அகமெம்னானின் கனவு

கிரேக்கப் பழங்கால நூல்களை இன்றைய இலக்கியத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அவை எவ்வளவு விரிவான புனைவுப்பரப்பில் இயங்கி, ஆழமான உணர்வுகளை, புரிதல்களை ஏற்படுத்தியிருக்கின்றன என்று புரிகிறது.

மனிதர்களுக்குள் நடக்கும் மோதலை மட்டும் கிரேக்கக் கதையுலகம் விவரிக்கவில்லை. மாறாக மனிதனுக்கும் கடவுளுக்குமான மோதலை. கடவுளின் பழிவாங்குதலைப் பற்றிப் பேசுகிறது. பூமியைப் போலவே வானமும் அங்கே முக்கியக் கதைக்களமாக விளங்குகின்றன.

ஒரு கதாபாத்திரத்தின் விதியை வானிலிருக்கும் ஒரு கடவுள் முடிவு செய்கிறார். மனிதர்கள் கடவுளின் கைகளில் பகடைக்காய்களாக உருளுகிறார்கள். அதிகாரத்திற்கான போட்டி மற்றும் முடிவற்ற காதல் போட்டிகளைக் கிரேக்க இலக்கியங்கள் அளவிற்கு எவரும் பேசியதில்லை.

ஹோமரின் கதை செல்லும் வேகத்தை எந்த நவீன எழுத்தாளரிடம் நாம் காண இயலாது. இலியட்டில் நாம் காணுவது போர்க்களத்தை மட்டுமில்லை. போருக்குப் பிந்திய நிகழ்வுகளை, மரணச்சடங்குகளை, போர்களத்தில் பின்பற்ற வேண்டிய அறத்தை. ஹோமரின் மகத்தான கவித்துவம் போர்க்கள நிகழ்வுகளைப் பெரும் துயர நாடகமாக மாற்றுகிறது.

கிரேக்கக் கதையுலகில் பல்வேறு வியப்பூட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளன. அதில் ஒன்று கனவை உருவாக்குதல்.

ஒருமுறை மைசீனிய நாட்டின் அரசனும் கிரேக்கப் படையின் முதன்மைத் தளபதியுமான அகமெம்னான் கிரேக்க கடவுளான ஜீயஸை கோபம் கொள்ளச் செய்துவிட்டார்.

அவரைத் தண்டிக்க விரும்பிய ஜீயஸ் புதிய வழி ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அதாவது அகமெம்னான் தலைக்குள் ஒரு கனவைப் புகுத்திவிட்டால் அது தானே அவனை அழிவை நோக்கிக் கொண்டு சென்றுவிடும்.

அப்படியான ஒரு கனவை அகமெம்னான் தலையில் புகுத்துவதற்காகக் கனவுகளின் கடவுளான ஒனிரோஸை அனுப்பி வைக்கிறார் ஜீயஸ்.

அகமெம்னான் உறங்கிக் கொண்டிருக்கும் போது அவரது தலைக்குள் தண்ணீர் ஊற்றுவது போலக் கனவை ஊற்றுகிறார் ஒனிரோஸ். காலையில் விழித்தெழுந்த அகமெம்னான் தான் டிராய் நகரைத் தாக்கி டிரோஜன்களை அழிப்பது போலக் கனவு கண்டதாகச் சொல்கிறார். அந்தக் கனவு அவருக்குச் சந்தோஷம் அளிக்கிறது. அவர் ஆயிரம் கப்பல்களுடன் டிராய் மீது போர் தொடுக்கிறார். அந்தப் போர் பத்து ஆண்டுகளாக நீடிக்கிறது. முடிவில் அகமெம்னான் வெற்றி பெறுகிறார்.

ட்ரோஜன் போரில் வெற்றி பெற்ற பிறகு, அகமெம்னான் அழகியான கசாண்ட்ராவை தன்னுடன் அழைத்துக் கொண்டு நாடு திரும்புகிறார். அகமெம்னன் தனது சொந்த மகள் இபிஜீனியாவைக் கொல்ல முயன்றதையும், கசாண்ட்ராவுடன் திரும்பி வந்ததையும் ஏற்க முடியாத அவனது மனைவி கிளைடெம்னெஸ்ட்ரா அவளது காதலன் ஐகிஸ்தோஸுடன் சேர்ந்து அகமெம்னானைக் கொன்றார் என்கிறது கிரேக்க இலக்கியம்.

பாரீஸ் ஹெலென் மீது கொண்ட காதல் மட்டும் டிராய் யுத்தத்திற்குக் காரணமில்லை. இப்படியொரு காரணமும் ஒளிந்திருக்கிறது.

ஒருவரது தலைக்குள் கனவை விதைக்கும் இந்த நிகழ்வினை இன்றைக்கு வாசிக்கும் போதும் வியப்பாகவேயிருக்கிறது. கடவுள் அனுப்பி வைக்கும் செய்தி தான் கனவு. நமது கனவுகளை யாரோ உருவாக்குகிறார்கள் என்கிறது கிரேக்க இலக்கியம்.

அகமெம்னான் தன்னை ஜீயஸ் பழிவாங்கிவிட்டதை கடைசிவரை உணரவேயில்லை. கிரேக்க இலக்கியங்களில் நீதிக்கான குரல் தொடர்ந்து ஒலித்தபடி இருக்கிறது. சுதந்திரம், நீதி, அறம். காதல் குறித்துக் கிரேக்க இலக்கியத்தில் பேசப்பட்ட விஷயங்கள் இன்றைய சமூக,அரசியல் பண்பாட்டுச் சூழலுக்கும் பொருந்தமாகவே இருக்கின்றன.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 15, 2024 01:24
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.