வரலாறு எப்போது நாவலாகிறது

The History of the Siege of Lisbon என்ற ஸரமாகோ நாவலில் பதிப்பகம் ஒன்றில் பணியாற்றும் பிழைத்திருத்துபவர் தான் திருத்தம் செய்யும் நூலில் ஒரு வரலாற்றுத் தகவல் தவறாக இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். தானே ஒரு சொல்லை மாற்றிவிடுகிறார்

புத்தகம் வெளியான பிறகு அது கண்டுபிடிக்கப்படுகிறது. அவர் விசாரிக்கப்படுகிறார். ஏன் அந்தச் சொல்லை மாற்றினார் என்று அறியும் பதிப்பாசிரியர் நீ ஏன் சரியான வரலாற்றை எழுதக் கூடாது என்று கேட்கிறார்.

உண்மை வரலாற்றை ஆராயத் துவங்கும் ரைமுண்டோ சில்வா ஒரு கட்டத்தில் அதை வரலாற்று நூலாக எழுதுவதை விடவும் ஒரு நாவலாக எழுதலாமே என்று நினைக்கிறார். அதற்கான வேலையைத் துவங்குகிறார்.

இந்த முடிவிற்கு ஏன் வருகிறார் என்று நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன்.

வரலாற்று உண்மையை அப்படியே எழுதுவதில் ஏதோவொரு போதாமையைச் சில்வா உணருகிறார். அவருக்கு வரலாற்றில் நுழைந்த கதைகளை நீக்கிவிட்டு வரலாற்றைப் புதிதாக எழுத ஆசை. ஆனால் தனது உண்மையும் கதையாகிவிடும் என்ற அபாயத்தை உணர்ந்திருக்கிறார்.

நாவலாக எழுதும் போது வரலாற்றுச்சுமையிலிருந்து விடுபட்டுவிடலாம். ஒரு நாவலின் வாசகன் வரலாற்று உண்மைகளை அப்படியே எதிர்பார்ப்பதில்லை. சாட்சியங்கள் எதையும் கேட்பதில்லை. அவன் எதைக் கற்பனை என்று நினைக்கிறானோ அது வரலாற்று உண்மையாக இருக்கவும் கூடும். பாடப்புத்தக வரலாற்றில் எப்போதும் மன்னர்களும் சதிகாரர்களும் அதிகாரத்தைத் தீர்மானிப்பவர்களும் வழிநடத்துபவர்கள் மட்டுமே இடம்பெறுகிறார்கள். அவர்களின் அன்றாட வாழ்க்கை இடம்பெறுவதில்லை. இதற்கான மாற்றாகப் புனைவு உருக் கொள்கிறது.

புனைவில் வரலாற்று நாயகர்கள் தங்கள் தலைக்கு மேலே புனித வட்டமில்லாமல் சித்தரிக்கப்படுகிறார்கள். நம்மைப் போலவே தினசரி நிகழ்வுகளைச் சந்திக்கிறார்கள். அனுபவிக்கிறார்கள். உணர்ச்சிவசப்படுகிறார்கள். வரலாற்றின் உறைந்த உடலுக்குள் புனைவின் வழியே ரத்தவோட்டத்தை உருவாக்க முனைகிறார் ரைமுண்டோ சில்வா

ரைமுண்டோ சில்வா ஐம்பது வயதானவர். ஒருவேளை அவர் இருபது வயதுகளிலிருந்திருந்தால் புனைவை நோக்கித் திரும்புவதை விடவும் ஆய்வை நோக்கியே அதிகம் கவனம் கொண்டிருக்கக் கூடும் என்றும் தோன்றியது.

நாவலில் நடைபெறும் விசித்திரத்திற்கு நிகராகவும் கூடுதலாகவும் பதிப்புத்துறையில் விநோத மனிதர்கள் மற்றும் விந்தையான நிகழ்வுகள் நடக்கின்றன.

நாவலின் தலைப்பு ஒரு வரலாற்றுப் புத்தகம் போலவே இருக்கிறது. பொதுவாக ஸரமாகோவின் நாவல் குறியீட்டு தன்மை கொண்ட தலைப்பு கொண்டிருப்பதில்லை. நேரடியாகக் கதாபாத்திரத்தின் பெயரோ, இடமோ, முக்கிய நிகழ்வோ தான் தலைப்பாக வைக்கப்பட்டிருக்கின்றன. மார்க்வெஸின் நாவல்கள் அதன் தலைப்பிற்காகவே பேசப்படுகின்றன. அப்படியான எந்தக் கவித்துவ வெளிப்பாட்டினையும் ஸரமாகோ விரும்புவதில்லை. ஆனால் சிக்கலான, முற்றுப்புள்ளியில்லாத நீண்ட வாக்கியங்கள். அதுவும் கதையில் உரையாடல்கள் தனித்து இடம்பெறுவதில்லை. தத்துவம், வரலாறு, மதம், விஞ்ஞானம் எனப் பல்வேறு விவாதங்களைக் கொண்டதாகவே நாவலை எழுதிச் சென்றிருக்கிறார்.

வரலாறும் புனைவும் சந்திக்கும் இடத்தை ஸரமாகோ மிக அழகாகத் தொட்டுக் காட்டுகிறார். புனைவின் வழியே வரலாறு மீள் உருவாக்கம் செய்யப்படுகிறது. வரலாற்று நிகழ்வுகளுக்கு ஊடாக ஒரு காதல்கதையும் எழுதப்படுகிறது. அது தான் புனைகதையின் சிறப்பு. காதலும் வரலாறும் ஒற்றை புள்ளியினை நோக்கி நகர்கின்றன.

கொடுக்கப்பட்ட பிரதியிலுள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டுவதுடன் பிழைத்திருத்துபவர்கள் பணி முடிந்துவிடுகிறது. அவராக எதையும் எழுத முடியாது. இந்த நெருக்கடியை ரைமுண்டோ சில்வா நன்றாகவே உணர்ந்திருக்கிறார். ஆனால் ஒரு சொல்லை அவரால் அனுமதிக்க முடியவில்லை. திருத்தம் செய்துவிடுகிறார். தான் செய்த திருத்தம் கண்டுபிடிக்கப்படுமோ என்று அச்சம் கொள்கிறார். ஆனால் புத்தகம் வெளியான பிறகே அந்த வார்த்தை மாறியிருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது.

ஒரு சொல்லை மாற்றுவதன் மூலம் புதிய உண்மையை வெளிக்கொண்டுவர முடியும் என்கிறார் ஸரமாகோ.

போர்த்துகலின் வரலாற்றில் ஒரு முக்கிய வார்த்தையைச் சேர்த்து, கடந்த காலத்தை மட்டுமல்ல, தனது சொந்த வாழ்க்கையையும் மீண்டும் எழுதுகிறார் ரைமுண்டோ சில்வா.

பதிப்பகம் தான் கதையின் மையம். பிழைத்திருத்துபவர் பதிப்பாசிரியர் இருவரும் ரகசியமாகக் காதலிக்கிறார்கள். அறியப்படாத வரலாற்று உண்மையைத் தேடும் ரைமுண்டோ சில்வா அறியப்படாத காதலைக் கண்டறிகிறார்

ஸரமாகோவின் சொந்த வாழ்க்கையில் நடைபெற்ற சில நிகழ்வுகள் இந்த நாவலில் இடைவெட்டாக வந்து போகின்றன.

புனைவு எப்போதும் வரலாற்று இடைவெளிகளைக் கண்டறிந்து நிரப்பவே முனைகிறது. வரலாற்றில் இடம்பெறாத மனிதர்களை வரலாற்றில் இடம்பெறச் செய்வதும். வரலாற்றில் இடம்பெற்றவர்களை இன்றைய மனிதர்களைப் போல மாற்றுவதுமே நாவலின் தனித்துவம்.

••

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 04, 2022 06:05
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.