நாமக்கல் உரை, கடிதம்

அன்புள்ள ஜெ

நாமக்கல் கட்டண உரை பற்றிய அறிவிப்பை கண்டேன். வாழ்த்துக்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் ஆன அரங்கின் தேவை பற்றி நீங்கள் எண்ணுவது புரிகிறது.

நடுவே ஒரு சின்ன வேடிக்கை. உங்கள் உரை பற்றிய போஸ்டரை எவரோ ஃபோட்டோஷாப் வேலை செய்து உறை என ஆக்கி முகநூலில் சுற்றில் விட்டிருந்தனர். அதை வைத்துக்கொண்டு ஒரு பாமரக்கூட்டம் கிக்கீக்கீ என சிரிப்பான்போட்டுக்கொண்டிருந்தது .எழுத்தாளர் என தங்களை நம்பிக்கொண்டிருப்பவர்களும் அதிலுண்டு.

என் நண்பர் ஒருவர், அப்படி ஒரு பதிவை என்னிடம் காட்டி கிக்கிக்கீ என்றார். நான் உங்கள் புத்தகங்களை காட்டி கேட்டேன், இதில் எதையாவது கேள்விப்பட்டிருக்கிறாயா? அவருக்கு ஒன்றும் தெரியாது. சரி, நீ எதையாவது வாசிப்பதுண்டா? அதுவும் இல்லை. சரி, உனக்கு தெரிந்த தமிழ் அவர்களுக்குத் தெரியாது என்று எப்படி முடிவுசெய்தாய்?

ஒரே காரணம் மதக்காழ்ப்பு. இணையத்தில் அப்படி போய் இளிப்பான் போட்டுவிட்டு வந்தவர்களில் பெரும்பாலானவர்களின் உணர்ச்சி மதக்காழ்ப்புதான். நான் சொன்னேன், மதக்காழ்ப்பால் இப்படி பொதுவெளியில் போய் பல்லிளிக்கையில் மதத்தை இழிவுசெய்கிறாய் என்று தெரிகிறதா? கற்பதையும் கற்பிப்பதையும் வலியுறுத்திய ஒரு மதத்தின் மேல் நம்பிக்கை கொண்டவன் இதைச் செய்யலாமா?

என்ன சொல்ல? இப்படித்தான் நம் சூழல் இருக்கிறது. இப்படி ஒரு அபத்தமான விஷயத்தை ஒருவன் எப்படி செய்யமுடியும் என நாம் நினைப்போம். அதை நம்பி அதற்கு ஆகா போட ஆயிரம் பேர் வந்து நிற்பதைக் கண்டால் திகைப்புதான் வருகிறது.

நியாஸ்

***

அன்புள்ள நியாஸ்,

1992ல் சோவியத் உடைவுக்குப்பின் அதுவரை இடதுசாரி தீவிரக்குழுக்களில் செயல்பட்டு வந்த ஒரு பெரும்கூட்டம் அரசியல் நம்பிக்கை இழந்து நேரடியாக கலையிலக்கியத்துள் நுழைந்தது. அவர்கள் அதுவரை கலையிலக்கியச் சூழலில் இருந்த எல்லா நெறிகளையும் அழித்தனர். சிறந்த உதாரணம் வினவு

இலக்கியச்சூழலில் வசைகள், வம்புகள் உண்டு. ஆனால் திட்டமிட்டு, ஒருங்கிணைந்து செய்யப்படும் திரிப்புகளும் பிரச்சாரங்களும் அதற்குமுன் இல்லை. அது அரசியல்வாதிகளின் உத்தி,

முகநூல் வந்தபின் நாம் பேசும் எல்லா களத்தையும் நாலாந்தர அரசியல்வாதிகள் கைப்பற்றிக்கொண்டிருக்கிறார்கள். எல்லாவகையான திரிப்புகள், பிரச்சராங்களையும் அவர்கள் தங்கள் அரசியல்களத்தில் இருந்து இங்கே கொண்டுவந்து அறிமுகம் செய்கிறார்கள்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 15, 2022 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.