கவிஞர் சிற்பி ஆவணப்படம்
இந்திரன் தமிழின் முன்னோடி கலைவிமர்சகர். ஓவியம். சிற்பம். வரைகலை எனக் கலைகள் குறித்துத் தொடர்ந்து எழுதியும் பேசியும் வரும் இவர் தமிழ் அழகியல் குறித்துத் தனித்த பார்வைகள் கொண்டவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் இவர் எழுதியுள்ள கட்டுரைகள் மிகுந்த பாராட்டிற்குரியவை.
தனித்துவமான கலையாளுமையாக விளங்கும் இந்திரன் கவிஞர் சிற்பி குறித்த ஆவணப்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.
சிற்பி பாலசுப்பிரமணியம் எனும் கவிஞர் சிற்பி, பேராசிரியர் மொழிபெயர்ப்பாளர், ஆய்வாளர், பாடத்திட்டக்குழு உறுப்பினர். இதழாசிரியர் சாகித்ய அகாதமி தமிழ் ஆலோசனைக் குழு ஒருங்கிணைப்பாளர் எனப் பன்முகத்தன்மைகள் கொண்டவர். மொழிபெயர்ப்புக்காகவும், படைப்பிலக்கியத்துக்காகவும் இருமுறை சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.
ஆத்துப்பொள்ளாச்சி என்ற அழகிய சிற்றூரில் பிறந்து வளர்ந்து கேரளாவின் பாலக்காட்டில் உள்ள தத்தமங்கலம் சீலி நினைவு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ் பயின்று பொள்ளாச்சி நல்லமுத்து மகாலிங்கம் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும் தமிழ் கவிதையுலகில் சிறந்த கவிஞராகவும், ஆளுமையாகவும் சிற்பி உருவான விதம் பற்றி இந்த ஆவணப்படம் அழகாகச் சித்தரிக்கிறது.
இந்த ஆவணப்படத்தை அழகிய மணவாளன் நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக நதிக்கரையோரக் காட்சிகளும், தத்தமங்கலம் பள்ளிக்காட்சிகளும், நேர்காணல்கள் செய்யப்பட்டுள்ள விதமும் பாராட்டிற்குரியவை
இந்திரன் தேர்ந்த கலைத்திறன் கொண்டவர் என்பதால் இந்த ஆவணப்படத்தைக் கலைநுட்பத்துடன் உருவாக்கியிருக்கிறார். அவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
