01
சிறகிலிருந்து பிரிந்த
இறகொன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் சென்றதாகப்
பாடினான்
பிரமிள்.
காற்றின் தீராத பக்கங்களில்
அவனையெழுதும்
கவிதை
மொழியிலிருந்து பிரிந்து
என்னிடம் வந்தது.
02
அநாதியிலும் – ஆதியிலுமிருந்து
அழைத்து வரப்பட்ட எனக்கு
என்ன பெயர் அறியேன்.
ஆனாலும் போதும்
மனிதன் நான்.
03
காகிதங்கள் படகுகளாகின்றன
தாழ்வாரங்கள் அருவிகளாகின்றன.
அருவியில் நனைந்து
காகிதப் படகின் பின்னோடி
நிலத்தில் கால் வைத்தால்
மழையோ
மழை.
The post அநாதி first appeared on அகரமுதல்வன்.
Published on January 08, 2024 10:30