கொதி, குமிழிகள்- கடிதங்கள்

குமிழிகள் [சிறுகதை]

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

இந்தக் கதை உங்கள் தளத்தில் வந்த இரண்டு நாட்களிலேயே இதற்கான வாசிப்பனுபவத்தை என் தளத்தில் எழுதி விட்டேன். ஆயினும் முக்கியமான ஏதோ ஒன்றை தவற விட்டு விட்டதாகத் தோன்றிக் கொண்டேயிருந்தது. அது ‘உண்ணாமுலை’ அம்மனைப் பற்றி வந்த ஒரு குறிப்பு என்று இப்போது தான் உணர்ந்தேன்.

அடி முடி காணவொண்ணா தழலாய் எழுந்தாடும் அண்ணல் அண்ணாமலையின் அருகில் அமர்ந்திருக்கிறாள் அன்னை, உண்ணாமுலையாக.  அதே போன்ற தழலாய் ஏதோ ஒன்றிற்காக தகித்துக் கொண்டேயிருப்பவள் இக்கதையின் லிலி. அவள் பலியாகக் கேட்பதும் தன் இணையின் காமத்தைத் தான். ஒரு விதமான role reversal.

இக்கதாபாத்திரத்திற்கு லலிதா என்று பெயரிட்டிருக்கிறீர்கள். அம்பிகை லலிதை காமேஸ்வரனின் மீதமர்ந்து, பிரம்மாதி தெய்வங்களைக் கட்டில் கால்களாகக் கொண்டவள்.  ‘பஞ்ச பிரேத மஞ்சாதி சாயினி’ என்றொரு பெயர் உண்டு அவளுக்கு. காமத்தின் மேலெழுந்தவள், அதை ஆட்சி செய்பவள் என்றும் இந்த ஆழமான உருவகத்தை interpret செய்யலாம். அதன் ஒரு துளி எடுத்தாளப்பட்டிருக்கிறது இக்கதையில்.

ஒரு passing reference-ஆக வந்து மிகப்பெரிய திறப்பை அளிக்கிறது அபிதகுசலாம்பாள், லலிதா என்ற பெயர்கள்.

உங்கள் கதைகள் பல விதமான வாசிப்புகளுக்கு இடம் கொடுத்தபடி இருக்கின்றன.

‘கேளி’ கதையும் மிக அழகானது. அவன் உடலில் கணுக்கு கணு ‘கிருஷ்ண மதுரம்’ இனிக்கிறது. அந்த இனிப்பிலேயே திளைத்திருக்க விரும்புகிறான். திருவிழா முடிந்ததும் அதை மிஸ் செய்கிறான்.  பின் ஒரு நொடியில் அவனுக்குத் தோன்றுகிறது, கிருஷ்ணானுபவம் ஒரு திருவிழாவோடு முடிந்து விடுவதில்லை. எங்கெங்கிலும் எப்போதும் நிறைந்திருப்பது என்று.

‘மலைபூத்த போது’ முழுக்க முழுக்க கவிதை. மலை போன்ற பொறுமை கொண்ட அவன், தனக்கு காணிக்கை கொடுக்காதவர்களை மன்னிக்கும் படி தன் தெய்வங்களை வேண்டும் போது பூத்து விடுகிறான். ஒவ்வொரு வரியாக இன்னும் பல முறை வாசிக்க வேண்டிய கதை இது.

 

நன்றி,

கல்பனா ஜெயகாந்த்

 

அன்புள்ள ஜெ

குமிழிகள் கதை பற்றிய கருத்துக்களை வாசிக்க வாசிக்க ஒரு கதை எந்த அளவுக்கு விரியமுடியும் என்ற ஆச்சரியம் ஏற்படுகிறது. இந்த அளவுக்கு நான் கதையை வாசிக்கும்போது யோசித்திருக்கவில்லை. தமிழில் இத்தனைபெரிய கூட்டுவாசிப்பு முன்பு நடந்ததில்லை என நினைக்கிறேன். தனித்தனி வாட்ஸப் குழுக்களாகவும் வாசிக்கிறார்கள் என அறிந்தபோது மேலும் ஆச்சரியம் அடைந்தேன். என் வாசிப்பு இந்த அளவுக்கு விரிந்ததற்கு இந்த கூட்டுவாசிப்பு மிக முக்கியமான காரணம்.

இந்த கூட்டுவாசிப்புக்கு வெளியே என்ன வகையான வாசிப்புக்கள் உங்கள் கதைகளுக்கு வருகின்றன என்று பார்த்தேன். ஓரிரு நல்ல வாசிப்புக்கள் உள்ளன. ஆனால் மிகப்பெரும்பான்மையான வாசிப்புக்கள் அவர்கள் என்ன அரசியலை அல்லது கருத்தைப் பேசிக்கொண்டிருக்கிறார்களோ அதையே இதிலும் அப்படியே போட்டு அதையே வாசிப்பு என்பதாகவே உள்ளன. ஏராளமான எழுத்தாளர்களுக்கு ஒரு வாழ்க்கைச் சந்தர்ப்பத்தைக்கூட புரிந்துகொள்ள முடியவில்லை. திமுக, கம்யூனிஸ்டு, பாஜக டெம்ப்ளேட்டுகள் மண்டைக்குள் உள்ளன. அதையே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நல்லவேளையாக இப்படி ஒரு சூழல் இருக்கிறது, நாம் ஒரு ஆழ்ந்த வாசிப்பை நடத்த முடிகிறது

 

ராம்குமார் அருணாச்சலம்

கொதி[ சிறுகதை]

அன்புள்ள ஜெ

நேற்று ஒரு கிறிஸ்தவ நண்பரிடம் கொதி கதையை உங்கள் பெயர் இல்லாமல் கொடுத்தேன். வாசித்துவிட்டு மெய்சிலிர்த்துவிட்டார். பல கிறிஸ்தவ ஃபாதர்களின் வாழ்க்கையைச் சொன்னார். எப்படியெல்லாம் ஒரு காலத்தில் இருந்தார்கள் என்றெல்லாம் விளக்கினார். ஆனால் கடைசியில் உங்கள் பெயரைச் சொன்னேன். அப்படியே ஆஃப் ஆகிவிட்டார். ‘புளிச்சமாவு’ என்ற வழக்கமான வசையைச் சொன்னார். நம்ப மாட்டீர்கள் வெறும் இருபது நிமிடங்களில் இந்தக்கதை ஒரு சூழ்ச்சி என்று வசைபாட ஆரம்பித்துவிட்டார். இந்த நூற்றாண்டில் இந்தவகையான சாதிமதக் காழ்ப்புகள் இல்லாமல் திறந்த உள்ளம் என்பது ஒரு மிகப்பெரிய அதிருஷ்டம் அல்லது கடவுளின் அருள் என நினைத்துக்கொண்டேன்

ஜெயக்குமார் என்

 

 

அன்புக்குரிய ஆசானுக்கு,

வணக்கம். எங்கள் ஊரில் கொதி ஓதும் முறையை ஒத்த திருஷ்டி கழிக்கும் முறை உள்ளது. ஒரு பித்தளை தாம்பாளத்தில் தண்ணீர் ஊற்றிவிட்டு நடுவில் மாட்டுச்சாணியை உருண்டை பிடித்து வைத்துவிடுவார்கள். பிறகு எரிந்து கொண்டிருக்கும் கொட்டாங்குச்சியை சாணிமேல் வைத்துவிடுவார்கள். திருஷ்டி கழிக்க வேண்டியவரை தாம்பாளத்தின் ஒரு பக்கத்தில் உட்காரவைத்துவிட்டு, எதிர் பக்கத்தில் நின்றுகொண்டு, ஒரு சிறிய மண்பானையை முன்னும், பின்னும் மூன்று முறை சுற்றிவிட்டு, சாணிமீது எரிந்து கொண்டிருக்கும் கொட்டாங்குச்சி மீது கவிழ்த்துவிடுவார்கள். அப்பொழுது சத்தத்தோடு தண்ணீர் பானையின் உள்ளே செல்லும். சத்தம் அதிகமாக இருந்தால் திருஷ்டி அதிகமாக இருந்ததாக கூறுவார்கள். பின்பு எழுந்து தாம்பாளத்தை தாண்டி, வெளியே சென்று மூன்று முறை துப்பிவிட்டு வந்தால் திருஷ்டி கழிந்துவிட்டதாக சொல்வார்கள்.

ஆசானே, இந்தக் கதையில் பாதர் ஞானையா சொல்லும் ஞானமந்திரத்தை, நான் எப்பொழுதும் நினைவில் வைத்திருக்க விரும்புகிறேன். மேலும் அந்த பாவப்பட்ட ஜனங்களிலே ஒருவனாகத்தான் பெரும்பாலான நேரங்களிலும் இருக்கிறேன்.

“ஒண்ணுமே போய்விழாத அவ்வளவு பெரிய சூனியம் அவங்களுக்கு உள்ளே இருக்கு” – இந்த ஒரு வரி என்னுடைய மற்றும் அடுத்தவர்களுடைய துன்பங்களுக்கும், பதற்றங்களுக்கும், கோபங்களுக்குமான காரணத்தை கூறிவிடுகிறது. இதன்மூலம் என்னையும், அடுத்தவர்களையும் புரிந்துகொள்வதற்கான திறப்பாக இருக்கிறது.

நன்றி ஆசானே,

அன்புடன்,

தீபப்பிரசாத் பேரணாம்பட்டு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 20, 2021 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.