01
என்னிடமிருப்பது கடலற்ற கலம்
புயலானாலென்ன புழுதியானாலென்ன
தரையில்தான் நீந்தும்.
02
இருட்டில் நின்று பூச்சூடுகிறாள்
அவளிடம் சென்று மலரவே துடிக்கும் கிளை.
03
எத்தனை துக்கம் இப்பிறவியில்
படபடத்து பயனில்லை.
நெல்லிக்காய் உண்டு
தண்ணீர் குடித்தால்
பரமசுகம்.
04
நிறைய அள்ளித்தாருங்கள் தண்ணீர்
தாகம் தீரும் வரை அருந்தட்டும் யாசகன்
பின்பு உங்கள் பாத்திரத்தை ஏந்திக் கொள்ளுங்கள்.
05
என் பிறப்பிற்கு முன்பிருந்தே வீட்டில் கிளியிருந்தது
அதன் கூண்டில் கொவ்வைப் பழங்கள் கனிந்திருந்தன
உறங்கையிலும்
விழிக்கையிலும்
சிறகையிழந்த தவிப்பில்
கிளி உச்சரித்த சொல்
என் மொழியில் உளது.
The post கலம் first appeared on அகரமுதல்வன்.
Published on January 31, 2024 10:11