நோய்மையிலிருந்து விடுதலை

துயில் – ஒரு வாசிப்பனுபவம்

பாஸ்கர் தேவதாஸ்

நோய்மைப் பற்றியும் அதன் ரகசியங்களையும் துயில் நாவல் மூலம் எஸ்ரா அவர்கள் மிக உன்னத படைப்பாக இந்த உலகிற்கு கொடுத்திருக்கிறார். ஒரு எளிய இலக்கியவாசகனாக இந்த நாவல் எனக்குள் உருவாக்கிய பாதிப்புகளை பதிந்திருக்கிறேன்

மூன்று வழியாக தெக்கோடு என்ற கிராமத்து பயணமே இந்த நாவல், இது ஒரு TRIOLOGY SUBJECT போல் உள்ளது, KOKHER என்ற கிராமத்தை மையமாக வைத்து Abbas Kiarostami. மூன்று படங்களை  இயக்கியிருப்பார். அது போன்று தெக்கோடு என்ற கிராமத்தை மூன்று பயணமாக பயணிப்பது போல் தான் உணர்கிறேன்.

                ஆத்திக்குளத்திலிருந்து அழகர், சின்னராணி, செல்வி ஆகியோரும் எட்டூர் மண்டபம் வழியாக நோயாளிகளாக பலபேரும் பணிமாற்றத்திற்காக கல்கத்தாவிலிருந்து ஏலன்பவரும் மூன்று வழியாக தெக்கோடு பயணிப்பதும். நாமும் இவர்களோடு போக வேண்டிய இடம் தெக்கோடு. ஆத்திக்குளம் இரயில் நிலையம் ஏனோ எனக்கு ASTAPOVO RAILWAY SATION-ஐ நினைவு கொள்ளச் செய்கிறது. யாருமே கவனிக்காத அந்த இரயில் நிலையம் TOLSTOY-யின் நோயின் காரணமாக அங்கே இறங்கியதும் பெரும் பரபரப்பிற்கு ஆளாகியது. மேலும் TOLSTOY அந்த இரயில் நிலையத்திலேயே உயிர் நீத்தார். அதே போல் நம் ஆத்திக்குளம் இரயில் நிலையமும் “நோய்மையை”குணமாக்கும் தெக்கோடு திருவிழா மூலம் சில பயணிகளை இந்த இரயில் நிலையத்தில் தக்க வைத்துக்கொண்டது. மேலும் பெண்களை மையப்படுத்தி நாவல் விரிவது மேலும் சிறப்பான ஒன்று.

                முதல் அத்தியாயம் முழுவதும் ஆத்திக்குளம் இரயில் நிலையத்தில் துவங்குகிறது. சின்னராணியின் வலிகளை சொல்லும் போது

“இலையின் மீது ஊர்ந்து செல்லும் புழுவை விளக்க முடியாமல் இலை நடுங்குவதைப் போன்றது தான் அவள் நிலையும்”

STATION MASTER குமாரசாமி நினைப்பது போல்

 “இங்குள்ள இரும்புப் பொருள்களைப்போல் தான் நானும்”

 என்று நினைக்கும் போது நாம் செய்கின்ற வேலையில் சிலநேரங்களில் ஏற்படுகின்ற சலிப்பு இதுபோன்ற பிம்பங்களை உருவாக்குகிறது என்பதை உணர்கிறேன்.

                நங்கா என்ற பெண்ணின் திருமண ஆசைகள் ஒரு விசித்திரம், நிச்சயம் நங்காவிற்கு திருமணம் ஆகியிருந்தால் அந்த கணவன் ஒரு அதிர்ஷ்டசாலியே, நன்றாக கவனித்துக்கொண்டிருப்பாள் என்று தோன்றுகிறது. சக்கரைக்கோட்டை திருவிழாவின் போது செல்வி கேட்ட கேள்வி இன்னும் என்னிடம் கேள்வியாகவே உள்ளது. “ஏன் யாருக்குமே நத்தையை எழுப்பத் தொ¢யவில்லை” அந்த நத்தை என்னவாக இருக்கும் என்று சிலநேரங்களில் நான் நினைப்பது உண்டு.

                அத்தியாம் 2-ல் நோய்மைப் பற்றிய விவாதம் அல்லது தருக்கம் ஒரு சூரியனைப்போல் பிரகாசிக்கிறது ஏலன் பவர் அவரது ஞானகுருவான லகோம்பையை சந்தித்துப் பேசிய உரையாடல் ஒரு தெளிந்த நீரில் இரண்டு நீர் துளிகளை எடுத்து சுத்தம் செய்து மீண்டும் அதே நீரில் சேர்த்துவிட்டதைப் போல அமைந்துள்ளது.

சில வரிகள்

“கடவுளும் பயமாக அறிமுகமாகி பயமாகவே மனதில் தங்கியிருக்கிறார்”

“தன் முகத்தை கண்ணாடியில் பார்த்து தெரிந்து கொள்பவன் தானே மனிதன் அவனுக்கு எப்படி அகதா¢சனம் கிடைக்கப்பெறும்”

“தேவாலயத்தின் மணிகள் எப்பொழுதும் அடுத்தவர்களுக்காக ஒலி எழுப்பக்கூடியவை தனது போரோசையால் மணிக்கு ஒரு பயனும் இருக்கப்போவதில்லை”

“ஒரு மனிதன் கடலை கண்ணால் கண்டு செல்வது போன்றது”

ஒரு வகையில் நோய் என்பது மதங்களின் மூலதனமாக உணர்கிறேன்.

அத்தியாம் 3-ல் அழகரின் தந்தை முத்திருக்கை அறிமுகமாகிறார். அவருடைய செயலால் கோபம் மற்றும் வெறுப்பு அவனை வேறு பாதையில் திசை திருப்புகிறது. அதே போல் அந்த லாரி டிரைவர் ஏதோ யோசனைக்குப்பிறகு இரண்டு ரூபாய் அழகரிடம் கொடுக்கிறான். என்ன யோசனை செய்திருப்பான்? இதுபோன்று எத்தனை இரண்டு ரூபாய்களை அவன் கொடுத்திருக்க வேண்டும்.

                அழகான வாழ்க்கையை ஓரளவிற்கு தீர்மானிக்கின்ற சூழல் இந்த அத்தியாத்தில் உருவாகின்றது. முக்கியமாக தட்டைக்காட்டுக் கதை என்னை ஒருமுறை பாலியத்தின் முன் அமர வைத்தது. நானும் அந்த அண்டரண்டா பறவைக்காக காத்திருக்கிறேன். முத்து அண்ணன் நினைவாக “புருஷன் வீட்டிக்கு போனதுக்கப்புறம் ஒரு வாய் கடுங்காப்பி கொடுப்பியான்னு கேட்டியே” என்று சின்னராணி நினைக்கும் போது பாசத்தின் தரிசனம் காணமுடிகிறது. மொத்தத்தில் அழகர் மற்றும் சின்னராணியின் வாழ்க்கையின் ஒரு சின்ன புள்ளியின் தொடக்கமாக உணர முடிகிறது.

அத்தியாயம் 4-ல் எட்டூர் மண்டபம் வழியாக பயணம் நீள்கிறது, தெக்கோட்டிலிருக்கும் மாதா இங்கே கொண்டலு அக்கா வடிவில் இருந்து கொண்டு ஒரு மகத்தான சேவையை செய்கிறாள். நாவலில் அவள் எதற்காக அந்த இடத்திற்கு வந்தால் என்று தெரியவில்லை (அதனால் அவளை நாம் ஒரு அவதாரமாகவே எடுத்துக்கொள்ளலாம்) அக்கா சொல்வதாக நாவலில் “உடலை நோய்மையிலிருந்து மீட்டுவிடலாம், மனதை மீட்கவே முடியாது” “பாசி படிந்த குளத்தில் எவ்வளவு தண்ணீர் நிறைந்திருந்தாலும் அது குடிக்கப் பயன்படாது”

அத்தியாயம் 5-ல் சின்னராணி என்ற பெண்ணை கடற்கன்னியாக மாற்றியதற்கு அழகர் காரணமாக இருந்தாலும், எல்லோரும் அவள் கடற்கன்னி என்று நம்பவைத்தவர் முத்தப்பா டைலர். அவர் தங்கையைப் பற்றி சொல்லும்போது “மனுசன் வாழ்க்கை எப்படி முடியும்னு யாருக்குமா தெரியும், கொடுப்பனை இருந்தா வாழலாம் இல்லாட்டி போய் சேரவேண்டியதுதான்”

அத்தியாயம் 6-ல் பயணங்கள் நிறைய கற்றுத்தருகின்றன. ஏலன்பவாரின் நினைவுகளில் “வருமை எல்லா அவமானங்களையும் நம்மீது சுமத்திவிடும்”

                கோபால் ஜோஷி அவர் மனைவியை மருத்துவத்திற்கு பணிக்கு அனுப்புவது ஒரு புரட்சியின் விதை போன்றது. ஏலன்பவாரின் 2-வது கடிதத்தில் கூவம் ஆற்றைப் பார்த்து “மிகவும் அழகாக இருந்தது” என்று சொல்லும் போது வியக்காமல் இருக்க முடியவில்லை.

                வீடு பற்றி ஏலன் பவாரின் எண்ணங்கள் நாவலில்

“வீடு என்பது வசிப்பதற்கான இடமில்லை அது நாம் எப்படி வாழ்கிறோம் என்பதற்கான அடையாளம் இங்குள்ள ஒவ்வொரு வீடும் அந்த ஆளின் வாழ்க்கை எவ்வளவு செல்வாக்குடன் இருக்கிறது என்பதற்கான அடையாளம்… பத்துவருடமாக பூட்டியிருக்கும் வீடு ரங்கூன் செட்டியின் அடையாளம்.

அத்தியாம் 7-ல் இன்றைய மருத்துவத்துறையை நன்றாக சாடியிருக்கிறது,

தம்பிகளே நீங்கள் பேசுங்கள் என்று கொண்டலு அக்கா சொல்லும் போது நோயாளிகளை பேச சொல்லி நிதானமாகக் கேட்டுக்கும் மனிதர்கள் யாவருமே மருத்துவரின் நிலையை அடையமுடியும் என்ற எண்ணம் தோன்றுகிறது, அங்கே சீயன்னா சொல்லும் கதையில் வரும் திருடனின் யாசிப்பு இறந்து போன குழந்தையின் எலும்பை அனுப்பும் சூயின் மனைவி, எலும்புக்கு (குழந்தைக்கு) பெயர் வைக்க சொல்லும் அக்கா மிகவும் வியப்பு!

                “நோய்மை மனிதனுக்கு அவனது தவறுகளைதான் அடையாளம் காண்டுகிறது அதை புரிந்துகொள்ளாமல் போனால் அவை நம்மைவிட்டு விலகுவதே இல்லை.

அத்தியாயம் 8-ல் அழகான் வாழ்வில் தற்செயலாக எதிர்பட்ட ஜிக்கி, அவனது வாழ்க்கையை அவனுக்குத் தொ¢யாமல் திசைதிருப்பிவிடுகிறாள். இதைப் பார்க்கும் பொழுது நிச்சயம் ஏதோ ஒரு சந்தர்பமும் அதில் வருகின்ற மனிதர்களுமே நமது வாழ்க்கையை தீர்மானிக்கிறார்கள். அதேபோல் பேரின்ப விலாசில் அழகருடன் வேலை பார்த்த சிறுவன் என்னவாயிருப்பான், சிறுவர் ஜெயிலிலிருந்து வந்திருப்பானா? அவனுக்கு ஜிக்கி போன்ற அல்லது வேறுயாராவது அவனது வாழ்க்கையை மாற்றியிருப்பார்களா?

அத்தியாம் 9-ல் மீண்டும் தெக்கோடு ஏலன்பவாரின் கடிதம்

                “இவர்களுக்கு நோயென்பது காலில் களிமண் ஒட்டிக்கொள்வதைப்போல தற்செயலாக நடந்துவிட்ட ஒன்று அதை துடைக்க அக்கறையின்றி களிமண்ணோடு நடந்து நடந்தே அதைப் போக்கிக்கொண்டுவிட முடியும் என்று நம்புகிறார்கள்.

                லகோம்பையின் பதில் “பணம் சேருவதுதான் நோய்மையை உருவாக்குகிறது” “பார்வையற்றவனுக்கு நீச்சல் பழகித்தருவதைப் போன்றதுதான் மருத்துவம்”

காலரா வியாதி நம்முடைய ஊரிலும் பரவிவருகிறதோ என்று தோன்றுகிறது. மேலும் உதயானா கிராமத்தில் நடந்த கதையில் ஒரு வணிகன் கேட்ட கேள்வி “நோயே இல்லாத மனிதர் எவராவது இந்த உலகில் இருக்கிறார்களா?” இதற்கு பக்த கபிலானி சொல்கிறார் “நமது பிறப்பே ஒரு நோய்மைதானே பின் எப்படி நோய்மையில்லாத மனிதன் இருப்பான்.

நோய்க்கான சில காரணங்களையும் அவர் விளக்குகிறார். சீரற்ற உணவு, அசுத்தமான குடிநீர், மனக்கொந்தளிப்பு, மலம்மூத்திரம் அடக்குதல், சுவாச ஒழுங்கின்மை, பயம், சோம்பல், கோபம், பொறாமை, வஞ்சகம், மிதம்மிஞ்சிய போகம், அதீத காமம் இவைகள் எல்லாம் நோய்மையின் பிரதான காரணிகள். இவற்றை நாம் அறிந்தே செய்கிறோம், நோய்மையுறுகிறோம்.

                இந்த கதையின் வழியாக மருத்துவத்தை ஒரு நம்பிக்கை மற்றும் விந்தையாக பார்க்க முடிகிறது.

அத்தியாயம் 10-ல் நம் வெறுப்பிற்கு மருந்து ஒரு குழந்தையிடம் தான் இருக்கிறது என்று சரவணமுத்துவின் கதை வழியாக எஸ்ரா உணர்த்தியிருக்கிறார், பெயர் மட்டுமே அழகாகப் பெற்ற அமுதினி உள்ளத்தில் வைத்திருந்த கசப்பால் ஒரு குடும்பத்தையே சிதைத்துவிட்டாள். அக்கா அவளுக்கு ஆறுதலாக ஒரு வார்த்தை

“நாக்கு தானப்பா நமக்கு விரோதி”

அத்தியாய் 11-ல் கடற்கன்னியின் மகள் செல்வி அவளைப் பார்த்து “அம்மா இதுதான் கடலா” என்று அடிவானத்தைக் காட்டி கேட்டுக்கும்போது மனது லேசாக கனத்துவிடுகிறது.

                அறப்பள்ளி மலைகிராமத்தில் சின்னராணி சந்தோஷமாக இருந்தால் என்பதற்கு சாட்சியாக மலைவாசிகளின் இயல்பு, அவர்களின் கொடைகுணம் வெளிப்பட்ட இடம். மூப்பர் சொல்லும் வார்த்தை உண்மை என்று நாவலின் இறுதியில் உணரமுடிகிறது. “கடற்கன்னியை உன்னால் அடக்கி வைத்திருக்க முடியாது, அது தன்னை விடுவித்துக்கொள்ளும் பொழுது துயரமான சம்பவங்கள் நடைபெறும்”

அத்தியாம் 12-ல் ஏலன்பவருக்கு உதவியாளராக சீயாளி அறிமுகமாகிறாள். ஏலன்பவரும் ஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்றி சந்தோஷமடைகிறார். ஏலன்பவா¢ன் நினைவாக நாவலில் “உடல் நிறைய இடைவெளிகளையும், துளைகளையும் கொண்டிருக்கிறது, அதை பூர்த்தி செய்யவேண்டும் என்கிற ஆசை உடலுக்கே இருக்கிறதோ என்னவோ அதனால் தான் அது மற்றொரு உடலை தனதாக்கிக்கொள்ள முயல்கிறது”

அத்தியாயம் 13-ல் வரும் சிவபாலன் சேது கதை நிச்சயம் அரசதிகா¡¢கள் படிக்கவேண்டிய கத

கதையின் சில வரிகள் “தன்னிடமிருந்த பணத்தில் எதையும் வாங்கிவிடலாம் என்று நினைத்தவருக்கு இன்றைக்கு ஒரு டம்ளர் தண்ணீரைக்கூட தன்னால் நாற்றமில்லாமல் குடிக்க முடியவில்லையே என்று ஆதங்கமாக இருந்தது”

                “தாய் இறந்துபோன பிறகு தாய் தந்த சுவையும் நம்மைவிட்டு போய்விடுகிறது” கடைசியாக அக்கா சொல்கிறாள்

“நம்மை நாம் உணரத்தவறினால் அதன் இழப்பு நமக்கு மட்டுமானதில்லை உலகத்திற்கும் சேர்த்துதான்”

அத்தியாயம் 14-ல் பாம்பாட்டியின் மனைவி முதன்முதலாக செல்வியின் பெயரைக் கேட்கிறாள், அவளும் அவள் பெயரை முதன்முதலாக “திருச்செல்வி” என்றாள்.மேலும் அழகர் கடற்கன்னி ஷோ நடத்துவதற்க முன்னோடியாக நாக கன்னி ஷோ நடத்தியது, ராமி அதற்கு யோசனை சொன்னது என்று மொத்தமாக அழகர் அலைந்த அத்தியாயம்.

அத்தியாம் 15-ல் செருப்போடு பேசவும், கஷ்டங்களை பகிர்ந்து கொள்கின்ற ஒரு பிச்சைக்காரன். தனிமையை ஒருவன் புரிந்துகொள்ளவில்லை என்றால் நாம் கணிக்கமுடியாத ஒரு எண்ணங்களுக்கு கொண்டு செல்லும் என்பதை இந்த சிறுமியின் செருப்புக் கதை உணர்த்துகிறது.

                அக்கா சொல்வதாக

“உண்மையில் நாம் விரும்பினாலும் உலகில் தனியாக இருக்கமுடியாது “

கோமகள் கதை இன்றைய மருத்துவத்தை தோலு¡¢த்துக் காட்டியிருக்கிறது.

அத்தியாயம் 16-ல் பம்பாய்க்குப் போகும் அழகர் அண்ணன் என்னவாகியிருப்பான் என்று எண்ணத்தோன்றுகிறது. அந்த பனியனையும் செருப்பையும் அழகர் எவ்வளவு நாள் அணிந்திருப்பான். அவன் அண்ணன் நினைவு வந்து போயிருக்குமா? கேள்வியாகவே மனதில் தங்கிப் போகின்றன. அதேபோல் சின்னராணியின் தந்தையின் பாசம் மற்றும் அழகர் மேல் அவர் படும் கோபம் அவனை தற்காலிகமாக மாற்றுகிறது (10 நாட்களுக்கு) .

அத்தியாம் 17-ல் ஏலன்பவர் தெக்கோட்டின் காற்றை அந்த மக்களுடன் சேர்ந்து சுவாசிக்க கற்றுக்கொண்டுவிட்டாள். மருத்துவத்தைக் கற்றுக்கொள்வதற்கு தன்வா கூறும் போது “கடலை ஒவ்வொரு துளியாக குடித்து முடிக்க எவ்வளவு காலமாகமோ அவ்வளவு காலமாகும்” மேலும் ஏலன்பவா¢ன் கேள்வி? “நான் மருத்துவம் என்று நினைத்துக்கொண்டிருந்த ஒன்று கடவுளின் மகிமையால் தான் நலமாகிறது என்றால் நான் வெறும் கருவிதானே”

ஏலன்பவாரின் சேவை பிடிவாதங்கள், மருத்துவம் என்ற பெயா¢ன் நடக்கும் கொடுமைகளை ஏலன்பவர் எதிர்த்தது, நாகலா என்ற பெண்ணின் மரணமும் கொடுக்காய் புளியமரத்தில் கட்டிவைத்து நடக்கும் கொடுமையும் ஏலன்பவரால சகிக்க முடியவில்லை. ஏலன்பவாரின் நம்பிக்கை மட்டும் மீதமிருந்து அத்தனையும் இழந்து அவளின் குருவின் பதிலுக்காக காத்திருக்கிறாள்

அத்தியாயம் 18-ல் தானப்பன், ரமணன் பயணம் வியப்பாகவும் விசித்திரமாகவும் உள்ளது. நம் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொள்ள நமக்கு பாடம் எடுப்பதுபோல் உள்ளது. அவர்கள் சொல்லும் போது “மனிதனின் முன்னேற்றம் அவன் நடக்கத்துவங்கியதிலிருந்துதான் ஏற்பட்டது”  பெரும்பான்மை நோய்களுக்கு மாத்திரை மட்டும் அல்ல நிசப்பத்தம் ஒரு அரும்மருந்து , ஊர் ஊராக சென்று வாழ்க்கையை அவர்கள் முதுமையிலும் அனுபவித்து வாழ்கிறார்கள்.

அத்தியாயம் 19-ல் தெக்கோடு விலக்கு இரயில் நிலையத்தில் இரயில் நின்று எல்லோரும் இறங்கி போகும் போது நாமும் அவர்களுடன் ஒரு வியப்புப் பற்றிக்கொண்டு திருவிழா மைதானத்திற்கு புறப்படுவோம்.

அத்தியாயம் 20-ல் மாதக்கோயில் உருவான கதை மற்றும் கபாரியேல் மாதா தரிசனம் கிடைக்கப்பெறுவது. மற்றும் மாதா கோயிலின் அமைப்புகள் அழகாய் விளக்கப்பட்ட ஒரு அத்தியாயம்.

அத்தியாயம் 21-ல் ஏலன்பவாரிடம் விசாரணை என்றதும் மனது ஏதோ கோர்ட்டு சீனை உருவகப்படுத்திக்கொண்டிருக்கிறது, அவளிடம் ஏதாவது மறுப்பு சொல்கிறாயா என்று கேட்டவுடன் ஏலன்பவாரின் மறுப்புரை ஏதோ ஒரு தெளிவுரை போன்று அமைந்ததாகக் கருதுகிறேன்.

“மருத்துவம் மனிதநலம் குறித்த அக்கறையால் உருவானது”

“கலாச்சாரம் மனிதநலத்தை கட்டுப்பாடு செய்யும் சூழலில் மருத்துவம் வெறுமனே மருந்து தருவதை மட்டுமே தனது வேலையாக கொள்ளாமல் கலச்சார காரணிகளை ஆராயவேண்டியிருக்கிறது.”

“இங்கே மதம் அரசை, அதிகாரத்தை, அடிப்படை கலச்சாரத்தை, தனிமனிதனை, குடும்பத்தை, பிறப்பு, சாவு உள்ளிட்ட அத்தனை சடங்குகளையும் கற்றுக்கொடுக்கிறது.”

“நோய் முக்கியமானத்தில்லை நோயுற்ற மனிதனே முக்கியமானவனாக கருதவேண்டியுள்ளது” “உலகில் மருத்துவத்தை வணிகமாக்கியது ஆங்கில மருத்துவம் தான்”

அவள் மருத்துவப் பணியின் முக்கியத் தடையாக கருதுவது

1. ஒரு பெண்ணை ஆண் நடத்தும் விதம்

2. நோய்மையுறுதலை தீய்மையின் அடையாளமாக காண்பது

3. மரணம் குறித்த பொது அச்சம்

4. கடவுளின் பெயரால் நடைபெறும் நோய் நீக்குதல் சடங்கு

5. நோய்மை குறித்து எந்த நோயாளியோ, அவனது குடும்பமோ, அவன் வசிக்கும் ஊரோ, சமுகமோ எதையும் யோசிக்காமல் இருப்பது.

“மனிதனுக்கு ஏற்படும் பெரும்பான்மை நோய்களுக்கு மனிதன் உற்பத்தி செய்த கருவிகளும், அவனது மோசமான வணிக புத்தியும் அலட்சியமான வாழ்க்கையுமே காரணம்”

அவள் குற்றமற்றவள் என்று தீர்ப்பு சொன்னவுடன் என் மனது ஏலன் பவரைவிட சந்தோஷமடைந்தது.

அத்தியாயம் 23-ல் முதல் நாள் திருவிழா அன்று நானும் செல்வியைப் போலவே எதைப்பார்ப்பது, எதை விடுவது என்று இந்த அத்தியாயம் முழுவதும் போய்க்கொண்டிருந்தேன், ஆனால் யாரிடமும் அடிவாங்கவில்லை, எத்தனை விதமான நோய்கள் மற்றும் கிராமத்து திருவிழாவில் நடக்கும் வேடிக்கை வினோதங்கள், பால்யத்தின் நதியில் சிறிது நேரம் நீந்துவதுபோல் இருந்தது.

அத்தியாயம் 24-ல் எட்டூர் மண்டபத்திலிருந்து நாவலில் சில வா¢கள்

“காமமும் அது சார்ந்த சிக்கலுமே நோயை தோற்றுவிக்கின்றன”

“நினைவில் வாழ்ந்து கிடப்பதுதான் நமது பலமும், பலவீனமும். நினைவேயில்லாமல் மனிதனால் வாழ முடியாது”

“உனக்கு மட்டும் உனது கடந்தகாலம் முக்கியமானது, உலகிற்கு இல்லை ஆகவே அதிலிருந்து விலகி உனக்கான அடையாளங்களை நீ உருவாக்கிக் கொள்ளும் போது கடந்தகாலம் மெல்ல எடையற்று போய்விடும்”

“மனதில் அன்பாக இருப்பதைப்போல் நம்பவைக்கிறது ஆனால் அதனடியில் சுயநலம் ஒளிந்திருக்கிறது அது யாரையும் எப்போதும் விட்டுக்கொடுக்கவும் காட்டிக்கொடுக்கவும் ஏமாற்றவும் தயாராகவே உள்ளது”

“மனிதர்கள் தாங்கள் விரும்புவதைவிடவும் வெறுப்பைப் பற்றித்தான் அதிகம் நினைத்துக்கொண்டிருப்பார்கள்”

அத்தியாயம் 25-ல் மூன்றாம் நாள் திருவிழாவின்போது தம்பான், ஜிக்கி மற்றும் டோலியைப் பற்றி அழகா¢டம் சொல்லும் போது பதற்றமும் குழப்பமும் நிறைந்த பாசம் அவனிடம் வெளிப்படுகிறது.”என்னை ஞாபம் வச்சிக்கிற ஆளுங்க கூட இருக்காங்களா” என்று ஜிக்கி கேட்கும்போது மனதுக்குள் ஏதோ செய்கிறது.

ஜிக்கி சொல்கிறாள் “எங்கேயாவது படுத்து நல்லா ஒரு ராத்திரிதூங்கி எந்திருச்சா போது அப்புறம் கையை ஊன்றி கருணம்போட்டு பொழச்சுக்குவேன்.” ஒருநாள் உண்மையான இதுபோன்ற தூக்கம் எல்லோருக்குமே தேவைப்படும் என்று நினைக்கிறேன்.

அத்தியாயம் 26-ல் கிக்கிலி என்ற கிழவனின் அறிமுகம் மற்றம் ஏலன்பவா¢ன் ஒரு உறுதியான கடிதம் தெக்கோட்டு மக்களைப் பற்றியும் நோய்மையைப் பற்றியும்

“குரூரம் என்பதை நாம் மனதின் துவேச நிலையாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் குரூரம் என்பதை வாழ்வின் நடைமுறையாக மாற்றிவைத்திருக்கிறது இயற்கை.”

“வாழ்வின் மீதான பயம் அற்றுப்போகும் போது வாழ்வதையே ஒரு சந்தர்ப்பமாக தான் கருதுகிறார்கள்.” இப்படியாக மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறது ஏலன் பவா¢ன் கடிதம்.

அத்தியாயம் 17-ல் ஏலன்பவர் கடிதத்தில் ஒன்று குறிப்பிடுவார். “கடலை ஒவ்வொரு துளியாக குடித்துத்தீர்க்க நினைக்கும் குருவியைப்போலதான் நான் இருக்கிறேன் என்று” ஆனால் இந்த கடிதத்திற்கு லகோம்பை பதில் எழுதும்போது “இன்று கடலே உன் வசமாகியிருக்கிறது” எவ்வளவு மகிழ்ச்சியாக ஏலன் இருந்திருப்பாள்.

“இயற்கையை நாம் அறிந்துகொள்ள நம் கண்களை பயன்படுத்துவது தவறானது, அது வெறும் தோற்றத்தைத் தாண்டி வேறு எதையும் உணரச்செய்யாது”

அத்தியாயம் 27-ல் “அடுத்தவருக்கு சாப்பாடு போடுவதன் வழியே அவன் தனது தவறை சா¢கட்டப்பார்க்கிறான். நம்முடைய பெரும்பான்மை சமூகம் இதைக்கூட செய்ய மறுக்கிறதே.

அத்தியாயம் 28-ல் 5-ம் திருவிழா எனக்கும் தட்டைக்காட்டு திருவிழாவுக்கு அண்டரண்டா பறவை மூலம் போகவேண்டும் என்பதுபோல் தோன்றுகிறது. அண்டரண்டா பறவை எப்படியிருக்கும் என்று ஒரு பொ¢ய கற்பனையையே மனது உருவாக்கிக்கொண்டது. சின்னராணி மிகுந்த சந்தோஷத்தில் அழகரை முத்தமிடுகிறாள்.

அத்தியாயம் 29-ல் சின்னராணிக்கு தம்பானின் சுயரூபம் தொ¢யவருகிறது. தட்டைக்காட்டுக்கு போன செல்வியை வேறு காணவில்லை பயத்திலும், குழப்பத்திலும் உறைந்து போயிருக்கிறாள்.

அத்தியாயம் 30-ல் ஏலன்பவாரின் கொலைக்கான வாக்குமூலங்கள். யார் ஏலன்பவரை கொலை செய்தது? இந்த கேள்வி பொன்னியின் செல்வனில் ஆதித்த கா¢காலனை கொலை செய்தது யார் என்பது போல நினைக்கத்தோன்றுகிறது. கிக்கிலி சொல்வதாக “என்னை கொன்றுவிடுங்கள் என் புத்தி கெட்டுப்போய்விட்டது” என்று வைத்துப் பார்க்கும் பொழுது கிக்கிலி இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டவனாக நான் கருதுகிறேன்.

அத்தியாயம் 31-ல் நாவலில் சொல்வதுபோல காமம் ஒரு நோய்க் காரணியாக இந்த அத்தியாயத்தில் செயல்படுகிறது. தம்பான் மற்றும் அவன் மைத்துனனின் வெறிச்செயலால் சின்னராணி சிதைந்து போகிறாள், பண்பற்ற காமம் நிச்சயம் பலிவாங்காமல் விடாதுபோலும், தம்பானின் உயிரை அச்சாணி வாங்கிக்கொண்டது.

                சின்னராணி கொலை செய்துவிட்டாள் என்று அழகரால் நம்பவே முடியவில்லை “என் பொண்டாட்டியா” என்று மறுபடியும் கேட்டான். கடற்கன்னியின் உடையை தேங்கிக்கிடந்த குட்டையில் தூக்கியெறிந்துவிட்டான், நிச்சயம் அந்தகணம் உணர்ந்திருப்பான் அவள் சுமந்துகொண்டிருந்த வலியை, ஆனால் முத்தப்பா டைலர் பார்த்திருந்தால் கொஞ்சம் வருத்தப்பட்டிருப்பார் என்று தோன்றுகிறது. ஏனெனில் அவர் சொல்லும்போது “கடற்கன்னியின் உடை தைக்கிறது ரொம்பவும் கவனமா செய்யவேண்டிய வேலை நாளைக்கு அதபோட்டுட்டு ஓட்டையாகிப் போச்சுனா எனக்கு இல்ல கேவலம்”

அத்தியாயம் 32 (கடைசி அத்தியாயம்) அழகர் நினைப்பதாக “செல்வியை எப்படி வளர்த்து ஆளாக்கப்போகிறோம்” என்று?

                நாவலின் கடைசி வரி”தொலைவில் இரயில் வருவதற்கான புகை தெரிந்தது அழகர் அதை நிமிர்ந்து பார்க்க மனமில்லாமல் தலைகவிழ்ந்து நின்றிருந்தான்”

நான் புரிந்துகொள்வது, இரயில் நம்பிக்கையின் குறியீடு ஆகவே அவருடைய வாழ்க்கைப் பயணமும் தொடரும். அழகர் இரயிலை மட்டும் பார்த்து தலைகவிழ்ந்து கொள்ளவில்லை. அவன் அதுவரை வாழ்ந்த வாழ்க்கையைப் பார்த்துதான் தலை கவிழ்ந்து கொள்கிறான். நிச்சயம் சின்னராணி போன்ற துணிச்சல் மிக்க பெண் அழகரையும் செல்வியையும் தலைநிமிர வைப்பாள்.

துயில் நாம் அனைவரும் வாசிக்கவும் கொண்டாடவும் வேண்டிய அற்புதமான நாவல் என்பதில் சந்தேகமில்லை

துயில்
எஸ்.ராமகிருஷ்ணன்
தேசாந்திரி பதிப்பகம்
Rs 525

*******                         

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 25, 2021 23:02
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.