கண்ணகியின் நகர்

கொடுங்கோளூர் கண்ணகி வாங்க

முனைவர் வி.ஆர்.சந்திரன் எழுதிய இந்த ஆய்வு நூலை கொற்றவை நாவல் வெளிவந்த காலகட்டத்தில், ஜெயமோகன் அந்நாவலை புரிந்து கொள்ள உதவும் என்ற நோக்கில் மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

      இந்த ஆலயம் எப்போது யாரால் கட்டப்பட்டது என்பதற்கான திட்டமான ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. கேரள மகாத்மியம் என்னும் நூலில் இக்கோயிலை பற்றிய புராண கதை ஒன்று சொல்லப்படுகிறது. இவ்வாலயத்தின் தெற்கே சுமார் ஒரு கிமி தொலைவில் மூலப்பதிட்டை ஒன்று இருந்ததாகவும் அங்கு பரசுராமர் பராசக்தியை நேரில் கண்டதாகவும் அன்னைக்கு ஆயிரம் குடம் மதுவும் ஆயிரம் கோழிகளை பலியாகத் தந்து அன்னையை அங்கு நிறுவியதாகக் கூறப்படுகிறது. பழந்தமிழகத்தில் வாழ்ந்த நாகர்களின் தெய்வம் தான் காளி அல்லது கொற்றவை. நாகர்கள் தான் ஆரம்ப காலத்தைய காளிகாவுகளை நிறுவியவர்கள் . (காவு என்றால் காடு என்று பொருள்)

      கண்ணகி மதுரையை எரித்த பிறகு வைகை வழியாகவே சென்று சேர நாட்டின் செங்குன்று மலை மீது ஏறி நின்றாள். ஒரு வேங்கை மரத்தின் அடியில் நின்ற போது கோவலன் தேவர்கள் சூழ விண்ணகர ஊர்தியில் கண்ணகியை தன்னுடன் அழைத்துச் சென்றான்.காடு காணும் பொருட்டு சென்ற சேரன் செங்குட்டுவனிடம் காட்டுக் குறும்பர்கள் கண்ணகியை பார்த்த கதையை சொல்ல சேர மன்னன் இமயத்திலிருந்து கல் கொண்டு வந்து தனது தலைநகரான வஞ்சியில் தற்போதைய கொடுங்கல்லூரில் கண்ணகிக்கு கோயில் எழுப்பினான்.

     கோவிலின் ஸ்ரீமூலஸ்தானம் என்று கூறப்படும் மேற்கு நோக்கி இருக்கும் மூலக்கருவரை இன்று முழுவதுமாக மூடப்பட்டிருக்கிறது.இங்குதான் ஆதிசங்கரர் ஸ்ரீ மகாமேரு சக்கரத்தை வைத்து தேவியை பதிட்டை செய்ததாக நம்பப்படுகிறது. ஆதியில் இந்த கருவறையே வழிபடப்பட்டிருக்கிறது ஆனால் பின்னர் என்ன காரணத்தினாலோ முற்று முழுதாக இந்த கருவறை மூடப்பட்டு வடக்கு முகம் பார்த்து உருவாக்கப்பட்ட புதிய கருவறையில் தேவி நிர்மாணிக்கப்பட்டு அந்த கருவறையே இப்பொழுது வணங்கப்படுகிறது.

       எட்டு கைகள் கொண்ட தேவியின் சிலையில் ஒரு கையில் சிலம்பு இருக்கிறது. இது கண்ணகி சிலை என்பதை ஊர்ஜிதப்படுத்தும் அத்தாட்சியாக இது இருக்கிறது.அம்மையின் வலது காதில் தங்கத்தால் ஆன சிம்மமும் இடது காதில் யானையும் குழைகளாக அணியப்பட்டுள்ளன. கோயிலுக்கு வெளியே கோயிற் காவலனான ஷேத்திரபாலனின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இச்சிலை சிலப்பதிகாரத்தில் வரும் சதுக்க பூதத்தின் சிலையாக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

      வருடத்தில் மூன்று திருவிழாக்கள் மிக முக்கியமாக கொண்டாடப்படுகின்றன. புரட்டாசி ( கன்னி) மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரி திருவிழா கலைகளுக்காகவும் அறிவு வளர்ச்சிக்காகவும் ஆடல் பாடலுடன் கொண்டாடப்படுகின்றது. இரண்டாவது மார்கழி மாதம் முதல் நான்கு நாட்கள் கொண்டாடப்படும் தாலப்பொலித் திருவிழாவாகும். பல்வேறு கோவில்களில் இருந்து கொண்டு வரப்படும் தாலங்கள் யானைகளின் மீது ஏற்றப்பட்டு ஊர்கோலமாக கொண்டு செல்லப்படுகின்றன.

       மீன மாதம் நடைபெறும் பரணி திருவிழா தான் மிக முக்கியமான திருவிழா ஆகும். இது தமோ குணம் ஓங்கிய திருவிழா என்பது மரபு. ஏகப்பட்ட சடங்குகளும் சம்பிரதாயங்களும் சமூகத்தின் பல்வேறு நிலைகளில் உள்ள சாதி மக்களால் முறையாகவும் விட்டுக் கொடுக்கப்படாமலும் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு மக்களுக்கும் தனித்தனியாக உகுந்த மரியாதை தரப்படுகின்றன. ஒவ்வொரு சடங்கு சம்பிரதாயங்களுக்கும் பின்னாலும் வரலாற்று நிகழ்வுகளும் அந்த சடங்குகள் ஏன் ஏற்பட்டன என்பதற்கான காரண காரியங்களும் மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளன. மிகப் பழமையான இந்த கோயில் காலத்தின் பல்வேறு சரித்திர சம்பவங்களையும் பார்த்து வந்துள்ளது. இதனால் சமூகத்தின் பல்வேறு நிலையில் உள்ள மக்களும் இந்த கோயிலில் உள்ள திருவிழாக்களினால் மிகவும் இறுக்கமாக பிணைக்கப்பட்டுள்ளனர். ஒரு சமூக மக்கள் இல்லை என்றால் திருவிழாவே இல்லை என்று ஆகும் அளவிற்கு ஒவ்வொரு சடங்குகளும் மிக முக்கியமாக செய்யப்படுகின்றன.

     கேரள வரலாறு மட்டுமல்லாமல் தமிழக வரலாற்றுக்கும் மிக முக்கியமான இடத்தை இந்த கொடுங்கல்லூர் பகவதி அம்மன் கோவில் கொண்டுள்ளது. பல லட்சக்கணக்கான மக்களால் வழிபடப்படும் இந்த கோவில் பக்திக்கு மட்டுமல்ல சரித்திரத்திற்கும் மிகப் புகழ்பெற்று விளங்குகிறது.

கிரிதரன்’

வாசிப்பை நேசிப்போம் குழுமம்

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 22, 2025 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.