மகனின் நினைவாக
கணேஷ் பாரி ·
மண்டியிடுங்கள் தந்தையே : வாசிப்பனுபவம்
ஒரு தானியம் தன்னை அழித்துக் கொள்வதன் வழியேதான் புத்துயிர்ப்பு பெறுகிறது.மனிதர்களுக்கு அது சாத்தியமில்லை..
– எஸ்.ராமகிருஷ்ணன்

விடுமுறைக் காலத்துக் காதல் கதை நாவலுக்குப் பிறகு நான் வாசிக்கும் நாவல் இது.ஐந்துவருடத்துக்குப் பிறகு எங்களுக்குப் போன வருடம் நவம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. எனது மகனின் நினைவாக வாங்கிய புத்தகம் இது.வெளியீட்டின் முதல் நாளே எஸ்.ராவின் கையால் எனது மகன் பெயர் “லெனின் வான்கா “ எழுதி வாங்கிக்கொண்டேன் இந்தப் புத்தகம்.எனக்கு மகன் பிறந்த போது எஸ்.ரா மகன் தந்தை உறவின் கதையை எழுதுகிறார்.எனக்காகவே எழுதியிருக்கிறார் தோழர் எஸ்.ரா.
ரஷ்யக் கருப்பு வெள்ளை திரைப்படம் பார்த்த அனுபவத்தைத் தந்தது இந்தப் புத்தகம்.எஸ்.ராவின் சிறப்பே ஒரு வரியாயிருந்தாலும் அதைக் காட்சியாக எழுதுவது.அதுவும் ஓர் சிறந்த Cameraman காட்சி அமைப்பில் இருக்கும்.ஒளி,இசையென பின்னணி இசையே வாசிக்கும் அனைவரையும் ரஷ்யாவுக்கே அழைத்துச் சென்றுவிடுவார்.
திமோஃபியின் கதாபாத்திரம் உயிரோடு உலாவும் இந்தக் கதையில்.அவனின் சிரிப்பு அழுகை கோவம் நடை பாவனையென நம் கண்முன்னே அலைந்து திரிகிறான். தந்தை ஏன் அவனை மகன் என்று ஏற்க மறுக்கிறார்.ஏன் தன் அம்மாவைக் கைவிட்டார்.மனைவியையும் தன் குழந்தையும் எப்படிப் பண்ணை அடிமைகளாக வைத்து வேலை வாங்க முடிகிறது.அம்மா ஏன் தனது உரிமையை விட்டுக்கொடுத்து தினம் தினம் அவரை நினைத்து மனதளவில் இப்படிக் கஷ்டப்படுகிறார்.
சமூகத்தில் இவ்வளவு பெரிய இடத்தில் இருக்கும் ஓர் எழுத்தாளன் எப்படித் தனக்கொரு மகன் மனைவி இருப்பதை மறைத்து இந்தப் பெருமையில் வாழமுடிகிறது. கேள்வி கடைசிவரை விடை தெரியமால் போவது.
டால்ஸ்டாயின் மனைவியாக வரும் சோபியாவின் கோபம் கலந்த காதல் நம்மையும் கோவம் வரவழைக்ககூடியது .டால்ஸ்டாயின் எழுத்தில் பெரியபங்கு சோபியாவிற்க்கு இருந்திருக்கிறது.
சோபியாவின் கோபத்தைச் சரியாக எதிர்கொண்டு டால்ஸ்டாய் வாழ்க்கை முழுக்க வென்றிருக்கிறார்.
அக்ஸின்யாவின் பனிபோல் தூய்மையானது அவளது காதல் எங்கும் நமக்கு டால்ஸ்டாய் மீது கோவமே வராதமாதிரியிருக்கிறது,
சிகப்பு துணி அவளை ஞாபகப்படுத்தும்.திமோஃபி அவளைப் புரிந்துகொள்ளவே முடியாது அவளின் தியாகம் அர்த்தம் அற்றது என்றுநினைத்தான்.
டால்ஸ்டாயால் பட்ட வேதனை போதாது என்று இவனும் வேதனை அடைய செய்வான்.டால்ஸ்டாயை குதிரை லாடாத்தால்காயப்படுத்தியது அவரின் உருவபொம்மையை எரிப்பது,அவரை தவறாகப் பேசுவது கூட முட்டாள் டிம்ட்ரியை சேர்த்துக்கொண்டு மொரட்டுதனம் பண்ணுவது ஊரை விட்டு ஒடுவது என சொல்லிக்கொண்டே போகலாம் பாவம் அக்ஸின்யா கணவனாலும் மகிழ்ச்சியில்லை பெற்ற பிள்ளையாலும் மகிழ்ச்சியில்லாமல் தவிக்கிறாள் ஆனால் அவள் யார் மீதும் புகார் சொன்னதே இல்லை.மீன் போல அவளின் வாழ்வு நீரில் தோன்றி நீரிலே முடிந்துவிடுகிறது.
* இயற்கை கடந்தகாலத்தை நினைவு வைத்துக் கொள்வதில்லை.
* காலம்தான் மனிதர்களின் பிரச்சனை.அவர்களால் நிகழ்காலத்தில் மட்டும் வாழமுடியாது.
* ரகசியங்கள் இல்லாத மனிதர்கள் யார்? எத்தனையோ ரகசியங்களை மனிதன் இறக்கும்போது கூடவே புதைந்து போய்விடுகின்றன.
* சந்தோஷம் என்பதை எதை வைத்து முடிவு செய்வது.எல்லா சந்தோஷங்களும் மழை போலத்தானே எவ்வளவு நேரம் மழை தொடர்ந்து பெய்யமுடியும்.மழை நின்றவுடன் வெறுமை கவிழ்ந்துவிடுகிறதே.
* சொர்க்கம் நிச்சயம் வானில் இருக்கமுடியாது.அது மனிதனின் மனதிற்குள் இருக்கிறது.மனித மனமே சொர்க்கத்தின் நுழைவாயில்.
* ஒருவன் மற்றவர்களுக்காக இல்லை என்றாலும் தனக்குத் தானே உண்மையைச் சொல்லிக் கொள்ளத்தானே வேண்டும்.
* கலையின் வேலை மனிதர்களை மகிழ்ச்சிப்படுத்துவது மட்டுமில்லை.நெறிப்படுத்துவதும் வழிகாட்டுவதும் மேம்படுத்துவதும் அதன் வேலைகள்.
* மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் மிகக்குறைவான நேரத்தையே தனக்காகச் செலவு செய்கிறார்கள்.பெரும்பகுதி வாழ்க்கை அடுத்தவர்களுக்கானது.வேலைக்கானது.சம்பாத்தியத்திற்கானது.ஒரு வகையில் இது முட்டாள்தனமான செயல்.இன்னொரு வகையில் மனிதனின் வாழ்க்கை இதனால்தான் அர்த்தமுள்ளதாகிறது.
* பறவைகள் ஒரு மரத்தில் கூடு கட்டி அடைந்தாலும் அதற்கு முழு ஆகாசமும் தேவைப்படுகிறது.அப்படிதான் மனிதனும்.இந்த மொத்த நிலமும் தனக்கே வேண்டும் என ஒருவன் ஆசைப்படுவதில் தவறு ஒன்றுமில்லை.
* பெண்கள் விஷயத்தில் எல்லாமும் தலைகீழ்தான்.அவர்கள் ஏமாற்றியவனையும் மன்னிப்பார்கள்.அவனுக்காக உருகுவார்கள்.பிரார்த்தனை செய்வார்கள்.தெய்வமாக எண்ணி வணங்குவார்கள்.தன்னைத் தியாகம் செய்துகொள்வது பெண்களுக்குப் பிடித்தமானது.
பண்ணை அடிமை முறைகள்.அதில் டால்ஸ்டாயின் எதிர்வினை கட்டுரைகள்.ரஷ்யாவில் ஏற்பட்ட பஞ்சம்.பண்ணையாட்களுக்காகப் பள்ளிக்கூடம் கட்டும் கனவு. ரஷ்யாவில் ஜார் மன்னர் ஆட்சிக்காலத்தில் கலைஞர்கள் எழுத்தாளர்கள் கண்காணிக்கும் அரசு நடைமுறை.அவரின் நண்பர்கள் வாயிலாக அவர் கொடுக்கும் நேர்காணல்கள் என நாவல் விரிகிறது
.புத்தகத்தில் இருக்கும் அட்டை படத்தில் இருக்கும் டால்ஸ்டாய் கண்முன் வந்துபோவர்.டால்ஸ்டாய் அக்ஸின்யாவை சந்திக்கும் போது பார்த்தும் பார்க்காமல் போது போன்ற காட்சி தனிச்சிறப்பு.
எஸ்.ரா திரைத்துறையில் இருப்பாதல் ஒர் திறமையான ஒளிப்பதிவாளர் கண்ணோட்டத்தில் காட்சியிருக்கும்.நாவலின் இறுதி காட்சி அப்படித் தரமாக நமக்குக் காட்சிதரும்.
இந்தாண்டு தொடக்கத்திலேயே சிறந்த நாவலை வாசித்தேன் என்ற மனநிறைவோடு இந்தாண்டைத் தொடங்குகிறேன்.இந்த நாவலை எனது மகனுக்கும் படித்துக் காட்டினேன்.அவன் கேட்ட முதல் புத்தகம் எஸ்.ராவின் புத்தகம் என்பது எனக்குப் பெரும் மகிழ்ச்சி..இந்தாண்டை எஸ்.ராவோடு தொடங்குங்கள்
•••
••
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
