நற்றிணை – தோழி கூற்று
திணை – குறிஞ்சி
பாடியவர் – மதுரை மருதன் இளநாகனார்
கொழுஞ்சுளைப் பலவின் பயங்கெழு கவாஅன்
செழுங்கோள் வாங்கிய மாச்சினைக் கொக்கின்
மீன்குடை நாற்றந் தாங்கல்செல் லாது
துய்த்தலை மந்தி தும்மும் நாட – 5
நினக்கும் உரைத்தல் நாணுவல் இவட்கே
நுண்கொடிப் பீரத்தின் ஊழுறு பூவெனப்
பசலை ஊரும் மன்னோ பன்னாள்
அறிஅமர் வனப்பினெங் கானம் நண்ண
உண்டெனும் உணரா வாகி
மலரென மரீஇ வரூஉம் இவள் கண்ணே – 10
தெளிவுரை – செழுமையான சுளைகளைக் கொண்ட பலா மரங்கள் மிகுதியான மலைப்பக்கத்தில் காய்கள் மிகுதியாக உள்ளதால் வளைந்த கிளைகளில் கொக்குகள் வந்து தங்கும். அவை மீன்களைக் கொணர்ந்து குடைந்து தின்றதால் நாற்றம் புலால் நாற்றம் மிகுதியாக வீசும். அங்குள்ள மந்தி புலால் நாற்றத்தைப் பொறுக்க இயலாது தும்மும் இத்தகைய மலைநாடனே! உன்னால் அறியப் பெற்ற விருப்பம் மிகுந்த அழகுமிக்க எங்கள் தோட்டத்தை நீ சேர்தல் உண்டு என்றாலும், வண்டு என்று எண்ணத்தக்க நீலமலர் போன்ற இவளுடைய கண்களில் நுண்ணிய கொடியை உடைய பீர்க்கம் பூவின் வாடல் போல பசலை த்நோரியத்தை நீ அறியவில்லை. அதற்குரிய காரணமும் எமக்கு விளங்கவில்லை. இத்தனை உன்னிடம் கூறவும் எமக்கு வெட்கமாக இருக்கின்றது. இருப்பினும் தலைவியின் துன்பத்தை நீ போக்குவாயாக!
The post நற்றிணை – தோழி கூற்று first appeared on அகரமுதல்வன்.
அகரமுதல்வன்'s Blog
- அகரமுதல்வன்'s profile
- 17 followers

