கனம்


























ரு கல் கிடக்கிறது


காட்சிக்கு எளியது

கைப்பிடிக்குள் அடங்குவது

கடினம் தோன்றாதது


கையில் எடுக்கிறேன்

பார்வை அளந்ததுபோலவே

கனம் அவ்வளவு இல்லாதது


காட்சி அலமாரியில் வைத்தால்

அழகுக்கு அர்த்தம் கூட்டும் 

மேஜைப்பளுவாக வைத்தால்

தாள் பதற்றம் தணிக்கும்


கல்லை எடுத்ததற்குக்

காரணங்கள் கிடைத்ததும்

வீட்டுக்குக் கொண்டுபோகத் தீர்மானிக்கிறேன்


வலக்கையால் நினைவையும்

இடக்கையால் கனவையும்

இறுகப் பிடித்திருக்கிறேன்

கையறு நிலை


பிறகு

இருகையும் தளர்த்தி

இருகையால் எடுத்து

சும்மாதானே இருக்கிறது என்று

தலைமேல் சுமந்து

பிடிவிட்டவற்றை மீண்டும் பற்றி

நடக்கத் தொடங்குகிறேன்


பதில் கிடைக்காமல் விடப்பட்ட கேள்விபோல்

நீளும் நெடுவழியில் காண்கிறேன்

என்னைப் போலவே கல்சுமந்து நகரும் கூட்டம்

ஒவ்வொரு தலைக்கல்லுக்கும்

ஒவ்வொரு பருமன்


ஒருதலைமேல் சல்லி

ஒருதலைமேல் துண்டு

ஒருதலைமேல் பாறை

ஒருதலைமேல் குன்று


எல்லா வலக்கையிலும் நினைவு

எல்லா இடக்கையிலும் கனவு


என் தலைமறந்து

ஏளனமாய் யோசிக்கிறேன்

‘கல் சுமக்கும் சிரத்தினர்

நாசி அரித்தால் என்ன செய்வர்?’


அக்கணமே ஞாபகம் வருகிறது


என் தலைக்கல்

இட்ட அடி ஒவ்வொன்றுக்கும்

ஒவ்வொரு அடியாக வளர்ந்து பருப்பதும்

வீட்டை அடையும் முன்பே

மலையாக மாறிவிடும் என்பதும்.


ஓவியம்: ஜியோவன்னி பாட்டிஸ்டா லங்கேட்டி ( 1635 - 1676 )

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 24, 2020 09:53
No comments have been added yet.


Sukumaran's Blog

Sukumaran
Sukumaran isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Sukumaran's blog with rss.