நன்றியுடன்

நேற்றுடன் புத்தகக் கண்காட்சி நிறைவுபெற்றது.

கடந்த மூன்று நாட்களாகப் பெருந்திரளாகக் கூட்டம். நிறைய இளைஞர்கள். பெண்கள். அவர்கள் பைநிறைய புத்தகங்களுடன் வலம் வருவதைக் காண மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்த ஊரடங்கு வாழ்க்கை அனைவரின் கவனத்தையும் புத்தகங்களின் மீது திருப்பியிருப்பதன் விளைவாகவே இதனைக் கருதுகிறேன்.

இப்படி ஒரு அறிவுத் திருவிழாவிற்கு அனுமதி தந்து, புத்தகக் கண்காட்சி சிறப்பாக நடக்க முதற்காரணமாக இருந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி

புத்தகக் காட்சி சிறந்த முறையில் நடைபெற உதவிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி, பண்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலர் இறையன்பு ஐஏஎஸ், உதயசந்திரன் ஐஏஎஸ் ,அவர்களுக்கும், புத்தகக் கண்காட்சியைச் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்த பபாசிக்கும் அன்பும் நன்றியும்

எல்லா நாளும் தேசாந்திரி அரங்கிற்குத் திரளாக வருகை தந்து எனது புத்தகங்களை வாங்கிச் சென்ற வாசகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி. உங்களின் அன்பு தான் என்னைத் தொடர்ந்து இயங்கச் செய்கிறது.

நிறைய சிறார்கள் எனது புத்தகங்களை ஆசையாக வாங்கினார்கள். என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். கையெழுத்து பெற்றார்கள். அது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்தது.

நிறைய இளம் படைப்பாளிகளைப் புத்தகக் கண்காட்சியில் சந்திக்க முடிந்தது. அவர்களின் புதிய புத்தகத்தை எனக்கு அளித்தார்கள். எழுத்துலகில் அவர்கள் வெற்றி பெற எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

கண்காட்சி அரங்கில் எங்கள் புத்தகங்களை தங்களது அரங்கில் விற்பனை செய்து உதவிய சக பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள், ஆதரவு தந்த பத்திரிக்கையாளர்கள். ஊடக நண்பர்கள். இணைய இதழாளர்கள். சமூக ஊடகங்களில் பகிர்ந்து உதவிய நண்பர்கள் அனைவருக்கும் நிறைந்த அன்பும் நன்றியும்.

பள்ளி மற்றும் கல்லூரி நூலகங்களுக்காகப் புத்தகங்கள் வாங்கிய நூலகர்கள். நூலகப் பணியாளர்கள். நிர்வாகிகள், ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி

ஒவ்வொரு நாளும் வெளியூர்களிலிருந்து நிறைய வாசகர்கள் வந்திருந்தார்கள். விடுமுறை நாட்களில் காலை ஏழு மணிக்கெல்லாம் வெளியூர் வாசகர்கள் கண்காட்சி நடக்கும் நந்தனம் மைதானத்திற்கே வந்து காத்திருந்தார்கள். இரவு 9 மணி வரை அரங்கில் கூட்டம் குறைவதில்லை. இந்த மாற்றம் வியப்பானது. வரவேற்க வேண்டியது.

கடந்த சில ஆண்டுகளில் புத்தக வாசிப்பைக் கொண்டாடும் நிறைய அமைப்புகள், குழுக்கள். உருவாகியுள்ளன. அவர்கள் தொடர்ந்து இணைய வழியில் புத்தக அறிமுகக் கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். புத்தகங்களை விமர்சனம் செய்கிறார்கள். சிறந்த விமர்சனங்களுக்குப் பரிசு வழங்குகிறார்கள்.

இது போன்ற முயற்சிகளால் புத்தக வாசிப்பு விரிவடைந்திருக்கிறது என்பதே நிஜம். வாசிப்பை முன்னெடுக்கும் அனைத்து அமைப்புகளுக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன்

இது போலவே தொலைக்காட்சிகள் தனிக்கவனம் எடுத்துப் புத்தகக் கண்காட்சியைப் பற்றிய செய்திகளை மக்களிடம் கொண்டு சென்றார்கள். முகநூலிலும் சமூக ஊடகங்களிலும் கடந்த 18 நாட்களாகப் புத்தகக் கண்காட்சி தான் மையமாக விளங்கியது. எத்தனை ஆயிரம் புகைப்படங்கள். செய்திகள். பகிர்வுகள். காணொளிகள். அவர்கள் அனைவருக்கும் எனது அன்பும் பாராட்டுகளும்.

மண்டியிடுங்கள் தந்தையே உள்ளிட்ட எனது புதிய நூல்கள் யாவும் ஒரு பதிப்பு விற்றுத் தீர்ந்திருக்கிறது. எப்போதும் போலவே தேசாந்திரி, எனது இந்தியா, மறைக்கபட்ட இந்தியா, துணையெழுத்து, கதாவிலாசம், சஞ்சாரம், இலக்கற்ற பயணி, யாமம், உப பாண்டவம், நெடுங்குருதி, இடக்கை, சிறிது வெளிச்சம் அயல்சினிமா, எலியின் பாஸ்வேர்டு, சிரிக்கும் வகுப்பறை, எழுத்தே வாழ்க்கை போன்ற புத்தகங்கள் விற்பனையில் சாதனை புரிந்திருக்கின்றன.

தேசாந்திரி அரங்கினை சிறப்பாக நிர்வாகம் செய்த ஹரிபிரசாத், அன்புகரன், கபிலன். விக்கி, சண்முகம், கபிலா காமராஜ், டிரைவர் ராமு, நூல்களை அச்சிடுவதற்குத் துணை நின்ற மணிகண்டன், உள்ளிட்ட அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி

••••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 06, 2022 22:23
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.