நாம எவ்ளவோ பரவால்ல!

அண்மையில் நெல்லை அருகே மாணவனை பேருந்தில் ஏறி வெட்டிய நிகழ்வை ஒட்டி ஒரு நண்பர் என்னுடைய ஆலம் நாவலை நினைவுகூர்ந்து பேசிக்கொண்டிருந்தார். பார்வதிபுரம் கருப்பட்டிக் காப்பிகடை என்னும் டீக்கடையில். (பார்வதிபுரத்தில் உட்கார்ந்து டீ குடிக்கும் வசதிகொண்ட ஒரே கடை) பார்வதிபுரத்தில் ஒரு வாசகர் என்னும் பரவசத்தை அடைவதற்குள் அவர் தோவாளையைச் சேர்ந்தவர் என்று சொன்னார். (நெல்லை அருகே மாணவர் மேல் அரிவாள் வெட்டு. செய்தி)

பேசும்போது அவர் சொன்னார். “இதெல்லாம் திருநெவேலியிலே வழக்கமா நடக்கப்பட்டதுதான் சார். அங்கெல்லாம் நம்மூர் மாதிரி இல்லை”

நான் நாகர்கோயில் கொலையை பற்றிச் சொன்னேன். மளிகைக்கடை வைத்திருக்கும் ஒரு சாமானியர் இரவு 11 மணிக்கு கடைமூடிவிட்டு வீட்டுக்குப் போகும் வழியில் போதைஆசாமிகள் வழிமறித்து அவரிடமிருந்த சிறுதொகையை பிடுங்கிவிட்டு அவரை கல்லால் அடித்து கொன்று பெட்ரோல் விட்டு கொளுத்திவிட்டுச் சென்றுவிட்டனர். ( நாகர்கோயிலில் வியாபாரி எரித்துக்கொலை)

“அப்டியா?” என அவர் வியந்தார். “ஆனா அதெல்லாம் அடிக்கடி நடக்கிறதில்லை…இங்கெல்லாம் அப்டி இல்ல”

“இல்லியே….அதுக்கு முன்னாடி ஒரு லாயரை எரிச்சிருக்காங்களே”  (வழக்கறிஞர் எரித்துக்கொலை)

”அப்டியா?” என்றார்.

“அதுக்கு முன்னாடி இருளப்பபுரத்திலே இதே மாதிரி ஒருத்தரை எரிச்சிட்டாங்க” (இருளப்பபுரத்தில் எரித்துக்கொலை)

“இருக்கலாம், ஆனா திருநெவேலி அளவுக்கு இல்லை”

நான் மேற்கொண்டு பேசவில்லை. அது நடுத்தர வர்க்க மனநிலை. ‘மற்றவர்கள்’ ‘மற்ற இடங்கள்’ மோசமானவை. ‘நாம்’ ‘நமது இடம்’ பரவாயில்லை. அப்படித்தான் வாழமுடியும் இந்த எளிய வாழ்க்கையை.

ஆலம் வெளிவந்தபோது வண்ணதாசன் எழுதியதை எவரோ எனக்கு காட்டினர். நான் எழுதிய அந்த திருநெல்வேலியை அவர் அறிந்ததில்லை, நான் வேறொரு திருநெல்வேலியை எழுதுகிறேன், அது எங்கிருக்கிறது என்று தெரியவில்லை- என்று எழுதியிருந்தார். நான் சொன்னேன். அது உண்மை, அவருக்கு உண்மையிலேயே தெரிந்திருக்காது. அவர் வாழும் உலகம், அவர் வாழும் காலம் முற்றிலும் வேறொன்று.

படுகளம் வெளிவந்தபோது நெல்லையின் வட்டித்தொழில் பற்றி அப்படி ஒரு சித்திரத்தை ‘கேள்விப்பட்டதே இல்லை’ என்று சிலர் எழுதியிருந்தனர். அதாவது எந்த உண்மையும் அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்ததாக இருந்தால்தான் அது உண்மை. இது ஒரு நடுத்தரவர்க்க நம்பிக்கை. அதை நம்மால் கலைக்கவே முடியாது.

அதே நெல்லையில்தான் ஆண்டுகளுக்கு முன் கந்துவட்டி கொடுமை தாளமுடியாமல் குழந்தைகளையும் எரித்து தானும் எரிந்து ஒரு குடும்பம் பலியாகியது. மாவட்ட ஆட்சியர் மேலேயே குற்றம்சாட்டப்பட்டது, அவருடைய கண்முன் எரிந்தது. குற்றவாளிகளை பலமுறை அவர்கள் எழுத்துமூலமாக அடையாளம் காட்டியிருந்தனர். தற்கொலைக்குறிப்பிலும் சொன்னார்கள். என்ன நடந்தது? யாருக்காவது ஞாபகம் இருக்கிறதா?  (நெல்லையில் கந்துவட்டி தற்கொலை)

அதே நிகழ்வு மீண்டும் தொடர்வதாக ஊடகங்கள் சொல்கின்றன. (ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சி) ஆனால் நமக்கு அது கண்ணிலேயே படாது. ஏனென்றால் நமக்கு ஆர்வமில்லை. நம் சிறு உலகில் அவற்றுக்கு இடமே இல்லை.

இப்போது நெல்லையில் நில அபகரிப்புக்காக கொலை. (நெல்லையில் காவல் அதிகாரி கொலை). அவர் அந்த நில அபகரிப்பு பற்றி முதலமைச்சர் வரை மனு கொடுத்திருக்கிறார். காவல்துறை தன் புகார்களை விசாரிக்காமலேயே மூடுவதாகவும், தனக்கு கொலைமிரட்டல் விடுக்கப்படுவதாகவும், அதற்குக்   காவல்துறையே உடந்தை என்றும் காணொளி வெளியிட்டிருக்கிறார்.

ஆனாலும் கொலை. அதிலும் நல்ல விடிந்த காலையில் நடுச்சாலையில் வைத்து கூலிப்படையினர் கொன்றிருக்கிறார்கள். வழக்கபோல சிலர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். போலீஸார் புலன்விசாரணை செய்கின்றனர். முதல்தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிகை, ஜாமீன், விசாரணை பல ஆண்டுகள் நீள அடுத்தடுத்த கொலைகள். இந்தச் சித்திரம்தான் இப்படியே ஆலம், படுகளம் நாவல்களில் உள்ளது. ஆனால் நம்மவருக்கு அது தெரியாது, கேள்விப்பட்டதே இல்லை!

பிகாரில் ஒரு பாலம் கட்டியதுமே இடிந்தது. ‘அய்யய்யே பிகாரைப் பார்த்தீங்களா? பீடா வாயனுங்க’ என தமிழகத்தில் கெக்கலிப்பு. தமிழகத்தில் திருவண்ணாமலை அருகே கட்டிய பாலம் ஒரே மாதத்தில் இடிந்தது. இங்கே எவருக்குமே அது செய்தியாக கண்ணுக்குப் படவில்லை. (பதினாறு கோடியில் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது). ஆளும்கட்சியினரும், ஆளும்கட்சியின் அடிவருடும் எழுத்தாளர்களும் பாலம் இடிந்ததை நியாயப்படுத்திக்கூட எழுதினார்கள்.

நமக்கு எல்லாமே அரசியல்தான். நம்கட்சி ஆட்சியில் இருக்கும்போது எல்லாமே சரி, இல்லை என்றால் எல்லாமே தப்பு. நம்முடைய ஊர் நல்லது, பிற ஊர்கள் தப்பு. இதை நான் கேரளத்திலும் பார்க்கிறேன். மலையாளிகளுக்கு கேரளம் வேறு நிலம். ‘இதெல்லாம் கேரளத்திலே நடக்காது’ என்பார்கள்.

நூறு நாற்காலிகள் மலையாளத்தில் வெளியானபோது அதை ஒரு தமிழக நிலைமை என்றே அங்கே சொன்னார்கள். மேடையில் ஒருமுறை ஒருவர் ‘இதெல்லாம் கேரளத்தில் இல்லை’ என்றபோது நான் கேரளத்தில் இருந்து தொடர்ச்சியாக உதாரணங்களைச் சுட்டிக்காட்டினேன். அமைதியாகிவிட்டார்.

இன்று காலை ஒரு செய்தி வாசித்தேன். நாற்பதாண்டுகளுக்கு முன் ஒரு தலித் கிராமத்துக்குள் நுழைந்த உயர்சாதி (டாக்கூர்) கொள்ளையர்கள் அந்த மொத்த கிராமத்தையே சுட்டுத்தள்ளினர். பிரதமர் இந்திராகாந்தி நேரில் சென்று ‘உரிய நடவடிக்கை’ எடுக்கப்படும் என்றார். எதிர்கட்சித்தலைவர் வாஜ்பாய் கண்டித்தார். தலித் தலைவர்கள் கொதித்தனர்.

குற்றவாளிகள் மேல் வழக்கு தொடுக்கப்பட்டது. இப்போது தீர்ப்பு வந்துள்ளது, நாற்பதாண்டுகளுக்குப் பின். பெரும்பாலான குற்றவாளிகள் வயதாகி இயற்கை மரணம் அடைந்துவிட்டனர். பலர் அதன் பின்னரும் பல குற்றங்களில் ஈடுபட்டனர். பலர் அரசு வங்கி கடனெல்லாம் வாங்கி தொழில் செய்தனர். குடும்பம் குட்டியோடு வாழ்ந்து மடிந்தனர்.  மூன்று வயோதிகர்கள் எஞ்சியிருக்கிறார்கள். அவர்களுக்கும் பிரச்சினை இல்லை – இது முதல் தீர்ப்பு. இனி மூன்று மேல்முறையீடுகள் உள்ளன. உச்சநீதிமன்றம் வரைச் செல்லலாம். இன்னும் குறைந்தது இருபதாண்டுகள். அதற்குள் சுகமரணம் அடையலாம்.

‘ஆகா வடக்கனுங்களை பாருங்க’ என்று உற்சாகமடையலாம் என்றால் இங்கே இப்படி எத்தனை வழக்குகள் கிடக்கின்றன என்று எனக்கே தெரியும். ஆகவே பெருமூச்சு மட்டுமே விடமுடியும். வேண்டுமென்றால் ஒரு நாவல் எழுதலாம். நாலைந்து பிள்ளைப்பூச்சிகள் கிளம்பி வந்து “நம்பவே முடியலை…இதெல்லாம் நடக்குமா? கேள்விப்பட்டதே இல்லை…இதெல்லாம் எந்த ஊர்லே?” என்று விமர்சனமும் செய்வார்கள். நாலைந்து அரசியலாத்மாக்கள் வந்து “அய்யயோ தமிழ்நாடு முன்னேறிய மாநிலம்…நாம் ஐரோப்பாவுக்கே சமம். காரணம் எங்க தலைவர்கள்தான்…இதெல்லாம் அவதூறு” என்பார்கள்.

ஆலம் வாங்க

நூறு நாற்காலிகள் வாங்க  ஆலம் மின்னூல் வாங்க ஆலம் நூல் வாங்க – விஷ்ணுபுரம் பதிப்பகம் படுகளம் வாங்க ஆலம்- வி.எஸ். செந்தில்குமார் அழியா நஞ்சு- இ.ஆர்.சங்கரன் ஆதிநஞ்சின் கதை ஆலமும் படுகளமும்- கிருஷ்ணன் சங்கரன் படுகளம், வாசிப்பு பேருரு வீழ்தல்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 23, 2025 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.