நத்தார்புடை ஞானன்பசு
அ௫ளியவர் : சுந்தரர்
திருமுறை : ஏழாம்-திருமுறை
பண் : நட்டபாடை
நாடு :ஈழநாடு
தலம் : கேதீச்சுரம்
திருச்சிற்றம்பலம்
நத்தார்புடை ஞானன்பசு
ஏறிந்நனை கவுள்வாய்
மத்தம்மத யானைஉரி
போர்த்தமழு வாளன்
பத்தாகிய தொண்டர்தொழு
பாலாவியின் கரைமேற்
செத்தாரெலும் பணிவான்றிருக்
கேதீச்சரத் தானே.
சுடுவார்பொடி நீறுந்நல
துண்டப்பிறைக் கீளுங்
கடமார்களி யானைஉரி
அணிந்தகறைக் கண்டன்
படவேரிடை மடவாளொடு
பாலாவியின் கரைமேற்
திடமாஉறை கின்றான்றிருக்
கேதீச்சரத் தானே.
அங்கம்மொழி அன்னாரவர்
அமரர்தொழு தேத்த
வங்கம்மலி கின்றகடல்
மாதோட்டநன் னகரில்
பங்கஞ்செய்த பிறைசூடினன்
பாலாவியின் கரைமேற்
செங்கண்ணர வசைத்தான்றிருக்
கேதீச்சரத் தானே.
கரியகறைக் கண்டன்நல
கண்மேலொரு கண்ணான்
வரியசிறை வண்டியாழ்செயும்
மாதோட்டநன் னகருட்
பரியதிரை எறியாவரு
பாலாவியின் கரைமேல்
தெரியும்மறை வல்லான்றிருக்
கேதீச்சரத் தானே.
அங்கத்துறு நோய்களடி
யார்மேலொழித் தருளி
வங்கம்மலி கின்றகடல்
மாதோட்டநன் னகரிற்
பங்கஞ்செய்த மடவாளொடு
பாலாவியின் கரைமேற்
தெங்கம்பொழில் சூழ்ந்ததிருக்
கேதீச்சரத் தானே.
வெய்யவினை யாயஅடி
யார்மேலொழித் தருளி
வையம்மலி கின்றகடல்
மாதோட்டநன் னகரிற்
பையேரிடை மடவாளொடு
பாலாவியின் கரைமேற்
செய்யசடை முடியான்றிருக்
கேதீச்சரத் தானே.
ஊனத்துறு நோய்களடி
யார்மேலொழித் தருளி
வானத்துறு மலியுங்கடல்
மாதோட்டநன் னகரிற்
பானத்துறும் மொழியாளொடு
பாலாவியின் கரைமேல்
ஏனத்தெயி றணிந்தான்றிருக்
கேதீச்சரத் தானே.
அட்டன்னழ காகவரை
தன்மேலர வார்த்து
மட்டுண்டுவண் டாலும்பொழில்
மாதோட்டநன் னகரிற்
பட்டவரி நுதலாளொடு
பாலாவியின் கரைமேற்
சிட்டன்நமை யாள்வான்றிருக்
கேதீச்சரத் தானே.
மூவரென இருவரென
முக்கண்ணுடை மூர்த்தி
மாவின்கனி தூங்கும்பொழில்
மாதோட்டநன் னகரிற்
பாவம்வினை யறுப்பார்பயில்
பாலாவியின் கரைமேல்
தேவன்னெனை ஆள்வான்றிருக்
கேதீச்சரத் தானே.
கறையார்கடல் சூழ்ந்தகழி
மாதோட்டநன் னகருட்
சிறையார்பொழில் வண்டியாழ்செயுங்
கேதீச்சரத் தானை
மறையார்புகழ் ஊரன்னடித்
தொண்டனுரை செய்த
குறையாத்தமிழ் பத்துஞ்சொலக்
கூடாகொடு வினையே.
திருச்சிற்றம்பலம்
The post நத்தார்புடை ஞானன்பசு first appeared on அகரமுதல்வன்.
அகரமுதல்வன்'s Blog
- அகரமுதல்வன்'s profile
- 17 followers

