நடைவணிகர்

முதுகில் சுமையோடு கையில் ஊன்றுகோலுடன் தனியே நடந்து செல்லும் வணிகரின் சித்திரம் ஒன்றைப் பார்த்தேன். அவருடன் நாய் ஒன்றும் உடன் செல்கிறது. அழகான ஓவியம். இங்கிலாந்தின், கிராமப்புறங்களிலிருந்து சிறிய நகரங்களுக்குப் பொருட்களைச் சுமந்து சென்று விற்பன செய்யும் வணிகரது கோட்டுச்சித்திரம்

Street Pedlar என அழைக்கப்படும் இது போன்ற வணிகர்கள் இங்கிலாந்தில் நிறைய இருந்தார்கள். இவர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே எழுதப்படிக்கத் தெரிந்திருந்தது. ஆகவே இவர்களின் பயண அனுபவம் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை. சிலரது நாட்குறிப்புகள் மற்றும் கணக்குப் புத்தகங்களைக் கொண்டு அவர்களின் வாழ்க்கை அனுபவங்களை அறிந்து கொள்ள முடிகிறது.

எந்த விவசாயி தனக்கு வரவிருக்கும் இரவிற்கு அடைக்கலம் கொடுப்பான் என்ற நிச்சயமற்ற நிலையில் இவர்கள் பயணம் செய்தார்கள். அடுத்த நாள் எங்கே தங்குவோம். என்ன உணவு கிடைக்கும் எனத் தெரியாத நிலையிலும் நீண்ட பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்கள்

மலைப் பகுதிகளில் வாழ்ந்து வந்தவர்கள் புவியியல் ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்ட காரணத்தால் அவர்களுக்குத் தேவையான பொருட்களை நடைவணிகர்கள் வீடு தேடிப் போய் விற்பனை செய்தார்கள்.

சில நடை வணிகர்கள் பெரிய உற்பத்தியாளர்களுக்கு முகவர்களாக அல்லது விற்பனையாளர்களாகப் பணிபுரிந்தனர். 12 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்தே நடை வணிகர்களின் சித்திரங்கள் மற்றும் பதிவு இலக்கியம் மற்றும் கலைகளில் இடம்பெற்றுள்ளது.

சில நேரம் ஒரே இடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வணிகர்கள் தங்குவதுண்டு. அது போன்ற நாளில் இரவெல்லாம் குடிபோதையில் பாடிக்கொண்டும் பழங்கதை பேசிக் கொண்டுமிருப்பார்கள். அது தான் பயணத்தின் ஒரே ஆறுதல். பனிக்காலத்தில் இரவு தங்குமிடம் கிடைக்காமல் துரத்தப்பட்ட அனுபவத்தைப் பலரும் பதிவு செய்திருக்கிறார்கள்.

எப்ரைம் லிசிட்ஸ்கி எனும் யூதவணிகர் எழுதிய In the Grip of the Cross-Currents நூலில் வீடுவீடாகப் போய் விற்பனை செய்த போது ஏற்பட்ட சிரமங்களை விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்.

••

மே 23.22

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 23, 2022 07:35
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.