அறமென்ப… [சிறுகதை]
[ 1 ]
காரை மெஜெஸ்டிக் ஆஸ்பத்திரிக்கு முன்னால் நிறுத்திவிட்டு வெளியே இறங்கி செல்வா கூவினான். “அட்டெண்டர் டிராலி… டிராலி கொண்டுட்டு வாங்க… ஒரு ஆக்ஸ்டெண்ட் கேஸ்…”
அட்டெண்டர் திண்ணையில் நின்று நிதானமாக அவனையும் காரையும் பார்த்தான். “ஆக்ஸிடெண்டா சார்? எங்க? ஆளு யாரு?”
”ஆளு வண்டிக்குள்ள இருக்காரு… சீரியஸா இருக்காரு… ஸ்ட்ரெச்சர் வேணும்.. உடனே வேணும்… ஏகப்பட்ட பிளட் லாஸ் ஆகியிருக்கு”
அவன் “இருங்க” என்றான். பெரிய பின்பக்கத்தை உந்தியபடி நிதானமாக உள்ளே சென்றான். செல்வா திரும்பி காருக்குள் கிடந்தவரைப் பார்த்தான். நாற்பது வயதானவர், ஏதோ தொழிலாளி என்று தெரிந்தது. அவருடைய ரத்தம் வழிந்து காருக்குள் பெருகிக்கொண்டிருந்தது. அவருடைய ஒரு கால் மட்டும் மெல்ல துடித்தது.
அட்டெண்டரும் ஒரு பயிற்சி டாக்டரும் வந்தனர். பயிற்சி டாக்டர் இளைஞன், மீசையில்லாத வெண்ணிற முகம். அவன் “யாருக்கு சார் ஆக்ஸிடெண்ட்?”என்றான்.
“இதோ இவருக்குத்தான். நான் மதுரையிலே இருந்து வர்ரப்ப வழியிலே பாத்தேன். எனக்கு முன்னாலே போன யாரோ அடிச்சு போட்டுட்டு போய்ட்டாங்க. உடனே தூக்கிட்டு வந்தேன்… ரொம்ப கிரிட்டிக்கலான நெலைமையிலே இருக்கார்னு நினைக்கிறேன்”
“சார், இது போலீஸ் கேஸ். நாங்க எடுக்க மாட்டோம். நேரா கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்கு போங்க”
“என்ன சொல்றீங்க? ஆசாமி செத்துட்டிருக்கார்.”
“ஆனா இது ஆக்ஸிடெண்டா கிரைமான்னு நாங்க சொல்லமுடியாது. லீகல் சிக்கல்கள் இருக்கு”
நம்பமுடியாமல் “ என்ன சொல்றீங்க?”என்று செல்வா கேட்டான்
“சர்க்கார் ஆஸ்பத்திரிக்குத்தான் சார் போகணும்”
சீற்றத்துடன் “அப்ப முதலுதவியாவது பண்ணுங்க” என்றான் செல்வா “இப்பவே நடுராத்திரி… இப்ப நான் வேற எங்க போகமுடியும்?”
“நாங்க இங்க இறக்கவே முடியாது சார். ஆள் போய்ட்டார்னா நாங்க சிக்கிக்குவோம். போலீஸ் எங்களைப் போட்டு படுத்தி எடுத்திருவாங்க… கொண்டுபோயிடுங்க”
“ஆள் செத்திருவான் சார்”என்று செல்வா தளர்ந்த குரலில் சொன்னான்.
”அதான் நாங்க சொல்றோம்”
“அப்ப என்னதான் பண்றது?”
“நேரா கவர்மெண்ட் ஆஸ்பிட்டல் கொண்டுபோங்க… வேற எந்த பிரைவேட் ஆஸ்பத்திரியிலேயும் எடுக்கமாட்டான்”
”அதுக்கு சிட்டிக்குள்ளே போகணுமே”
“ஆமா”
அவன் மேற்கொண்டு பேச விருப்பமில்லை என்பதுபோல பார்த்தான்.
“பாஸ்டர்ட்ஸ்”என்று கூவியபடி செல்வா ஓடிப்போய் காரில் ஏறிக்கொண்டான். தலையை வெளியே நீட்டி “நான் பாத்துக்கறேன். ஐ வில் சேவ் ஹிம்!”என்றான்.
காரை வெளியே எடுத்து சாலையில் சீறவிட்டான். எல்இடி விளக்குகள் எரிந்த சாலை மின்னி மின்னி பின்னால் சென்றது. வெளிச்சம் அத்தனை கண்கூச வைத்ததாக முன்பு உணர்ந்ததில்லை. சாலையில் வண்டிகள் மிகக்குறைவாகவே இருந்தன
திரும்பிப்பார்த்தபோது அந்த ஆள் அசைவில்லாமல் கிடப்பதைக் கண்டான். செத்துவிட்டானா? பின்னால் கிடப்பது பிணமா? அவன் முதுகில் ஒரு குளிர்போல ஏதோ உணர்வு ஏற்பட்டது.
அவன் நெடுஞ்சாலையில் வரும்போது அந்த ஆள் சாலையோரமாக துடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தான். பைக் தூரத்தில் தெறித்து விழுந்து ஒளிமின்னிக் கொண்டிருந்தது. அடிபட்டு அரைமணிநேரமாவது ஆகியிருக்கும். சுற்றிலும் எவருமில்லை. அவ்விடத்தை வேகத்தில் கடந்து சென்ற தன் காரை பின்னாலெடுத்து அருகே கொண்டுவந்தான். முதலில் ஒரு தயக்கம் இருந்தது. ஏதாவது வம்புகளில் மாட்டிக்கொள்வோமா?
அந்தக்கணம் அந்த ஆள் கைநீட்டி “அய்யா!” என்றான். மன்றாடும் குரல் “அய்யா!” கை அப்படியிலே மண்ணில் விழுந்தது. கண்கள் மூடிக்கொண்டு இமைகளுக்குள் விழிகள் அசைந்தன.
செல்வா முடிவெடுத்தான். காருக்குள் ஒரு பெட்ஷீட் இருந்தது. அதை எடுத்துக்கொண்டுசென்று அடிபட்டவனின் அருகே விரித்தான். அவன் உடலுக்கு அடியில் அதை இழுத்து அவனை அதன்மேல் படுக்கவைத்து அப்படியே இழுத்து கார்வரைக்கும் கொண்டுவந்தான். பின்னர் காருக்குள் இழுத்து பின்னிருக்கையில் படுக்கவைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான். பின்பக்கத்திலிருந்து பச்சைக்குருதி வாடை வந்துகொண்டே இருந்தது.
அரசு தலைமை மருத்துவமனையை எளிதில் கண்டுபிடித்துவிட்டான். அந்த வேளையிலும் அதன் முன்னால் ஆள்கூட்டம் இருந்தது. தள்ளுவண்டிக்கடைகள் முன் டீ குடித்துக்கொண்டு சிலர் நின்றிருந்தனர்.
வண்டியை நேராக அவசர சிகிழ்ச்சைப் பிரிவின் முன் கொண்டுசென்று நிறுத்தினான். இறங்கியபோது அவன் மானசீகமாக களைத்திருந்தான். குரலெடுத்துப் பேசமுடியவில்லை. “அட்டெண்டர்… ஒரு ஆக்ஸிடெண்ட்”என்று தளர்ந்த குரலில் சொன்னான்.
ஆனால் அட்டெண்டர் பழகிப்போன வேகத்துடன் நேராக டிராலி ஸ்ட்ரெச்சருடன் வந்தான். அவனுடன் வந்த இன்னொருவன் டிராலியிலிருந்த அலுமினியப் பலகை ஒன்றை எடுத்து அருகே வைத்து அதில் அடிபட்டவனை புரட்டிப்போட்டு அப்படியே இழுத்து டிராலியில் வைத்தான். அதேவேகத்தில் சரிவில் உருட்டி மேலேகொண்டுசென்று மறைந்துவிட்டார்கள். இரண்டு நிமிடம்கூட ஆகவில்லை.
என்ன செய்வதென்று தெரியாமல் அவன் நின்றுகொண்டிருந்தான். ஒரு சிகரெட் பற்றவைத்தான். காரை எடுத்து அப்பால் மரநிழலில் நிறுத்தினான். விளக்கு வெளிச்சத்தில் தூக்கிப் பார்த்தபோது கையெல்லாம் ரத்தம். கழுவுவதற்காக அங்குமிங்கும் பார்த்தான். ஒரு கழிப்பறை கண்ணுக்குப் பட்டது.
கழிப்பறைக்குள் சென்று கழுவ முற்பட்டபோதுதான் கையில் மட்டுமல்ல முகத்தில், சட்டையில், பாண்டில் எல்லாம் ரத்தம் என்று தெரிந்தது. கைகளை உரசிக் கழுவி கர்சீஃபை நீரில் முக்கி உடைகளையும் துடைத்துக்கொண்டான்.
ஈர உடையுடன் வெளியே வந்தான். கார் அருகே சென்று நின்றான். அங்கே மேலும் பலர் நின்றனர். ஒருவன் டிரம்மில் டீ கொண்டுவந்து விற்றான். அதைப் பார்த்தபோதுதான் நாக்கு தவிப்பதே தெரிந்தது. ஒரு டீ குடித்தான்.
அதன் பின்னர்தான் மனைவியின் ஞாபகமே வந்தது. மொபைலில் அவளை அழைத்தான். சுருக்கமாக நடந்ததைச் சொன்னான். “டாக்டர்ஸ் ஏதாவது ரிப்போர்ட் கேப்பாங்கன்னு நினைக்கிறேன். அது முடிஞ்சதுமே வந்திடறேன். காரை கொண்டுவர முடியாது. வாட்டர் செர்வீஸுக்கு விட்டுட்டு ஆட்டோவிலேதான் வரணும்” என்றான்
சற்றுநேரத்தில் முதல் அட்டெண்டர் வந்தான். “சார் வாங்க, டாக்டர் கூப்பிடறார்”
அவன் அட்டெண்டருடன் உள்ளே சென்றான். நீண்ட காரிடாரில் கண்கூசும் வெளிச்சம் இருந்தது. இரண்டு சக்கரநாற்காலிகள் கிடந்தன. ஒரு ஸ்ட்ரெச்சர் காலியாக காத்திருந்தது.
“உங்களுக்கு வேண்டப்பட்டவரா சார்?”என்றான் அட்டெண்டர்.
“இல்லைங்க, வழியிலே அடிபட்டுக் கிடந்தார். எடுத்திட்டுவந்தேன்”
”லக்கி ஆளுங்க… சரியான சமயத்திலே கொண்டாந்திருக்கீங்க”
“பொழைச்சுகிடுவாரா?”
”அப்டித்தான் பேசிக்கிட்டாங்க”
அவன் காரிடாரில் களைப்புடன் நடந்தான். பக்கவாட்டு அறைகளில் வெவ்வேறு பலகைகள் அவை எந்தெந்த இலாகா என்று காட்டின. நீலநிறமான மிகப்பெரிய போர்டில் வெண்ணிற பிளாஸ்டிக் எழுத்துக்களில் அறிவிப்புகள். அருகே சிறிய பலகைகளில் ஏராளமான காகிதங்கள் ஒட்டப்பட்டு காற்றில் பறந்தன.
“இந்தக்காலத்திலே இதெல்லாம் செய்யமாட்டாங்க சார். நீங்க துணிஞ்சு பண்றீங்க” என்றான் அட்டெண்டர்.
“ஏன்?”
“வம்புதான்.. போலீஸ்காரங்க எந்த நியாயத்துக்கும் கட்டுப்படமாட்டாங்க. அதைவிட வக்கீலுங்க. இப்ப வருவாங்க பாருங்க” என்றான் அட்டெண்டர் “இந்தப்பக்கம் சார்… இதான் ரூம்”
அவன் உள்ளே சென்றான். அங்கே நடுவயதான டாக்டர் இருந்தார். வேகமாக ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். உட்காரச்சொல்லி எழுதியதை காத்து நின்ற ஒருவனிடம் கொடுத்துவிட்டு நிமிர்ந்து கண்ணாடிவழியாகப் பார்த்து “நீங்கதான் அந்தாளை கொண்டுவந்ததா? ஆக்ஸிடெண்டிலே அடிபட்ட ஆள்?”
“ஆமா சார், நான்தான்”
”உங்க பேரு?”
“செல்வா, எம்.செல்வக்குமார்”
”என்ன பண்றீங்க?”
”பிஸினஸ் பண்றேன்… எண்ணை ஏஜென்சி எடுத்திருக்கேன். பாமாயில்”
“ஃபைன்… சரியான நேரத்திலே கொண்டுவந்திட்டீங்க. ஜஸ்ட் ஒரு எட்ஜிலே உயிர் பிழைச்சிருக்கார். தலையிலே நல்ல அடி. ரத்தம் குடுத்திட்டிருக்கோம். தலையிலே பட்ட அடியாலே ஏதாவது பாதிப்பான்னு நாளன்னிக்குத்தான் தெரியும்” என்றார் டாக்டர். “உங்க ஐடிகார்டு ஏதாவது இருக்கா?”
“டிரைவிங் லைசன்ஸ் காப்பி இருக்கு”
“போதும், குடுங்க”
அவன் பர்ஸிலிருந்து அதை எடுத்துக் கொடுத்தான்.
“ஒரு ரிப்போர்ட் குடுத்திட்டு நீங்க போகலாம். போலீஸ் கூப்பிடுவாங்கன்னு நினைக்கிறேன்”
“நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு போகணுமா?”
“நாங்க இன்ஃபார்ம் பண்ணிட்டோம். அவங்களுக்கு தெரிஞ்சா வக்கீலுகளுக்கும் தெரிஞ்சிரும். அவங்களும் வந்திருவாங்க”
“வக்கீலுகள் எதுக்கு?”
“ஆக்ஸிடெண்டுன்னா அது அவங்களுக்கு காம்பன்சேஷன் கேஸ்ல? நடைமுறை என்னான்னா காம்பன்சேஷன்லே ஒரு பர்செண்டு வக்கீலுக்கு. முப்பது பர்செண்ட் வரை வக்கீல் ஃபீசா வாங்கிக்கிடறவங்க கூட இருக்காங்க…”
“ஓகோ”
”எழுதுங்க”
அவன் அவர் தந்த காகிதத்தில் நடந்ததை எழுதி டிரைவிங் லைசன்ஸ் நகலுடன் அவரிடம் கொடுத்தான்.
’பாலு இதை மாலினி கிட்டே குடு” என்று அட்டெண்டரிடம் தந்துவிட்டு “ஓக்கே, நீங்க கெளம்பலாம்… உங்க நம்பர் இருக்குல்ல இதிலே?”
‘ஆமா” என்றான் செல்வா ‘உங்க நம்பர் குடுங்க டாக்டர். ஏதாவதுன்னா கூப்பிட்டு கேட்டுக்கறேன்”
அவர் அளித்த எண்ணை சேமித்துக்கொண்டான். வெளியே வந்தபோது நடக்கவே முடியவில்லை. கார் வரைக்கும் நடப்பதற்குள் விழுந்துவிடுவான் போலத் தோன்றியது
[ 2 ]
அவன் மனைவிதான் அவனை எழுப்பினாள். அவன் அரைத்தூக்கத்தில் கனவில் இருந்தான். அவன் ஒரு பாத்திரத்தை கையால் எடுத்தான், அதில் ரத்தம் இருந்தது. அதை வைத்துவிட்டு இன்னொன்றை எடுத்தான். அதிலும் ரத்தம். இன்னொரு பாத்திரம், அதிலும் ரத்தம். எல்லா பாத்திரங்களிலும் ரத்தம். அவன் மனைவி அழைத்துக்கொண்டே இருந்தாள். “பாத்திரங்களிலே எல்லாம் ரத்தம்… ஒழுங்கா கழுவுறதில்லியா?”என்றான். விழித்துக்கொண்டான்.
“என்ன?”என்றான்.
பாமா “போலீஸ் ஸ்டேஷன்லே இருந்து கூப்புடறாங்க” என்று செல்போனை நீட்டினாள்.
வாங்கி “வணக்கம்”என்றான்.
“மிஸ்டர் செல்வக்குமாரா பேசுறது?” என்று ஒரு குரல்.
“ஆமா”
”பி த்ரீ ஸ்டேஷனுக்கு வாங்க. ஐயா கூப்புடறாரு. வாறப்ப ஆதார்காடு நகல், ரேஷன் கார்டு நகல் கொண்டுவாங்க”
“பி த்ரீ போலீஸ் ஸ்டேஷன் எங்க இருக்கு?”
”வாட்டர் டாங்கு இருக்குல்லா? வாட்டர்டேங்கு ரோடு… பழைய சித்ரா தியேட்டர் பக்கம்”
“சரி, வந்திடறேன்”
“ஒரு பதினொரு மணிக்கு வாங்க…”
”சரி”
அவன் எழுந்து பல்தேய்த்தபோது பாமா “போலீஸ் ஸ்டேஷனுக்கா?”என்றாள்.
“ஆமா”
“எதுக்கு வம்பு? பாருங்க, இப்ப போலீஸ் அது இதுன்னு..”
”அவங்க வேலையை அவங்க பாக்கணும்ல? ஒருத்தன் அடிச்சுப்போட்டுட்டு போயிருக்கான்…அவனை அவங்க தேடிப்புடிக்கணும்ல? அடிபட்டவருக்கு ஏதாவது நஷ்ட ஈடு வாங்கிக்குடுக்கணும்ல?”
“அதெல்லாம் நமக்கு எதுக்கு?” என்று பாமா சொன்னாள்
”நாளைக்கு நான் ரோட்டிலே இதே மாதிரி கிடந்தா இன்னொருத்தன் வந்து பாத்துக்கிடணும்ல, அதுக்குத்தான். வாயை மூடு”
அவள் முகம் சுண்டிவிட்டது. ஒன்றும் பேசாமல் திரும்பிச் சென்றாள்.
அவன் இட்லி சாட்பிட்டுவிட்டு சட்டையை போட்டுக்கொண்டே ஆஸ்பத்திரிக்கு ஃபோன் செய்தான். டாக்டர்தான் எடுத்தார்.
“சார், நான் செல்வா பேசறேன்… நேத்து ஒரு ஆக்ஸிடெண்ட் கேஸை அட்மிட் பண்ணினேன்… இப்ப எப்டி இருக்கார்?”
”சரியாயிட்டார். நினைவு திரும்பிட்டுது. எலும்புமுறிவுகள் இருக்கு. குணமாகிறதுக்கு நாளாகும். பட் ஹி இஸ் அல்மோஸ்ட் ஓக்கே”
“அவரோட மனைவி சொந்தக்காரங்க யாராவது வந்தாங்களா?”
“ஆமா, மனைவி வந்திருக்காங்கன்னு நினைக்கிறேன்”
அவன் வெளியே வந்து பைக்கை எடுத்துக்கொண்டு சாலையில் நுழைந்தான். கேட்டை மூடிவிட்டு வெயில் பரவிய சாலையில் நடக்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. நல்ல தூக்கம் என்றால் உள்ளம் தெளிவாக ஆகிவிடுகிறது. உள்ளம் தெளிந்தால் எல்லாமே எளிமையானவையாக, நன்மைநிறைந்தவையாக தெரிகிறது. ஆனால் பெரும்பாலான நேரம் உள்ளம் பெரிய சிடுக்குகலும் முடிச்சுகளும் நிறைந்ததாகவே இருக்கிறது.
அவன் ஆஸ்பத்திரியைச் சென்றடைந்து பைக்கை நிறுத்திவிட்டு அவசர சிகிழ்ச்சை மற்றும் விபத்து காப்பு பகுதிக்குச் சென்றபோது அந்த அட்டெண்டர் அவனை பார்த்தான். “சார்”என்றான்.
”அந்த ஆள் எப்டி இருக்கார்?”
”மண்டையிலே செம அடி. ரத்தமும் நெறைய போய்டிச்சு. ஆனா பொழைச்சுக்கிட்டான் சார். சரியான நேரத்திலே கொண்டாந்தா இங்க எப்டியும் பொழைக்க வைச்சிருவாங்க. ஏன்னா இங்க எல்லாரும் இதிலே ரொம்ப பழக்கம் உள்ள டாக்டர். ரத்தம் வேற நெறைய ஸ்டாக் வச்சிருக்காங்களா…”
அவன் ஒரு நூறு ரூபாயை எடுத்து நீட்டி “இது இருக்கட்டும்”என்றான்.
“இல்ல சார், வேண்டாம், பரவாயில்லை”
“நானேதானே தாறேன்”
“இப்ப நான் உன்னை நீ போட்டு பேசிட்டிருக்கேன்ல? இந்த ரூபாய வாங்கினா நான் கீழே போயிருவேன்ல?”
“சரிதான்”என்றான். “நீங்க எதிர்பார்த்து நான் குடுக்காம இருந்திடக் கூடாதுங்கிறதனாலேதான் தந்தேன். ஸாரி”
“பரவாயில்லை சார், நான் வாங்கிறதில்லை. இங்க ஒருத்தன் மட்டும்தான் வாங்குவான். டாஸ்மாக் பார்ட்டி… இப்டியே வாங்க”
அந்த காரிடார் பகல் வெளிச்சத்தில் வேறுமாதிரி இருந்தது. சுவரில் நிறைய கறைகள். தரையில் பல இடங்களில் சிமிண்ட் பெயர்ந்திருந்தது. நல்ல கூட்டம். குறிப்புகளுடன், குப்பிகளுடன் ,கையில் ஒட்டிய மெல்லிய பிளாஸ்டிக் குழாய்களுடன் எல்லா வாசல்களின் முன்னாலும் காத்து நின்றிருந்தனர். பெரும்பாலானவர்கள் பெண்கள். அவர்களிலும் பாதிக்குமேல் நடுவயதான பெண்கள். ஒருவாரத் தாடி முளைத்த ஆண்கள் முழுக்க முழுக்க பெண்களையே சார்ந்திருந்தது தெரிந்தது. நோய் வந்ததுமே ஆண் வெறும் நோயாளி ஆகிவிடுகிறான்.
“அங்க வராண்டாவிலே இருக்கிறது அந்தாளோட சம்சாரம் சார்” என்றான் அட்டெண்டர்.
”உள்ள போலாமா?”
“போகக்கூடாது. ஆனால் ஒரு நிமிசம் வேணுமானா விடுவாங்க. நான் டாக்டர்ட்ட சொல்லி பாக்கறேன்”
அட்டெண்டர் உள்ளே சென்று திரும்பி வந்து “பாத்துக்கிட்டு வந்திருங்க. பேசவைக்க வேண்டாம்…” என்றான் “அழுறது பேசுறதெல்லாம் கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரு”
அவன் உள்ளே சென்றான். உள்ளிருந்த மருந்துவாடை, நீலமும் சிவப்பும் கறுப்புமாக டயல்கள் மின்னும் ஏராளமான கருவிகள், நீலநிறமான படுக்கையுறைகள், இரும்பு நாற்காலிகள், எனாமல் பேசின்கள், வெவ்வேறு மேஜைகளில் வெவ்வேறு கண்ணாடிக் குடுவைகள் அனைத்தும் ஒன்றென ஆகி அவனை பதற்றமுறச் செய்தன. வரிசையான கட்டில்களில் கட்டுகளுடனும், குளூக்கோஸ் கொடுக்கப்பட்ட கைகளுடனும், ஆக்ஸிஜன் மாஸ்க் அணிவிக்கப்பட்டும் பலர் படுத்திருந்தனர். ஒருவர் மட்டும் மெல்ல முனகிக்கொண்டிருந்தார்.
கட்டிலில் படுத்திருந்தவரை அவனால் அடையாளம் காணமுடியவில்லை. அவன் அங்குமிங்கும் பார்க்க வெண்ணிற ஆடை அணிந்த நர்ஸ் ‘ஆக்ஸிடெண்ட் கேஸா, இவருதான்” என்றாள்.
அவன் அந்த கட்டில்முன் நின்றான். பெரிய முண்டாசு போன்ற தலைக்கட்டு. முகம் அதைத்துப் போயிருந்தது. உதடு வீங்கி தொங்கியது. இடையிலும் காலிலும் கைகளிலும் கட்டுகள்.
“எப்டி இருக்காரு?”என்று அவன் நர்சிடம் கேட்டான்.
“ஒண்ணும் பயமில்லை”என்றாள். ஒரு குறிப்பை எழுதி அந்தக் காகிதத்தை கிழித்து ஒரு கிளிப்பில் போட்டுவைத்தாள்.
அவன் பார்த்துக்கொண்டு நின்றான். இன்னொரு இளம் நர்ஸ் அருகே வந்து “இங்க பாருங்க… கூப்பிடுறது தெரியுதா?” என அழைத்தாள்
அவருடைய வீங்கிய இமைகள் பதைத்தன. நீர்வழிய விரிசல் விட்டு திறந்தன. உதடுகள் அசைந்தன.
இளம் நர்ஸ் அவரிடம் குனிந்து “என்ன பண்ணுது? தண்ணி ஏதாவது வேணுமா?”என்றாள்.
அவர் வேண்டாம் என தலையசைத்து ,அவனை நோக்கி கண்களை திருப்பி “இவரா?”என்றார்.
“ஆமா, இவருதான் உங்களை கொண்டாந்து சேத்தது. வழியிலே யாரோ வண்டியாலே முட்டி போட்டுட்டு போயிருந்தாங்க… காப்பாத்தினவரு இவருதான்”
“ஆமா, ஞாபகம் இருக்கு” .அவர் கைகள் அசைந்தன. கும்பிட முயல்பவர்போல.
”வேண்டாம்” என்று அவன் சொன்னான்.
“தெய்வமா கும்பிடுவோம்”என்று அவர் குழறிய குரலில் சொன்னார். “என்னைய காப்பாத்தினீங்க… தெய்வமா..”
அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது. உதடுகள் துடித்தன. நர்ஸ் “போதும்… தூங்குங்க”என்று அவரிடம் சொன்னார்.
“ஒண்ணும் கவலைப்படாதீங்க. எல்லாம் சரியாயிடும்”என்று அவன் சொன்னான்.
பெரிய நர்ஸ் அவன் போகலாம் என்று கையை அசைத்தாள். அவன் திரும்பும்போது பின்பக்கம் வாசலருகே முந்தானையால் வாயை மூடியபடி நின்றிருந்த அவர் மனைவியை பார்த்தான். அவளுக்கே நாற்பது வயதுக்குமேல் இருக்கும் என்று தோன்றியது. வறுமையில் நைந்துபோன உருவம். பழைய புடவை. மங்கலடைந்த கண்களில் நீர் நிறைந்திருந்தது.
“உங்க புருஷனாம்மா?”
”ஆமாங்கய்யா”
அவன் வெளியே போக, அந்த அம்மாள் பின்னால் வந்தாள்.
“குழந்தைங்க இருக்கா?”
“ஆமாங்க, நாலு புள்ளைங்க. நாலுமே சின்னது. ஸ்கூல் படிக்குதுங்க”
“அவரு என்ன வேலை பாக்குறாரு?”
“ஓட்டலிலே சரக்குமாஸ்டருங்க… வேலை முடிஞ்சு வாறப்பதான்…”
“இப்பதான் பிழைச்சுக்கிட்டாரே… சரியாயிரும்”
அவள் விசும்பி அழ ஆரம்பித்தாள்.
”இங்க நல்லாவே பாத்துக்கிடறாங்க. சீக்கிரமே வந்திருவாரு” என்றான். தயங்கியபின் பர்ஸிலிருந்து ரூபாய்களை எண்ணி மூவாயிரம் ரூபாய் எடுத்து நீட்டி “இதை வைச்சுக்கிடுங்க”என்றான்.
“இல்லீங்க”என்றாள் “பணம் இருக்கு. குடுத்தாங்க”
“யாரு?”என்றான்.
“நேத்து என்னை வீட்டிலே இருந்து கூட்டிட்டு வந்தவங்க… வக்கீலுன்னு சொன்னாங்க”
“வக்கீல் வந்தாங்களா?”
”ஆமாங்க. ரெண்டுபேரு. ராத்திரியே வீட்டுக்கு காரிலே வந்தாங்க. போலீஸ்காரரும் காரிலே இருந்தாங்க. இந்த மாதிரி விசயத்தைச் சொல்லி கூட்டிட்டு வந்தாங்க… வாறப்பவே பத்தாயிரம் ரூபா பணம் குடுத்தாங்க. யார்கிட்டயும் எதுவும் பேசவேண்டாம்னு சொன்னாங்க”
”அவங்க நஷ்டஈடு வாங்கி தருவாங்க… அதிலே அந்தப்பணத்தை கழிச்சுக்கிடுவாங்கன்னு நினைக்கிறேன். பரவாயில்லை. இப்ப இந்த பணத்தை வைச்சுக்கிடுங்க… சிலசமயம் வெளியே மருந்துகள் வாங்கச் சொன்னாலும் சொல்லுவாங்க”
”வேண்டாங்க” என்று அவள் உறுதியாகச் சொன்னாள்.
“இருக்கட்டும்”என மீண்டும் நீட்டினான்
“வேண்டாங்க. அவங்க சொன்னதுக்குக்குப் பொறகு வாங்கினா நல்லா இருக்காது”
“சரி”என்று பணத்தை பையில் போட்டுக்கொண்டான். வெளியே வந்து பைக்கை எடுத்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றான்
[ 3 ]
ஸ்டேஷன் எளிதில் கண்டுபிடிக்கும்படித்தான் இருந்தது. துருப்பிடித்த வண்டிகள் வரிசையாக சாலையில் நின்றன. சிவப்புச் சாயம் பூசப்பட்டிருந்தது. கேட்டின் மேல் வளைந்த பெயர்ப்பலகையும் பெரிதாகவே இருந்தது. அவன் பைக்கை நிறுத்திவிட்டு தயங்கியபடி நடந்து வாசலை அடைந்தான். காவல் நின்ற செண்ட்ரியிடம் “வரச்சொன்னாங்க”என்றான்
“உள்ள போங்க”என்று அவன் கையை காட்டினான்.
அவன் உள்ளே சென்றான். ஏன் இத்தனை தயக்கமும் பயமும் ஏற்படுகிறது என்று வியப்பாக இருந்தது. உடல் பதறிக்கொண்டே இருந்தது.
“யாரு சார்?”
“ஒரு ஆக்சிடெண்டு கேஸ்… வரச்சொன்னாங்க. என்பேரு செல்வா”
“ராமலிங்கம், உங்காளுய்யா”
ராமலிங்கம் என்ற கான்ஸ்டபிள் உள்ளிருந்து வந்தார். “வாங்கசார், வணக்கம். நான்தான் உங்களை கூப்பிட்டேன். வாங்க”
அவனை அவர் ஒரு சிறு அறைக்கு கொண்டுசென்றார். அங்கே இரண்டு நாற்காலிகள் இருந்தன. இடுங்கலான அறைக்குள் நிறைய ஃபைல் ரேக்குகள்.
“உக்காருங்க” என்று ராமலிங்கம் சொல்லி அவன் அமர்ந்துகொண்டார். செல்வா கிழிந்த நார்ப்பின்னல்கொண்ட நாற்காலியில் அமர்ந்தான்.
“சார் என்ன தொழில் பண்றீங்க?”
“நான் பிசினஸ் பண்றேன். எண்ணை ஏஜென்ஸி நடத்துறேன்.பாமாயில்” என்றான். விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினான். அவர் அதை வாங்கி பையில் வைத்துக்கொண்டார்.
“ஆக்சுவலா என்ன நடந்தது?”
அவன் சொன்னான். அவர் கூர்ந்து கேட்டு தலையை ஆட்டினார்.
“அப்பவே நேரா இங்கவந்தும் ஒரு கம்ப்ளெயிண்ட் குடுத்திருக்கலாம்ல சார்?”
“இல்ல, ஆஸ்பத்திரியிலே வீட்டுக்கு போகலாம்னு சொன்னாங்க”
”அவங்க அப்டித்தான் சொல்லுவாங்க. ஏன்னா அவங்களோட வேலை இல்ல இது. நீங்க உங்க சைடை சேஃப்கார்டு பண்ணியிருக்கணும்ல?”
அவனுக்கு படபடப்பாக இருந்தது. “என்ன சொல்றீங்க?”
“இப்ப என்ன கேஸ் ஆயிருக்கு? ஹிட் ஆண்ட் ரன்”
“யாரு?”
”நீங்கதான்… காரிலே அவனை அடிச்சுப் போட்டுட்டு எடுத்து கொண்டுபோயி ஆஸ்பத்திரியிலே அட்மிட் பண்ணிட்டு அப்டியே ஓடிப் போய்ட்டீங்க. போலீஸ் உங்களை தேடி கண்டுபிடிச்சிருக்கு. இதான் இப்ப கேஸ்”
“இல்லியே, நான் எல்லா ரெக்கார்டையும் அங்கே ஆஸ்பத்திரியிலேயே குடுத்தேனே..”
“அது உங்க தரப்பு சார்… கேஸ் இப்டில்லா திரும்புது?”
“இதென்ன நான்சென்சா இருக்கு? நான் அந்தாளை காப்பாத்தினேன். அவரு கெஞ்சினாரு, அதனாலே தூக்கிட்டு வந்தேன்”
“அதெல்லாம் சொல்லலாம். ஆனா எவிடென்ஸ் வேணும்ல?”
“அந்தாளே இருக்காரே. அவரு சொல்லட்டும்”
”அதை அப்றம் பாக்கலாம்…இப்ப இன்ஸ்பெக்டர்கிட்டே பிராப்பரா கம்ப்ளெயிண்ட் வந்திருக்கு… எஃப்ஐஆர் போடச்சொல்லி வற்புறுத்தறாங்க”
”யாரு?”
“அவங்களோட வக்கீலுங்க… இப்ப உள்ளதான் இருக்காங்க”
அவனுக்கு படபடப்பாக இருந்தது. கைகளை கோத்துக்கொண்டான். விரல்கள் குளிர்ந்து நடுங்கின
“உடனே அரெஸ்ட் பண்ணணும்னு சொல்றாங்க..”
“அரெஸ்டா?”என்றான்.
“ஆமா, அரெஸ்ட் பண்ணினாத்தான் ஹிட் ஆண்ட் ரன் கேஸு ஸ்டிராங்கா ஆகும்…. நாங்களே உங்களை தேடிப்புடிச்சு கைது பண்ணினமாதிரி காட்டணும்…ஹிட் ஆண்ட் ரன்னுன்னா கிட்டத்தட்ட கொலைக் குத்தம் மாதிரி. அடிபட்டவருக்கும் உங்களுக்கும் முன்விரோதம் ஏதாவது உண்டா, கொலைமுயற்சியான்னுதான் பேசவே ஆரம்பிப்பாங்க”
”இதென்ன அநியாயமா இருக்கு? நான் என்ன பண்ணினேன்? நான் அந்தாளை காப்பாத்தினேன்… நான் இல்லேன்னா…”
“சத்தம் … சத்தம் வேண்டாம். நிதானமா பேசுங்க. நாங்க அப்டீல்லாம் சட்னு எஃப்ஐஆர் போட்டிர மாட்டோம். உங்களுக்கும் ஆளிருக்கும். அது பெரிய வம்பு. ஆனா வக்கீலுங்க இப்டி வந்து கட்டாயப்படுத்தறாங்க, அதை முன்னாடியே உங்க கிட்ட சொன்னேன். தைரியமா நிதானமா எஸ்ஐ கிட்ட பேசுங்க. அவரு ஒருமாதிரி யோக்கியமான ஆளுதான்”
”சரி’என்றான். நெஞ்சடைத்து அழுகைதான் வந்தது.
“இருங்க”என்று ராமலிங்கம் உள்ளே சென்றுவிட்டு வந்து “போங்க”என்றார்.
அவன் இன்ஸ்பெக்டர் அறைக்குள் சென்றபோது உள்ளே இருவர் அமர்ந்திருந்தனர். ஒருவர் கறுப்பு கோட் போட்டிருந்தார். இன்னொருவர் வெள்ளைச்சட்டை மட்டும். அவர்களில் ஒருவர் நெற்றி நிறைய விபூதி சந்தனம் குங்குமம் அணிந்திருந்தார்.
இன்ஸ்பெக்டர் சீருடையில் இருந்தார். தொப்பி மேஜைமேல் இருந்தது. மேஜைமுழுக்க ஃபைல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மூன்று டீ டம்ப்ளர்கள் காலியாக இருந்தன. மேலே பழைய மின்விசிறி சுழலும் கறக் கறக் ஓசை.
“வணக்கம்” என்றான்.
”நீங்கதான் எம்.செல்வக்குமார் இல்லியா? உக்காருங்க”என்றார் இன்ஸ்பெக்டர். அவர் பெயர் எம்.வெங்கடேசன் என்று தெரிந்தது. குரல் குற்றவாளிகளிடம் பேசிப்பேசி அதட்டும் தொனி கொண்டிருந்தது.
செல்வா அமர்ந்துகொண்டு அவன் மூச்சை இழுத்துவிட்டான். அந்த இருவரையும் பார்ப்பதை தவிர்த்தான்.
“என்ன நடந்தது?”என்று இன்ஸ்பெக்டர் கேட்டார்.
அவன் மீண்டும் அனைத்தையும் சொன்னான்.
இன்ஸ்பெக்டர் “என்ன சார் சொல்றீங்க?”என்று கோட் போட்டவரிடம் கேட்டார்.
“அது அவரோட தரப்பு. சாட்சிகள் இருக்குன்னா அதை அவர் கோர்ட்லே நிரூபிக்கட்டும்… நாங்க சொல்றதுக்கு என்ன இருக்கு?”என்றார் கோட்போட்டிருந்தவர்.
சட்டென்று அவன் பொங்கிவிட்டான் “என்ன சாட்சி? என்னய்யா சாட்சி? சாகப்போன ஒருத்தரை காப்பாத்தினேன். அது தப்பா? அதுக்காகவா என் மேலே கேஸ் போடறீங்க?” என்று கூவினான். உடல் பதற எழுந்துவிட்டான். “இந்தமாதிரி பண்ணினா எவன் சார் நாளைக்கு ஒருத்தருக்கு ஒரு உதவி பண்ணுவான்?”
”உக்காருங்க” என்றார் இன்ஸ்பெக்டர் “ப்ளீஸ், உக்காருங்க”
“இந்த மாதிரி டிராமாக்கெல்லாம் இங்க எடமில்லை. இது சட்டம்”என்றார் கோட்டுக்காரர்
“யார்யா டிராமா போடுறது? பணத்துக்காக பிளாக்மெயில் பண்றது நீ”
“சார், இங்க சத்தம்போடக்கூடாது…’என்று இன்ஸ்பெக்டர் கடுமையான குரலில் சொன்னார்.
“சத்தம்போட்டா ஆச்சா?” என்றார் வக்கீல்.
“நீங்க கொஞ்சம் சும்மா இருங்க” என்றார் இன்ஸ்பெக்டர். திரும்பி அவனிடம் “சார் , நிலைமை உங்களுக்கு புரிஞ்சிருக்கும். நீங்கதான் அந்தாளை அடிச்சுப்போட்டுட்டு ஆஸ்பத்திரியிலே அட்மிட் பண்ணிட்டு தப்பி ஓடிட்டீங்கன்னு இவங்க சொல்றாங்க…”
”ஆனா ஆஸ்பத்திரியிலே நானே…”
”இருங்க, அதெல்லாம் கோர்ட் விவகாரம்.இவங்க இப்டி ஒரு கம்ப்ளெயிண்ட் குடுத்தா நான் எஃப்.ஐ.ஆர் போடணும். உங்களை அரெஸ்ட் பண்ணி கேஸ் பிரிப்பேர் பண்ணணும்…”
”அரெஸ்டா சார்?” என்றபோது அவன் குரல் உடைந்தது.
“புரியுது… ஆனா எனக்கு வேறவழியில்லை. நீங்க சொல்லவேண்டியதை எல்லாம் கோர்ட்டிலேதான் சொல்லமுடியும்”
“சார், கம்ப்ளெயிண்ட் பண்ண இவங்க யாரு? இவங்க வக்கீல்தானே?”
“ஆமா, நாங்க பாதிக்கப்பட்டவங்களோட வக்கீலுங்க. அவங்க கிட்ட வக்காலத்திலே கையெழுத்து வாங்கியிருக்கோம். இப்ப அவங்களுக்காக நாங்கதான் பேசுவோம்”
“எல்லாம் சட்டப்படிதான் செய்றாங்க”என்றார் இன்ஸ்பெக்டர் “நீங்களே ஒரு சமரசத்துக்கு வந்தா கேஸ் பதிவாகாம விட்டிடலாம்… இல்லேன்னா சிக்கல்தான்”
”நான் என்ன சார் பண்ணணும்?” என்றான்.
”நீங்க இவங்க கிட்ட பேசுங்க… ராமலிங்கம்”
”சர்”
”என்னன்னு பேசுப்பா”
“சர்”
ராமலிங்கம் அவனிடம் “வாங்க சார்” என்றார்.
அவர்கள் வெளியே சென்றார்கள். ராமலிங்கம் “இங்க வைச்சு பேசவேண்டாம் சார். வெளியே டீக்கடை இருக்கு, வாங்க”என்றார்.
டீக்கடை நோக்கிச் சென்றபோது அவனால் நடக்கக்கூட முடியவில்லை. அவர்கள் இருவரும் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டு பின்னால் வந்தனர்.
ராமலிங்கம் மெல்லிய குரலில் “உங்களுக்கு வக்கீல் யாராவது இருக்காங்களா சார்?”என்றார்.
”நான் அப்டி யோசிக்கவே இல்லியே” என்றான்.
”உங்க வக்கீல்னு ஒருத்தர் இருந்தா நல்லாருக்கும்… சரி பேசுங்க. விட்டுக்குடுக்காம பேசுங்க. இல்லேன்னா அடிச்சு தின்னிருவானுங்க… ஓநாய்கள் மாதிரி”
டீக்கடையில் அமர்ந்து ஆளுக்கொரு டீ சொன்னார்கள்.
செல்வா கோட்டு போட்டவரிடம் “சார் , நிஜம்மாவே எனக்கு ஒண்ணுமே தெரியாது. உண்மையாகவே ஒரு உசிரை காப்பாத்தணும்னு நினைச்சேன். அதுக்காக அந்தாளை அவசரமா ஆஸ்பத்திரிக்கு கொண்டுட்டுப்போனேன். சரியான நேரத்திலே நான் கொண்டுபோகலேன்னா அவர் செத்திருப்பார்னு டாக்டரே சொன்னார்… கேட்டுப்பாருங்க”என்றான்
“சார், எங்களுக்கு எல்லாமே தெரியும். நாங்க கம்ப்ளெயிண்ட் குடுத்திருக்கிறது எங்க தொழிலுக்காக…”
“என்ன சொல்றீங்க? வேணும்னே சொல்றீங்களா? என்னை மாட்டிவிட்டு என்ன பண்ணப்போறீங்க? இப்டி பண்ணினா நாளைக்கு யாரு ஒருத்தருக்கு ஹெல்ப் பண்ணுவாங்க?”
”நாங்க பண்றதும் ஒரு ஹெல்புக்காகத்தான். ஹிட் ஆண்ட் ரன் பண்ணினவன் யாருன்னு நமக்கு தெரியாது. டயர் தடத்தை வைச்சுப்பாத்தா அது ஒரு பொலிரோ ஜீப்பு. உங்களுது போலோ கார். ஆனா போலீஸ் அதையெல்லாம் துப்பறிஞ்சு அந்த பொலிரோ வண்டியை கண்டுபிடிக்கப்போறதில்லை. ஹிட் ஆண்ட் ரன் கேஸ்லே கண்டுபிடிக்கிறது ரொம்ப கஷ்டம். பல மாவட்டங்கள் சம்பந்தப்பட்ட விஷயம். வேற ஸ்டேட் காரா கூட இருக்கலாம். கண்டுபிடிக்கணும்னா கண்டுபிடிக்கலாம். ஆனா அது பெரிய வெட்டிவேலை. செய்யவே மாட்டாங்க”
“அதுக்காக?”
“யோசிச்சுப் பாருங்க… ஏழைப்பட்ட குடும்பம். ஆறுமாசம் அந்தாள் வேலைக்கு போகமுடியாது. வாழ்நாள் முழுக்க இனிமே முன்னமாதிரி வேலைசெய்யவும் முடியாது. மருந்து மாத்திரைக்கே லட்சக்கணக்கில ஆயிரும்… அடிச்சுட்டு போனவனை புடிக்கலைன்னா எங்க போயி காம்பன்சேஷன் கேப்பாங்க? ஒத்த பைசா கிடைக்காது”
“அதுக்காக காப்பாத்தினவனை மாட்டிவிடுறதா?”
“வேற வழியே இல்லை… நீங்க சரியான அடையாளத்தோட சிக்கியிருக்கீங்க. சாட்சிகள் இருக்கு. அப்றம் என்ன? எங்க வேலை நஷ்டஈடு வாங்கிக்குடுக்கிறது மட்டும்தான்”
”அதிலே பாதியை பிடுங்கிக்கிடறது?”
“அது எங்க ஃபீஸ். நாங்க சரியான நேரத்திலே வரலைன்னா அவங்களுக்கு ஒத்த பைசா கிடைக்காது…”
“நான் இப்ப என்ன பண்ணணும்?”
அவர் சற்று தயங்கி, செல்போனில் எதையோ கணக்கிட்டு, “பதினைஞ்சு லட்சம் குடுத்திருங்க… ஒரே செட்டில்மெண்ட்” என்றார்.
“என்னய்யா சொல்றே?”என்றபடி செல்வா எழுந்துவிட்டான்.
“தோ பார், மரியாதையா பேசு… இல்லே நானும் அதேமாதிரி பேசுவேன்”
“பதினஞ்சு லட்சமா?”
“உங்க பின்னணி என்னன்னு தெரிஞ்சுதான் இப்டி நடவடிக்கை எடுத்தோம். பதினஞ்சு லட்சத்துக்கு ஒரு பைசா குறையாது… இல்லேன்னா அரெஸ்ட் ஆகி ஜாமீன்ல வெளியே வாங்க. கேஸை நடத்துங்க… கேஸ்லே அப்டி தப்பிச்சுக்க முடியாது. கிரிமினல் கேஸ்… ஐபிசி 279, 338 ரெண்டு செக்சன்ஸ் இருக்கு. கவனமற்று வாகனத்தை ஓட்டி கொடுங்காயம் விளைவித்தல். இதை கொலைமுயற்சி கேஸா கொண்டுபோகவும் எங்களாலே முடியும்… முன்விரோதம் இருக்குன்னு அந்தாளைச் சொல்லவைச்சா போரும். ஒரு மாசம் ஜாமீன் கெடைக்காம பாத்துக்கிடமுடியும் எங்களாலே… பேப்பரிலே நியூஸ் வரவழைப்போம்”
“எதுக்கு இப்டியெல்லாம் பண்றீங்க? நான் என்ன தப்பு பண்ணினேன்?”என்று சொல்லும்போதே அவன் விம்மிவிட்டான்.
”இதிலே செண்டிமெண்ட்டுக்கு இடமில்லை சார். இது தொழில். எங்க தொழிலிலே நாங்க வெற்றியை மட்டும்தான் பாப்போம்…” என்றார் கோட் போடாதவர். “நீங்க ஆனதை பாத்துக்கலாம்னு முடிவெடுத்தாக்கூட ஒரு வக்கீலை வைச்சுக்கிடணும். அவருக்கு ஃபீஸ் குடுக்கணும். அவரு வழக்கை இழுத்தடிக்கத்தான் முயற்சி ப
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

