அருஞ்சொல் – சமஸின் சாதனை
கடந்த ஓராண்டாக அருஞ்சொல் இணைய இதழை வாசித்துவருகிறேன். சமகால அரசியல், பொருளாதாரம், பண்பாடு சார்ந்த முக்கிய விஷயங்கள் குறித்து இதில் வெளியாகும் கட்டுரைகள் மிகச்சிறப்பாக உள்ளன. புதிய புரிதலை ஏற்படுத்துகின்றன.


தினம் ஒரு கட்டுரையை வெளியிடும் இதழாக அருஞ்சொல் வெளியாகிறது. சமஸ் எழுதும் தலையங்கம் மற்றும் அரசியல் கட்டுரைகள் மற்றும் அவர் முன்னெடுக்கும் நேர்காணல்களும் தனிச்சிறப்பானவை. இந்து தமிழ் நாளிதழின் நடுப்பக்க ஆசிரியராக இருந்த போது சமஸ் முன்னெடுத்த விஷயங்கள் அதுவரை இதழியலில் யாரும் செய்யாதவை. குறிப்பாக புத்தகக் கண்காட்சி சார்ந்து சமஸ் வெளியிட்ட முழுப்பக்க செய்திகள், வாசிப்பைப் பரவலாக்கும் விதமாக வெளியிட்ட படைப்பாளிகளின் கட்டுரைகள், எழுத்தாளர் அசோகமித்ரன், ஞானக்கூத்தன். கி.ராஜநாராயணன் மறைவின் போது செய்யப்பட்ட முழுப்பக்க அஞ்சலிகள் பாராட்டிற்குரியவை.
இந்தியாவின் தலைசிறந்த பத்திரிக்கையாளர்கள். அரசியல் பிரபலங்கள், எழுத்தாளர்கள் அருஞ்சொல்லில் எழுதும் கட்டுரைகள் பொதுத்தளத்தில் நாம் கவனம் கொள்ளாத. அதே நேரம் ஆழ்ந்து புரிந்து கொள்ள வேண்டிய பிரச்சனைகளைக் கவனப்படுத்துகின்றன. புதிய விவாதத்தை உருவாக்குகின்றன. ‘
நிறைய இளைஞர்கள் இதனைத் தொடர்ந்து வாசிக்கிறார்கள் என்பதே அருஞ்சொல்லின் சாதனை. இதழியலின் அடுத்த கட்ட வளர்ச்சியாகவே இதனைக் காணுகிறேன்.
கல்வி சார்ந்து இதில் வெளியாகியுள்ள கட்டுரைகள் தனிநூலாக வெளியாக வேண்டியவை.
அருஞ்சொல் இணைய இதழை வெற்றிகரமாக நடத்திவரும் சமஸிற்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்
இணைப்பு
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 659 followers
