காக்காய்ப்பொன், கடிதம்
காக்காய்ப்பொன் கதையை விஷ்ணுபுரம் ஐரோப்பிய கதை கலந்துரையாடலுக்காக மீள் வாசிப்பு செய்தேன். ‘ஏன்‘ என்ற என்றுமுள, பதில்களால் தீர்க்கவே முடியாத கேள்வியை இக்கதை விசாரம் செய்கிறது. அனைத்து தத்துவ தேடல்களுக்கு ஊற்றாகவும், எந்த தத்துவத்தினாலும் அறுதி விடையளிக்க முடியாத ஆதி வினா. தொல் மானுடன் முதல் கடைசி மனிதன் வரை உள்ளங்களில் எதிரொலித்து கொண்டிருக்க போகிற புதிர்.
‘கா‘ என்ற சமஸ்கிருத சொல் பற்றிய குறிப்பை சங்கரரின் பஜ கோவிந்த பாடலான ‘கஸ்தவம் கோஹம்‘ (யார் நான்) உடன் இணைத்து கொண்டேன். மீட்புக்காக இந்திய மெய்யியல் மரபு பரிந்துரைக்கும் வழிகள் நான்கு. முறையே தியான வழி (யோகம்), பக்தி வழி, பலன்களில் பற்றற்ற செயல் வழி மற்றும் ஞானத்தின் வழி. சத்யானந்தர் தியானம், பாராயணம் (பக்தி) மற்றும் புலனடக்கத்துடன் கூடிய கடும் உடலுழைப்பு (செயல் யோகம்) மூலம் மீட்பை தேடும் ஆன்மீக சாதகர். அத்வைதத்தின் வழியான ஞான விசார மார்க்கத்தில் அவரை சேர்க்கும் குரு காக்கையேதான். மின்னும் பொருட்கள் எவையாயினும் (காமம், ஆணவம் உட்பட) அவை உருவமற்ற, குணங்களற்ற பிரபஞ்ச சாரத்தின் மேல் ஒளிரும் மாய தோற்றங்களே என்ற விவேக சூடாமணியின் (பிரம்ம சத்யம், ஜகன் மித்ய) ஞானத்தை அவருக்கு காக்கை வழங்கி மீட்பளிக்கிறது.அத்வைத தரிசனத்தை இலக்கிய அனுபவமாக (மலை காடுகள் உறைந்த பச்சை அலை போன்ற சொல்லாடல்கள்) தந்த உங்களுக்கு நன்றி.
வாசு, ஆம்ஸ்டர்டாம்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


