போது நான் விரும்புவதெல்லாமே அதை மட்டும்தான். உயிருடன் மட்கிக்கொண்டிருக்கும் என் உடலால் இந்த பெருந்துயரை தாள முடியவில்லை. போதும், இதில் இருந்து விடுபட்டாலே போதும்”
“வா, இன்றிரவு நீ கானபூதி சொல்லும் கதையின் புதிரை எப்படியாவது வென்றுவிடு… இன்று வென்றுவிட்டாய் என்றால் நீ விடுதலை அடைந்துவிட முடியும்…”
“ஆமாம், அதைத்தான் செய்யப்போகிறேன்” என்று நான் கண்ணீரை துடைத்தபடிச் சொன்னேன்.
“கானபூதியின் கதை உனக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்” என்று சக்ரவாஹி சொன்னான்.
“கதாசரிதசாகரத்தில் உள்ளதுதானே?”
“ஆம், ஆனால் அதில் முழுமையாக இல்லை. காஷ்மீரில் வாழ்ந்த சோமதேவர் செவிவழியாக எவரெவரோ சொன்னதைக் கேட்டு எழுதியது அந்தக் கதை…” சக்ரவாகி சொன்னான். “உண்மையான கதை இதுதான். இதை ஒரு யக்ஷன் சொல்லிக்கொண்டிருந்தபோது நான் கேட்டேன்”
வைஸ்ரவணனாகிய குபேரனின் அவையில் இருந்த யக்ஷர்களில் ஒருவன் சுப்ரதீகன். குபேரனுக்கு இருந்த சாபம் என்பது தன் களஞ்சியத்தில் இருந்த தங்கநாணயங்களையும் வைரவைடூரியங்களையும் எண்ணிக்கொண்டே இருப்பது. பொருளை எண்ண எண்ண அவை குறையும் என்பது அனைவரும் அறிந்ததே. எண்ணத்தொடங்கும்போது இன்பமும், எண்ணி முன்செல்கையில் பதற்றமும், எண்ணி முடிக்கும்போது சந்தேகமும் தோன்றும். மீண்டும் எண்ணத் தொடங்கவேண்டும். குபேரன் அந்த மாயச்சுழலில் சிக்கிக்கொண்டான்.
எண்ணி எண்ணி ஏங்கி குபேரன் நோயுற்றவன் ஆனான். அவன் உடல்மெலிந்து சோர்வதைக் கண்ட அவன் துணைவியாகிய பத்ரை நாரதரிடம் என்ன செய்வது என்று கேட்டாள். நாரதர் குபேரனுக்கு தினமும் நூறு கதைகள் சொல்லப்படவேண்டும் என்று ஆலோசனை சொன்னார். எல்லா கதைகளும் பொன்னையும் பொருளையும் பற்றியதாக இருக்கவேண்டும். அதை மட்டுமே குபேரன் கவனித்துக் கேட்பார். ஆனால் எல்லா கதைகளுமே பொன்னும் பொருளும் அளிக்கும் மகிழ்ச்சியைப் பற்றியதாக இருக்க வேண்டும். அதில் மட்டுமே குபேரன் நிறைவடைவார். ”பொன்னை விடப்பெரியது பொன்னைப் பற்றி பேசுவதும் எண்ணுவதும். பொன்னைப்பற்றிய கதைகளால்தான் பொன் ஒளிகொள்கிறது” என்று நாரதர் சொன்னார்.
அதன்படி ஆயிரத்து எண்பது யக்ஷர்கள் கொண்ட ஒரு பெரிய சபை அமைக்கப்பட்டது. அவர்கள் ஒவ்வொருநாளும் நூற்றெட்டு கதைகள் சொல்லவேண்டும். ஒவ்வொருவரும் பத்துநாட்களுக்கு ஒருமுறை புதிய கதை சொல்லவேண்டியிருக்கும். அங்கே காலம் முடிவற்றது என்பதனால் கதைகளுக்கும் முடிவிருக்க முடியாது. கதைகள் தனக்குப் பிடித்தமானதாக அமையாவிட்டால் குபேரன் அவையில் இருந்து எழுந்து சென்றுவிடுவான். ஆகவே ஒவ்வொரு கதையும் புதியதாக அமையவேண்டும்.
அந்த அவையில் கடைசியாக வந்து சேர்ந்த யக்ஷன் சுப்ரதீகன். மண்ணில் அவன் ஓர் ஏழை மரம்வெட்டியாக இருந்தான். காட்டுக்குள் வழிதவறிச் சென்ற அவன் அங்கே இருந்த ஆழமான தங்கச்சுரங்கத்திற்குள் விழுந்தான். பசுந்தங்கம் ஒளிரும் குழம்பாக நிறைந்திருந்த அந்த குகையை சுதன் என்னும் பூதம் காவல் காத்திருந்தது. அது பொன் என்று சுப்ரதீகனுக்குத் தெரியவில்லை. அவன் அதற்குள் இருந்து வெளிவர முயன்று தவறிவிழுந்து இறந்தான். அவன் உடல் தங்கமாக ஆகி அதில் பதிந்தது. பொன்னில் மறைந்தமையால் அவன் குபேரன் அருள் பெற்று யக்ஷனாகி குபேரபுரிக்கு வந்தான்.
சுப்ரதீகனின் தமையனாகிய தீர்க்கஜம்ஹன் தன் தம்பியை தேடி அலைந்து நீண்டநாட்களுக்குப் பின் அங்கே வந்து சேர்ந்தான். தங்கச்சுரங்கத்தில் தங்கத்தில் பதிந்து மட்கி மறைந்திருந்த சுப்ரதீகனின் எலும்புகளைக் கண்டுகொண்டான். அந்த தங்கத்தை சற்றும் பொருட்படுத்தாமல் தன் தம்பியின் எலும்புகளை மட்டும் சேகரித்துக் கொண்டுசெல்ல அவன் முயன்றான். அப்போது அங்கே தோன்றிய அந்தப் பொன்னின் காவலனாகிய சுதன் என்னும் பூதம் அந்த பொற்குகைக்கு ஒருவர் ஒருமுறை மட்டுமே வரமுடியும் என்று சொன்னது. தன் தம்பிக்கான நீர்க்கடனை அளித்து அவனை மீட்பதே தனக்கு முக்கியம் என்று தீர்க்கஜம்ஹன் சொன்னான். அப்படியென்றால் கொஞ்சம் பொன்னை எடுத்துக்கொள் என்று சுதன் சொன்னான். தம்பியின் எலும்புகளைக் கொண்டுபோகும்போது பிறிதொன்றையும் கொண்டுசெல்லக்கூடாது என்று தீர்க்கஜம்ஹன் சொல்லிட்டான். அவனுடைய அறத்தில் மகிழ்ந்த அவனுடைய தெய்வமாகிய காளி தோன்றி அவனுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டது. தான் தம்பியுடன் இருக்கவேண்டும் என்று தீர்க்கஜம்ஹன் சொன்னான். அவனும் யக்ஷனாக ஆகி குபேரபுரிக்கு வந்தான்.
சுப்ரதீகன் குபேரபுரியின் அவையில் மிக இளைய யக்ஷன். ஏழு வானுலகங்களில் நடந்த கதைகள் எவற்றையும் அவன் அறிந்திருக்கவில்லை. அவனிடம் சொல்வதற்குக் கதைகள் இருக்கவில்லை. அவன் மண்ணுலகில் அவன் அறிந்த கதைகளைச் சொன்னான். குபேரன் சலிப்புடன் எழுந்து சென்றுவிட்டமையால் அவன் சபையில் சிறுமையடைந்தான். துயருடன் அவன் வானில் பறந்துகொண்டிருக்கும்போது பிணந்தின்னிக் கழுகு ஒன்றைச் சுற்றி ஆயிரம் பறவைகள் பறப்பதைக் கண்டான். அந்த விந்தையை அறியும்பொருட்டு அவற்றில் ஒரு சிறு பறவையிடம் அது அந்த கழுகை தொடர்ந்து செல்வது ஏன் என்று கேட்டான். அந்தக் கழுகின் பெயர் சூலசிரஸ் என்றும், அது ஓர் அரக்கன் என்றும் அப்பறவை சொன்னது. ஊற்று நிலைக்காத ஊருணிபோல கதைகளைச் சொல்பவன் அவன், கதைகளுக்காகவே அவனுடன் அத்தனை பறவைகள் உள்ளன என்றது.
சுப்ரதீகன் ஒரு நாரையாக மாறி சூலசிரஸுடன் இணைந்து பறந்தான். அது சென்றமர்ந்த மலைப்பாறை உச்சிகளில் தானும் அமர்ந்தான். அது சொன்ன கதைகளை எல்லாம் கேட்டான். அவை தெய்வங்களும் அறியாத தொன்மையான கதைகள். அரக்கர்களுக்கு மட்டுமே தெரிந்தவை. அந்தக் கதைகளை அவன் குபேரனின் அவையில் சொல்லத் தொடங்கினான். அவை எல்லாமே பொன்னையும் பொருளையும் தேடிச்சென்றடைந்து மகிழ்ந்தவர்களைப் பற்றியவை. வேடர்களும், காடர்களுமான மக்கள் வெள்ளியையும் தங்கத்தையும் வைரங்கள் போன்ற அரிய கற்களையும் கண்டடைந்து அடைந்த மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களை விரித்துச் சொல்பவை. குபேரன் ஒவ்வொரு கதையையும் கேட்டு தொடையில் தட்டி ஆராவாரம் செய்தான். ஒவ்வொரு முறையும் சுப்ரதீகனை பாராட்டினான்.
பிற யக்ஷர்கள் சுப்ரதீகன் மேல் பொறாமை கொண்டார்கள். அவனிடம் இத்தனை கதைகள் எங்கிருந்து வருகின்றன என்று பேசிக்கொண்டார்கள். யக்ஷர்கள் அறிந்த விண்ணுலகின் கதைகள் பெரும்பாலானவை பொருளைத் துறப்பதைப் பற்றியவையாகவும், பொருளின் பயனின்மை பற்றியவையாகவும் இருந்தன. மண்ணுலகில் சூதர்கள் சொல்லும் கதைகளும், புலவர்கள் எழுதும் கதைகளும், முனிவர்கள் அருளுரைக்கும் கதைகளும் பொன்பொருளை நிராகரிப்பவையாகவே இருந்தன. அவற்றில் பொருளின் அழகையும் மதிப்பையும் சொல்லும் கதைகளை தேடித்தேடிக் கண்டடையவேண்டியிருந்தது. கதைகளை வெட்டியும் திருத்தியும் சொல்லவேண்டியிருந்தது. அக்கதைகளை குபேரன் முன்னரே கேட்டிருந்தான் என்பதனால் அவை அவனுக்கு எரிச்சலையும் அளித்தன. ஆனால் சுப்ரதீகன் சொல்லும் கதைகளில் எல்லாம் பொருள் முழுமுதல் தெய்வம் போல் அமர்ந்திருந்தது.
மற்ற யக்ஷர்கள் ரகசியமாக சுப்ரதீகனை பின்தொடர்ந்து சென்று என்ன நிகழ்கிறது என்பதைக் கண்டறிந்தனர். அரக்கன் ஒருவனிடமிருந்தே அக்கதைகளை சுப்ரதீகன் அறிந்துகொள்வதை கண்டு அவர்கள் சான்றுகளுடன் வந்து குபேரனிடம் முறையிட்டனர். “கதைகள் என்பவை தங்களுக்கான ஆற்றல்கொண்டவை. அவை குபேரபுரியிலும் விண்ணுலகங்களிலும் ஊடுருவினால் இங்கே அவை அழியாமல் நிலைகொண்டுவிடும். இங்குள்ளோரின் எண்ணங்களை மாற்றும். ஒரு கட்டத்தில் அரக்கர்கள் விண்ணுலகைக் கைப்பற்ற அவை வழிவகுக்கும். சூலசிரஸ் திட்டமிட்டே இக்கதைகளை சுப்ரதீகன் வழியாக இங்கே அனுப்பியிருக்கிறது” என்றனர்.
குபேரன் சுப்ரதீகனை பிடித்து தன் சபைக்குக் கொண்டுவந்தான். ”சூலசிரஸிடமிருந்து நீ கதைகளைப் பெற்றது உண்மையா?” என்று கேட்டான்.
“ஆம், அவனிடம் முடிவில்லாமல் கதைகள் உள்ளன” என்று சுப்ரதீகன் அகமலர்ச்சியுடன் சொன்னான்.
“சூலசிரசை கொன்று அவன் தலையுடன் இந்த சபைக்கு நீ திரும்ப வரமுடியுமா?” என்று குபேரன் கேட்டார்.
“அரசனே, என்னாலோ உங்களாலோ எந்த தெய்வத்தாலோ ஒருபோதும் ஒரு கதையை அழிக்கமுடியாது. கதைசொல்லி என்பவன் முடிவில்லாத கதைகளின் ஊற்று. பிரபஞ்சத்தைப் படைத்த பிரம்மம் ஒரு கதைசொல்லியே” என்று சுப்ரதீகன் சொன்னான்.
“நீ கேட்டறிந்து நினைவில்கொண்டுள்ள கதைகளின் எடையால் இனி பறக்கமுடியாமல் ஆவாய். நீ யக்ஷநிலையை இழப்பாய். மண்ணில் விந்தியமலை அடிவாரத்தில் உள்ள அடர்காட்டில் ஒரு பிசாசாகப் பிறப்பாய். அரக்க மொழியில் நீ அறிந்த கதைகளை பைசாசிக மொழியில் பேசிக்கொண்டிருப்பாய். அந்தக் கதைகளை ஒருபோதும் பிறமொழிக்கு மாற்றமுடியாதவனாக ஆவாய்“ என்று குபேரன் சாபமிட்டான்
சுப்ரதீகனின் தமையனாகிய தீர்க்கஜம்ஹன் எழுந்து கண்ணீருடன் கைகூப்பி “அரசே என் தம்பி தங்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்னும் ஆசையில் பிழைசெய்துவிட்டான். அவனுக்காக நான் இங்கே நோன்பிருக்கிறேன். அவனுடைய சாபம் முடியும் நாளைச் சொல்லி அருளவேண்டும்” என்றான்.
மனம் இரங்கிய குபேரன், “கார்முகிலுக்கு விடுதலை என்பது பெய்தொழிவதேயாகும். இவன் அறிந்த அத்தனை கதைகளையும் எவரிடமேனும் சொல்லிவிடுவான் என்றால் இவன் விடுதலை அடைவான்… ஒரு கதை மிஞ்சியிருந்தாலும் விடுதலை அமையாது” என்று வாக்களித்தான்.
அவ்வாறுதான் சுப்ரதீகன் விந்தியமலையின் கீழே விரிந்திருந்த இந்நிலத்திற்கு வந்தான். இது அன்று அடர்ந்து செறிந்த கொடுங்காடு. இங்கே நின்றிருந்த மரம் ஒன்றில் அவன் குடியேறினான். அவனுக்கு பின்னர் கானபூதி என்ற பெயர் அமைந்தது.
”கானபூதி என்னும் இந்த பைசாசத்தின் எல்லா கதைகளும் சூலசிரஸ் என்னும் அரக்கனால் சொல்லப்பட்டவைதான் என்று சொல்லப்படுகிறது” என்று சக்ரவாகி சொன்னது. “இந்தக் கதை சித்ரகர் எழுதிய கதாரத்னமாலிகா என்னும் காவியத்தில் உள்ளது”
“நாம் ஒருவருக்கொருவர் பேசும் எல்லாக் கதைகளும் ஏதேனும் காவியத்தில் உள்ளவை. எல்லாமே சம்ஸ்கிருதக் காவியங்கள்” என்று நான் சொன்னேன். “நீயும் கானபூதியும் சொல்லும் பல நூல்கள் அழிந்துவிட்டன. இருக்கும் நூல்களில்கூட பல வரிகள் மறைந்துவிட்டன.”
”ஆம், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக கானபூதி கதைகளைச் சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறது. அக்கதைகள் நினைவுகள் வழியாக உருமாறிக்கொண்டே இருக்கின்றன. நூல்களில் கூட பாடபேதங்கள் உருவாகியிருக்கின்றன”
“இந்தக் கதைகளுக்கு அப்பால் கானபூதி யார்? இவை காவியங்கள். இக்காவியங்களுக்கு அடியில் என்ன நிகழ்கிறது?”
“நீ அதை கானபூதியிடமே கேட்கலாம்” என்றது சக்ரவாகி.
அன்றிரவு நான் காட்டுக்குள் சென்றேன். என் அருகே வந்துகொண்டே இருந்த சக்ரவாகி என்னருகே விலகிக்கொண்டதை உணர்ந்தேன். அதே மரத்தடியில் கானபூதியின் அருகே நான் அமர்ந்தேன்.
”என் பொருட்டு சக்ரவாகி உன்னிடம் பேசியிருப்பான்” என்று கானபூதி சொன்னது. “நீ என்னைப் பற்றிக் காவியங்கள் சொல்வனவற்றை அறிந்திருப்பாய்…”
“அவை உண்மையா?”
“அவை ஒரு வகை கதைகள்” என்றது கானபூதி. “எல்லா கதைகளும் ஒருவகை உண்மைகள்.”
”நான் உன் கதையைக் கேட்க விரும்புகிறேன்.”
“அதற்கு நீ என் மொழிக்குள் வரவேண்டும்… நான் பேசுவது பைசாசிகம். அந்த மொழியிலுள்ள என் கதைகளை இன்னொரு மொழிக்கு பெயர்க்க முடியாது.”
“ஏன்?”
“நீரை இன்னொரு கலத்திற்கு ஊற்றமுடியும். கல்லை இன்னொரு கல்லுக்குள் செலுத்தமுடியாது” என்றது கானபூதி. “அந்த மொழிக்குள் நீ வந்தால் அக்கதைகளை நான் உனக்குச் சொல்வேன். பலருக்கும் நான் கதைகள் சொல்லியிருக்கிறேன். என் கதைகள் சொல்லி முடிக்கப்படவே இல்லை.”
”ஆமாம், நான் கதைகளைக் கேட்க விரும்புகிறேன்.”
“அப்படியென்றால் நீ என் மொழிக்குள் வரவேண்டும். அதையே உன் விருப்பம் என்று சொல்” என்றது கானபூதி. “நேற்று நீ என்னிடம் கோரிய அந்த விருப்பத்தை கைவிட்டுவிடு.”
இடி விழுந்து மரம் பற்றிக்கொள்வதுபோல அக்கணத்தில் நான் அனல்கொண்டேன். “இல்லை, என்னால் முடியாது… என்னால் முடியாது. என்னால் ஒருபோதும் முடியாது. அது மட்டும்தான் எனக்கு வேண்டும்… வேறெதுவும் வேண்டியதில்லை” என்று கூச்சலிட்டேன்.
கானபூதி தன் தெளிந்த கண்களுடன் என்னை பார்த்துப் பரிவுடன் புன்னகை செய்தது.
”பழிதான் எனக்கு வேண்டும்… பழி மட்டும்தான் வேண்டும். நீ எனக்கு வாக்களித்தாய். நீ அதை விட்டு விலகக்கூடாது. இது என் ஆணை… உன் சொல்மேல் ஆணை.”
“நான் விலகவில்லை… பைசாச சக்தியால் உன் பழியை நான் நிறைவேற்றுகிறேன்.”
“ராதிகாவின் கொலைக்கு முதற்காரணம் எவரோ அவர் அவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளதிலேயே மிகப்பெரிய தண்டனையை அடையவேண்டும்…”
“சரி, அதையே நிகழ்த்துகிறேன்” என்றது கானபூதி என்னும் கதைசொல்லும் பிசாசு.
(மேலும்)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

