Nagarathinam Krishna's Blog, page 4
October 26, 2023
படித்ததும் சுவைத்ததும்-2:வழக்கு (The Trial) ஃப்ரான்ஸ் காஃப்கா
பிரான்ஸ் காஃப்காவின் ‘வழக்கு”(Der Prozess- The Trial) புனைகதையின் நாயகன் ஜோசெப் K. போன்றே, நாவலின் மூலாதாரமான கையெழுத்து பிரதியும் விநோதமான வழக்கில் சிக்குண்டு தவிக்கிறது. ஏவா ஹோப் என்ற டெல் அவிவ் (Tel Aviv) நகரவாசியான பெண்மணியின் வீட்டிலிருந்து காவல்துறையினருக்கு பின்னிரவு ஒருமணி அளவில் அவசர தொலைபேசி அழைப்பொன்று வந்திருக்கிறது. ‘வீட்டிற்குள் திருடனிருக்கிறான் உடனே வரவேண்டும், என்ற பதட்டக் குரலை நம்பி சைரன் சகிதம் காவல்துறையினர் வந்திறங்கியபோது திருடவந்தவன் மாயமாய் மறைந்திருந்தான். திருமதி ஏவா ஹோப் வீட்டில் நுழைந்த கள்வனுக்குப் பொன்னோ பொருளோ நோக்கமல்ல. பின்னே தமிழ் மரபில் திருடவந்தது இதயத்தை என்றெல்லால் கற்பனை வேண்டாம், ஏனெனில் பெண்மணிக்கு 72 வயது. களவாணிப்பயல் பின் எதற்காக வந்தான் எனக் கேட்கிறீர்கள் இல்லையா? இந்த எண்ணம் உள்ளூர் பொலீசாருக்கும் வந்திருக்க வேண்டும். பெண்மணியைக் கேட்டிருக்கிறார்கள். கிடைத்த பதில்: காஃப்காவின் எஞ்சியிருக்கிற கையெழுத்து பிரதிகளை திருட வந்திருக்கலாம் என்பது. திருமதி ஏவா ஹோப், காஃப்கா விட்டுச்சென்ற எழுத்துக்களின் இன்றைய வாரிசுதாரர்.
செக்நாட்டைச் சேர்ந்த நண்பரும் எழுத்தாளருமான மாக்ஸ் ப்ரோடிடம்(Max Brod) முடிக்கப்படாத தமது ‘The Trial’ நாவலின் கையெழுத்து பிரதியை, காஃப்கா இறுதிக்காலத்தில் ஒப்படைத்திருந்தார். மாக்ஸ் ப்ரோட் அப்பிரதியைப் தமது பெண் செயலாளருக்குப் பரிசாகக் கொடுத்தார். எஸ்த்தெர் ஹோப் என்ற பெயர்கொண்ட அப்பெண்மணி பின்னாளில் தமது பெண்களுக்கு உரிமைசெய்து ஆவணப்படுத்த அவர்களில் ஒருத்தி 1988ம் ஆண்டு ஜெர்மன் அரசாங்கத்தின் நூலகத்திற்கு நல்ல விலைக்கு விற்றார். ஆக தற்போது ஜெர்மன் நாட்டில் மார்பக் அம் நெக்கர்(Marbach am Neckar) நகரின் நூலகத்தில் அது பாதுகாப்பாக இருக்கிறது. காஃப்காவும், மாக்ஸ் ப்ரோடும் நெருங்கிய சினேகிதர்கள். காசநோயில் பாதிக்கப்பட்ட பிரான்ஸ் காஃப்கா, 1824ஆம் ஆண்டு இறந்தபோது, நூலின் கையெழுத்துப் பிரதியை தாம் கேட்டுக்கொண்டதற்கிணங்க நண்பர் எரித்துவிடுவாரென மனமார நம்பினார். நண்பரிடம் அதற்கான உறுதிமொழியைக் காஃப்கா கேட்டுப்பெற்றதாகச் சொல்லப்படுகிறது. காஃப்காவின் இறுதி ஆசையை நண்பர் நிறைவேற்றவில்லை. 1939ம் ஆண்டு பிராகு (Prague) நகரம் நாஜிப் படையினரால் கைப்பற்றபட்ட நிலையில் அங்கிருந்து தப்பிய காஃப்காவின் நண்பர், எஞ்சியிருந்த காஃப்கா படைப்புகளை மறக்காமல் உடன்கொண்டுசென்றிருக்கிறார். மாக்ஸ் ப்ரோடு 1968ம் ஆண்டு இறந்ததும் தொடக்கத்தில் குறிப்பிட்டிருந்ததுபோல காஃப்காவின் கையெழுத்து பிரதிகள் அனைத்தும் அவரது விருப்பப்படி எஸ்த்தெர் ஹோப் என்ற செயலாளரை அடைகின்றன. அவரது இறப்புக்குப் பிறகு, செயலாளர் பெண்மணியின் மகள்களிருவரும் காஃப்கா படைப்புகளுக்கு உரிமை கொண்டாடுகிறார்கள்.
காஃப்கா எழுத்துக்களின் தற்போதைய வாரிசுதாரர் இஸ்ரேலிய பிரஜை. ‘ஜெர்மன் வசமிருக்கும் ‘The Trial’ புனைவின் கையெழுத்துப் பிரதியை, தம்மிடம் ஒப்படைக்கபடவேண்டுமென இஸ்ரேல் நாட்டு தேசிய நூலகம் அணமையில் கேட்டுக்கொண்டுள்ளது. ‘ஆவணப் பாதுகாப்புச்சட்டத்தின்படி தகுந்த வகையில் கையெழுத்துப் பிரதி முன்னதாக அரசின் பரிசீலனைக்கு உட்படுத்தபட்டு அவற்றிலுள்ள வரலாற்று தகவல்கள் சரிபார்க்க அனுமதிக்கப்பட்டிருக்கவேண்டும், அது தவிர ஆவணத்தின் முக்கியத்துவம் கருதி, பாதுகாப்பிற்காக வேண்டிய நகல்களை எடுத்தபின்பே கையெழுத்துப்பிரதியை வெளியிற் கொண்டு சென்றிருக்கவேண்டும் ஆனால் அவ்வாறெதுவும் செய்யப்படாமலேயே ‘The Trial’ நூலின் கையெழுத்துப் பிரதி விற்கப்பட்டிருக்கிறதென்பது இஸ்ரேல் சொல்லும் காரணம். ஆனால் காஃப்கா யூதரேத் தவிர இஸ்ரேலியரல்ல, தாய்மொழியும் ஜெர்மன். காஃப்கா படைப்புகள் ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டன, எனினும் இஸ்ரேல் நாட்டின் தேசிய நூலக இயக்குனர் Shamuel Har Noy, அந்நூலிலுள்ள சில வரலாற்று பிழைகள் திருத்தப்படவேண்டுமென்கிறார். காஃப்காவின் நண்பரான ப்ரோடுவின் இறுதி விருப்பத்தை முன்வைத்தும் இயக்குனர் சிலபிரச்சினைகளை எழுப்புகிறார். காஃப்காவின் பிற கையெழுத்துப்பிரதிகளைப் பற்றிய ப்ரோடுவின் முடிவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் ‘The Trial’ நூலின் கையெழுத்துப் பிரதியை விற்க அவர் விரும்பியதில்லையெனவும், இஸ்ரேலைத் தவிர வேறு நாட்டிற்கு மூலப்பிரதி கொண்டுசெல்லப்படுவதை ஒருக்காலும் அவர் ஏற்கமாட்டாரென்றும் சாதிக்கிறார். ப்ரோடுவின் இறுதிவிருப்பமென்று எழுதப்பட்டுள்ள உயிலை அவரவர்க்கு விருப்பமான வகையில் பொருள்கொள்ள முடியுமென்கிறார்கள். கையெழுத்துப்பிரதியின் தற்போதைய உரிமையாளருடைய வழக்கறிஞர் என்ன சொல்கிறார்? 1974ம் ஆண்டு உரிமையாளர்களுக்கிடையேயான குடும்ப வழக்கில் டெல் அவிவ் நகர (இஸ்ரேல்) நீதிமன்றம் அளித்த தீர்ப்பில்: ப்ரோடு, வாரிசுதாரர்களுக்கு காஃப்கா உடமைகள் குறித்த வழிகாட்டுதல்கள் எதையும் உயிலில் தெரிவிக்கவில்லையென்றும், காஃப்காவின் படைப்புகளை விருப்பம்போல கையாள வாரிசுதாரருக்கு(எஸ்த்தர்ஹோப்- பின்னர் அவர் மகள்கள்)உரிமையுண்டெனவும் கூறியுள்ளதை அவர் நினைவூட்டுகிறார். 1988ம் ஆண்டு லண்டனில் எஸ்த்தர் ஹோப்பின் மகள்களிருவரும் ஏலவிற்பனையில் கலந்துகொண்டு ‘The Trial’ நூலின் கையெழுத்துப் பிரதியை விற்கமுனைய ஜெர்மன் அரசாங்கம் 1.98 மில்லியன் டாலர்கொடுத்து அதை வாங்கியுள்ளது. இந்நிலையில் தமக்கு(ஜெர்மன் நாட்டிற்கு) ஒருக்காலும் கையெழுத்துப் பிரதியை இஸ்ரேல் அரசாங்கத்திடம் திருப்பித் தரும் எண்ணமில்லையென தெளிவாக அறிவித்திருக்கிறது. நவீன இலக்கிய உலகில் ஓர் படைப்பாளியின் கையெழுத்துப் பிரதிக்கு இவ்வளவு விலைகொடுத்து வாங்கபட்டதற்கு வேறு சான்றுகளில்லை. இந்த விற்றல் வாங்கல் விவகாரத்தில் தரகராகச் செயல்பட்டவருடையக் கூற்றின்படி 4மில்லியன் டாலர்வரை காஃப்காவின் கையெழுத்துப் பிரதிக்கு ஜெர்மன் அரசாங்கம் கொடுக்க அப்போது தயாராக இருந்திருக்கிறது.
1961ம் ஆண்டு ஆக்ஸ்போர்டிலுள்ள நூலகமொன்றிர்க்கு காஃப்காவின் வேறுசில கையெழுத்துப் பிரதிகளை, (The castle, America…) மாக்ஸ் ·ப்ரோடு தானமாக வழங்கியிருந்தபோதும், ”The Trial’ நூலின் கையெழுத்துப் பிரதியை அவ்வாறு கொடுக்கவில்லை என்பதை நினைவுகூர்தல் வேண்டும், காரணம் காஃப்கா அதனை தமது இலக்கிய நண்பருக்கு பரிசாகக் கொடுத்திருந்தார். ‘The Trial’ ‘ கையெழுத்துப் பிரதி விற்கப்படுவதற்கு முன்பாக காஃப்கா தமது சினேகிதியான ·பெலிஸ் போயருக்கு(Felice Bauer) எழுதிய 327 கடிதங்களை 1987ம் ஆண்டு எஸ்த்தர் ஹோப் 550 000 டாலருக்கு விற்றிருந்தார். 2007ல் எஸ்த்தர் ஹோப் இறந்தபோது காஃப்காவின் எழுத்துக்களென மாக்ஸ் ப்ரோடு விட்டுச்சென்ற நூற்றுக்கணக்கான கையெழுத்துப்பிரதிகள் கடிதங்களாகவும், ஆவணங்களாகவும், படைப்புகளாகவும் அவரிடம் இருந்திருக்கின்றன. இன்று அவற்றின் தலைவிதி கேள்விக்குறியாகியிருக்கிறது. ஓர் இலக்கியவாதியின் கையெழுத்துப்பிரதிகள் என்ற குறியீட்டை இழந்து, கார்ல் மார்க்ஸ் வர்ணிப்பதுபோல விற்பனை சரக்காக, அதாவது சரக்குகளெனில் அவை புலன்களால் உணரமுடிந்தவை உணரமுடியாதவையென்ற இரு பிரிக்கவியலாத பண்புகளைக்கொண்ட சமூகப் பொருளாக(social thing) மாறி உள்ளதெனலாம். ‘உருமாற்றம்’மென்ற சிறுகதையை எழுதிய காஃப்காவுக்கு இந்த விதிப்பொருத்தம் நிகழ்ந்திருப்பதுதான் வேடிக்கை. தவிர எஞ்சியுள்ள காஃப்காவின் கையெழுத்துப் பிரதிகள் இன்றைய தினம் அவற்றின் நிறத்தையும் குணத்தையும் இழந்து துண்டாடப்பட்டு விற்கபடுவதாகவும் கேள்வி. ஏனெனில் அவற்றில் அக்கறைகொண்டு முறையாக வரிசைபடுத்த மாக்ஸ் ப்ரோடு இன்றில்லை. தவிர எதற்காக வெளிப்படையாக விற்பனையில் இறங்கி தேவையற்ற வழக்குகளை சந்திக்கவேண்டுமெனவும் உடமையாளர்கள் நினைக்கிறார்கள்.
இப்பிரச்சினையில் காஃப்காவின் நண்பர் மாக்ஸ் ப்ரோடை குறை சொல்ல ஒன்றுமேயில்லை. ப்ரோட் இல்லையெனில் இன்றைக்கு காஃப்காவைக் குறித்து நமக்குச் சொல்ல ஒன்றுமில்லை. காஃப்காவின் நாவல்கள் மூன்றுமே அவரது இறப்பிற்கு பின்னர் நண்பரின் முயற்சியால் பதிப்பிக்கப்பட்டவை. இஸ்ரேலிய சஞ்சிகையான Haaretz தரும் தகவலின்படி எஸ்த்தர் ஹோப் இறந்தபோது அவர் வசமிருந்த கையெழுத்துப் பிரதிகளில் முக்கியமானவை ஏற்கனவே பிரசுரமாகியிருப்பினும், எஞ்சியிருப்பவைகளும் அலட்சியப்படுத்தக்கூடியவைகளல்ல. காஃப்காவின் சொந்தவாழ்க்கைப் பதிவுகள், இலக்கிய தடங்கள், வரலாற்று சாட்சியங்கள் என அப்பட்டியல் நீள்கிறது. யுனெஸ்கோவின் பாரம்பரிய வளம் மற்றும் வளாகத்தைப்போல உலகத்தின் பொதுசொத்தாக அறிவித்து பாதுகாக்கப்படவேண்டிய காஃப்காவின் இலக்கிய சாட்சியங்கள் இரகசியமாக வங்கிப் பெட்டகங்களிலும், பிற இடங்களிலும் உரிய பராமரிப்பின்றி கரப்பான்களுக்கும் செல்லரிப்புகளுக்கும் இரையாகின்றனவே என வருந்துகிறவர்களும் உண்டு.
இறுதியாக ”The Trial’ ‘ நாவலைக்குறித்து எழுதாவிடில் இக்கட்டுரை நிறைவடையாது. நாவலுக்கான சமிக்கைகள் 1914லியே தெரிகின்றன. காஃப்கா இப்படியொரு நாவலை எழுதவிருக்கும் எண்ணத்தை தமது சஞ்சிகையொன்றில் வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக தமது நெருங்கிய சிநேகிதியான பெலிஸ் போயர் உறவில் ஏற்பட்ட கசப்பு, நாவலை அலைக்கழித்திருக்கிறது. ஒரு பகுதியை முடிக்காமலேயே இன்னொன்று பிறகு வேறொன்றென எழுத்தாளரின் மனநிலை நாவலோடு கண்ணாமூச்சி ஆடியிருக்கிறது. பலமுறை நாவல் திருத்தப்பட்டிருக்கிறது. 1917ம் ஆண்டு இரண்டாம் முறையாக பெலின்போயரோடு ஏற்பட்டக் கசப்பு நாவலை வெகுவாகப் பாதித்தது. 1924ம் ஆண்டு காஃப்கா இறந்தபோது ”The Trial’ நாவலின் தலைவிதிக் கேள்விக்குரியதாகவே இருந்திருக்கிறது. ”என்னவோ எழுதினேன், புத்தகமாக்க விருப்பமில்லை” என்பதுதான் காஃப்கா தெரிவித்தது. 1925ம் ஆண்டு நண்பரின் விருப்பத்துக்கு மாறாக மாக்ஸ்ப்ரோடு பதிப்பிக்க விரும்பினார், எனினும் அதற்காக அவர் பட்ட சிரமங்கள் அதிகம். முதலாவதாக அங்கொன்றும் இங்கொ¡ன்றுமாகவிருந்த அத்தியாயங்களை வரிசைபடுத்த அவர் எடுத்துக்கொண்ட முயற்சி, அடுத்து முடிக்கப்படாத பத்திளையெல்லாம் நீக்கினார். தவிர நூலாசிரியரும் பதிப்பிக்க முயன்ற நண்பரும் யூதர்களென்ற உண்மை பதிப்பாளர்களுக்குக் கசந்தது, நிராகரித்தார்கள். ஆக மொத்தத்தில் இன்றிருக்கும் நாவல் ·ப்ரோடுவின் புரிதலுக்கேற்ப, சம்பவங்கள் மற்றும் பாத்திரங்களின் காலவரிசையைக் கணக்கிற்கொண்டு கட்டமைக்கப்பட்ட நாவல். காஃபாவின் நண்பர் மிகச் சிரத்தையுடன் கண்ட வெற்றி.
எல்லா நாவல்களையும்போலவே ‘The Trial’ உண்மையும் புனைவும் சம விகிதத்தில் சொல்லபட்ட ஒரு நாவல். இருபதாம் நூற்றாண்டின் தொடக்ககால மனிதரையும், அவரது சமூகத்தைப் பற்றியதுமான விமர்சனமென்றாலும், இந்த நூற்றாண்டுக்கும் பொருந்தும். உலகில் அறுபடாத பண்புகளாகிப்போன அபத்தமும், சூதும், உருவாக்குகிற புதைமணலில் நித்தம் நித்தம் சிக்கித்தவிக்கும் நாதியற்றவர்களின் குரல் நாவல் முழுக்க ஒலிக்கிறது. நாவலின் பெரும்பகுதி ஆசிரியரின் சொந்தவாழ்க்கையின் எதிரொலி. கதைமாந்தர்கள் அவர்கள் பெயரில் முதல் எழுத்தால் சுட்டப்படுகிறார்கள் ‘Nouveau roman’ வரிசையில் எழுதபட்ட படைப்பிலக்கியங்களில் காஃப்காவைப்போலவே பல படைப்பாளிகள் இம்முறையை கையாண்டிருக்கிறார்கள். தமிழிலும் சுந்தர ராமசாமி தமது பாத்திரங்களின் சர்வ வல்லமை குறியீடாக ஒற்றை எழுத்து நாமகரணத்தை அரங்கேற்றியிருக்கிறார். வழக்குவிசாரணையின் நாயகன் கே. அசாதரணமானச் சம்பவமொன்றின் சாதாரணமனிதன். இங்கே மேலே குறிப்பிட்ட சர்வ வல்லமை என்பது முட்டை ஓடுபோல. உண்மையில் இவர்கள் பலவீனமானவர்கள், ஒருவித போலிகள்-பாசாங்கு மனிதர்கள்- They’re all impostures – விழுந்தால் நொறுங்கிப்போகும் சராசரிமனிதர்கள். காஃபாவைப்போலவே நாயகன் Kவும் மனப்பாதிப்புக்கு உள்ளானவன், அவனுடைய தவிப்பும் கலக்கமும் காஃப்காவுடையது. ஒருமுறை குஸ்த்தாவ் ஜானுக்(Gustav Janouch) என்ற நண்பரிடம் காஃப்கா, தன்னுடைய தனிமை மிகக்கொடியதென்றும் காஃப்காவைத் தவிற வேறு எவருடைய தனிமையுடனும் அதனை ஒப்பிடமுடியாதென வேடிக்கையாகக் கூறியதையும் இங்கே நினைவு கூர்தல் வேண்டும். குறிப்பாக பெலிஸ் போயர் இல்லா வெறுமை ஊமுட்களாகக் குத்த, முகந்தெரியாத எதிரியிடம் மோதி உருக்குலையும் எரிச்சலில் ”Our enemy feeds on the blood we lose. He gnaws our heart, and look how strong he grows'(The Enemy) என்ற பொதுலேரின்(Baudelaire) எதிரொலிக்குரலை நாவலில் கேட்க முடிகிறது. அத்தனிமை கிணற்றில் விழுந்து குரலெடுத்துக் கதறும் பசுபடும் துன்பத்தைக் கண்டும் சொல்லவியலாமற் தவிக்கும் ஊமையனுக்கு நிகரானது – ‘கூவல் குரால்ஆன் படுதுயர் இரவில் கண்ட உயர்திணை ஊமன்போலத் துயர் பொறுக்கல்லேன் தோழி நோய்க்கே!(குறுந்தொகை-224)
‘The Trial’ உண்மையில் ஓர் விநோதமான வழக்கு. அல்பெர் காம்யூவின் அந்நியன் நாயகன் அபத்தத்தின் போக்கிற்கு இணங்கி தனக்கான முடிவினை எதிர்பார்த்து நீதிவிசாரணைக்கு உட்படுபவன். இங்கே ஜோசெப்.கே அதாவது காஃப்காவின் ”The Trial’ கதை நாயகன், அபத்தத்திற்கு முரண்பட்டு, தனக்கான முடிவு எதுவென்று அறியாமலேயே விசாரணைக்கு உட்படுகிறான். அந்நியன் நாயகன் விலங்கிடப்பட்ட நான்கு சுவர்களுக்குள் நிறுத்தபட்ட ஒரு கைதியெனில் காஃப்காவின் நாயகன் ஒருவகையான எதிர்மறை சுதந்திரத்திடன் (Negative Liberty) தினசரிவாழ்க்கையைத் தொடர அனுமதிக்கபட்டு வழக்கைச் சந்திக்கக் கேட்டுக்கொள்ளபடுபவன். ஜோசப் கே. வங்கியொன்றில் அதிகாரி. விடுதியொன்றில் தங்கி தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் இந்த நூற்றாண்டின் சராசரி மனிதர்களான நம்மில் ஒருவன். அன்றைய தினம் ஜோசெப் கேவுக்கு 30வது பிறந்த தினம். வழக்கம்போல விழித்தவனைத்தேடி சனிதிசை காவலர்கள் வடிவில் வருகிறது. அறைக்குள் நுழையும் காவலர்கள், கைது செய்கிறார்கள். விசாரனைக்கு அழைத்துபோகிறார்கள். செய்த குற்றமென்ன ஜோசெப் கே யோசித்துப் பார்க்கிறான். எந்தக்குற்றமும் எதன்பொருட்டும், யாருக்காவும் இழைத்ததாக நினைவில்லை. அவனைக் கைது செய்தவர்களுக்கேனும் அவன் செய்த குற்றம் தெரியுமா, தெரியாதென்கிறார்கள். மேலதிகாரத்தின் கட்டளையை நிறைவேற்றினேன் என்கிறார்கள்.
– உங்கள் அறையை விட்டு எங்கும் போகக்கூடாதென்று பிரான்ஸ்(மற்றொரு காவலதிகாரியின் பெயர்) சொல்லியிருப்பாரே? உங்களை கைது செய்திருக்கிறோம்.
– புரியுது, ஆனால் எதற்காக என்னை கைது செய்திருக்கிறீர்களென்பதுதான் விளங்கலை.
– கே. சொல்வதிலும் நியாயமிருக்கிறது
– இங்கே பாருங்க என்னைப் பற்றிய தகவல்களெல்லாம் இந்த பேப்பரில் இருக்கின்றன..
– இதை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்யப்போகிறோம். இவற்றைக் காட்டி விசாரணையிலிருந்து தப்பி விடலாமென்று மட்டும் நினைத்திடவேண்டாம். இவ்விடயத்தில் எங்கள் தரப்பில் எந்தத் தப்புமில்லை. மேலிடத்து உத்தரவுக்குக் கீழ்ப்படிகிறோம், அவ்வளவுதான். பத்துமணிநேரம் காவலில் வைத்திருக்கவேண்டும், எங்களுக்குச் சம்பளமும் அதற்காகத்தான் கொடுக்கப்படுகிறது. இங்கே தப்பு எக்கட்டத்திலும் நிகழவில்லையென்றும் எங்களுக்குத் தெரியும், என்ன செய்வது. இது நடந்தாக வேண்டும். எங்கள்(துறையின்) பணி மக்கள்கூட்டத்திலே கலந்திருக்கிற குற்றத்தைப் பொறிவைத்து பிடிப்பதல்ல, மாறாக குற்றம் எங்களைத் தேடி வருமாறு பார்த்துக்கொள்வது, எங்கள் விதிமுறை அப்படி.(1)
———————————————————————–
1. The Trial – Le Proces – Franz Kafka நாவலின் பிரெஞ்சு நாடகவடிவத்திலிருந்து எடுத்தாளப்பட்ட உரையாடல். நாடகமாக்கம் Alain Timar.
October 24, 2023
குடைராட்டினம்
குடைராட்டினம்
பிரதானச் சாலையின் வலப்புறத்தில் வணிகர்பேரவை வளாகம். பிறக்கவிருக்கும் புதுவருடத்தை எதிர்பார்க்கிற மகிழ்ச்சியும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமும் அக் கட்டிடத்தையும் உருமாற்றம் செய்திருந்தது.. தடித்தக் கண்ணாடியின் கீழ் பதுக்கப்பட்டிருந்த நடைபாதை மின்விளக்குகள் அட்டவணை நேரகதியில் சிவப்பு பச்சை பொன்மஞ்சளென வளாகத்திற்கு உடுத்தி மகிழ்ந்தன. சாலைக்கும் கட்டிடத்திற்கும் இடைப்பட்ட வெளியில் வெளிநாட்டினர் பகுதியில் இவ்வருடம் ரஷ்யர்களின் ஸ்டால்கள். குளிரை முன்னிட்டு ஒரு ஸ்டாலில் வோட்கா வியாபாரம். ஆண்களும் பெண்களுமாக கையில் வாங்கிய வேகத்தில் மதுவை தொண்டைக்குழிக்கனுப்பி குளிரைச் சரீரத்திலிருந்து உரித்து எரிந்தனர்.
அந்தப்பக்கம் ஹோவென்ற கூச்சல், அந்தக்கால ரயில்கள் போல வீறிட்டுக்கொண்டு சீழ்க்கையொலி. பண்டிகைக்கால குடைராட்டினம் தூவிய கூச்சலும் சீழ்க்கையொலியும் கேட்டுமுடித்த சிலநொடிகளில் கொட்டும் பனியில் நமத்துப்போனது. குதிரை, ஆனை, ஆகாயவிமானம்மென்று வகைவகையான இருக்கைகளில் அமர்ந்த சந்தோஷத்தில் பிள்ளைகள் எழுப்பிய குரல்கள், ஓசைக்கு வண்ணம் பூசிகொண்டு சிரித்தன. ‘பப்பா..!பப்பா என்ன செய்யறேன் பாருங்க! பிடித்திருந்த கையை சட்டென்றி விலக்கி சிறுமி கலகலவென்று சிரித்தாள். சிறுமியின் தகப்பன், ‘வேண்டாம் வேண்டா’மென பதறுகிறான். இங்கே பாரு! அம்மா விமானம் புறப்பட்டுவிட்டது!- ஒரு சிறுவன். ‘எனக்கு இந்த குட்டி ஆனைவேண்டாம்! அதோ அந்த பெரிய ஆனையில்தான் உட்காருவேன்’.. ம்..ம்.. .மற்றொரு சிறுவன். ‘இந்த முறை போயுட்டுவா, அடுத்த முறை அதிலே உட்காரலாம்! தாயின் சமாதானம். கப்ரியேல்! பிடியைக் கெட்டியாப் பிடிச்சுக்கோ’, பேரப்பிள்ளைக்கு வாஞ்சையுடன் கட்டளையிட்டுவிட்டு, மனதில் அரும்பிய சந்தோஷத்தை காலம் சிதைத்திருந்த முகத்தில் வெளிப்படுத்தும் பாட்டி. பஞ்சுபோன்ற தலை கூன்போட்ட முதுகு வயது எண்பதுக்குக்குக் குறையாமலிருக்கலாம். குளிரிலிருந்து பாதுகாத்துக்கொள்ள போதுமான ஆடைகளில் தாத்தாக்கள், பாட்டிகள், பெற்றோர்கள், சிறுவர்கள். தலையில் அன்னாசிபழத்தைக் குடைந்து கவிழ்த்ததுபோன்று சிறுவர் சிறுமியர் தலையில் வண்ணமயமான கம்பளிக்குல்லாய்கள். கழுத்தை அரவம்போல சுற்றிக்கொண்டு கம்பளி இலேஞ்சி.
மனதில் ஈரபூமியில் பரவும் நீர்போல சிந்தனைகள். கடந்ததைத் திரும்பிப்பார்க்கிறபொழுது ஒரு நாள் மற்றநாளோடு ஒட்டமாட்டேன் என்கிறது, இத்தனைக்கும் எல்லா நேரமும் நாட்களும் புறத்தில் சமமதிப்புகொண்டவை போலத்தான் தோற்றம் தருகின்றன. யுக தர்மத்தின் கரைகளுக்கடங்கியே காலப்பிரவாகம் சுழித்து ஓடுகிறது. அகத்தில் பேதங்களற்றதென்று எதுவுமில்லை. நேற்றைய உறவுகள் மேடை இறங்கியதும் வேடத்தைக் கலைத்துகொண்டன. வேறு தயாரிப்புகளோடு புதிய ஒப்பந்தம். புதியகதை, புதிய இயக்குனர், புதிய ஒப்பனையென பிரிந்துபோயாயிற்று. பிடித்த காட்சிகள் ஓரிப்பிடிக்கும் விளையாட்டில், உடலை ஸ்பரிசிக்கும் சினேகிதர்கள்போல சீண்டுவதும் பின்னர் நழுவி கெக்கலி கொட்டுகின்றன. உண்டது, விளையாடியது, உறங்கியதென ஒரேகூரையில் ஒரே புள்ளியில் நடந்தவைகள் அவரவர் குடும்பம், அவரவர்பாதை என்றான பிறகு ஆளுக்கொருதிசைநோக்கிய பயணம். அக்காளிடமிருந்து கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுப்புப்பிறகு கடிதம் வந்திருந்தது: “அண்ணன்களிடம் பேசிபார்த்தேன். நமக்கு ஒரு செண்ட்கூட தரமாட்டார்களாம். எங்க வீட்டுக்காரர் கோர்ட்டுக்குப் போவதென்று பிடிவாதமாக இருக்கிறார். நாம் இரண்டுபேரும் சேர்ந்து செய்யவேண்டிய விஷயம். இத்துடன் அனுப்பியுள்ள பாரத்தை நிரப்பி..”
பாண்டி அக்கா எங்கே இந்தப் பக்கம்? பழக்கப்பட்ட குரல். இத்தனை கம்பீரமாக தமிழ்க்குரலெடுத்து அழைக்கிறவர்கள் கல்யாணியைத் தவிர வேறு யாராக இருக்கமுடியும். கவனத்தையும் தலையையும் சேர்த்தே திருப்பினாள். வணக்கம்! கறுத்தமுகத்தில் வெண்ணிறபற்கள் பிரகாசிக்க சிரிக்கும் கல்யாணி. நீண்ட குளிர்காலத்துக்கான கறுப்பு ஜாக்கெட். தோளில் தொங்கவிடப்பட்டிருந்த தோலினாலான பையின் நிறமும் கறுப்பு. அது முழங்கையின் அ¨ணைப்பில் கிடந்தது. இடதுகையால் நாப்கின் கொண்டு மூக்கை அடிக்கடித் துடைத்துக்கொண்டிருந்தாள். ஈழத்துப்பெண்மணி, தைரியசாலி. இவளைக்காட்டிலும் வயதில் நான்கைந்து ஆண்டுகள் மூத்தவளென்றாலும் அவளுக்கு இவள் அக்காள். இரண்டு ஆண்டுகளுக்கு முன் பேருந்தொன்றில் சந்தித்தது. இவளுடன் வெகுநேரம் உரையாடியபின், புதுச்சேரி பெண்மணியொருத்தி இறங்கிக் கொண்டதும் எதிரில் அமர்ந்திருந்தவள், “என்ன இப்படி ஆகமெல்லென கதைக்கிறீர்கள்? மிகவும் ரகசியமோ” என்று கேட்டு முறுவலித்தாள். ‘அதெல்லாமில்லை. நம்மைச்சுற்றிலும் பிரெஞ்சுமனிதர்கள். அவர்களை வைத்துக்கொண்டு தமிழில் சத்தமாகப்பேசினால் என்ன நினைப்பார்களோ? – என்ற பதிலைக்கேட்டுக் கலகலவென சிரித்தாள். ‘ஏங்க சிரிக்கிறீங்க? இவ்வளவுபேரை வைத்துக்கொண்டு உரத்து பேசினால், நம்ம தப்பா நெனைக்கமாட்டாங்களா? அவளை மடக்கிவிட்டதாக நினைத்தேன். ‘உரத்து பேசுவது தப்புதான், ஆனால் தமிழில் உரத்து பேசினால் தப்பு என்கிறமாதிரி’ உங்க பதில் இருந்தது அதனாற் கேட்டேன்’. என்ற பதிலை எப்படி எடுத்துக்கொள்வதென தெரியாமல் இவள் சிரித்து சமாளித்தாள். அதற்குப் பிறகு வெவ்வேறு கூடுகள் என்றபோதிலும், பறக்கிறபோது இவள் அமர்கிற மரக்கிளைகளைத் தேடிவரும் தற்செயல்கள் நிறையவே அமைந்தன. “அக்கா நான் வாரென், வெள்ளென போகணும். இப்போதே காமணிதியாலம் தாமதம். எங்க முதலாளிக்குப் பதில் சொல்லி மாளாது.” கையை ஆட்டிவிட்டு நடந்தாள். அவள் விந்தி விந்தி நடந்துபோனபோது, கூட்டத்தில் ஸ்கார்ப் சுற்றிய அவள் தலை உயர்ந்து அடங்குவதைக் கவனித்தாள். ஊரில் இருந்தபோது, ‘இந்திய ஆமிக்காரன்கள் ஏற்படுத்திய வடு மனதிலும் உடம்பிலும் நிறைய இருகிறதக்கா’ என்று ஒருமுறை கண்களில் நீர்பரவ கூறியிருந்தாள். அவளைப் பார்க்கிறபோதெல்லாம், தண்ணீரில் முங்கிக்கிடந்த கண்கள்போல ஒருவித குற்ற உணர்வு சிவந்த நெஞ்சை உறுத்துகிறது.
பர்தோன்’, இடித்துவிட்டு மன்னிப்பு கேட்ட வயதான பெண்மணியிடம், ‘கவனத்துடன் வர நான்தான் தவறிவிட்டேன், நீங்கதான் மன்னிக்கணும்”, என்ற இவள் பதிலை முடிக்குமுன்பே அப்பெண்மணி கூட்டத்தில் கலந் திருந்தாள். ஒவ்வொருவருடமும் கிருஸ்துமஸ்காலத்தில் தேவாலயத்தைச் சுற்றிப் போடப்படும் கடைகளைச் சுற்றி பார்க்கவேண்டும் என்று நினைப்பதுண்டு. இந்த வருடம்தான் முடிந்தது. போனமாதமே ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையை அதற்கென்று ஒதுக்கியாயிற்று. ‘பிரதான சாலையின் இடப்புறமாக அமைந்திருந்தது தேவாலயத்துக்குச் செல்லும் அப்பாதை. பிரத்தியேகமாக கற்கள் பதித்து செப்பனிட்டிருந்தார்கள். அகலமான பாதை. பனியில் நனைந்திருக்கிறது. உள்ளூர் மனிதர்களைக்காட்டிலும் சுற்றுலா பயணிகளின் கால்களில் மிதிபட்டு மெருகேறிய புதுத்தேன்போல பளிச்சிட்டது. முல்லைப்பூக்கள் நிறைந்திருந்த கூடையை எடுத்துக் கவிழ்த்ததுபோல ஆகாயத்திலிருந்து பனி பொலபொலபென்று உதிர்ந்தது. காற்று வேகமாக வீசுகிறபோதெல்லாம் சிதையும் பனித் துகள்கள் திசைக்குப் பலவாக பறந்து, கடைசியில் வாழ்க்கைச் சுற்றை அறிந்தவைபோல மீண்டும் பூமிக்குத் திரும்பின. சில பூமியைத் தொட்டமாத்திரத்தில் கரைந்தும் மற்றவை தங்கள் முறைக்காகவும் காத்திருந்தன. திடீர் திடீரென்று ஆவேசமாகப் புறப்பட்டுவரும் மக்கள்வெள்ளம் அங்கே வந்ததும் நிதானம் பெற்றுவிடும். பிறகு மெல்லமெல்ல தேவாலயத்தை நோக்கி முன்னேறும். காலையில் எட்டுமணிக்கு முன்பாக வாகனங்கள் வரலாம் போகலாம். தேவாலயத்தைச் சுற்றியிருக்கிற கடைகளுக்கு தேவையான சரக்குகளை ஏற்றிவரும் வாகனங்கள் அவை. அதன்பிறகு விடிய விடிய மனிதர்கள் நடப்பார்கள். அண்ணாந்து பார்த்து கோபுரத்தின் உயரத்தைக் கண்டு பிரம்மிப்பார்கள். புகைப்படங்களில் முடிந்தமட்டும் அதன் வடிவத்தை குறுக்கிச் சேமிப்பார்கள். கோரைத்தலையும் குண்டு முகமும், கீற்றுக் கண்களும், சிறு உதடுகளுமாக சீனர்கள், ஜப்பானியர், தென் கொரியர்கள் எப்போதாகிலும் ஒன்றிரண்டு இந்தியர்களென ஆசியநாட்டவர்களைப் பார்க்கமுடிகிறது. அவர்கள் சுற்றுலா வாசிகள். இவ்வெண் பனிபோல திடீரென்று சரஞ்சரமாக இறங்குவார்கள், புற்றீசல்போல கலைந்து நடப்பார்கள். அவர்களுக்கு முன்னே கூட்டத்தினர் மொழியில் தலையை அடிக்கடித் திருப்பி குட்டிகுட்டி உரையாடல்களை நிகழ்த்திக்கொண்டு பெண்ணோ ஆணோ குடை உயர்த்தியோ அல்லது உடன்பாடு செய்துகொண்ட அதுபோன்றதொரு குறிப்பொன்றின் வழிகாட்டுதலின் கீழோ குளிரைப் பொருட்படுத்தாது நடப்பார்கள்.
போன ஞாயிற்றுகிழமை நடந்தது. காலை பதினோறு மணி. படுக்கை அவளைக் கெட்டியாக பிடித்திருந்தது. இரவு வெகுநேரம் டி.வி. பார்த்ததன் பலனாக அதிகாலையில்தான் கண்ணயர்ந்திருந்தாள். திறக்காத சன்னற் கதவும், வாயடைத்திருந்த சப்தமும் உறக்கத்தை சுகமாக்கியிருந்தது. புரண்டுபடுத்து போர்வையைத் தலைவரை இழுத்துப் போர்த்திய நேரம், தீவிபத்து நேர்ந்ததுபோல அழைப்புமணி விடாது ஒலித்து நிலவிய அமைதியைக் குலைத்து அநாவசியப் பதட்டத்தை அவளிடத்தில் உண்டாக்கியது. ஞாயிற்றுக்கிழமைகளில் இவளைத் தேடிவருகின்றவர்களென்று எவருமில்லை. மனதில் முறுகேசனாக இருக்குமோவென்று சந்தேகம். இவளைவிட்டு விலகிப்போய் ஆறுமாதங்களுக்கு மேலாகிறது. எழுந்தவள் இரவு ஆடையை சரி செய்துகொண்டாள். கைகளைப் பின்கழுத்துக்காய் அனுப்பிவைத்து த¨லைமுடியை கைகொள்ள சுழற்றிக்கொண்டையாக்கினாள். எழுந்து மின்விளக்கை போட்டபோது அழைப்புமணி இரண்டாவதுமுறையாகத் தொடர்ந்து ஒலித்தது. எரிச்சல் வந்தது. வந்திருப்பவன் முறுகேசன் என்பது உறுதியாயிற்று. “இப்படித் தட்டினால் கதவைத் திறக்கமாட்டேன்” என்று சத்தமிட்டபடியே கதவைத்திறந்தாள். குப்பென்று மதுவாடை. காலையிலேயே குடித்திருந்தான். இவளுக்குக் கோபம் வந்தது:
– எங்கே வந்த?- என்றாள்.
– இனிமே அவகூட நான் இருக்கவிரும்பலை. நாம இரண்டுபேரும் பழையபடி சேர்ந்திருக்கலாமென்று வந்துட்டேன். என்னுடைய பொருட்களெல்லாம் காரில் இருக்கிறது கொண்டுவரட்டுமா?
– வேண்டாம். அதற்கு சாத்தியமில்லை.
– சரி உள்ளே வரட்டுமா? வெளியே நிக்கவச்சு பேசற?
– முடியாது. என் பிரண்டு ஒருத்தன் உள்ளே தூங்கறான். அவனைச்சீண்டுவதற்கும், தவிர்ப்பதற்கும் சட்டென்று முளைத்த பொய் உதவியது.
– பிரண்டுன்னா
– நீங்க நினைக்கிறமாதிரிதான்.
வால் மிதிப்பட்ட நாய்போல சத்தமிட்டான்.
– தெவடியா. தெவடியா..
குடித்திருந்த அவனைக் கையாளுவது எளிதாக இருந்தது. வெளியிற் தள்ளி கதவை அறைந்து சாத்தினாள்.
இரண்டுக்கு நான்கென்ற அளவில் தேவாலயத்துக்குக்கென வழிவிட்டு இருபுறமும் மரப்பலகைகள்கொண்டு உருவாக்கபட்ட குடில்கள். கடைகள் தோறும் கிருஸ்துமஸ் பண்டிகை, மக்களின் வாங்கும் சக்தி ஆகியவற்றைக் கணக்கிற்கொண்டு உருவாக்கிய லைவேலைப்பாடு பொருட்கள். ‘மெழுகுவர்த்தித் தொட்டி, உள்ளே உள்ள செடியும் பூக்களுங்கூட மெழுகுதான்”, மெல்லிய உலோகத்தகடு பாதுகாப்பிற்காக வேயப்பட்டிருக்கிறது. சாப்பட்டுமேசையில் கொளுத்திவைக்க அழகாயிருக்கும்’, விற்பனைசெய்த இளம்பெண் கையில் வண்ணத்தொட்டியை ஏந்தியபடி விவரித்துக்கொண்டிருந்தாள். அவள் விவரித்து முடித்ததும். எங்களுக்குப் பிரெஞ்சு தெரியாதென்ற பிரிட்டிஷ் தம்பதியினரின் குரலை காதில் வாங்கியபடி நடந்தாள். கைப்பையை அணைத்திருந்த வலதுகையில் குளிர்காரணாமாகக் குத்தலெடுத்தது. பையை இடது தோளிற்கு மாற்றிக்கொள்ள வலதுகை தீக்கோழிபோல கம்பளி ஆடைக்குட் பதுங்கிக்கொண்டது. “பொனே..பொனே” தொப்பி விற்கும் ஆப்ரிக்கரின் குரல். அவரது முழங்கையில் வேட்டையாடப்பட்ட கொக்குகள்போல தொப்பிகள். அவரைப் பார்க்க விநோதமாக இருந்தது. நீண்ட கழுத்தும் மஞ்சள் மூக்கும், பக்கத்திற்கொன்றாக தளரக் காலைதொங்கவிட்டபடி இறக்கையை பரத்தி அடைகாப்பதுபோல கொக்கொன்று அவர் தலையில் அமர்ந்திருந்தது. அவர் விற்கிற தொப்பியொன்றைதான் தலையில் அணிந்திருக்கிறார் என்பதை விளங்கிகொண்டதும் சிரித்துக்கொண்டாள். இரண்டாவது கடையில் முண்டியடித்துக்கொண்டு மக்கள் கைகளை நீட்டிக்கொண்டு நின்றனர். “இங்கே இரண்டு சிவப்பு ஒயின், ஒரு ஆரஞ்சு ஜூஸ் மூன்று தார்த் •பிளாம்பே”என்று ஓர் இளைஞன் தங்கள் குடும்பத்தின் தேவைகளை பட்டியலிட்டான். ‘மிஸியே உங்கள் ஆரஞ்சு பானம்!-என்று புன்னகைத்த விற்பனைபெண்ணிடம், ‘ நான் கேட்டது ஒயின்! என்று மறுத்தார் முதியவர் ஒருவர். அப்படியா? என்றவள் முனுமுனுத்துக்கொண்டே இன்னுமொரு ஒயின் கொடு என்று தனதருகிலிருந்த சக ஊழியனிடம், கட்டளையிட்டாள். அவன், ‘கொஞ்சம் பொறு எனக்கு நான்குகைகளா இருக்கின்றன?’ என்கிறான். இவள் சிரித்துக்கொண்டே வலப் பக்கமாக ஒவ்வொரு கடையாகப் பார்த்துக்கொண்டு நடந்தாள். லொரான்! லொரான்! நில்லு நில்லு! ஓடாதே!. முன்னால் ஓடுகின்ற குழந்தையைப் பார்த்துத் தாய் பதறினாள். காலை எட்டிவைத்து நடந்து குழந்தையைத் தடுத்து அதன் தாயிடம் ஒப்படைத்தாள்.
ஜிங்கிள் பெல்..ஜிங்கிள் பெல்லென்று பாட்டு வடக்கிருந்து மிதந்துவந்தது. அப்பாட்டிற்கேற்ப கைகோர்த்து நடனமிட்டபடி ஆணுபெண்ணுமாக ஒரு ஜோடி. கூட்டம் சிரித்தபடி அவர்களுக்கு இடம்விட்டு ஒதுங்கி முன்னேறியது. ஸ்கேட்டிங் திடலை அடைந்திருந்தாள். வயது வித்தியாசமின்றி மகிழ்ச்சிப்பொங்க ஸ்கேட்டிங் விளையாடுகிறார்கள். அவர்கள் காலில் பிரத்தியேகமான ஷ¥. ஷ¥க்களில் பொருத்தியிருந்த கத்திபோன்ற கனத்ததகடுகள் நழுவிச்செல்கிறவேளையில் உறைபனியில் கம்பிமத்தாப்புபோல எதிரொளித்தன. அக்காட்சியில் மனம் லயித்தவளாய் சிறிதுநேரம் அங்கே நின்றாள். பனிபொழிந்து கொண்டிருந்தாலும் ஸ்கேட்டிங் செய்ய போதுமான வெப்ப நிலைக்குத் விளையாட்டுத் திடலை செயற்கையாக கொண்டுவந்திருந்தார்கள். திடலைச் சுற்றி இலை உதிர்ந்த மீமோசா மரங்கள். ராஜஸ்தான் பெண்கள் கைகளில் அணிகிற பஞ்சாபோல அவற்றின் கொம்புக¨ளில் இணைத்து சரஞ்சரமாக பொன்மஞ்சள் நிறத்தில் ஒளிரும் மின்சார பல்புகள். ஓர் இளஞ்ஜோடியொன்று கைகளை பிணைத்தபடி ஸ்கேட்டிங் செய்கிறார்கள். பள்ளிபிள்ளைகள் வரிசையொன்று ஒருவர் தோளை ஒருவர்பற்றியபடி சறுக்குவதுகூட நன்றாக இருந்தது. பதின்வயது பையன் ஒருவன் அம்புபோல விரைந்து வழுக்கிச்சென்றவன் கும்பலாய் நின்று பேசிக்கொண்டிருந்த இளம்வயது பெண்களை மோதுவதுபோல நெருங்கி, சட்டென்று நிற்கிறான். பனித்தூள்களைத் வாரி அவன் மீது எறிந்து பொய்யாய் அப்பெண்கள் கோபிக்கிறார்கள். சிறுமியொருத்தி பருந்துபோல கைகளை பரத்தி சறுக்குகிறாள். ஒரு கறுப்பின பெண்மணிகூட அநாயசமாக சறுக்கி விளையாடுகிறாள். ஓர் இளைஞனும் யுவதியும் தம்மைச்சுற்றியிருக்கிற மனிதர் கூட்டத்தை கருத்தில் கொள்ளாதவர்கள்போலத் திடற் தடுப்பில் சாய்ந்தபடி முத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள்.
ஸ்கேட்டிங் விளையாடும் ஆசை இவளுக்கு வந்தது. வரிசையில் நின்று ஐந்து யூரோகொடுத்து தமது கால்கள் அளவு 38 என்று கூறி ஒரு ஜோடி ஸ்கேட்டிங் ஷ¥க்களை வாங்கி அணிந்தாள். நடக்கக் தடுமாறினாள். மெல்ல தடுமாற்றத்துடன் முன்னேறி உறைந்து கண்ணாடிபோலிருந்த பனித் திடலுக்குள் காலை வைத்தாள். இரண்டொருவர் இவளைத் திரும்பிப்பார்ப்பதுபோல இருந்தது. மேற்கொண்டு செயல் படத் தயக்கம் காட்டினாள். அங்கிருந்தவர்கள் கண்கள் இவளைச் சீண்டுவதுபோல உணர்ந்ததும் உடலில் லேசாக நடுக்கம். தலையைத் திருப்பி பிறமனிதர்களின் கவனத்தைத் தேடியபொழுது எல்லாம் கற்பனையென தோன்றியது. அவரவர்கள் தங்கள் பாட்டுக்குத் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவண்ணம் சறுக்கிக் கொண்டிருந்தார்கள். திடலுக்கு வேலிபோல அமைத்திருந்த கண்ணாடித் தடுப்பை பிடித்தபடி மாற்றி மாற்றி கால்களை வைத்து நடந்தவள், ஓரிடத்தில் கால்கள் இவள் விருப்பத்திற்கு இணங்க மறுத்தவைபோல நீண்டதில் முழுஉடலும் பின்பாரமாய் சரிந்தது. மடாரென்று விழுந்தாள். ‘மத்மசல் கவனம்’, என்றபடி அருகிலிருந்த இளைஞனொருவன் கைகொடுத்தான். இவளுக்குக் வெட்கம் நாக்கைப் பிடுங்கிக்கொள்ளலாம் போலிருந்தது. ஆபத்திற்கு பாவமில்லை என்பதுபோல அவன்கையை இறுகப் பிடித்துக்கொண்டு மெல்ல எழுந்தாள். அவன் முகத்தை நேரிட்டுப்பார்க்கத் தயங்கி நன்றி என்றாள். நிற்க முடியவில்லை இடுப்பில் தாங்கொணாதவலி. நடு முதுகில் சூட்டுக்கோல் வைத்ததுபோல சுரீரென்றது. மீண்டும் விழப்போனவள் எப்படியோ சமாளித்து தடுப்புக் கண்ணாடியைப் பிடித்தபடி நிற்க எத்தனித்தாள். நிலைமையை இளைஞன் புரிந்துகொண்டான். சற்று தூரத்தில் அமர்ந்திருந்த மருத்துவ குழுவினரைக் கூவி அழைத்தான். ஓர் ஆணும் பெண்ணும் ஓடிவந்தார்கள். ஆளுக்கொருபக்கம் தாங்கியவர்களாய் பனித்திடலை ஒட்டியிருந்த முதலுதவிக்கூடத்திற்கு அழைத்துச் சென்று உடகாரமுடியுமாவென கேட்டார்கள். முயன்று பார்க்கிறேனென்றாள். உட்காரமுடிந்தது.
பரிசோதித்தார்கள். பாதத்தைப் பிடித்து மெல்ல இப்படியும் அப்படியுமாக ஆட்டிபார்த்தார்கள். கைகளால் தொட்டுப்பார்த்து இவளுடைய முகக்குறிப்பிலிருந்து வலிதெரிந்த இடத்தை உணர்ந்தவர்களாய் மருந்தொன்றை தற்காலிகமாக ஸ்ப்ரே செய்தார்கள். ஆம்புலன்ஸ் வந்திருந்தது. ஸ்ட்ரெட்சரை இறக்கி அவளைக்கிடத்தினார்கள் இரண்டு ஊழியர்கள் முன்னுபின்னுமாக அதைத் தூக்கிக்கொண்டு ஆம்புலன்ஸை நோக்கிச் சென்றபோது சற்றுமுன் திடலில் இவளுக்குதவிய வாலிபன் கை அசைப்பது தெரிந்தது. ஆம்புலன்ஸ் தேவாலயத்தை ச் சுற்றிக்கொண்டு பிரதானசாலையைப் பிடித்து இறங்கி ஓடத்தொடங்கியபோது, குடைராட்டினத்திலிருந்து ஹோவென்று மீண்டும் சப்தம்.
October 19, 2023
தமிழ் பேசும் கிளி
(“சிரிக்கிற ரொபோவையும் நம்பக்கூடாது” அறிவியல் சிறுகதை தொகுப்பிலிருந்து)
துறைத் தலைவர் ச்சின் – ஹ¤வா தொலைக்காட்சிபேசியில் தோன்றி தம்மை உடனே வந்து பார்க்குமாறு அழைத்தபோது ‘ஷிட்’டென்று அலுத்துக்கொண்டேன். போனமாதத்தில் எங்கள் துறை நடத்திய சிம்போசியத்தின் முடிவில் ஏற்பாடு செய்திருந்த டின்னரின்போது டாய்லெட்டில் அவரது மனைவியும் நானுமாக ”அலரில் தோன்றும் காமத்து மிகுதிக்கு” பரிகாரம் தேடிக்கொண்டிருந்தநேரம், மனிதர் கரடிபோல உள்ளே நுழைந்ததும் பின்னர் அவருடைய ஜிப்பைத் திறந்த வேகத்திலேயே மூடிக்கொண்டு வெளியேறியதும் நினைவுக்கு வந்தது. அதற்குப் பிறகு இன்றைக்குத்தான் அழைக்கிறார்.
1950களில் சென்னைப்பல்கலை கழகத் தமிழ்த்துறை பேராசிரியராக இருந்த ராவ்பகதூர் கருணாகரத் தம்பிரான் உங்களுக்குத் தெரியுமில்லையா? அவருடைய மகள் வயிற்று வாரிசு எனச்சொல்லிக்கொள்வதில் எனக்குப் பெருமை இருக்கிறதோ இல்லையோ எனது பாட்டிக்கு நிறையவே இருக்கிறது. சூ-மின் பல்கலைகழகத்தில் தென் கிழக்கு ஆசியமொழிகள் துறை பிரிவில் பேராசிரியராக இருக்கிறேன், பெயர் செழியன். கடந்த ஐந்து ஆண்டுகளாக பாட்டியும் நானுமாக இந்தக்கோளில்(1) இருக்கிறோம். எனக்குத் திருமணம் முடித்த கையோடு எனது பெற்றோர்களிருக்கிற அன்னா கோளுக்கே தான் போய்விடப்போவதாக சொல்லிக்கொள்ளும் பாட்டி அதற்கொரு நிபந்தனைவைத்திருக்கிறது. எனக்கு மனைவியாக வரப்போகிறவளுக்கு தமிழ் தெரிந்திருக்கவேண்டும், தமிழ் பேசவேண்டும் என்பதே அந்த நிபந்தனை. எங்கள் கோளில் எங்கள் குடும்பத்தையும் சேர்த்து ஐந்து தமிழ்க்குடும்பங்கள் இருக்கின்றன. இரண்டு பெண்கள் என்னோட இரசனைக்கு ஏற்றவர்களாகவும் இருக்கிறார்கள். பாட்டி இல்லாதபோது வீட்டுக்கு அழைத்திருந்த ஒருத்தியிடம் இப்படித்தான் ஒருமுறை ‘உன்னாலே தமிழ் பேசமுடியுமெனில் நாமிருவரும் திருமணம் செய்துகொள்ள முடியுமென’ விஸ்கி போதையில் உளறப்போக அவள் “செலியன்! வம்ச விருத்தி செய்யறதுக்கும் தமிழ் பேசறதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கமுடியும்னு எனக்குத் தெரியலை, அப்படி பார்த்தா இந்த ஜென்மத்துலே உனக்கு கல்யாணம் ஆகும்னு நான் நினைக்கலை, என்று சொல்லிவிட்டாள். Bitch! எந்த நேரத்தில் சாபமிட்டாளோ, நாற்பது வயது பேச்சுலராக சில சில்லரை விளையாட்டு உரிமைகளுடன் தமிழ் பேசுங் கிளியைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.
– செழியன் நான் கூப்பிட்டிருந்தது மறந்துபோச்சா? மறந்திடாம வந்துட்டு போங்க. தொலைபேசியில் மீண்டும் ச்சின்-ஹ¤வா, துறைத் தலைவர்.
– மன்னிச்சுக்குங்க, அஞ்சு நிமிடத்திலே அங்கிருப்பேன், என்றேன் அவரிடம். ஆறுமணிக்கு மெய்நிகர் பெண்ணொருத்தியைப்(Virtual girl) பைசாக் தோட்டத்தில் சந்திக்க வேண்டும். இத்தனைக்கும் வீட்டுக்குப் புறப்படற நேரத்தில் கூப்பிடாதீர்கள் சார், வயசுப்பையன்களுக்கு ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் இருக்குமென்று ஒருமுறை அவரும் நானுமாக முன்னிரவில் சொஷ¤ குடித்துக்கொண்டிருந்தபோது கூறியிருந்தேன். எரிச்சலுடன் வெளியில் வந்து வாக்வே(walkway) பிடித்து, சொன்னதுபோல ஐந்தாவது நிமிடம் எனது துறைத்தலைவர் அலுவலகத்திலிருந்தேன்.
– உட்காருங்க, என்றவர் தரவு ஒலிபரப்பு(Datacasting) ஊடாக பதிவுசெய்திருந்த அழைப்பிதழை என்னிடத்தில் நீட்டினார். பிறகு தொடர்ந்து, ‘நீங்கள் பூமிக்குச் செல்லவேண்டியிருக்கிறது.
– எங்கே?
– இந்தியாவுக்கு, அங்கே தமிழ்நாட்டில் வெகுகாலத்திற்குப் பிறகு உலகத்தமிழ் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சூ-மின் பல்கலைகழகத்தின் சார்பில் நீங்கள் கலந்துகொள்கிறீர்கள்.
– மாநாடு எப்போ?
– அடுத்தமாதம் பதினைந்தாம் தேதி. நிறைய நேரமிருக்கிறது. பயண ஏற்பாடுகளை பற்றிய கவலைவேண்டாம் நம்ம துறை அலுவலகம் கவனித்துக்கொள்ளும். தமிழ்- பிராமி எழுத்துக்களைபற்றிய ஆய்வுக்கும் உங்களது பயணம் உதவறமாதிரி பார்த்துக்கொள்ளுங்கள். எபிகிரா·பிஸ்டுகள் பற்றிய தகவல்களையும் திரட்டி வச்சிருக்கேன். கூடுதலாக விடுமுறை தேவைப்பட்டாலும் என்னைத் தொடர்புகொள்ளுங்கள். இந்தக் அட்டையைப் பாருங்கள்.
பெரியவர் டிஜிட்டல் அட்டையொன்றை மேசையில் வைத்தார். எறும்புகளை வரிசைபடுத்தி நிற்கவைத்ததுபோன்று ஆங்கிலத்தில் அட்டையைப் பற்றிய செயல்முறைவிளக்கம். சுமார் 50X50 மி.மீட்டரில் ஒரு திரை. நீலமாய் ஒளிர்ந்த புள்ளியை விரல் தொட்டது. மறுகணம் வெண்ணிறத்தில் பூவொன்று இதழ்விரிப்பதுபோல ஒளிபடர்ந்து திரையை நிறைத்தது: கவர்ச்சிகரமாக வெளிர் நீலத்தில் ஒரு மேலுடுப்பு, அதே நிறத்தில் வெள்ளைச் சட்டைக்குமேலாக ஒரு கழுத்துப்பட்டை, ஓவல் வடிவத்தில் வெள்ளைவெளேரென்றிருந்த முகம், காது மடல்களை கடித்துக்கொண்டு இரு முத்துகள், தலைமுடி பிசிரின்றி இறங்கி பிடறிக்குமேலே கேள்விக்குறியாய் வளைந்திருப்பதுபோல தோற்றம். பல முறை பயிற்சி எடுத்துக்கொண்ட சிரிப்பு. மார்புகளிரண்டையும் சம அளவில் பங்கிட்டபடி வணங்கினாள். சன்னமான குரலில் வணக்கம் என்றாள். இடைவெளிவிட்டு சொற்களை கவனத்துடன் உச்சரிப்பதுபோல இருந்தது: பெயர் தாமரை, பெண்-வயது 21, உலகத் தமிழ் மாநாட்டு வரவேற்பு குழுவினால் நியமனம் செய்யப்பட்டுள்ள ஊழியை. விழா நாட்களிலும், பிற நேரங்களிலும் உங்கள் வழிகாட்டியாக இருந்து உதவக் காத்திருக்கிறேன். அறிமுக உரைக்குப்பிறகு தமிழ்நாட்டு கோவில்கள், பாலை நிலக்காட்சிகள், உருமிமேளம்.. அணைத்தேன்.
பணியில் சேர்ந்த இத்தனை வருடங்களில் பெரியவர் இத்தனை அக்கறையோடு என்னிடம் பேசியதில்லை. எனக்குக் காரணம் புரிந்தது. இருந்தாலும் மனதிலிருந்த சந்தோஷம் அதைவிட பெரிது. வாயெல்லாம் பல்லாக,’ ரொம்ப நன்றி சார் என்றேன். வீட்டுக்குத் திரும்பியதும் செய்தியைக்கேட்ட ஐஸ்வர்யா பாட்டிக்கும் மகிழ்ச்சி.
– “ஏண்டா தம்பி, என்னையும் அழைச்சுபோயேன். இந்தியா எப்படி இருக்கிறதென்று நானுந்தான் பார்க்கிறேனே.
பாட்டி நீ நினைக்கிறமாதிரியெல்லாம் இந்தியா இல்லை. கடலோரமிருந்த ஊர்களில் பல இப்போதில்லைண்ணு சொல்றாங்க. சென்னையிலே கூட இப்போ பாதிதான் இருக்குதாம். டாக்டர் கிட்டே கேட்டுப்பார்ப்போம். விண்கலத்துலே பயணம் செய்ய உன் உடம்புக்கு முடியுமாண்ணு அவர்தான் சொல்லணும். அவர் முடியாதென்று சொன்னால் என்னால் ஒன்றும் செய்யமுடியாது. தனியா இருக்க யோசித்தால் நான் வரும்வரை அம்மா அப்பாவோட இரண்டுவாரம் தங்கிவிட்டு வாயேன்.
– இப்போ போகலை. பூமிக்குப் போயுட்டு நல்லபடியா திரும்பி வா, கோடை விடுமுறைக்கு வேண்டுமானா இருவருமா ‘அன்னா’வுக்குப் போகலாம்.
முதல் இரண்டுநாட்கள், பாட்டி சோர்வாக வீட்டில் இருந்தாள். பிறகு எப்போதும்போல ஒன்பது மணிக்கு ஜிம், பதினோருமணிக்கு கான்•ப்ரன்ஸ் சேம்பரில் பிறகோள்களிலுள்ள தோழிகளுடன் அரட்டை. பகல் ஒருமணிக்கு சின்னதாய் ஒரு லன்ச், குட்டித்தூக்கமென்று மாறிவிட்டாள். இந்தியாவிற்கான எனது பயண நாள் நெருங்க, ரொம்ப அவதிபட்டாள். அங்கே இதெல்லாம் கிடைக்குமோ, கிடைச்சாலும் கலப்பிடமில்லாம இருக்கணுமே என்றபடி அமினோ அமிலம், நீரில் கரையக்கூடிய வைட்டமீன்கள், கார்போஹைடிரேட்ஸ், கொழுப்பு, உப்பென்ற இரசாயனக் கலவையிலான உணவுமாத்திரைகளை பாட்டில்களில் அடைத்து, தேதிவாரியாக பட்டியலிட்டாள். இந்தியாவில் குடிப்பதற்கன்றி வேறு உபயோகங்களுக்கு நீர் தட்டுப்பாடு இருப்பதை அறிந்து அதற்கு மாற்றாக சீனாவிலிருந்து இறக்குமதியாகியிருந்த ஸ்ப்ரேக்களெல்லாங்கூட தயார்.
காத்திருந்த அந்த மகா மகா நாள் வந்தது. ஐஸ்வர்யா பாட்டியுடன் விண்கல தளத்திற்கு இரவு 8.50க்கெல்லாம் வந்தாயிற்று. பேராசிரியர் ச்சின் – ஹ¤வா துறை நண்பர்களுடன் வந்திருந்தார். எனது முகப்பு மண்டப எண்ணை சரிபார்த்துக்கொண்டு காலடிவைத்தபோது, “டியர் பேரா! அங்கே நல்ல தமிழ் பேசுங்கிளி கிடைக்குமாவென்று பாரேன்”, என்று பாட்டி ஞாபகப்படுத்தியபோது, பொய்யாய் அலறியதை கணத்தில் புரிந்துகொண்டிருக்கவேண்டும், “போடா பைத்தியக்காரா எனக்கில்லை உனக்குத்தான்” என்றாள். எனக்குக்கூட, ‘மாசறு பொன்னே வலம்புரி முத்தேண்ணு’, பூம்புகார் கண்ணகி சைசுலே, தமிழ் தெரிந்த பெண் கிடைத்தால் தேவலாம் போல இருந்தது. ‘முயற்சி பண்றேன் பாட்டி” என்றபோது அவள் கண்களில் துலக்கம், முகச் சுருக்கங்கள் இரட்டிப்பாக, இமைகளை இறக்கி ஒருமுறை என்னை ஏற இறங்கபார்த்துவிட்டு சிரித்தாள். “உண்மையாகவா, பாட்டியை சமாதானப்படுத்த சொன்னதில்லைண்ணு எடுத்துக்கலாமா?”, “தாராளமா என்னை நம்பு. எப்பவாவது இந்தப்பேரன் பாட்டியை ஏமாற்றியதுண்டா? அப்போ சொன்னா சொன்னபடி நடப்பேன். பார்ப்போம்”, எனக்கூறி அவளை அணைத்துக்கொண்டு விடைபெற்றேன்.
கொண்டுவந்த உடமைகளைப் பதிவு செய்துவிட்டு, பயணிகளுக்கான பயோ சோதனைகளை முடித்துக்கொண்டு காத்திருந்தபோது, கூடத்தில் சகப்பயணிகள் மிகக்குறைவாகவே இருந்தனர். இந்தியாவுக்கு எங்கள் கோளிலிருந்து நான் ஒருவன் மாத்திரமே பயணப்படுகிறேன் என்பதை நினைக்க பெருமையா, வருத்தமா என்பது புரியாமல் குழம்பியிருந்தேன். ச்சின்-ஹ¤வா கொடுத்திருந்த தகவல் அட்டை நீலப் புள்ளியியைப் பதினோறாவது முறையாக ஆள்காட்டிவிரல் தன்னிச்சையாகத் தொட்டது. மீண்டும் அதேமுகம், அதே சிரிப்பு, மார்புகளிரண்டையும் சம அளவில் பங்கிட்டபடி அதே கும்பிடு, சன்னமான குரலில் வணக்கம் என்று ஆரம்பித்து, பெயர் தாமரை, பெண்-வயது 21, உலகத் தமிழ் மாநாட்டு வரவேற்பு குழுவினால் நியமனம் செய்யப்பட்டுள்ள ஊழியை. விழா நாட்களிலும், பிற நேரங்களிலும் உங்கள் வழிகாட்டியாக இருந்து உதவக் காத்திருக்கிறேன், என்றது. சென்னை விண்கலத் தலத்தில் எங்கள் ‘சூ-மின் ஸ்பேஸ்ஷிப் ஏஜென்ஸிக்குச்’ சொந்தமான எஸ்.எம்.121 தரையைத் தொட்டபோது எனக்கு பிரயாணக் களைப்பு நிறையவே இருந்தது. ஆனால் அக் களைப்பு சந்தணமாலையுடன் டிஜிட்டல் அட்டையில் பலமுறைபார்த்து மனதில் பதிவு செய்திருந்த பெண்ணைப் பார்த்ததும் போயே போயிற்று.
மிஸ்டர் செழியன்! என்றாள். கைக்குலுக்குவதற்காக கையை நீட்டியபொழுது அதை மறுத்தவளாய் கைகளைக் குவித்து வணங்கினாள். பின்னர் கடந்த சில தினங்களாக எனக்குப் பலமுறை பழகியிருந்த சிரிப்பினை முகத்தில் வரவழைத்தாள். பெயர் தாமரை என்று ஆரம்பித்து, பெண்-வயது 21 என்று சொல்லிக்கொண்டு போனவளை இடைமறித்து, ‘உலகத் தமிழ் மாநாட்டு வரவேற்பு குழுவினால் நியமனம் செய்யப்பட்டுள்ள ஊழியை. விழா நாட்களிலும், பிற நேரங்களிலும் எனது வழிகாட்டியாக இருந்து உதவக் காத்திருக்கிறீர்கள், சரிதானா? என்றதும் கலகலவென சிரித்தாள்.
– மனப்பாடமாக நான் சொல்லவந்ததைச் சொல்கிறீர்கள், எப்படி?
– மிஸ் தாமரை குறைந்தது உங்கள் முகத்தையும் குரலும் இங்கே மாத்திரல்ல இங்கேயும் பதித்துவைத்திருக்கிறேன் எனகூறி தலைக்குபோன ஆள்காட்டிவிரலை என் நெஞ்சில் கொண்டு வந்து நிறுத்தியதும் அவள் அசல் சிலப்பதிகாரத் தமிழ்ப்பெண்போலவே முகம் சிவந்தாள்.
– மிஸ்டர் செழியன், போகலாமா? உங்கள் உடமைகள் நீங்கள் தங்கவேண்டிய விடுதிக்குப் போய்விடும். நாம் கடற்கரை ஓரமாக பறக்கலாம். மாநாட்டு வளைவுகள், அலங்காரங்கள் ஆகியவற்றைப் பார்த்ததுபோல இருக்கும்.
இருவருமாக ·பேன்விங் வாகனத்தில் ஏறி அமர்ந்தோம், தாமரையே வாகன ஓட்டியின் இடத்தில் அமர்ந்து எஞ்சினை உறுமவைத்தாள், சிவ்வென்று மேலே எழுந்தது. தாமரை கூட பரவாயில்லை, பாட்டிகேட்ட மாதிரிதான் இருக்கிறாள்.
– தாமரை உங்களுக்குத் தமிழ் வருமா?
– நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.
– நிதானமாக கவனத்துடன் பேசுவதுபோல இருக்கிறது.
– விருந்தினர்களுடன் நாங்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டுமென்ற விதிமுறைகள் இருக்கின்றன. அதை மீறகூடாதில்லையா? கீழே பாருங்கள்
– எங்கே?
– நான் சொன்னது •பேன்விங் கண்ணாடி கவசத்திற்கு வெளியே.
– கடற்கரையையொட்டி இடது புறம் நகரின் குடியிருப்பு டவர்களை அடுத்துத் தெரிவது புகழ்பெற்ற ‘தாத்தா மைதானம்’ அதை முழுவதுமாக வளைத்து தற்காலிகமாக மண்டபம் கட்டியிருக்கிறார்கள். ஒரு இலட்சம்பேர்வரை உள்ளே அமரலாம். அலங்கரித்த வண்ணக் கோபுரங்கள் தெரிகிறதில்லையா அவை விழா மண்டபத்திற்கான நுழைவு வாயில்கள்.
– கடற்கரையையொட்டி நமக்கு வலது புறத்தில் வரிசையாக சூரிய ஒளியில் மின்னுகிற மண்டபங்களும் உலகத் தமிழ் மாநாடுக்கென்று கட்டப்பட்டதுதானா?
– இல்லை செழியன் அவைகள் தாத்தாக்களின் சமாதிகள்.
– புரியவில்லை.
– கடந்த இருநூறு ஆண்டுகளாக தாத்தா திராவிட முன்னேற்றகட்சிதான் ஆட்சியிலிருக்கிறது. ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து நிறைய தாத்தாக்களுக்கு சமாதி கட்டியிருக்கிறோம். அவற்றில் சென்னைக் கடற்கரை முக்கியம். தமிழ்நாட்டின் சுற்றுலா தளங்களில் தவறாமல் பார்க்கவேண்டிய இடம். ஏப்ரல் 18ந்தேதி மாநாடு விருந்தினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுற்றுலா பட்டியலில் இந்த இடமுமிருக்கு. ஆகையால் கவலை வேண்டாம்.
– அய்யய்யோ, இப்படி என்னென்ன சுற்றுலா தள பட்டியல் வச்சிருக்கீங்க.
– ஏன்?
– தமிழ்- பிராமி எழுத்துக்களைபற்றிய ஆய்வுக்கு உதவற இடங்களைப் பார்க்கணும். பிறகு சொந்தப் பிரச்சினைவேறு இருக்கிறது.
– நீங்க தமிழ்நாட்டுலே பார்க்கவேண்டியவை என்னன்னு சொல்லுங்க. எங்க அதிகாரிகிட்டே பேசிப்பார்க்கிறேன். என்னாலே உங்க நிகழ்ச்சி நிரலை மாற்றமுடியுமென்று தோணலை, ஆனால் முயற்சி செய்யறேன். பிறகு ஏதோ சொந்தபிரச்சினைபற்றி சொல்ல வந்தீங்க. அதற்கும் எங்களால உதவ முடியுமாவென்று பார்க்கிறோம். இங்கிருந்து உங்கள் நாட்டுக்குத் திரும்புகிறபோது முடிந்தவரை குறைகளில்லாமல் திரும்பனும்.
– சொந்தப்பிரச்சினையென்றாலுல், நான் தனி ஆளா தீர்வுகாணமுடியாது. எங்கப் பாட்டியின் ஆசைப்படி இங்கிருந்து கிளிமாதிரி ஒருத்தியைக் கொண்டுபோகனும். அக்கிளி தமிழ்ப் பேசும் கிளியாகவும் இருக்கவேண்டும் என்பது பாட்டியின் நிபந்தனை. ஆனால் அத்தனை சுலபாமானதில்லை.
– ஏன்?
– என்னோட பாட்டி நினைப்புலே இருக்கிற தமிழ் கிளிக்குச் சேலைகட்டத் தெரியனும், கோலம்போடணும், கும்மி அடிக்கணும், குலவை இடணும் இப்படி நிறைய தகுதிகளைப் பூர்த்தி செய்யணும். பிறகு கடைசியா அவள் தமிழ்பேசணும், அவளோட பேரனுக்கு மனைவியா வரணும்.
– நீங்க சொல்வதுமாதிரியான ஒன்றிரண்டு பெண்களைக் கண்டுபிடிப்பதில் சிரமங்கள் எதுவுமிருக்காதென்றுதான் நினைக்கிறேன். ஆனால் உங்களை மனைவியாக வருவதற்கு சம்மதிப்பார்களாவென்று கேட்டுப்பார்க்கவேண்டும். வேண்டுமானா ஒன்றுசெய்யலாம், உள்ளூர் தினசரிகளில் விளம்பரம் கொடுத்து பார்க்கலாம். உங்கள் கணினிமுகவரிக்கு தகவல் அனுப்புகிறேன். அதில் கொடுத்துள்ள தினசரிகளின் விளம்பரப் பிரிவுக்குள் நுழைந்து, சுருக்கமாக உங்கள் விளம்பரத்தைக் கொடுங்கள். என்ன நடக்கிறதென்று பார்ப்போம். நீங்கள் தங்கவேண்டிய ஓட்டல் வந்துட்டுது. இறங்கிக்குவோம். நாளை காலை எட்டுமணிக்கெல்லாம் ரிசப்ஷன் ஹாலில் காத்திருக்கவேண்டும். எட்டு முப்பதுக்கு முதலமைச்சர் விருந்தினர்களுடன் மாநாடு ஊர்வலத்தை பார்வையிடுகிறார். ஒழுங்காக எதையாவது சாப்பிட்டுவிட்டு வந்திடுங்க ஊர்வலத்தைப் பார்த்து முடிக்க பிற்பகல் இரண்டு ஆகிவிடும். பிறகு ஓட்டலுக்குத் திரும்பி மறுபடியும் மாலை நான்கு முப்பதுக்கு விருந்தினர் நுழைவாயிலில் இருக்கவேண்டும் அப்போதுதான் பாதுகாப்பு சோதனைகளை முடித்துக்கொண்டு நான்கு ஐம்பதுக்கு விழா மண்டபத்தில் இருக்க முடியும். ஐந்து மணிக்கு முதலமைச்சர் தலைமையில் தொடக்கவிழா இருக்கிறது.
விடுதிக்கு முன் இறங்குதளத்தில் •பேன்விங்கை தரை இறக்கி, விடைபெற்றுக்கொண்டோம்.
* * * *
மறு நாள் காலை 8.30க்கெல்லாம் •பிளாஷ்லீடரில் மாநாட்டு ஊர்வலத்தை பார்வையிடவந்துவிட்டோம். முதலமைச்சர், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் சூழ வந்தார். சரியாக 9.00மணிக்குத் தொடங்கிய ஊர்வலத்தில், மயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டமென்று வந்த ஊர்வலத்தில் இருபது பெண்கள் கைகளில் துடைப்பம், முறமென்று ஏந்திகொண்டு சேலையை முழங்கால்களுக்குமேல் வாரி இடுப்பில் சொருகியபடி வந்தனர். கையிலிருந்த ஊர்வலவிவரணையில் அதுபற்றிய தகவல்களில்லை. குழப்பதுடன் அருகிலிருந்த தாமரையைப் பார்த்தேன்.
– அவர்கள் தமிழர் பண்பாடு பாதுகாப்புப்படையின் பெண்கள் பிரிவினர். இருபதாம் நூற்றாண்டில் பிரசித்தம். தமிழர் பண்பாட்டிற்கு எதிராக ஏதேனும் நடந்தால் இப்படித்தான் வீதியில் இறங்கிவிடுவார்கள். ஒரு சில அரசியல் கட்சிகளிலும் இந்த அணி இருந்திருக்கிறது. அருகிலிருந்த பிரெஞ்சுகாரரும், அமெரிக்கரும் மிக ஆர்வத்துடன் ஊர்வலத்தைப் பார்த்துக்கொண்டிருப்பதைக் கவனித்தேன்.
– செழியன் அங்கே பாருங்கள்.
மீண்டும் கவனம் ஊர்வலத்தில் சென்றது. அலங்கரிக்கபட்ட ஊர்வலத்தில் ஆணும் பெண்ணுமாக பத்துபேர் அமர்ந்திருந்தனர்.
– தமிழ் அறிஞர்களா?
– தமிழறிஞர்களுக்கு இங்கே பஞ்சமில்லை, நிறையவே இருக்கிறார்கள். ஆனால் இன்றைய தேதியில் தமிழில் உரையாடக்கூடியவர்களென்று பத்துபேர்தான் தேறுவார்கள். அவர்கள் பத்துபேருக்கும் அரசாங்கம் மரியாதைசெய்ய வேண்டுமில்லையா? உங்கள் பாட்டியின் ஆசையை நிறைவேற்றுவதற்கான விளம்பர யோசனை என்னவாயிற்று, பலனேதாவது?
-ம் இல்லை.
– நம்பிக்கையை இழக்காதீர்கள். எனக்கு நிஜமாகவே ஒரு தமிழ் பேசும் கிளியைத் தெரியும். உங்கள் பாட்டி எதிர்பார்ப்பிற்கு பொருந்திவருவாள். சொல்லப்போனால் எனக்கு நெருங்கிய தோழி. அவளுக்கு உங்கள் கோளிற்கு வரவும் திருமணம் செய்துகொள்ளவும் சம்மதமெனில் இன்றைக்கு தேதி பதினைந்தில்லையா, அவளை பத்தொன்பதாம் தேதி உங்களை பார்க்கச்சொல்கிறேன்.
* * * *
மிஸ் தாமரையின் சினேகிதி ஒருநாள் முன்பாகவே என்னைத் தேடிக்கொண்டு வந்திருந்தாள். மாலை மூன்றுமணி இருக்கும், சென்னைப் பல்கலைகழகத்தின் தமிழ் துறை தலைவருடன் பேசிக்கொண்டிருக்கிறேன், எனது கைக்கடிகார தொலைபேசி ஒலித்தது. காதில்வைத்தேன்.
– மிஸ்டர் செழியன் நான் கோப்பெருந்தேவி பேசறேன். தாமரையோட சினேகிதி. உங்களைப் பார்க்கணும்னு ஓட்டலில் காத்திருக்கேன்.
– யாரது, மிஸ். தாமரை சொல்லியிருந்தாங்களே அந்த தமிழ் பேசுங் கிளியா? மன்னிச்சுக்குங்க. இந்த நேரத்துக்கு நான் அங்கேதான் இருக்கவேண்டும். இங்கே பேசிக்கொண்டிருந்ததிலே நேரம்போனது தெரியல்லை. இங்கிருந்து ஓட்டலுக்கு வர 30 நிமிடம் பிடிக்கும் என்கிறார்கள். ஒன்று செய்யுங்கள் வரவேற்பில் கேட்டால் எனது அறைக்கான நுழைவு அட்டையைக்கொடுப்பார்கள். அறைக்குச்சென்று காத்திருங்கள் வந்துவிடுவேன்.
பதட்டத்துடன், ரொக்கார் ஒன்றை வாடகைக்குப்பிடித்து ஓட்டலில் நுழைந்து, நாற்பதாவது மாடிக்கு லிப்டில் வந்து திறந்து வழிவிட்டதும் வாக்வேயில் ஓட்டமாக ஓடி மூச்சிறைக்க கதவைத் தட்டினேன். பாட்டியின் கனவுத் தேவதை சிரித்தபடி வரவேற்றது.
– நான்தான் உங்களை வரவேற்கணும், ஆனா. நிலமை வேறமாதிரி அமைஞ்சுபோச்சு.
– பரவாயில்லை உட்காருங்க.
அமர்ந்தேன். அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
– இவ்வளவு அழகா தாமரைக்கு ஒரு தோழி இருப்பாங்கண்ணு நினைக்கலை. எங்க பாட்டி சொன்ன விதிமுறைகளுக்கு நீங்க பொருந்துவீங்க இல்லையா? ஒன்றிரண்டு பொருந்தலைன்னாலும் பரவாயில்லை, பாட்டியிடம் சமாளித்துக்கொள்ளலாமென நினைக்கிறேன். சொல்லுங்க.. உங்களுக்கு சேலைகட்டறது, கோலம்போடறது, கும்மியடிக்கிறது எல்லாம் வருமா?
– வரும்.
– தமிழ் நல்லா பேசுவீங்க.
– பேசுவேன், தடுமாற்றமில்லை. எத்தனை பக்கமென்றாலும் தடுமாறாமல் பேசுவேன்.
– இப்படியொரு தமிழ் பேசுங்கிளியைத்தான் பாட்டி எனக்காகத் தேடிக்கொண்டிருந்தாள். தாமரைக்கு நிறைய நன்றி சொல்லணும்.
– அதற்கு முன்னே ஓரு உண்மையைச் சொல்லணும். நான் நீங்க நினைக்கிறமாதிரி தமிழ்ப் பெண்ணில்லை. நான் பஞ்சாபிலேயிருந்து வறேன். தாமரை கூட கர்னாடகாவைச் சேர்ந்தவங்க. இங்கே நாங்கதான் தமிழ் பேசறோம்.
– எப்படி?
– எல்லாம் சினிமாவுக்காக. சொல்லப்போனா இன்றைய தேதியிலே தமிழ் பேசற பெண்களென்றால் அது. நாங்கதான்.
– உங்க சினேகிதி தமிழ் பேசுங்கிளிண்ணு பெருமையா சொன்னாங்க..
– உண்மைதான் ‘தமிழ் பேசுங்கிளி’ங்கிற படத்திலே கூட நடிச்சிருக்கேன்.
அப்போதுதான் கவனித்தேன், மதுரைப்பகத்திலே ஏதோ ஒரு பட்டியைசேர்ந்தவன்போலவிருந்த ஒருவன் டாய்லெட்டிலிருந்து வெளியில் வந்தான்.
– இவரு யாரு?
– இவர் என் கூடத்தான் வந்திருக்கார். பல படங்களில் உதவி இயக்குனரா இருந்திருக்கார்.
– இவரை எதுக்கு கூட்டிக்கிட்டு வந்தீங்க?
– நான் தமிழ்வசனம் பேசவேண்டுமென்றால் இவர் பக்கத்திலே இருக்கணும்.
– என்னை மன்னிக்கணும் முதலில் இந்த ஆளை அனுப்பிட்டு வரேன். எட்டுபட்டி ஆசாமியை வெளியிற்தள்ளி கதவைச் சாத்தினேன்.
– மிஸ் கோப்பெருந்தேவி எனக்கு இப்போ ஒரே ஒரு வசனந்தான் தேவை, உங்களுக்கு என்னை மணம்செய்துகொள்ள சம்மதமா?
– தாராளமா, இப்பவே நான் தயார். அதற்காக வசனங்களெல்லாம் மனப்பாடமா தெரியும்.
– பாட்டிக்கிட்ட மாத்திரம் வசனம் பேசினாப் போதும், நம்மிருவருக்குமிடையில் எதற்கு. புரியுதா?
புரிந்தமாதிரிதான் தலையாட்டினாள்.
———————————————————————
1. சூ-மின்- செவ்வாய் கிரகத்திலிருந்து கூப்பிடு தூரத்தில், 7826 ஹெக்டர் பரப்பு. (வடகொரிய அதிபருக்குச் சொந்தமாக எங்கள் நாடு இருந்திருக்கிறது. பின்நாட்களில் தென்கொரிய தொழிலதிபர் ஒருவர் நூடில்ஸ்சையும் அரிசியையும் வடகொரியாவுக்கு ஏற்றுமதி செய்து, அசலையும் வட்டியையும் திருப்பிச் வாங்க முடியாத நிலையில், இக்கோளைக் கணக்கில் பற்று வைத்துக்கொண்டிருந்ததாக இணையதளமொன்றிலிருக்கிற தகவலை நம்பவேண்டாம்)
September 29, 2023
எழுத்துசாமியும் பேச்சாண்டியும்
அவசர அவசரமாக இயற்கை பாரத்தை இறக்கிவைக்க இலுப்பை மரத்தை தேடினார். எப்போது பிறந்த மண்ணுக்கு வர நேர்ந்தாலும் மற்ற விஷயங்களில் எப்படியோ காலைக் கடனை முடிப்பதற்கு அவர்கள் பூர்வீக வீட்டிற்குப் பின்புறமிருக்கும் இலுப்பை மரமும், மறைப்புக்கு அதன் சொந்தபந்தங்களான ஈச்சம் புதர்கள் செடிகொடிகளென்கிற இத்யாதிகள் வேண்டும். அவர் தகப்பனார் நகரவாழ்க்கைக்கு இணையான வீட்டையும் டாய்லெட் ஏற்பாடுகளையும் மகனுக்கென செய்திருந்தாலும், நம்ம எழுத்து சாமிக்கு அவர்கள் பூர்வீக வீட்டிலிருந்து ரெண்டு நிமிஷ நடையில் எதிர்ப்படுகிற புறம்போக்கு இலுப்பை மரத்தடியில் ஒதுங்கினால்தான் திருப்தி. அதன் அருகிலேயே இவர்களுக்கு சொந்தமான பட்டா நிலத்தில் புளியமரமொன்று இருக்கிறது அவசரத்திற்குக் கூட அதில் ஒதுங்குவதில்லை. இலுப்பை மரம்தான் அவருக்கு ராசியான மரம். ஒவ்வொரு முறையும் உட்கார்ந்து விட்டு, சொம்பு நீரை காலிசெய்துவிட்டு வீடு திரும்ப பிருஷ்டத்தின் ஈரம் காய்வதற்கு முன்பாக ஏதாவதொரு நல்ல சேதி வந்திருக்கிறது.
கடந்த 20 ஆண்டுகளாக சென்னை வாசம், எழுத்துசாமிக்கு பதிவுத் துறையில் டிபுடி டைரைக்டர் உத்தியோகம். ஓவ்வொரு பத்திரப்பதிவும் கரன்சிகளைக் கொட்டுகிறது. எந்தக் கட்சி ஆட்சிக்குவந்தாலும் முதலமைச்சரை பார்த்து ஒரு மாலை போட்டுவிடுவார். ஐந்து வருடத்திற்கு முன்பாக ஒரு கிலோ தங்க நகைகளோடு சாலி கிராமத்தில் இரண்டு கிரவுண்டு நிலத்தையும் வரதட்சணையாக கொடுத்து மூத்தமகள் திருமணத்தை ஜாம் ஜாமென்று நடத்தினார். எழுத்துலகம், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியென எல்லா தரப்பினரும் ஆஜராகி இருந்தார்கள். உத்தியோகம் பதிவுத் துறை என்பதால் ரியல் எஸ்டேட் ஆசாமிகள் ஸ்பெஷலாக கண்டுகொண்டார்கள்.
உபதொழிலாக எழுத்தை வைத்திருக்கிறார். எழுத்தில் இன்றையதேதியில் நான்கைந்துபேர் இவருடன் போட்டியில் இருப்பதுபோல பட்டாலும் அவர்களெல்லாம் இவருக்கு ஜூஜூபி. எதிரிகளை பல்லில் படாமல் விழுங்கும் சாமர்த்தியம். ஒருவரிடமும் பகையில்லை,தந்திரசாலி. இளைய தலையமுறையினரில் பலர் தீவிர ரசிகர்கள். தோளில் கைபோட்டுப் பேசுவார், அவர்களோடு தலையைச் சிலுப்பி சிகரெட் பிடிப்பார், பனைமரத்தின் கீழிருந்து கள்ளும் குடிப்பார், பாரில் உட்கார்ந்து சீயர்ஸ்ஸும் சொல்லுவார். அவர்கள் வாசிப்பில் உள்ள நம்பிக்கையில் அமெரிக்க ஐரோப்பிய எழுத்தாளர்களின் பெயர்களைச் சொல்லி அச்சுறுத்துவார். « தம்பி , உன் கவிதையை படிச்சேன், நல்லா வந்திருக்குதுங்க » என்றோ « யாரு சிறுகதை சிங்காரியா, ‘சுக்கு மிளகு திப்பிலியில்’ ஒங்கதையை வாசிச்சேன்மா, மாமனாரோட மருமகள் ஓடிப்போக நினைக்கிற மனசை நல்லா சித்தரித்திருக்கிற, தத்ரூபமா வந்திருக்கு, அருமைம்மா ! » என தாராளாமாகப் பாராட்டும் குணமும் உண்டு.
அவருடைய கீர்த்திக்கும் எந்தக்ககுறையுமில்லை. கொறுக்குப் பேட்டை 13வது வட்டம் தோழர் முருகசாமி நினைவு பரிசிலிருந்து, தமிழ்நாடு, இந்தியா என்கிற வரைபடத்திற்குச் சொந்தமான பரிசுகள் வரை எல்லாவற்றையும் முறைப்படி எப்படி வாங்க வேண்டுமோ அப்படி வாங்கி இருக்கிறார். நாளிதழ்களிலும், சஞ்சிகைகளில் தொடர்ந்து அவரைப் பற்றி இரண்டொருவரிகள் எழுதுகிறார்கள், ‘எனக்கும் இலக்கியம் வரும்’ என்கிற சினிமா நடிகர்கள் வீடு தேடி வருகிறார்கள். வட ஆப்ரிக்க குளுபுளு மொழியில் தம்முடைய கவிதை வெளிவந்தாகவும் அதை அந்நாட்டு அதிபர் வெளியிட்டதாகவும் சொல்கிறார்.
‘ எட்டும் எட்டும் பதினாறு, எதிர்த்தவீட்டு பெண்யாருன்னு கவிதை எழுதினப்போ நம்ம எழுத்துசாமிக்குப் பதினாலு வயது. பிறகு சிறுகதைகள் நாவல்கள் என்று எழுத ஆரம்பித்தார். செங்கணாச்சேரி செந்தூர் பாண்டியன்போல தமிழ் எழுத்துலக சாம்ராச்சியத்தை கட்டி ஆளும் கனவு அவருக்கு முதல் கவிதைத் தொகுப்பு வெளிவரும்போதே இருந்தது. இரண்டொரு தொகுப்புகள் போட்டார். பதிவுத்துறை உத்தியோக உயர்வைக்காட்டிலும் எழுத்தில் பிரமோஷன் வாங்கணும் அதில்தான் பெருமை என்பது இலட்சியமாக இருந்தது, அதைத் தடித்தக் கழுத்தும் கனத்த சரீரமும், நடந்தால் மேல் மூச்சு கீழ் மூச்சு( ?) வாங்குகிற பாரியாள் சௌபாக்கியத்திடம் சொல்லவும் செய்தார்.
« என்னவோ செய்யுங்க, தம்படிக்குப் பிரயோசனமில்ல்லாத எழுத்து பொழப்பு, பையன் தலைக்கு மேல வளர்ந்துட்டான், வரிசையா மூணு பொண்ணுங்க இருக்கு, மறக்காம இருந்தா சரி », என்ற மனைவியின் நியாயமான எச்சரிக்கையையும் அலட்சியம் செய்தவரில்லை.
ஒருமுறை பரிசுக்குழுவில் இருந்த சக எழுத்தாளர் ஒருவர் « அண்ணே, முன்பின் நவீனத்துக்கான டபுள் டக்கர் நாவல் பரிசை இந்த வருஷம் நம்ம சொக்கப்பனுக்கு கொடுக்கலாம்னு இருக்கோம், பத்து வருஷமா எழுதறான். ஆட்டோ டிரைவர், குடும்பமும் கஷ்டத்துல இருக்கு, அடிக்கடி எங்களையெல்லாம் வந்து பார்த்துட்டு டீ காபின்னு வாங்கிக் கொடுத்துட்டுப் போற பணிவான பையன். அவர் என்ன சாதின்னும் உங்களுக்குத் தெரியும், அதனால » என்று இழுத்தபோது இவருக்குக் கோபம் வந்துவிட்ட து, குறுக்கிட்டார், « நீங்க ஒருத்தனும் எழுத்துக்குப் பரிசுக் கொடுக்கறதில்லைன்னு எனக்கும் தெரியும், அந்த தைரியத்துலதான் எனக்குக் கொடுங்கன்னு கேக்கறன். கூடுவாஞ்சேரியில ஒம் பட்டா நெலத்துக்கு வில்லங்கம் எடுக்கணும்னு ரெண்டுமாசத்துக்கு முன்ன நீ சொன்ன ஞாபகம், பிரச்சனை முடிஞ்சுடுச்சா ? » என இவர் கேட்க « இல்லை » என்பது எதிர்தரப்பு பதில். « என்னபண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்குத் தெரியாது, பரிசு எனக்கு வேணும், ஒங் கூடுவாஞ்சேரி பிரச்சனை முடிஞ்சுதுன்னு வச்சுக்கோ » என்று சொல்லி போனை வைத்துவிட்டார். எதிர் பார்த்ததுபோல பரிசு அவருக்குக் கிடைத்தது. இவருக்குப் போட்டியாக இருந்த இளைஞனுக்கு குடும்பக் கஷ்டத்தைவிட, நான்கைந்து பாட்டில்களை அந்த மாசத்துல கூடுதலாக வாங்க முடியுமென்ற கனவில் மண்ணைப் போட்டிருந்தார்.
லோக்கல் பரிசுகள், அவற்றோடு வாங்கிய கேடயங்கள், இடம்போதாமல் ஷோகேசில் நாட்டிக்கொண்டு கிடக்க, தேசியவிருதை வாங்கவில்லை என்ற ஒரு குறை நெடுநாளாக இருந்தது. நெருங்கிய நண்பர்கள் சிலர் « என்ன எழுத்துசாமி, எல்லா பரிசுகளையும் வாங்கிட்டீங்க தேசிய விருதை வாங்கலைன்னா எப்படி, அவரைப் பாருங்க வாங்கிடலாம் இவரை பாருங்க வாங்கிடலாமென » உற்சாகமூட்ட இவரும் தம்முடைய ‘ தாடியில் ஆங்காங்கே வெள்ளை மசுறு ’ நாவலில் இரண்டு பிரதியை அனுப்பிவைத்தார். அவருடைய எழுத்துகளை வாசிக்கும் மனைவி திருப்தியுடன் தலையை ஆட்டியது அதொன்றுக்குத்தான் என்ற காரணம் ஒரு பக்கம், ஐம்பது வயதில் அந்தப் பரிசை வாங்கியவன் நானொருத்தனாகத்தான் இருக்கணும் என்கிற வைராக்கியம் இன்னொரு பக்கம். பரிசுக்குழு தலைவர் அஸ்ஸாமைச் சேர்ந்தவர். அவர் எழுதியக் கவிதைகளையும் சிறுகதைகளையும் தெலுங்கு. மலையாளம், கன்னடம் என தெரிந்தவர்களைக்கொண்டு மொழி பெயர்த்தார், ஒரு மலரும் வெளியானது. இவர் தந்திரங்கள் பலித்து தேசிய விருது செய்தியைப் பரிசுக் குழு தலைவர் அறிவித்தபோது அன்றும் நம்ம எழுத்துசாமி சொந்த கிராமத்து இலுப்பை மரத்தடியில் ஒதுங்கி முடித்து ஒரு சொம்பு நீரால் பிருஷ்டத்திற்கு அபிஷேகம் முடித்திருந்தார்.
தமிழ் அன்னையின் சுவாசமே தமது கவிதைகளிலும், சிறுகதைகளிலும், நாவல்களிலும் இருப்பதாக நம்பும் எழுத்துசாமிக்கு கடந்த ஒருமாதமாக நெஞ்செரிச்சல். தம்முடைய இலக்கிய புகழுக்கு ஈடு இணை எவருமில்லை என நினைத்திருந்தபோதுதான் அவருடைய நெடுநாளைய எதிரியான பால்ய வயது சினேகிதன் நமச்சிவாயம் வீடு தேடிவந்தார்.
உங்களுக்கு நமச்சிவாயம் என்ற பெயரை தெரிந்திருக்க வாய்ப்பில்லை, பதிலாக பேய்மழை பேச்சாண்டி என்றால் நீங்கள் புளகாங்கிதமடைந்து மெய் சிலிர்க்க கூடும். இடைநிலைப் பள்ளி ஆசிரியர், கூடுதல் தகுதி பட்டிமன்ற பேச்சாளர், நடுவர். இருபது ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்து முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் நமச்சிவாயம் பேசத் தொடங்கினார். ‘முத்தாலம்மனும் கம்பனும் ’ என்ற தலைப்பில் பேசியவர், முத்தாலம்மனை சீதை என்றார், தொடர்ந்து குஷ்பு, ரம்பா, மும்தாஜ் என பல ரேஞ்சுக்கு கம்பன் கதை நாயகியை ஒப்பிட்டு பாடியும் ஆடியும் பேச ஒட்டுமொத்த கிராமமும் வாய் பொளந்து கேட்டது. ஊர் பஞ்சாயத்து தலைவரும் தருமகர்த்தாவாவும் பேய்மழை பேச்சாண்டி என்ற பட்டத்தைக் கொடுத்து பெரிய கேடயமும் வழங்கினார்கள். அன்றைய தினம் ஊர்த் திருவிழாவுக்கு வந்திருந்த எழுத்துசாமி, அஜீரணம் காரணமாக இரண்டு கோலிசோடாவை விழுங்க வேண்டியிருந்தது.
மாநில விருது, மத்திய (ஒன்றிய ?) விருது என வாங்கி குவித்துள்ளபோதிலும் அவருடைய மெய் கீர்த்திகளை அறிந்த ஊர் ஆசாமிகள் இன்றைக்கும் பத்துபேர்கூட தேறமாட்டார்கள். மாறாக பேய்மழை பேச்சாண்டி என்கிற நமச்சிவாயத்தை எல்லோருக்கும் தெரிந்திருந்தது. இவரிடமே « நம்ம நமச்சிவாயம் எங்கேயோ போயிட்டாம்பா. அடிக்கடி டிவி பொட்டியிலே வந்து போறான், ஒன்ன அப்படி பார்க்க முடியலை » எனக்கூறி அவர் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்கள்.
அந்த நமச்சிவாயம் வீடு தேடி வரவேண்டிய காரணமும் புரியாமலில்லை. சரியாக ஒருவாரத்திற்கு முன்பு கிராமத்து இளைஞர்கள் இருவர் எழுத்துசாமியைப் பார்க்க வந்திருந்தனர். « இந்த வருட முத்தாலம்மன் திருவிழாவில் பிறந்த மண்ணுக்குப் புகழ்தேடிகொடுத்தவர்களை பாராட்டப் போகிறோம் » என்றார்கள். எதிர்பார்த்தது போலவே இவருடைய பெயரும், பால்ய சினேகிதன் பெயரும் அழைப்பிதழில் இருந்தன. இரு பெயர்களுக்கும் ஒரே எழுத்துவகையை உபயோகித்திருந்தார்கள், எழுத்தின் பரிமாணமும் ஒன்று போலவே இருந்தன. ‘எழுத்துசாமி’ என்ற பெயரை மேலும், ‘பேய்மழை பேச்சாண்டி’பெயரை கீழுமாக அச்சடித்திருந்தார்கள், இதை எப்படி எடுத்துக்கொள்வதென்கிற குழப்பம் எழுத்துசாமிக்கு இருந்தது.
சரியாக ஒரு வாரம் கழித்து நமச்சிவாயம் வீடுதேடிவந்தார். விழாவையும் பரிசையும் நினைவூட்டிய சினேகிதன் « தவறாமல் வந்திடு, ஊர்ப் பசங்க ஏதோ விருது கொடுக்க போறாங்களாம்», என்றபோது அவர் கண்களில் தெரிந்த எள்ளலும், உதட்டோரம் வெளிப்பட்ட அலட்சியமும் கோபத்தையூட்ட, அதைச் சாமர்த்தியமாக சிரித்துச் சமாளித்தார்.
ஊர் உலகத்தையெல்லாம் ஜெயிக்க முடிந்த தம்மால் உள்ளூரில் ஜெயிக்க முடியவில்லை என்பதை நினைக்க ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. தேடிவந்த இளைஞர்களில் ஒருவன் கதை கவிதைகள்னு வாசிக்கிற பையன். ஆனால் இதுநாள்வரை வாய்திறந்து இவரை பாராட்டியவனில்லை என்கிறபோதும் பேச்சாண்டியா, எழுத்துசாமியா என்கிறபோது இவரைத் தேர்ந்தெடுக்க வாய்ப் பிருக்கிறது.
திருவிழா தொடங்குவதற்கு இரண்டு நாட்கள் முன்பாகவே கிராமத்துக்கு வந்துவிட்டார் . தமது வழக்கமான சாதுர்யத்துடன் ஊர்ப் பெரியவர்களைப் பார்த்தார். வெத்திலைப் பாக்கு பழமென தட்டில வைத்து அவர்கள் காலில் விழுந்தார். வீடு திரும்பியபோது தகப்பனார், சத்தம்போட்டார் : நம்ம கால்தூசிக்கு பொறமாட்டானுவ, அவனுங்க காலில் போய் விழுந்திருக்க, நாளைக்குப் பின்ன நான் தெருவுல தலைகாட்ட முடியுமா ? என ஆதங்கத்துடன் கண்டித்தார்.ஆனால், தந்தையிடம் « எனக்கு பேச்சாண்டி நமச்சிவாயத்தை எப்படியாவது தோற்கடிக்கணும், மான அவனமானத்தை பார்த்தா முடியுமா ! » என கேட்க நினைத்தாலும் வார்த்தைகள் வரவில்லை. ஒன்றே ஒன்று பாக்கி, அதையும் நாளை காலை நிறைவேற்றிவிட்டால், கிராமத்து விருது தனக்கென்பது நிச்சயமென உறங்கச் சென்றார். வெகு நேரம், புரண்டு நெளிந்து கடைசியில் எப்போது தூங்கினாரென்றே அவருக்குத் தெரியாது.
கண்விழித்தபோது நன்கு விடிந்து விட்டது. அவசரமாக தன்னுடைய ‘பதி ‘எங்கு போகிறார் என்பதை விளங்கிக்கொண்டு உதட்டைச்சுழித்த வாழ்க்கைத்துணை, « ஏங்க, ஒழுங்கா பாத்ரூம் கட்டிவச்சிருக்கிறப்ப எங்க கிளம்பிட்டீங்க, பூச்சி பொட்டு எதுனா கடிச்சா நாளைக்கு எங்க கதி ? » என்ற மனைவியின் பதிபக்தி எச்சரிக்கையைக் காதில் வாங்கவில்லை. கருமமே கண்ணாக தமது புண்ணிய ஸ்தலத்தைத் தேடி விரைந்தார், இரண்டு நிமிஷநேரம் நடந்திருப்பார். ம் இலுப்பைமரப் பிரகாரத்திற்குள் நுழைந்திருப்போம் என்ற நம்பிக்கையுடன் வேட்டியை உயர்த்திய கையோடு தலையையும் உயர்த்தினார், இலுப்பை மரம் மட்டுமல்ல அங்கிருந்த புளியமரமும் இல்லை, வெறிச்சோடி கிடந்தது.
« அதுகள சூளைபோட வெட்டி ஆறு மாசம் ஆவுது » என ஒரு குரல் அசரீரி போல ஒலிக்க திரும்பினார், வேகமாக ஒருவர் நடந்துகொண்டிருந்தார், பார்க்க பேச்சாண்டிபோல இருந்தது.
——
[KN8]எடுக்கணும்னு
[KN9]முடியலை
[KN10]நமச்சிவாயம்
[KN11]பரிமாணமும்
[KN12]சிரித்துச் சமாளித்தார்
[KN13]கவிதைகள்னு
[KN14]நமச்சிவாயத்தை
[KN15]தோற்கடிக்கணும்
[KN16]வாழ்க்கைத்துணை
September 11, 2023
சைகோன் புதுச்சேரி நாவல் விமர்சனம்
– கௌரி பா
காட்சி ஊடகங்களின் வருகையினாலும் மற்றும் நவீன வாழ்க்கையில் பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் நிரம்பி வழிவதனாலும் பொழுது போக்கிற்காக வாசிப்பவர்களின் வாசிப்பு என்பது அருகி வருகிற காலம் இது.
பணம் ஈட்டுவதை மையமாக கொண்டு செய்யப்படாத செயல்களில் ஒன்றாக இன்னமும் நீடித்துக்கொண்டு இருக்கும் செயல்ப்பாடுகளில் ஒன்றாக இலக்கிய எழுத்தும் இருந்து கொண்டிருக்கிறது.
ஒருவர் அவரது ஆத்ம திருப்திக்காக தன்னிச்சையாக முன்னெடுக்கும் எந்த ஒரு கலை முயற்சியும் எப்போதும் உயிரோட்டமானதாக இருக்கவே செய்யும்.
அவ்வகையாக நாகரத்தனம் கிருஷ்ணா எழுதிய சைக்கோன் புதுச்சேரி என்ற சமூக வரலாற்று நாவல் அமைந்ததனால் அந்த நாவல் வாசிப்பு அனுபவம் எனது ஐம்புலன்களுக்கும் விருந்தாக அமைந்தது என்று சொல்வதொன்றும் மிகையல்ல.
இந்த நாவலின கதைக்களங்களாக இந்தியாவின் புதுச்சேரியும் வியட்னாமின் சைக்கோனும் அமைந்துள்ளது.
இரண்டாம் உலகப்போரோடு பின்னிப்பிணைந்த உண்மை நிகழ்வுகளினதும், அந்த காலகட்டத்தில் புகழ் பெற்ற நிஐ கதாநாயகர்களின் கதைகளையும் புதுச்சேரி மற்றும் சைக்கோன் நிலவியல் பின்னணியில் காலணியத்துவ அரசியல் நிகழ்வுகளையும் பின்னணியாக வைத்து எழுதிய சமூக நாவல் என்னும் ஒரு பெரும் புனைவு வெளிக்குள் வாசகரை கதை சொல்லி இப்படி இழுத்தழைத்துச்செல்கிறார்.
“ நம்முடைய தனித்தன்மையை விலக்கிக்கொண்டு எப்போது கொள்கை அல்லது சித்தாந்தத்திடம் முழுமையாக ஒப்படைத்துவிடுகிறோமோ அக்கணத்தில் குற்றம் தன்னை நியாயப்படுத்த முனைகிறது அதுவே ஒரு நியாயமாக உருப்பெறுகிறது”. ‘அல்பெர் கமுய்’ ( Albert Camus) வார்த்தைகள், சத்திய வாக்கு. காலனிய அரசியல்வாதிகளுக்குக் கடல் கடந்து முன்பின் அறிந்திராத மக்களை அடிமைப்படுத்த ஒரு சித்தாந்தம் தேவைப்பட்டதெனில், அவர்களிடமிருந்து விடுதலைபெற எண்ணிய மக்களுக்கும் சித்தாந்தமொன்றின் தேவை இருந்தது. இச்சித்தாந்தப்போரில் இரு தரப்பு ஆயுதங்களும் பலிகொண்ட உயிர்கள் ஏராளம். வரலாற்றின் ரத்தம் தோய்ந்த பக்கங்கள் எமது பூமியொன்றில் எழுதப்பட்டபோது, கையறு நிலையில் எங்களால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.
முதல் இந்தோசீனா யுத்தத்தின் இறுதி அத்தியாயம் எழுதப்பட்ட எங்கள் சகோதர பூமிக்குப்பெயர்: தியன் பியன் ஃபூ (Dien Bien Phu). ஒன்பது ஆண்டுகாலப்போரை முடிவுக்குக் கொண்டுவந்த களம். நூறாண்டு காலம் ஆண்ட ஐரோப்பியர், காலனி மக்களின் விழிப்புணர்வை புரிந்துகொண்டிருக்க வேண்டும். அமைதியாக இந்தோசீனாவில் இருந்து வெளியேறி இருக்க வேண்டும். விடுதலையைச் சில நிபந்தனைகளுடன் வழங்க முன்வந்த காலனிய அரசின் யோசனையை வியட்மின்கள் நிராகரிக்க, யுத்தம் ஆரம்பித்தது. ….. போரின் முடிவு ? நீங்கள் எதிர்பார்த்தது போலவே நீதியின் பக்கம்.
விளைவு நீதியின் பக்கமா இல்லை அமெரிக்க புவிசார் அரசியல் வியூகங்களில் விளைந்த தற்காலிகமான வியட்நாமின் வெற்றியா என்ற எண்ணம் வாசகராக எனக்கு தோன்றியது.
———————
முன்னூறு பக்கம் தாண்டி ஓடும் இந்த நாவலின் மிக முக்கியமான கருவாக நான் கருதுவது“விடுதலை”.
ஐரோப்பியர்கள் ‘கூண்டில் அடைபடு ! வேண்டியது கிடைக்கும் என்று கூற வியட்மின்கள்“விடுதலையைக்கொடு, வேண்டியதை நாங்கள் தேடிக்கொள்கிறோம்’ எனத்தெரிவித்தபதிலால் நடந்த யுத்தம்.’ என்கிறார் எழுத்தாளர்.
ஓரே காலகட்டத்தில் புதுச்சேரி தமிழர்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் பிரான்சு தென் சீனக்கடலில் உள்ள வியட்நாம் சைக்கோனையும் அடிமைப்படுத்துகிறது.
அவர்களை எதிர்க்கிற வியட்நாமியர்கள்மேல் போர் தொடுக்கிறது பிரெஞ்ச் கொலனி அரசு.
அந்த காலகட்டத்தில்வியட்னாமியர்களை வழிநடத்தும் தலைவராக கம்முனிசக்கொள்கையுடைய தலைவர்ஹோசிமின் மற்றும் படைத்தளபதியாக ழியாப் (Giap) இருக்கிறார். பிரென்சு படைத்தரப்பில்வேன்சான் ஒரியோல் , ஹாரி நவ்வார் இருக்கிறார். இது 1950 களின் தொடக்கத்தில் நடக்கும் யுத்தம்.
1930 களில் பிரான்சின் இன்னொரு கொலனியான புதுச்சேரித்தமிழர்கள் இருந்தார்கள். புதுச்சேரியில் இருந்து வெறும் பாடசாலைப்படிப்போடு 1930 களில் இருந்து தமிழர்கள்வியட்நாம் ல் உள்ள சைக்கோனுக்கு செல்கின்றனர், அங்கு அவர்களுக்கு கடிகாரத்தைபார்த்து செய்யும் அரச அலுவலக உத்தியோகங்களான காவல்த்துறை, கடற்படை, நகராட்சிகாவல்த்துறை, சுங்க இலாகா, நீதித்துறை, கல்வித்துறை , கப்பல்த்துறை மற்றும் ராணுவ உத்தியோகங்களை வழங்குகின்றன.
இந்தோசீனாவிற்கு புறப்படுவதற்கு முன்பாக புதுச்சேரியில் சட்டபூர்வமான வயதடைந்த பிரென்ஞசிந்தியர்கள் அனைவரும் ஜாதி மதம் பாலின வேறுபாடுகள் குறுக்கீடின்றி பிறப்பால்அவரவர்கென்று நிர்ணயிக்கப்பட்ட சமூக அடையாளத்தை களையலாம் என்ற ஆணை அனுமதிக்கிறது. தந்தை பெயருக்கு பதிலாக ஐரோப்பியர் உச்சரிக்க வசதியாக ஒரு குடும்பபெயரைத்தெரிவு செய்து கொள்ள வேண்டும் என்றார்கள். ஐரோப்பியருக்கு இணையாண சிவில் உரிமைகள் அவர்களுக்கும் கிடைக்கும் என்று உத்தரவாதம் அளித்தார்கள். அதனால் ஈர்க்கப்பட்டும் பிரான்சின் ரொனான்சன் என்றழைக்கப்படும் குடியுரிமை தரக்கூடிய சலுகைகளுக்காகவும் ஆசைப்பட்டு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த முப்பது வயது சுப்பராயன் அவர் அக்கா மகளாக இருந்து பின்னர் பதினாலு வயதிலேயே இந்திய கிராம கலாச்சார மரபினடிப்படையில் அவர் மனைவியாக பரிணாம்ம் பெற்ற வேதவல்லியை அவள் வீட்டிற்ற்கு சொல்லாமல் சைக்கோனுக்கு அழைத்துசெல்கிறார். அதனைத்தொடர்ந்து வேதவல்லியின் தம்பி சிங்காரம் “மாசிமக தீர்த்தவாரிக்கு போவது போல புறப்பட்டு வந்தோம் விழா முடிந்ததும் புறப்பட்டு விடுவோம்” என நினைத்தோம் என நாவலில் அவர் சைக்கோன் போன அனுபவத்தை அவர் வாயால்சொல்கிறார்.
சிங்காரம் அடிப்படை மனித இயல்புகளை கட்டுப்படுத்தும் புதுச்சேரியில் தான் ஆசை ஆசையாய் காதலித்த ஒடுக்கப்பட்ட சாதிப்பெண்ணான ஜானகியை கைகழுவி விட்டு சைக்கோனுக்கு கப்பல் ஏறுகிறார்.
அவர்கள் பிரியும் தருணம் நாவலில் இப்படியாக விரிகிறது.
“வழக்கமாக ஜானகியை அவளுடைய ஆடுகளுடன் சந்திக்க நேரும் அரசடிக்கு வந்திருந்தேன். காற்றில் அலைந்த கேசத்தை காதுமடலின் பின்புறம் தள்ளியபடித்துறட்டுக்கோலால் அரசமரத்தின் தாழ்ந்த கிளையொன்றிலிருந்து தழை பறித்துக்கொண்டிருந்தாள் கீழே விழுந்த கணத்தில் தளிர் குழைகளாக தேர்வு செய்து கவ்வி, அசைபோட்ட வண்ணம் ஆடுகள் அவளைச்சுற்றி வந்தன. அக்கம் பக்கம் பார்த்து ஒருவருமில்லை என உறுதி செய்து கொண்ட பின் “ ஜானகி” என அழைத்தேன். ஆடுகள் எனது குரலைக்கேட்டதும் தலையை உயர்த்தி “ ம். மே” என்று கத்திக்கொண்டு கலைந்தோடின.ஜானகியின் கவனம் முழுக்கத் துறட்டுக்கோலைக் கையாளுவதில் இருந்தது அல்லது அது போல பாவனை செய்தாள். … ஏரியில் சரிவில் தடதடவென இறங்கித் துறட்டுக்கோல் பிடித்திருந்த கைகளை பற்றினேன்.
“ எங்க வந்தீங்க சொல்லுங்க?”
⁃ உன்னைப் பார்க்கணும் என்று தான் வந்தேன்.
“ பார்க்கிறதுக்கு புதுசா எங்கிட்ட என்ன இருக்கு? சலிச்சுப்போச்சு, கிளம்பற. ஆரோக்கியம் சொன்னான் நீயும் சீமைக்கு போறியாமே?
⁃ ஆமாம் சைக்கோனுக்கு போறேன். ரெண்டு மூணு வருஷத்திலே திரும்பிடுவேன்.
⁃
“ திரும்பி?”
⁃ உன்னைக்கூட்டிக்கிட்டு போயிடுவேன்.
“ இதை நான் நம்பணுமாக்கும். குடுத்தனக்கார பொண்ணு எவளையாவது ஒங்க வூட்டுல பாத்து வெச்சிருப்பாங்க. அவளைக்கூட்டிக்கிட்டுபோவ, இனி நான் எதுக்கு?”
வெடுக்கென்று வார்த்தைகள் தெறித்தன. கண்களில் நீர் கோர்த்திருந்தது. புறங்கையால் மூக்கை நான்கைந்து முறை அழுந்த துடைத்தாள். கைகளில் இருந்த துறட்டுக்கோலைத் தரையில் எறிந்துவிட்டு மரத்தடியை நெருங்கினாள். வலது முழங்கையைத் தலைக்குக் கொடுத்து, ஒரு காலை தரையிலும் மறு காலை முக்கோணமாக மரத்திலும் ஊன்றி நின்றாள். …என்னை நம்பு நான் வந்திடுவேன்’ எனச்சொல்ல நினைத்தேன். வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக்கொண்டிருக்க…. மெல்ல என் தலையை அவள் முகத்தில் இறக்கியபோது கண்ணிரப்பைகளில் திரண்டிருந்த நீர் கன்னக்கதுப்பில் உடைந்து இறங்கியது. மறுகணம் என்னைத்தள்ளிவிட்டு விடு விடுவென நடந்தாள்.
இப்படித்தான் சிங்காரம் ஜானகியை பிரிந்த காட்சி இந்த நாவலில் விரிந்தது. இந்தக்காட்சியை படித்த எவருக்கும் தொண்டையை துக்கம் அடைக்காமல் இருந்திருக்க முடியாது.
சைக்கோனில் வந்திறங்கிய இரண்டு வருடங்களில் கம்பீரமான ராணுவ சிப்பாய் சிங்காரத்தின் வாழ்க்கையில் திடீர் என்று ஆஜரான அனமிட் இன வியட்னாமியப்பெண்ணான மரியா ஹோவாம்மி எந்தவிதமான இடைஞ்சல்களும் இல்லாமல் பிரத்தியேகமாக முன்கூட்டியே தனக்கென ஒதுக்கப்பட்ட விசேட வானூர்தி இருக்கை ஒன்றில் ஏறி அமர்வது போல சிங்காரத்தின் மனைவி என்ற அந்தஸ்தை பெற்று இரட்டைக்குழந்தைகளான இசபெல் மற்றும் ஃபிலிப் ற்கு தாயாவதும் நடந்தேறுகிறது. இந்தப்பக்கங்களில் நிறைவேறாத ஜானகியின் காதலுக்காக வாசகர் மனம் பரிதவிக்க தவறாது.
நாவலில் பல பக்கங்கள் சைக்கோனில் சிங்காரம் மரியாவின் காதல் தோய்ந்த குடும்ப வாழ்வை சித்தரித்துக்கொண்டே முன்னேறும் அதே நேரம் சிங்காரத்தின் வாரிசான பொன்னுச்சாமியை தனியாளாக வளர்த்தெடுக்க புதுச்சேரியில் ஜானகி படும் பாடுகளையும் வாசகர் கண் முன்னே சமாந்தரமாக விரித்துச்செல்கிறது. புதுச்சேரியில் ஜானகி திருமணமான ஆண்களின் காம இச்சைக்கு ஆள்படாமல் காத்துக்கொள்ள தன் கறாரான பேச்சையும் இயல்பான எடுத்தெறியும் போக்கையும் ஆயுதமாக கொள்வதோடு யார் தயவிலும் வாழாமல் வயல்களில் கூலி வேலை செய்தும் பிரான்ஸ் துரைமார்கள் வீடுகளில் வீட்டு வேலை செய்வதும் பிழப்பை ஓட்டுகிறாள்.
புதுச்சேரியில் இருக்கும் சாதிய அதிகாரத்திற்கு எதிராகவும் , காலணியத்துரைகளின் ஆணாதிக்கத்திற்கெதிராகவும், பல்வேறு தளங்களில் பல்வேறு அதிகாரத்தை எதிர்த்து போராடிக்கொண்டே தனது ஒற்றை இலட்சியமான தனக்கும் சிங்காரத்திற்கும் பிறந்த பொன்னுச்சாமியை சைக்கோனுக்கு அனுப்பவதற்காக உழைத்துக்கொண்டிருக்கிறாள்.
வாழ்க்கையில் ஜானகியின் ஒரே லட்சியமாக இருப்பது தனது மகன் பொன்னுச்சாமியை படிக்க வைத்து தன்னை ஏமாற்றி விட்டு சென்ற சிங்காரம் இருக்கும் இடமான சைக்கோனுக்கு அவனையும் ஒரு ராணுவ சிப்பாயாக அனுப்புவதாக இருக்கின்றது.
ஜானகி போன்ற ஒடுக்கப்பட்ட சாதிப்பெண்களுக்கு பிரெஞ்சு காலணியவாதிகளிடம் இருந்து விடுதலை தேவையற்ற ஒன்றாக இருந்தது ஏனெனில் அவர்கள் ஆட்சியில் தான் ஜானகிக்கு மனித உரிமை மற்றும் சமத்துவம் என்பது என்னவென்று ஓரளவு ஆவது தெரியவந்தது, சாதிய ஒடுக்குமுறைகளால் சதா நசுக்கப்படும் கூட்டத்திற்கு காலனிய அரசுகளின் ஒடுக்குமுறைகள் ஒன்றுமே இல்லை என்பதை காந்தி புரிந்து கொண்டிருந்தார். தான் கனவு காணும் இந்திய விடுதலைக்காக அவர்கள் போராடப்போவதில்லை என்று அவர் நினைத்ததனாலோ என்னவோ அவர் 1934 மாசி மாதம் புதுச்சேரி சென்ற போது அவர் உரையில் இந்திய விடுதலை பற்றிப்பேசாமல் இப்படிப்பேசினார் என்று நூலில் வருகிறது” சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய சொற்களின் பொருளை இந்தியாவின் பிறபகுதி மக்களைக்காட்டிலும் புதுச்சேரிவாசிகள் நன்கறிந்தவர்கள். எனவே ஜாதி மற்றும் வகுப்பு வாத்த்திற்கு எதிராக புதுச்சேரி அன்பர்களே போராடக்கூடியவர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது…..”. சாதி மற்றும் வகுப்புவாதங்களினால் பிளவுபட்ட இந்திய மக்களை முதலில் ஒருங்கிணைக்காமல் இந்திய சுதந்திரத்திற்காக ஒன்று திரட்ட முடியாது என்பதை அவர் புரிந்து வைத்திருந்தார் என்பதை இந்த நாவலில் வரும் சம்பவங்கள் சொல்லாமல் சொல்லிச்செல்கிறது.
இந்த கதையில் வரும் அடுத்த முக்கிய கதாபாத்திரமாக இருப்பது சுப்புராயனின் மனைவி வேதவல்லி. வேதவல்லி விவசாயக்குடும்பத்தில் இருந்து வந்த அதிகம் படிக்காத ஒரு பெண். சைக்கோனில் இருக்கும் இயற்கை வனப்பு மிக்க ந்திகளையும் குன்றுகளையும் ஏரிகளையும் கடலையும் ரசிக்கத்தெரியாமல் புதுச்சேரி மண்ணை நினைத்து நித்தம் ஏங்குகிறார்.
தான் விட்டு விட்டு வந்த உறவுகள் நினைப்பாகவே வாழ்க்கையை வெறுத்து ஒதுக்கி வைத்திருந்த வேதவல்லிக்கு சைக்கோனில் உள்ள தமிழ்ச்சங்கத்தின் மூலமாக இஸ்மாயில் அண்ணர்
அவர் மனைவி அமீனா பேகம் மற்றும் லெயோன் புருஷாந்தி என்ற செல்வந்தரின் நட்பும் கிடைக்கிறது. புதிதாக கிடைத்த உறவுகளினால் வேதவல்லி சொந்த மண்ணிற்காக ஏங்கும் ஏக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது, புது நட்புக்கள் தந்த ஊக்கத்தினால் வேதவல்லி அங்கு பிறந்த குழந்தைகளுக்கு தமிழ் ஆசிரையை ஆகவும் தமிழ்ச்ங்கத்தின் நிர்வாக பொறுப்பையும் ஏற்கிறார். இதனால் பிள்ளை இல்லாத வேதவல்லிக்கு வாழ்வை வாழ்வதற்கான ஒரு குறிக்கோள் கிடைக்கின்றது. மேலும் காந்திய சிந்தனைகளினாலும் பெரியார் சிந்தனைகளினாலும் ஈர்க்கப்பட்டு சமூகத்திற்கு முன் உதாரணமாக விளங்கி காலத்தை மீறிய முற்போக்கு கருத்துக்களை சமூகத்திற்கு சொல்லும் கம்பீரமான தோற்றம் கொண்ட லெயோன் புருஷாந்தி மீது வேதவல்லிக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. அவர் முன் நின்று நடத்தும் எல்லாக்காரியங்களிலும் கைகொடுக்கும் ஆளாக வேதவல்லி வளர்கிறார். தமிழ் ஆணுக்கும் வியட்னாமியப்பெண்ணிற்கும் பிறந்த ஒரு அநாதைப்பெண் குழந்தைக்கு வளர்ப்பு தாயாகிறார். இதுவும் லெயோன் புருஷாந்தியின் உந்துதலில் தான் நடக்கிறது.
கதையின் ஓட்டத்தில் சுப்புராயன் பற்றிய கதை சொல்லியின் குறிப்புக்கள் அனைத்தும் அவரைத் தன்னைப்பற்றி ஒரு தாழ்வு மனப்பான்மையை கொண்டிருக்கும் ஒருவராகவே சித்தரித்து வந்துள்ளார். தாழ்வு மனப்பான்மை இல்லாதவர்கள் சாதாரணமாக பொது வெளியில் அவர்கள் மேல் விழும் அலட்சியப்பார்வைகளையோ நக்கல் தொனிகளையோ பெரிதாக சிரத்தை செய்ய மாட்டார்கள். சுப்பராயனுக்கு காவல்த்துறையில் அவர் செய்யும் பணி மூலம் அவ்வப்போது தன் அதிகாரத்தினால் மற்றவர்களை அடித்து துன்புறுத்தும் போது அவரது போதாமைகளை தற்காலிகமாக விலக்கி வைக்க உதவி அளிக்கிறது. பொதுவாக மனைவிகளை அடிக்கும் ஆண்கள் கூட இப்படியான உளவியல் தாழ்வுச்சிக்கல்களினால் பாதிக்கப்பட்ட ஆண்களாக இருப்பதும் ஒரு காரணம். அடிக்கிற கை தான் அணைக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப சுப்புராயன் வேதவல்லியை அடிக்கடி அடிப்பதும் பின்னர் அதற்கு ஒத்தடம் குடுக்கும் விதமாக நடந்து கொண்டு காலத்தை ஓட்டுகிறார். குடும்ப வன்முறையில் ஈடுபடும் குணாதிசயங்களுடன் சுப்புராயன் நாவல் முழுவதும் வலம் வருகிறார். த்த்ரூபமாக நாவலாசிரியர் இந்த கதாபாத்திரத்தை படைத்துள்ளார்.
சிங்காரத்தின் பிள்ளைகளான பிலிப் மற்றும் இசபெல்லும் வேதவல்லியின் மற்றும் சுப்பராயனின் வளர்ப்பு மகளான லட்சுமியும் ஒருவருக்கொருவர் அணைதுணையாக எப்போதும் ஒன்றாக வளர்கின்றனர்.
சிங்காரம் , சுப்புராயன் , வேதவல்லி மற்றும் லெயோன் புருஷாந்தி ஆகியவர்கள் பிரெஞ்சு குடியுருமை பெற்றவர்கள். அதனால் அவர்கள் தங்களை பிரெஞ்சிந்தியர்கள் என்று அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள். பிரஜாவுரிமையும் அரச உத்தியோகமும் வழங்கிய பிரெஞ் நாட்டிக்கு தாங்கள் எப்போதும் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆனால் லெயோன் புருஷாந்தி அந்த சிந்தனைக்கு விதிவிலக்கானவர். அவர் இந்தியா பிரிட்டிஷ்கார்ர்களிடம் இருந்து விடுதலை அடைய வேண்டும் என்ற ஆர்வத்தில் இருப்பவர். அவர் ஒரு காந்தியவாதி என்றபோதிலும் தமிழர்கள் ஐரோப்பியர்கள் போல கம்பீரமாக உடை அணிய வேண்டும் என்று அனைவருக்கும் போதிக்கிறார். அவர் நாலு பிள்ளைகளுக்குத்தாயான கோடீஸ்வரியான விதவைப்பெண்ணுக்கு மறுவாழ்வு அளித்து சீர்திருத்தவாதி என்ற நற்பெயரையும் சமூகத்தில் பெறுகிறார். சைக்கோனில் அரச உத்தியோகங்களில் இருக்கும் பிரெஞ்சிந்தியர்கள் மற்றும் வணிகம் செய்யும் பிரிட்டிஷ் இந்தியர்கள் சமூகங்களின் மத்தியில் செல்வாக்கு பெற்ற ஒரு நபர். காந்தியின் செய்கைகளை நகல் எடுத்தாற்போல இவரின் செய்கைகளும் இருக்கிறது, காலனியர்களின் அரசிடம் கைகட்டி வேலை பார்க்கும் உத்தியோகமான தனது வங்கி வேலையை கைவிடுகிறார். இப்படி தனது ஒவ்வொரு செயல்கள் மூலமும் காந்தியின் கால்தடங்களின் வழி நடக்கிறார். அவர் செயல்ப்பாடுகள் ஒவ்வொன்றையும் பார்த்து வேதவல்லி பிரமிக்கும் அதே தருணம் சுப்புராயன் லேயோன் புருஷாந்தியின் தியாகங்களை எள்ளி நகையாடுவார். “ கோடீஸ்வர விதவைகள் என்றால் ஒன்றென்ன ஒன்பது பேரைக்கூட மறுமணம் செய்யலாம் என்று கூறுவார்.
பொதுவாக மனிதர்களின் செயல்ப்பாடுகளையும் அவர்கள் நகர்வுகளையும் தேவைக்கோட்பாட்டு அடிப்படையிலேயே கணிப்பது இலகுவாக இருக்கிறது.
முதலாவது அடிப்படைத்தேவையான உடல் சார்ந்த நிறைவு என்று பொருள் கொள்ளலாம். அவை சுவாசிக்கும் காற்று , நீர், உணவு , போதுமான நித்திரை மற்றும் உடலுறவு என்பவற்றை உள்ளடக்கும்) – இது உடல் சம்பந்தப்பட்ட திருப்தியை உள்ளடக்கும். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம் என்ற கூற்றுக்கிணங்க இந்த விளக்கம் அமைந்திருக்கிறது.
இரண்டாவதாக பாதுகாப்பு அவையாவன பொருளாதார, சமூக, தொழில் ஆகியவற்றினால் ஒரு தனிநபர் அடையும் நிறைவு. இந்த தேவைகள் உடல் சம்பந்தப்பட்ட அடிப்படைத்தேவைக்கு ஒரு படி மேலாக நிற்கிறது.
மூன்றாவதாக மனிதன் ஒரு சமூக விலங்கு என்பதனால் குடும்பத்தில் அங்கத்துவம் வகிக்கும் அவள் தேவை , சமூகத்திற்குள் ஒருத்தியாக அங்கத்துவம் வகிக்கும் தேவை மற்றும் பரந்த நட்பு வட்டம், மனதிற்கினிய துணை ஆகியவை ஒரு நபர் தன் வாழ்வில் சந்திக்ககூடிய துயரசம்பவங்களில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ளவும் , கொண்டாடப்பட வேண்டியவற்றை சேர்ந்து கொண்டாடுவதற்கும் உறுதுணையாக இருக்கின்றது. பல ஆய்வுகள் ஆராய்ச்சிகள் மூலம் பரந்துபட்ட சமூகத் தொடர்புகளும், நட்பு வட்டங்களும் ஒரு நபருக்கு மனவுளைச்சல் மற்றும் தனிமையால் விளையக்கூடிய மனச்சோர்விலிருந்து விடுவிக்கவல்லவை என்று நிரூபிக்கின்றன.
இந்தக்கதையில் மேற்குறிப்பிட்ட உளவியல் தேவைகள், நட்பு, மனதிற்கினிய துணை ஆகியவற்றிற்காக வெற்றிடத்தை நிரப்ப அலையும் ஒரு மனமாக வேதவல்லியின் மனம் உளலும் வேளையில் தான் அவளுக்கு லேயோன் புருஷாந்தி மூலமும் தழிழ்ச்சங்கம் மூலமும் அவையெல்லாம் கிடைக்கிறது. அந்த நட்பை ஸ்திரமாக வைத்திருக்கும் முனைப்பில் வேதவல்லி லேயொன் புருஷாந்தி முன்னெடுக்கும் எல்லா விடயங்களுக்கும் தன்னாலான ஆதரவை வழங்கி வருகிறார்.
அடுத்ததாக ஒரு தனிநபர் தான் தன் குடும்ப/சமூக சூழலில் மதிப்பு மரியாதை அந்தஸ்து மற்றும் தனிதன்மையுடன் கூடிய அர்த்தமுள்ள வாழ்வை வாழ வேண்டும் என்று நினைத்து அதில் முன்னேற்றமும் நிறைவும் காண்பது.
அந்த வகையில் தன்மதிப்பை தான் வாழும் சூழலில் தக்க வைக்க காவல் துறை வழங்கும் அதிகாரம் தாழ்வுச்சிக்கலில் உழலும் சுப்புராயனுக்கு தோதானா ஒன்றாக இருக்கிறது.
அந்த அதிகாரத்தை தனக்கு வழங்குவது தன்னையும் தன் இனத்தையும் சுரண்டும் பிரெஞ்சு காலனியத்துவ அரசு என்பதும் மேலும் இந்த பொலிஸ் உத்தியோகத்தின் மூலம் தன்னைப்போன்ற இன்னொரு பிரெஞ்சு காலனிய அடிமைகளான வியட்னாமியர்களை கையாளப்பயன்படுத்துகிறார்கள் என்ற பிரக்ஞை அற்ற ஒருவராக இருக்கும் சுப்புராயன் போன்ற ஆண்கள் பிரெஞ்சு காலனிய அரசுக்கு இரு வேற நாட்டு அடிமைகளை பிரித்தாண்டு தன் காலணிய ஆட்சியை தக்க வைக்க உதவியிருக்கிறது என்றே தோன்றுகிறது.
பொதுவாக மனிதர்களுக்கு அவர்கள் சுய வாழ்வியல் தேவைகள் பூர்த்தியான பின் அவர்கள் தாம் வாழும் சமூகத்தற்காக செய்ய வேண்டிய பொறுப்பை உணர்ந்து சமூகத்தின் வளர்ச்சிக்கு தங்களினால் இயன்ற பங்களிப்பை செய்வதன் மூலம் தங்கள் சந்தோசத்தை மேலும் மெருகேற்றி பூர்த்தி செய்ய முனைவார்கள்.
அந்த வகையில் இந்த நாவலில் வரும் லேயோன் புருஷாந்திக்கு மனிதர்கள் உயிர்வாழத்தேவையான அத்தியாவசியத்தேவைகளுக்காகவோ தனது பாதுகாப்பு கருதியோ எந்த விதமான முயற்சிகளையும் எடுக்கவோ அதனைத்தக்க வைக்கவோ வேண்டிய தேவைகள் அற்றவர் அதனால் அவரின் செயல்ப்பாடுகள் அவரை தன்னை சுற்றி இருக்கின்ற சமூகத்தினது மேம்பாடுகளுக்கு பங்களிப்பு செய்ய அவரை இயல்பாக உந்தித்தள்ளுகிறது.
அவர் பொதுக்கூட்டங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தின் இன்றியமையாமை பற்றிப்பேசுகிறார், பிரித்தானிய ஆட்சியில் இருந்து இந்திய தேசம் விடுதலை பெற வேண்டும் என்று அந்த விடுதலை நோக்கி போராடும் நேதாஜி மற்றும் சுபாஸ் சந்திரபோஸின் இந்திய லீக் கட்சிக்கு உதவிகள் செய்கிறார் . எல்லாவிதமான சமூக சேவைகளிலும் ஈடுபடுகிறார். இரண்டாம் உலகப்போரில் நாஜி ஜேர்மனியோடு யப்பான் கூட்டு சேர்ந்து அதன் அதிகாரத்தின் பிடியின் கீழ் பிரெஞ்சு நாட்டு மக்களையும் கூடவே கொலனிகளையும் கொண்டு வருகையில் தற்காலிகமாக பிரித்தானியாவின் எதிரியாக யப்பான் மாறுகிறது இந்த சின்ன இடைவெளிக்குள் புகுந்து யப்பானின் ஆதிக்கத்தில் இருந்த இந்தோசீனா பிரெஞ்சு கொலனிகளில் உள்ள இந்தியர்களின் ஆதரவையும் பணபலத்தையும் திரட்ட அன்றைய சக்தி வாய்ந்த அரசியலாளர்களான நேதாஜி மற்றும் சுபாஸ் சந்திரபோஸ் சைக்கோன் வருகிறார்கள் அந்த வேளையில் காந்தியவாதியும் சைக்கோன் சமூகத்தில் பணபலமும் அந்தஸ்த்து மற்றும் புகழுடன் வாழும் லேயோன் புருஷாந்தியின் ஆதரவை அவர்கள் நாடுகிறார்கள், அந்த வேளையில் புவிசார் அரசியலில் நிலை எப்படியும் மாறலாம் தாங்கள் தங்கள் காவணிய நாடான பிரெஞ்சு அரசுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்றும் தங்களதும் தங்களின் குடும்பத்தின் பாதுகாப்பும் மட்டுமே முக்கியம் பிரெஞ்சு இந்தியர்கள் அனைவரும் ஒதுங்க லேயோன் புருஷாந்தி மற்றும் வேதவல்லி நேதாஜியை வரவேற்று அவர்களின் இந்திய விடுதலைக்கான பணிகளை இந்தோ சீனாவில் தொடங்கி வைக்கின்றனர். லேயொன் புருஷாந்தி என்ற அந்த சமூக அந்தஸ்த்தும் மரியாதையும் உள்ள மனிதருக்கு தனிநபராக தன்னுடைய பாதுகாப்பு என்பது எந்த சர்ந்தப்பத்திலும் உறுதி செய்யப்பட்ட ஒன்று என்று தவறாக கணிப்பிட்டார். யப்பானின் கொட்டத்தை அமெரிக்கா அடக்க மீண்டும் பிரெஞ்சு அரசு அதிகாரத்திற்கு வருகிறது அப்போது யப்பானுடைய ஆதரவில் பிரெஞ்சு கொலனியான சைக்கோனில் அரசியல் செய்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டு சித்தவதைக்குள்ளாகி பைத்தியமாக லேயோன் புருஷாந்தி வெளியில் வந்து பின்னர் இந்தியா வந்து புதுச்சேரி வீதிகளில் பைத்தியமாக அலைந்ததற்கு பல நிஐ சான்றுகள் உள்ளதாக தெரிகிறது என்று கதையில் கூறப்படுகிறது.
உலகெங்கும் கொலனிகளை வைத்திருந்த பிரான்ஸ் அரசு அதன் ஒரு கொலனியில் இருந்து இன்னொரு கொலனிக்கு அரச உத்தியோகங்களுக்காக மக்களை இடப்பெயர்வு செய்து அவர்களை எதிர்க்கும் மக்கள் கூட்டத்தினை அவர்களின் இன்னொரு அடிமைகளைக்கொண்டு அடிமைப்படுத்த முனைந்தது என்பது இந்தக்கதை மூலம் தெட்டத்தெளிவாக தெரிகிறது. அரசு என்பது மக்களை ஒடுக்கும் இயந்திரம். பிரெஞ்சு அரசு தங்களால் ஒடுக்கப்படும் இந்திய புதுச்சேரி மக்களின் கைகளை கொண்டு இன்னொரு ஒடுக்கபட்டும் அவர்கள் பிரஜைகளான வியட்நாமியர்கள் கண்களை குத்த வைக்கிறது, இரண்டு அடிமைப்படுத்ப்படும் இனங்களிடம் பகையை வளர்த்து சாதூர்யமாக தங்கள் காலனித்துவத்திற்கு எதிரான கோவம் எப்போதும் பிரெஞ்சு அரசின் மேல் திரும்பாமல் பார்த்துக்கொள்ள முனைந்திருக்கிறது.
தங்களின் பொது எதிரி பிரெஞ்சு அரசு என்று அவர்களுக்கு தெரிய வரக்கூடாது என்ற எச்சரிக்கையோடு நடந்து கொண்டது. ஆனாலும் வியட்நாமியர்கள் எய்தவர் இருக்க அம்பை நோகவில்லை.
சிங்காரம் , வேதவல்லி, சுப்பு போன்ற புதுச்சேரி தமிழர்கள் வியட்நாம் சென்று குடியேறி சுமார் இருபது ஆண்டுகளின் பின்னரே வியட்நாம் போர் தொடங்குகிறது. இந்த காலகட்டத்தில் வியட்நாம் தாய்க்கும் தமிழ் தகப்பனுக்கும் பிறந்த வேதவல்லி வளர்ப்பு மகள் லக்ஷ்மி , மற்றும் சிங்காரத்தின் மகன் பிலிப்பும் இராணுவத்தில் பிரெஞ்சுப்படையில் சேர்ந்துவிடுகிறார்கள். அத்தோடு ஜானகியின் மகன் பொன்னுச்சாமியும் புதுச்சேரியில் இருந்து வந்து சைக்கோனில் பிரெஞ்சு இராணுவத்தில் சேருகிறான்.
ஃபிலிப் பிரெஞ்சு குடியுருமை பெற்ற சிங்காரத்தின் மகனாகவும் வியட்னாமிய பெண்ணான மரியா ஹோவாம்மியின் மகனாகவும் இருந்து தன் தாய் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன் ஜானகியின் மகன் பொன்னுச்சாமியையும் ஒருங்கே காப்பாற்றுகிறார். பிரெஞ்சு காலணியத்துவ அரசு எவ்வளவு தான் காலனிய நாடுகளின் குடிமக்களை ஒருத்தர் மீது இன்னொருவரை ஏவி தங்கள் பக்க போரினை வெல்ல முயன்ற போதிலும் தேசப்பற்றுள்ள மனிதர்களையும் மனித நேயத்திற்கு விசுவாசமான மனிதர்களையும் அவர்களினால் வெல்ல முடியவில்லை.
தனது தாய் நாட்டின் மேல் அந்நியரகள் போர் தொடுக்க வந்த போது ஃபிலிப் பிரெஞ்சு ராணுவத்தில் உளவாளியாக சேர்ந்து தனது வேலையை கச்சிதமாக முடித்து விடுவதோடு வியட்நாமிய ராணுவத்தினால் போரில் தோற்ற பிரெஞ்சு படையில் இருந்த பொன்னுச்சாமி கைதாகி திக்கற்று நின்ற போது ஃபிலிப் தனது சகோதரன் பொன்னுச்சாமியை காப்பாற்றும் அந்த காட்சி நாவலின் இப்படி விரிகிறது.
“ போர்க்கைதிகள் முகாமில் அடைபட்டு பத்து நாட்கள் கடந்துருந்தபோது திடீரென்று அம்மா நினைப்பும் ஊர் நினைப்பும்வர முதன்முறையாக அழுதான். ஒன்பது ஆண்டுகளாக சைக்கோனில் இருக்கிறான், யுத்தம் செய்கிறான், யாருக்காக இந்த யுத்தம்? வியட்மின்கள் அவனுக்குச் செய்த துரோகம் என்ன ? அல்லது அவர்களுக்கு பொன்னுச்சாமி தான் ஏதாவது துரோகம் செய்திருப்பானா, இதென்ன விளையாட்டு ? எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து, ஆசை ஆசையாய் அம்மா ஊர்ச்சாமிகளுக்கு படையலிட்டு கப்பலேற்றி விட்டது இப்படிச்சிறையில் வாடவா? ….தம்முடைய படைவீர்ர்கள் சிறைபட்டிருப்பது குறித்த அக்கறை பிரான்சுக்கு உண்டா? …. என்றெல்லாம் நினைத்துக்கலங்கினான். பிரெஞ்சு காலனியப்படை வியட்மின்களிடம் தோற்றுள்ள நிலையில் , வியட்நாமில் இன்றைய தேதியில் அவர்கள் முகவரி என்ன? அதிகாரம் என்ன? …எனக்குழம்கிக்கொண்டு வெளியில் வந்த வேளை, வாயிலில் பிலிப்.
⁃ உன்னை எப்போது விடுதலை செஞ்சாங்க ? ஆர்வத்துடன் பொன்னுச்சாமி நண்பனைக்கேட்டான்.
⁃ என்னை யார் விடுதலை செய்யவேண்டும், நான் உண்மையில் வியட்மின்களின் உளவாளி..பிரெஞ்சு காலனியப்படையில் சேர்ந்து எங்கள் வியட்மின்கள் படைத்தலைமைக்கு நம்முடைய அசைவுகளையும் கொண்டு சேர்ப்பது தான் என் வேலை.
முடிவில் இந்தப்போரின் முடிவு நீதியின் பக்கம் இருந்தது போல தோற்றப்பாடு அளித்தாலும் அமெரிக்கா ஜேர்மனியுடன் கூட்டு சேர்ந்த யப்பானை எதிர்த்து தனது அதிகாரத்தை அந்தப்பிராந்தியத்தில் நிலைநாட்ட நினைத்து உதவி பின்னர் அந்தப்பிராந்தியத்தில் சீனாவின் கொம்முனிசக்கொள்கை பரவிவிடாமல் இருக்க வியட்நாமியர்களுக்கு எதிராக இருபது வருடம் கடும் போரை மேற்கொண்டது, இந்தப்போர்களில் பங்கெடுத்த மனிதர்களும் அவர்களுக்கு பிறந்த அடுத்த தலைமுறையும் இன்னமும் போரினால் ஏற்பட்ட உளவியல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட வண்ணம் உள்ளனர் என்பது தான் கொடுமையான யதார்த்தமாக இருக்கிறது.
நிஐ வரலாற்று தகவல்கள் நிரம்பிய பிரெஞ்சு கொலனிய காலத்தில் வியட்நாமில் வாழ்ந்த தமிழர்களின் பயணத்தடங்களையும் வாழ்வையும் சித்தரிக்கும் இந்நாவல் வாசிப்பு என் தேடல்களுக்கு தீனி போட்ட ஒரு நாவல் மட்டுமல்லாமல் லண்டனில் நான்றிந்த வியட்நாமிய மனிதர்களுடன் எனக்கு இனம் தெரியாத ஈர்ப்பையும் நெருக்கத்தையும் வரப்பண்ணியிருக்கிறது.
நாவலாசிரியருக்கு பாராட்டும் வாழ்த்துக்களும்.
நன்றி: அம்ருதா இதழ்
September 7, 2023
ஒரு புதிய சிலப்பதிகாரம்
அண்மைக் காலத்தில் நான் படித்த நாவல்களில் மனத்தை நோகச் செய்த ஒன்று நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘இறந்த காலம்’ என்ற இந்த நாவல். சிலப்பதிகாரக் கண்ணகிக்கு நேர்ந்ததுபோன்ற நிலைக்கு ஆளான நர்மதாவுக்கும் அவர்களோடு சேர்ந்து அதே கொடுமைக்கு மீரா, ஜெஸ்ஸிகா என்ற மேற்கத்தியப் பெண்களுக்கும் ஓர் இலக்கியத் தீர்வைத் தீர்வைத் தந்து கதையை முடித்திருக்கிறார் நாகரத்தினம் கிருஷ்ணா. கதையின் முக்கிய திருப்பமே இந்த முடிவுதான். இது வாசகனுக்கு நிறைவும் நிம்மதியும் தரும் முடிவாகவும் அமைகிறது.
வரலாற்றில் புதையுண்ட வாழ்க்கைதான் [தொடரை இரவல் தந்த நினைவில் வாழும் (சுகந்தி சுப்பிரமணியன், சுப்ரபாரதி மணியன் துணைவிக்கு நன்றி) கதையின் பாடுபொருள். புதுவை நாட்குறிப்புப் புகழ் ஆனந்தரங்கம் பிள்ளையின் எழுத்துலகப் புதுவாரிசு போல நாகரத்தினம் கிருஷ்ணா எழுத்து. ஒரு பன்னாட்டுப் பின்புலத்தை வழக்கம்போன்று தமிழில் அசலாகக் கொண்டு வந்திருக்கிறார்.
புதுவையில் அரவிந்தர் ஆசிரமம் சார்பில் அதன் தலைவியாக இருந்த அன்னையின் எண்ணத்தில் உருவான பன்னாட்டு வாழ்விடமான ஆரோவில் என்ற விடியல் நகரில் தன்னை இணைத்துக்கொள்ள பிரான்சிலிருந்து புறப்பட்டுவரும் 27 வயது மீரா என்ற கலப்பினப் பெண்ணின் பார்வையில் அமையும் கதை. அங்கே அவளைப்போலவே வந்துசேர்ந்த அமெரிக்கப் பெண் ஜெஸ்ஸிகா கதையும் இது.
ஆரோவில்லில் வசிப்பதற்காகக் கனவுகளுடன் வந்த ஜெஸ்ஸிகா, மீரா என்ற இருவரையும் ஆல்பர்ட்டும் துய்மோனும் தங்கள் பாலியல் இன்பத்திற்கு மதுப் போதையூட்டி வல்லுறவு கொள்ளும்போது சிதைந்து சிதறுகிறார்கள். இதுபோன்றே ஆரோவில்லில் நடக்கும் நில அபகரிப்பு முதலிய அநீதிக்குக் குரல் கொடுக்கும் புரட்சிப் பெண்ணான நர்மதாவும் இந்தப் ஆன்மிகப் பொறுக்கிகளால் சீரழிக்கப்பட்டுச் சின்னாபின்னமாகிறாள். இந்த வல்லுறவு அரக்கர்களை மீராவும் ஜெஸ்ஸிகாவும் அசாமின் பிள்ளை பிடிக்காரர்கள் என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாக்கிக் கும்பலால் அடித்துக் கொல்லப்படுமாறு நீதி தேடிக்கொள்வதுதான் கதையின் சாரம். இங்கே ஆரோவில் என்ற உயர்ந்த இலட்சியத்தைச் சிதைக்க புல்லுருவிகள் ஊடுருவியிருப்பதை நுட்பமாக ஆசிரியர் கதைப்படுத்தியிருக்கிறார். ஆன்மீகம் வணிக மயமாவதோடு இப்படிப்பட்ட ஒழுக்கக் கேட்டுக்கும் இடமளிப்பதை கண்முன் நிறுத்துகிறார். அதற்கிடையே இத்தகைய ஆன்மிகச் சோதனை முயற்சிகளுக்குப் பின் புதுக் காலனிய நோக்கங்கள் ஏதாவது ஒளிந்து கொண்டிருக்கிறனவா என்ற கேள்வியையும் மாதவன் போன்ற கதை மாந்தர்கள் வழியாக எழுப்புகிறார் ஆசிரியர்..
இந்தக் கதை உண்மையில் பாலியல் வன்முறையை மையமாக வைத்து எழுந்த கதை அல்ல. ஓர் ஆன்மிகச் சோதனைக்கு வந்த சோதனையைப் பற்றிய உரத்த சிந்தனையின் கதை வடிவம். இங்கே யார் மீதும் சேற்றை வாரிப் பூசும் எண்ணம் தெரியவில்லை. ஆனால் சில உண்மைகள் கசக்கத் தானே செய்யும். காந்தியை அரவிந்தர் சந்திக்கவில்லை என்பதும் அதற்கு யார் காரணம் என்பதும் மண்டையைக் குடைகின்றன. அதுபோல இந்திய விடுதலை நாளை அரவிந்த ஆசிரமம் புதுவை பிரெஞ்சு அரசுக்கு அஞ்சிக் கொண்டாடவில்லையாமே. மாநில மைய அரசுகள், ஐ.நா. போன்ற அமைப்புகளோடு சேர்ந்து ஆரோவில் என்ற உலக ஆன்மீக மையத்தை உருவாக்கச் சுற்று வட்டாரங்களில் இருந்து ஏழை எளிய மக்களின் நிலங்களை அடிமாட்டு விலைக்குப் பிடுங்கிக்கொண்டார்களாமே. அதற்காக அவர்கள் போராடி மடிந்துகொண்டிருந்தார்களாமே. இதெல்லாம் ஆன்மிகப் புளிச்சேப்பக்காரர்களுக்குத் தெரியாதா என்ன? இதை யாரும் இதுவரை சொல்லிக் கேட்டதில்லையே. இந்த நாவலில் நால்வகை ஆசிரமத்திற்கு அப்பால் கிருஹஸ்த சந்நியாசம் என்ற கலப்புவகை ஒன்றைப் பேசுகிறார். வேடிக்கையாக இருந்தது.
இங்கே வரலாற்றுக் காலத்தில் எண்ணிறந்த பிரமதேயங்களை ஏற்படுத்துகிறோம் என்று சொல்லி வேளாண் குடிகளின் நிலத்தைப் பறித்துச் செப்பேடு செய்த நம் மூவேந்த மன்னர்களின் ‘வரலாற்றுப் பெருமைகளை‘ நினைத்துப் பார்க்கலாம். அதில் இப்படிப்பட்ட எண்ணிறந்த பிரமதேயங்களை உருவாக்கிச் செப்பேட்டில் எழுதிக்கொடுத்து அந்த நாட்டில் செம்புக்கே பஞ்சம் வந்துவிட்டதாம். இன்னும் தமிழர் யாரும் படிக்காத அந்தச் செப்பேடுகளின் (தளவாய்புரம் செப்பேடு)வடமொழிப்பகுதியில் சூத்திரர்கள் இந்த நிலங்களை ‘ஆக்கிரமித்துக்கொண்டதாகவும்’ தமிழ்ப்பகுதியில் ‘மறக்கேடு செய்ததாகவும்’ எழுதிவைத்திருக்கிறார்கள். இன்னும் சில இடங்களில் இப்போராட்டங்களில் கொலையும் விழுந்திருக்கிறது [வெ.வேதாசலம், ‘பாண்டிய நாட்டு ஊர்களின் வரலாறு’ (ஊர்பிரம்மதேயம் வணிக நகரம், படைப்பற்று), தனலட்சுமி பதிப்பகம், தஞ்சாவூர், 2019பக்.108-109]. இங்கே முதலில் நிலத்தைப் பறித்தவன் அதாவது இன்றைய ஆட்சிமொழியில் கையகப்படுத்தியவன் அரசன்தான். வேளாண்குடிகள் அதை மீட்டெடுத்திருக்கிறார்கள். ஆனால் வரலாறு தலைகீழாகச் சொல்கிறது. இதுதான் பண்டைத்தமிழர் மன்னர் பாராண்ட பெருமை. இதுதான் இன்றும் நடக்கிறது..
இந்தக் கதையின் இன்னொரு தளம் புதுவையின் அறியப்படாத வரலாறு. இங்குள்ள மக்கள் தங்கள் குடியுரிமையைத் துறந்து பிரெஞ்சுக் குடியுரிமை பெற்று அவர்களுக்காக இந்தோ சீனா போன்ற இடங்களில் குருதி சிந்திய வரலாறு. இந்த வரலாறுகளையும் புதுவையின் விடுதலைக்கு முந்திய இருபதாம் நூற்றாண்டு வரலாற்றின் இருளடைந்த ஏடுகளையும் மாதவன் தாத்தா சதாசிவம் சைகோனிலிருந்தும் அத்தைப்பாட்டி வேதவல்லி புதுவையிலிருந்தும் பரிமாறிக்கொள்ளும் கடிதங்கள் வாயிலாக நம் கண்முன்னே நிறுத்துகிறார். இங்கேயும் சிலப்பதிகாரத்தில் வரும் கோவலன் மாதவி கடிதப் பரிமாற்றம்போல அமைந்து சிலப்பதிகாரத்தை நினைவூட்டுகிறது.
சிலப்பதிகாரத்திற்கும் இந்தப் புதினத்திற்கும் வேறு சில ஒப்புமைகளும் தென்பட்டன. சிலப்பதிகாரத்தில் முற்பிறப்புக் கதை வருவதுபோல முன்தலைமுறைக் கதை வருகிறது. அதில் மீராவைப் பாலியல்துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய ஆல்பர்ட்டும் ஜெஸ்ஸிகாவை அதே செயலுக்கு ஆளாக்கிய துய்மோனும் அதே துன்புறுத்தலை ஒரு தலைமுறைக்குமுன் மீராவின் தாய்க்குச் செய்து அதன் விளைவாகப் பிறந்தவள்தான் மீரா. எனவே மீரா தன் தந்தையர்களைத்தான் பழி தீர்க்கிறாள். நாட்டுப்புறக் கண்ணகி கதை முற்பிறப்பில் கண்ணகியைப் பாண்டியனின் மகள் என்று கூறும். ஏன் கண்ணகியே சிலம்பின் வாழ்த்துக் காதையில் ‘தென்னவன்தீதிலன்; தேவர்கோன்தன் கோயில் நல்விருந்துஆயினான்; நான்அவன்தன்மகள்’ (வாழ்த்துக்காதை) என அவனைத் தந்தையாகவும் கொள்வதைப் பார்க்கிறோம். இங்கே இது ஒத்துப் போகிறது. மனிதனின் ஆழ்மனம் மீண்டும் எழுந்து வருகிறதோ? சிலப்பதிகாரத்தில் கிளைக்கதை போலவும் கடிதம் போலவும் வரும் சதாசிவம், வேதவல்லி கிளைக் கதைகள் இன்னொரு புறம். இறுதியாகச் சிலப்பதிகாரப் பதிகத்தில் வரும் சாத்தனார் போலச் சிலப்பதிகார ஆராய்ச்சியாளர் க. பஞ்சாங்கத்தின் அருமையான முன்னுரை. எல்லாம் கச்சிதமாகப் பொருந்துவது வேடிக்கையாக இருந்தது.
இங்கே வரும் நிகழ்ச்சிகள், பாத்திரங்கள், பின்புலம் எல்லாம் உண்மைதான். ஆனால் அவை கோத்துக் கொண்டு நாடகக் கோவையாக வருவது செயற்கைதான். மேலும் வாழும் அல்லது வாழ்ந்த மனிதர்களுக்கு அரிதாரம் முதலிய ஒப்பனைகள் செய்து அவர்களை நாடகக் கதைமாந்தர்களாக உலவவிடுவது படைப்பாளரின் திறமை. இந்த நாடகமயமாக்கலும் பாத்திரத் தேர்வும் பொருத்தமாகவே வந்திருக்கின்றன. மீரா என்ற கதைசொல்லிக்குள் இருந்த உண்மை மீராவும் மனச்சாட்சியாய் வெளிப்படும் இன்னொரு மீராவும் கதையின் முதல் பகுதியில் வெளிப்பட்டது போலப் பிற்பகுதியில் அதிகம் வெளிப்படவில்லை. வருணனை, உரையாடல் முதலியவை இவர் நல்ல கதைசொல்லி என்று சொல்லும்படியிருக்கின்றன. சில இடங்களில்நடையில்கொஞ்சம் இறுக்கம் தெரிகிறது. ஒருவேளை ஆசிரியரின் பன்மொழிப் புலமையும் அறிவுசார் நடையில் எழுதும் பயிற்சியும் பாத்திரங்களின் பின்னணியும் இதற்குக் காரணமாகலாம். பிரெஞ்சுப் பேச்சு மொழி இடையீடுகளைப் பின்னிணைப்பில் தந்ததற்கு மாறாக வருமிடங்களிலேயே தமிழ் விளக்கத்தை அமைத்திருந்தால் வாசகருக்கு எளிதாக இருக்கும். கதை படிக்கிறவருக்குப் பின்னிணைப்பைப் பார்ப்பதற்கு எங்கே பொறுமை? அங்கே அதற்குரிய பக்க எண்ணையும் கொடுத்திருக்கலாம்.
இந்நாவலை அழகுற வெளியிட்டுள்ள சந்தியா பதிப்பகத்தையும் பாராட்டவேண்டும்.
மின்னஞ்சல்: nachimuthutamizhkina@gmail.com
நன்றி : காலச்சுவடு
September 2, 2023
நிசப்த நடனம் : இருதலைக் கொள்ளி எறும்புகள்
அனைத்து விலங்குகளினும் பார்க்க மனித விலங்குகள் மேம்பட்டவை, காரணம் இவற்றுக்கு புலன்களால் உணரப்பட்டதை பகுத்தாயும் திறனுண்டு, ஆனால் மனிதர் கூட்டத்தின் பிரச்சினையே இங்குதான் ஆரம்பம். நரி, ஓநாய், சிங்கம் புலி,கரடியின் உருவங்கள், நேரடியாக அவ்விலங்குகளின் வலியத் தாக்கும் தன்மையை மான், முயல், ஆடு மாடுகளுக்கு உணர்த்திவிடும், அதன் விளைவாக கொடியவிலங்குகளைக் கண்ட மாத்திரத்தில் ஓடி மறைந்தும், இயலாதபோது அவற்றின் வயிற்றுப்பசிக்கு இரையாகியும் சாதுவான விலங்குகள் தங்கள் கானகச் சமூககத்தின் நியதிக்கு உட்படுகின்றன.
மனிதர் கூட்டம் கற்காலத்தில், ஏனையை விலங்குகளைப்போலவே வயிற்றுப்பசிக்கு வேட்டையாடி வாழ்ந்தது, இவ்வேட்டையில் சகமனிதனையும் தின்று பசியாறியது. மனிதன் இருண்ட கானகவாழ்க்கையில் அலுத்து, தன் துணை தன் மக்கள், தம்முடைய சுற்றமென கூடி வாழ முற்பட்டு, வேட்டையை நம்பியல்ல விவசாயம் செய்தும் பசியாற முடியும் என்றுணர்ந்த மாத்திரத்தில் வெளிகளைத் தேடினான், தொடர்ந்து குடும்பங்களும் சுற்றமும் ‘நான்’, ‘நாம்’ என்ற அடையாளத்தை முன்னிலைப்படுத்தியதன் காரணமாக ஊர், நகரம் தேசமென சேர்ந்து வாழ ஆரம்பித்து, கற்காலத்திலிருந்து மனிதன் வெகுதூரம் விலகி வந்திருந்தான். எனினும் அவனுடைய அடிப்படைப் பண்பிலிலிருந்து விலகினானா ? என்பது கேள்வி, ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே சக விலங்கை சக மனிதனை வேட்டையாடி விளயாடினானே, பிற உயிர்கள் வலியில் துடிக்க கொன்றானே, அவற்றின் உடலைக் கிழித்துப் பசியாறினானே, அக்கொடிய குணம் அவனிடம் இன்றில்லையா?
வேட்டை மனம், அதற்கு அடிமைபட்ட உணர்வுகள் இன்றைக்கும் இருக்கவே செய்கின்றன. இன்றிவன் கற்கால மனிதனில்லை, நிர்வாணமாக திரிந்தவனில்லை, பகுத்தறியத் தெரிந்தவன், காலத்திற்கேற்ப, சூழலுக்கு ஒப்ப, உயிர் வாழ்க்கைக்கு மாற்று வழிமுறைகளை உபாயங்களை, தந்திரங்களைக் கண்டறியக் கூடிய புத்திசாலி. பச்சையாக, கைவினைக்கு உட்படாமல், சமைக்காமல் மென்று விழுங்கிய, தின்று பசியாறிய கற்கால அநாகரீக மனிதனில்லை. இவன் நன்றாக உடுத்தத் தெரிந்தவன், தலைவாரத் தெரிந்தவன், மேடையில் நாகரீகமாகப் பேசத் தெரிந்தவன், அரசியல்வாதி, அதிகாரி, பேராசிரியன், எழுத்தாளன் என்கிற சமூக அடையாளங்கள் இருக்கின்றன. இவன் வேட்டையாடவேண்டிய அவசியமில்லை இவனுக்குப் பதிலாக வேட்டையாடவும், தோலுரிக்கவும், செத்த உடலை உப்பு காரமிட்டு விரும்பினால் தீயிலிடவும் விரும்பாதபோது கூலிகளைக்கொண்டும் தமது விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளமுடியும். இன்றைய பங்காளிச் சண்டை, சாதிச் சண்டை, இனச் சண்டை, எல்லைச் சண்டை, உலகப்போர் என அனைத்துமே வேட்டை மனத்திலிருந்து மனிதன் விலகவில்லை என்பதன் சாட்சியங்களே, பலியாகும் உயிர்களின் வதைகளை, அழுகுரலை இன்றும் வேட்டையாடும் மனித விலங்குகளன்றி வேடிக்கைப் பார்க்கும் மனித விலங்குகளும் பொருட்படுத்துவதில்லை, அதற்கு அவரவர்க்கு ஆயிரத்தெட்டு காரணங்கள் இருக்கின்றன,
உள்ளூர் சண்டையில் ஆரம்பித்து உலகப்போர்வரை நீயும் நானும் ஒன்றல்ல என்கிற பகை உணர்வின் வெடிப்பு. உலகின் ஏதோ ஒரு பகுதியில் ஓர் இனம் மற்றோர் இனத்தை அழிப்பது இருபத்து மூன்றாம் நூற்றாண்டிலும் தொடரவே செய்கிறது. « ஓர் இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால் கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது » இனப்படுகொலை. இந்த சொல் அண்மையில் (1943) ஞான ஸ்னானம் பெற்றது என்கிறபோதும், மனித குலம் தோன்றியதிலிருந்தே ஊர்ச்சண்டையில் ஆரம்பித்து உலகச்சண்டைவரை இனப்பகையை மையமாகக் கொண்டவை. அமெரிக்கா, ஆப்ரிக்கா ஐரோப்பா என எந்தக் கண்டமும் மானுடத்தை அவ்வப்போது தாக்குகிற இனப்படுகொலை என்கிற இப்பேரிடருக்கு தப்பியதில்லை.
‘நிசப்த நடனம். பிரதீபன் ரவீந்திரன் என்பவர் எழுதி இயக்கியுள்ள தமிழ்த் திரைப்படம், ஓர் ஆவணப்படம், கலைப்படம். 1983ல் தொடங்கி 2009 நீடித்த, சிங்களப் பெரும்ம்பான்மை தமிழின சிறுபானமையை சீரழித்த, கொன்று குவித்த, திக்குதிசையின்றி பின்னவர்களை தேசாந்திரிகளாக அலையவிட்ட ஓர் அவலச் சரித்திரத்திரத்தை திரைப்படக் கலை என்கிற தூரிகைக்கொண்டு காலத்தால் அழியாதச் சித்திரமாக இந்த ஈழத்துக் கலைஞர் உருவாக்கியிருக்கிறார். இப்படைப்பில் எழுத்து, இயக்கம், நடிப்பு இது தவிர திரைபட ஆக்கத்தின் பிறபணிகளுக்கும் தம்மை முழுமையாக அர்ப்பணித்து கொண்டிருக்கிறார்.
புலம்பெயர்ந்த வாழ்க்கைக்கு சபிக்கபட்டவர்கள் இருவகை. அகதியாக வந்த நாட்டிலும் பிறந்த மண்ணையும் உறவையும் அவர்களுடன் தொலைபேசியிலும், கடிதங்களிலும் நினைத்தது போக, « தேடிச் சோறுநிதந் தின்று — பல சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம் வாடித் துன்பமிக உழன்று — பிறர் வாடப் பலசெயல்கள் செய்து — நரை கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங் கூற்றுக் கிரையாகிபோனபின், புலம்பெயர்ந்த நாட்டிலும் தோற்றம் — மறைவு என விளம்பர சுவரொட்டிகளுடன் வேடிக்கை மனிதராக முடிகிறவர்கள் முதல்வகை. இரண்டாம்வகையினர் நிசப்த நடனம் கதை நாயகன் சிவா போன்றவர்கள், அவர்கள் இருதலைக்கொள்ளி எறும்புகள், உயிரை சொந்தமண்ணிலும், உடலை வந்தமண்ணிலுமாக நிறுத்தி அவதிப்படுகிறவர்கள் : உறக்கம், விழிப்பு, பணி நேரம் ஓய்வு, நடக்கும் போது, மெட்ரோ, பேருந்து என பயணிக்கும்போது, கிட்டத் தட்ட அல்லும் பகலும் ஊர், உறவு, தோட்டம் துரவு, சொந்தம் பந்தம்என்கிற நீங்காத நினவுகளின் இணைகோடுகளாக நீளும் யுத்தம், படுகளம், அதன் கொடூரம், அனாதைகளாக்கபட்ட மனிதர் வாழ்க்கை என்கிற ஆழ்கடல் நினைவுகளில் தத்தளிக்கிறான்.
இலங்கை உள்நாட்டுப்போரில் 2009மறக்கமுடியாத வருடம், ஆயுதம் ஏந்திய தமிழர்களை மட்டுமல்ல பல ஆயிரம் அப்பாவி தமிழர்களையும் பலிவாங்கிய யுத்தத்தின் இறுதி அத்தியாயம் எழுதப்பட்ட ஆண்டு. தனிமனித தாக்குதல்களுக்கு சட்டமுண்டு, விசாரணையுண்டு, சாட்சியங்கள் உண்மையெனில் தண்டனையுண்டு, இங்கே தாக்குதலை நடத்டதியது, கொலைகாரர்களாக மாறியது அரசியல் சாசனப்படி அதிகாரம் பெற்ற அரசாங்கம். தமிழர்கள் அனைவரையுமே அவர்கள் விடுதலைப் புலிகளாக பார்த்தார்கள், தமிழினத்தை அழிப்பதற்கு, அவர்கள் கோரிக்கைகளை நீர்த்துப்போகச்செய்ய, ஒட்டுமொத்த தமிழினத்தைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தித் தண்டிக்க இப்பார்வை அவர்களுக்கு சௌகரியத்தை அளித்தது.
நிசப்த நடனத்தின் கதைக்களத்தின் காலம் இதற்கு முந்தைய பத்தியில் கூறியதுபோல 2009. புலம்பெயர்ந்த ஐரோப்பிய மண்ணில் தமிழ் ஈழப் பதாகைகளை ஏந்தி, தங்கள் படும்பாட்டை உலகமக்கள் புரிந்துகொள்ளவேண்டி தமிழர்கள் பங்கேற்கும் ஊர்வலங்களுடன் படம் தொடங்குகிறது. சிவா என்ற இளைஞனின் புலம் பெயர்ந்த வாழ்க்கை பற்றிய கதையென்பதால் பிரான்சு – இலங்கையென காட்சிகள் மாறி மாறி வருகின்றன.
சிவா, ஈழத் தமிழ் இளைஞன், ஐரோப்பாவிற்கு உள்நாட்டுப் பிரச்சினையிலிருந்து தப்பிக்க, வருகிறான், தனக்காக மட்டுமல்ல போரினால் வதைபடும் தன்பெற்றோரைக் காப்பாற்றும் பொறுப்பும் அவனைத் துரத்த அங்கே இங்கே என்று அலைந்து பிரான்சு நாட்டில் அடைக்கலம். பிரான்சு விருப்பத் தேர்வு அல்ல, அவனுடைய விதியின் தேர்வு. தொடக்க காட்சியில் சிவா ஒரு மொழிபெயர்ப்பாளர் உதவியுடன், ஒரு பிரெஞ்சு அதிகாரியுடன் தனது அகதி விண்ணப்ப நிலைப்பாடு குறித்து பேசுவதாக காட்சி. அதிகாரி, இலங்கை அரசாங்கத்தால் சிவாவுக்குப் பிரச்சினைகள் இருக்கின்றன, என்பதை உரிய சான்றுகளுடன் நிரூபித்தாலொழிய அகதி அந்தஸ்து கிடைக்காதென தெரிவிக்கிறார். உடன் வந்த மொழிபெயர்ப்பாளர் நீ கவலைப்படாதே எனக்குத் தெரிந்த சடடத் தரணியிருக்கிறார், அவரை வைத்து பிரச்சினையை முடித்து விடலாம், இதற்கான சில கதைகள் என்னிடம் இருக்கின்றன, எனத் தெரிவித்து அவரே சிலகுறிப்புகளை தருகிறார். சிவா நடந்த உண்மைகளைத்தானே தெரிவிக்கமுடியும் எனக்கேட்க, இங்கே அகதிக்கு விண்ணப்பிக்கிறவர்கள் அனைவரும் செய்வதுதான், அதுபற்றிய கவலைகள் உனக்கெதற்கு, எனக்கு நீ 850யூரோ கொடு, அனைத்தையும் நான் பார்த்துகொள்கிறேன் என்கிறார். தொடரும் காட்சியில் இலங்கை, சிற்பான்மையின்ரான தமிழர் பகுதி, சிறு வீடு வெள்ளந்தியாக மூன்று சிறுவர்கள், யுத்தநிழலில் வாழ்கிறோம் என்பதைக்கூட அறியாத விளையாட்டுப்பருவம். மீன் தொட்டி, அதிலுள்ள மீன்கள் குறித்தும் அம்மீன்கள் வாயால் குஞ்சுபொறிக்குமென வியப்புடன் வார்த்தைகளை உச்சரிக்கும் நேர்த்தியில் நமது பார்வை அவர்களுடைய அப்பாவித்தனமான முகங்களில் தேங்கி நிற்க, மறுகணம் நம் நெஞ்சத்தை உலுக்குகின்ற வகையில் குண்டடிப்பட்டு சிறுவன் சாகிறான். தொடர்ந்து பாரீஸில் கணிணியில் சிவா,யுத்தகளங்களை தேடிக்கொண்டிருக்க, திரையில் கிளிநொச்சி, முல்லைத் தீவு இராணுவத் தக்குதல்களுக்குப் பலியாகும் மக்கள், இடிபாடுகள், அழுகுரல்கள் சொந்தநாட்டிலேயே அகதிகளாக வாழவேண்டிய நெருக்கடி. இது தவிர சிவாவை தனிமனிதனாக மன உளைச்சலில் தவிக்கும் நோயாளிபோல காட்டும் இடங்களிலெல்லாம் ஜெயிப்பது கேமராவா, சிவாவா என முடிவெடுப்பது கடினம். அகதியாக வாழ்கிற மண்ணில் தன்வாழ்க்கைக் கண்டு நிறைவுறாமல், தாயுடன் கைத்தொலைபேசியில் சிவா உரையாடுவதுபோன்ற காட்சிகள் இயல்பாக படமாக்கப்பட்டிருக்கின்றன. « கதியா காசு அனுப்புகிறேன் » என பல காத தூரத்தில் இருக்கிற தாய்க்கு மகன் தரும் உத்தரவாதமும் ; ஊரில் நாட்டைவிட்டு வெளியேறவிருக்கும் நண்பனுடன் வாதிடும் புலிப்படையைச் சேர்ந்த நண்பன் ‘துவக்கு’(துப்பாக்கி) விஷயத்தில் கொண்டிருக்கும் நம்பிக்கையை விவரிக்கும் வசனங்களும், நடத்தும் வாதமும் ; பாரீசில் சிவா வேலை செய்யும் உணவு விடுதியில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு நிலைப்பாடுகொண்ட நண்பரும், அவர்களால் என்ன பலன் கண்டோம் என வாதிடும் நண்பரும் ஒரு கட்டத்தில் உரத்து விவாதிக்க, அதற்கு எதிரிவினையாக சிவா சன்னற் கதவை பைத்தியக்காரன் போல கைகளால் திரும்பத் திரும்பத் தாக்குவது, அனைத்துமே படம் முடிந்தபின்னரும் நம்மை தொடர்ந்து வருகின்றன.
திரைபடமே சிவாவுடையது, சிவாவின் கடந்தகாலம் நிகழ்காலம் ; சொந்த மண் அந்நிய மண் ; இந்த இரண்டும் கெட்டான் வாழ்க்கை தந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் குறிப்பாக அப்பாத்திரம் தனிமைக்கு ஆட்படும்போதெல்லாம் ஒரு வித பதற்றத்திற்கு பலியாவது ஒரு தேர்ந்த கலைஞனாக பிரதீபன் இரவீந்திரனை நமக்கு அடையாளப்படுத்துகிறது. திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் காய்ந்து தீயில் கறுகி வீழ்ந்து கிடக்கும் பனைகள், பசுமாட்டின் அழுகுரல், கூடாரக் குடிமக்களாக விதிக்கபட்ட மனிதர் வாழ்க்கை, தாயின் கேவல், பசியில் ஓலமிடும் பச்சிளம் குழந்தை, குழந்தையை தோளில் சுமந்துகொண்டு நீரில் இறங்கும் சிவா போன்ற காட்சிகளைச் சகித்துக்கொள்ள கனத்த இதயம் வேண்டும். போதாதற்கு காற்றும் உரத்து ஒலித்திட ஓர் அசாதாரண நிசப்தம், படம்பார்க்கிற எந்த மனமும் சிவா படும்பாட்டிற்கு, அல்லது சிவாவின் இருப்பிற்கு தன்னைத் தாரைவார்க்கும் எனபது உண்மை. பிரதீபன் இரவீந்திரன் ஒரு மகா கலைஞன். உலக அளவில் விரைவில் அங்கீகரிக்கப்படுவார் என்பதென் பரிபூரண நம்பிக்கை.
நன்றி : அம்ருதா செப்டம்பர் 2023
—————————————————————————-
August 20, 2023
யாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 3
என்ன இருந்தாலும் அந்தக்காலம் போல வருமா? என மூச்சுக்கு முன்னூறு தரம் சொல்கிற பெருசுகளை திருப்தி பண்ணனுங்கிறதுக்காகவே நடந்திருக்கணும். நாள் 24-4-2008, சம்பவம் நடந்த இடம் பிரான்சு நாட்டின் மேற்கிலுள்ள உலகப் புகழ்பெற்ற மர்செய் துறைமுகப்பட்டினம். 1930லிருந்து -1960 வரை அமெரிக்காவின் நிழல் உலகத்தை ஆட்டிப்படைத்ததில் மர்செய் விருமாண்டிகளுக்குப் பெரும்பங்குண்டு. சிரியா, துருக்கி, இந்தோ- சீனவிலிருந்து மார்·ஃபினை இறக்குமதிசெய்து அதை ஹெரோயினாக புடம்போட்டு அமெரிக்காவுக்கு அனுப்பிவைத்து தாதாக்களுக்கெல்லாம் இலக்கணம் கற்பித்த போல்கர்போன்(Paul Carbon) விட்ட அம்பில் அமெரிக்கா தூக்கமின்றி தவித்ததும் அப்போதைய அமெரிக்க அதிபர் நிக்ஸன் கேட்டுக்கொண்டதற்கிணங்க பிரான்சு தீவிர நடவடிக்கையெடுத்து தாதாக்களை களையெடுத்ததும் வரலாறு. எழுபதுகளில் வெளிவந்து சக்கைபோடுபோட்ட பிரெஞ்சு கனெக்ஷன் திரைப்படத்தை எப்போதாவது பார்க்கநேர்ந்தவர்களுக்கு (மர்செய்) ஸ்தல மகிமை புரியும். அப்பியாச வித்தைக்கு அழிவில்லை என்பது மாதிரி, ஸ்தல பெருமையைக் காப்பாற்ற அப்போதைக்கப்போது ஏதாவது நடக்கத்தான் செய்கிறது.
இந்தியச் செய்தித்தாள்கள் இப்போதெல்லாம் தங்கள் நிருபர்களைச் செய்தி சேகரிக்கவென்று எங்கும் அனுப்பவேண்டாம் என்று நினைக்கிறேன்: சாலைவிபத்து, பா.மா.கா எதிர்ப்பு, வைகோ அறிக்கை, தே.தி.மு.க. கேள்வி, அ.தி.மு.க. ர்பாட்டம், மார்க்ஸிஸ்டுகள் போராட்டம், முதல்வர் கையெழுத்தென்று தலைப்புகளில் அவ்வப்போது சில சொற்களையும், தேதிகளையும் மாற்றிக்கொண்டால் போதும் நாளிதழ் ரெடி.
இதற்கு முந்தைய வியாழக்கிழமை அதாவது 24-04-08 அன்று தமிழ் தினசரியொன்றில் மேற்கண்ட வழக்கமான புலம்பல்களுக்கிடையே தசாதாவரம் கேசட் வெளியீட்டுக்கு ஜாக்கிசான் வருகை என்றொரு சுவாரஸ்யமான செய்தி. நிருபர்களிடம் அமிதாபச்சனா யார்? சென்னை தண்ணீரா? வேண்டாம், என்று அவர் திருவாய் மலர்ந்ததாகத் தகவல். அடுத்த மாதம் ஹாங்காங்கில் கொஞ்சம் மாற்றிக் கேட்டா¡ல், கமலஹாஸனா யார்? தமிழ் சினிமாண்ணு ஒன்றிருக்கா? என்று அவர் மறுபடியும் ஆச்சரியப்படக்கூடும். தேவையா? திரைப்படப் பாடல் வெள்¢யீட்டிலெல்லாம் ஒரு முதலமைச்சர் கலந்துகொள்ளும் அதிசயம் உலகில் வேறெங்காவது நடப்பது சாத்தியமா என்பது இருக்கட்டும், அண்டை மாநிலமான கேரளாவில் சத்தியமாக நடக்காது. ஆனால் பிரான்சில் மர்செய் புறநகரில் கடந்த 24-04-08 நடந்ததாகப் படித்த சம்பவம் அதைவிடக் கொஞ்சம் சுவாரஸ்யமானது:
இரவு எட்டுமணி. விட்டகுறை தொட்டகுறைண்ணு குளிர்காலம் விடாமல் துரத்திக்கொண்டிருக்கும் ஏப்ரல் மாதம், எழுநூறு மீட்டர் நீளமுள்ள கூட்ஸ் இரயிலில் வழக்கம்போல தனியொரு ஆளாக எஞ்சின் டிரைவர், கைகளை அதன்போக்கிலே அலையவிட்டபடி அமர்ந்திருந்தார். பாதையில் பிரச்சினையில்லை என்பதன் அடையாளமாக சமிக்ஞை விளக்குகள் பச்சை வண்ணத்தில் கண் சிமிட்டுகின்றன. புறப்படுவதற்கு முன்னால் அலுவலகத்திற்குச் சென்று தேவையான தகவல்களை ( விதிமுறைகளில் உள்ள புதிய மாற்றம், கடைசி நிமிடத்தில் பாதையில் ஏதேனும் மாற்றமிருந்தால் அதைப்பற்றிய தகவல்கள், ஓட்டவிருக்கும் இரயில் எஞ்சின் குறித்த தகவல்கள், டேஷ்போர்டு பற்றிய கையேடு) ஒரு முறை புரட்டிவிட்டு, கையில் எடுத்துக்கொண்டுதான் புறப்பட்டிருந்தார். இன்னும் முப்பது கி.மீ தூரம் ஓடினால் வேலை முடிந்தது, வழக்கம்போல அலுவலகத்தில் கையிலிருப்பதை ஒப்படைத்துத்துவிட்டு, ஸ்டேஷனின் காத்திருக்கும் சமீபத்திய காதலியை ஆரத்தழுவி அவசரமாய் ஒர் இருபது சதவீத காதலை வெளிப்படுத்திவிட்டு மற்றதை உறங்காமலிருந்தால் பின்னிரவுக்கு வைத்துக்கொள்ளலாம் என்று திட்டம். இரண்டு வாரமா எதிர்பாத்துக்கொண்டிருக்கேன், என்னை மறந்திடாதய்யாண்ணு, சின்னவீடு கைப்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பியிருத்த சந்தோஷம் மனசிலும் உடம்பிலும் எக்குத்தப்பா என்னென்னவோ பண்ணுது. வண்டியின் வேகம் நிதானத்திற்கு வந்திருந்தது. தூரத்தில் நிலவொளியில் தண்டவாளத்தில் நிழலாய் ஏதோ கிடக்கிறது, மனப்பிராந்தியோ என்று ஒதுக்கினார், ஆனால் நெருங்க நெருங்க பொதியாய்க் கிடந்த நிழலுக்கு, வடிவம் கிடைத்திருந்தது. மரக்கட்டைகளும், உலோகங்களும், தண்டவாளத்தின் குறுக்கே கிடக்கின்றன. மூளை விடுத்த எச்சரிக்கையை, கைகள் புரிந்துகொண்டு எஞ்சினை நிறுத்த ஒரு சில வினாடிகள் பிடித்தன. எஞ்சினை விட்டு இறங்கிய ஓட்டுனர் அதே அவசரத்துடன் எஞ்சினுக்குள் ஏறி கதவை அடைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. காரணம் தண்டவாளத்துக்கருகே காத்திருந்த கொள்ளையர் கும்பல். ஷோலே காலத்து கொள்ளையர்பாணி. தகவலைச் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிவித்துவிட்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு(?) காத்திருந்தார். வந்த கும்பல் மளமளவென்று காரியத்தில் இறங்கியது. முதலாவது கண்டெய்னரின் பூட்டை உடைத்தார்கள், கதவைத் திறந்தார்கள் ஒன்றுமில்லை; இரண்டாவதின் பூட்டை உடைத்தார்கள், கதவைத் திறந்தார்கள் ஒன்றுமில்லை; மூன்றாவதின் பூட்டை உடைத்தார்கள், கதவைத் திறந்தார்கள், ஒன்றுமில்லை; நான்காவது; ஐந்தாவது…ம்; இதென்னடா சோதனைண்ணு இஷ்டப்பட்டத் தெய்வங்களை வேண்டிக்கொண்டு ஆறாவது கண்ட்டெய்னரின் பூட்டை உடைத்து கதவைத் திறந்ததில் அவர்களுக்குக் கிடைத்த தகவல்படி இருக்கவேண்டிய எலெக்ற்றானிக் பொருட்கள் இல்லையாம், இரவு நேரத்தில் கடவுள்மார்களின் நித்திரையைக் கலைத்ததின் பலனோ என்னவோ, இங்கே பரியை நரியாக்கிய கதையாக எலெக்ற்ரானிக் பொருட்களுக்குப் பதிலாக அத்தனையும் தலையணை உறைகள்-ஏமாற்றம். தகவல் கிடைத்து போலீஸ¤ம் வந்துவிட, காரில் ஏறி கொள்ளையர் கூட்டம் பறந்திருக்கிறது. நம்ம கூட்ஸ் டிரைவர் ஒரு மணி நேரம் கழித்து வண்டியை எடுத்துபோய் நிறுத்தவேண்டிய இடத்தில் நிறுத்தி, மற்ற அலுவல்கலையும் முடித்துவிட்டு காதலியைத் தேடி அலுத்துபோனது குறித்து வேண்டுமானால் ஒரு கதையாக்கலாம். னால் கொள்ளையர்கள் எதிர்பார்த்த கூட்ஸ்வண்டி அடுத்த அரைமணி நேரத்தில் எலெக்ற்றானிக் பொருள்களுடன் அவர்கள் காத்திருந்த பாதையிலேயே போயிருக்கிறது.
உலகமெங்கும் விலையேற்றம் இன்றைக்கு விபரீத பரப்பில் கால் வைத்திருக்கிறது. நடுத்தரவரக்கம் ஏழைகளாகவும், ஏழைகள் தரித்திரர்களாகவும் உருமாற்றம் பெறுவதற்கு உலகமயமாக்கம் தன்னாலான கைங்கர்யதைச் செய்துவருகிறது. மேற்கண்ட மர்செய் கொள்ளை முயற்சியைப் படித்தபோது உலகமயமாக்கலை நினைத்துக்கொண்டேன், அதுகூட அப்படித்தான். இப்படி எதையோ எதிர்பார்த்து கொள்ளை அடிக்கவந்தவர்கள் ஏதேதோ கதவுகளைத் திறந்துப்பார்த்து ஒன்றும் கிடைக்காமல் ஏமாந்து நிற்கிறார்கள், சரி ஆறாவது கதவு? கடைசியில் சொல்கிறேன். முதன் முதலில் உலகமயமாக்கல் என்ற சொல்லை உருவாக்கியவர்களின் மனதில் வேறு கனவுகள் இருந்தபோதிலும் உலகில் ஒரு மூ¨லையில் இருக்கிற மனிதனின் அறிவும், செயல்பாடுகளும், மறுகோடியில் இருக்கிற மனிதனின் தேவைகளுக்குப் பரஸ்பரம் உதவிக்கொள்ளக்கூடுமென்று உத்தரவாதம் அளித்தனர். அதன் இயங்கு துறைகளென்று அரசியல், பொருளாதாரம், கலை பண்பாடென்று சித்தரிக்கப்பட்டது. உண்மையில் உலகமயமாக்கல் மூலம் தாங்கள் சிம்மாசனத்தில் அமரலாம் என்று மனப்பால்குடித்த மேற்கத்தியர்களும், அமெரிக்கர்களும் கன்னத்தில் கைவத்துக்கொண்டு சோர்ந்திருக்கின்றனர். இதில் இலாபம் பெற்றது சீனா. உலகமயமாக்கல் மூலம் உலகச்சந்தையை வளைத்துபோடலாம் என்று கனவுகண்ட மேற்கத்திய மற்றும் அமெரிக்க பணமுதலைகள், கம்யூனிஸ போர்வையில் சீனாவென்ற ஒற்றை முதலாளித்துவம் விஸ்வரூபமெடுக்குமென்று எதிர்பார்க்கவில்லை. இந்தியாவைப் போலவே சீனாவின் உற்பத்திக்கூலி அதாவது அதிற் பங்கேற்கும் மனித சக்திக்கான ஊதியம் உலக அளவில் மிகக்குறைவானது. இந்தியாவில் ஏரியில் தூர் வாரவேண்டும் என்றால் கூட அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் நடத்தும் மக்களைப் பார்க்கிறோம். ஆனால் கிட்டத்தட்ட 1.3 மில்லியன் மக்களை வெளியேற்றவேண்டிய கட்டாயத்தில் உருவாகும் சீன நாட்டின் Three Gorges அணைக்கு எதிராக ஒரு காக்கை குருவி கூட அங்கே எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அதற்குப் பேருதான் கம்யூனிஸ சுதந்திரம். சீனாவில் அரசாங்கம் தீர்மானித்ததுதான் ஊதியம், கொடுப்பதுதான் கூலி, தவிர எல்லா கம்யூனிஸ்டு நாடுகளையும் போலவே வளர்ந்து வரும் நாட்டின் சுபிட்சங்களை அனுபவிக்கிறவர்கள் ஏழை சீனர்கள் அல்லர், கட்சித் தலைமையின் உறவினர்கள். சீன அரசாங்கத்திடம் பொதுவுடமை பேரால் குவிந்திருந்த தேசியச் சொத்துக்களை, முதலாளித்துவ கட்டமைப்புக்கு எழுதிகொடுத்தபோது சீன அரசே ஒரு இராட்சத முதலாளியாக அவதாரமெடுத்தது. தவிர பசுத்தோல் போர்த்திய புலியின் இப்புதிய அவதாரம், இதுவரை அரசின் பொறுப்பில் வைத்திருந்த மக்களுக்கான நலத்திட்டங்களைச் சுலபமாக அலட்சியப்படுத்த முடித்தது, தவிர மக்களின் வாழ்வாதாரத்திற்குச் செலவிட்ட தொகையும் மிச்சமானதால் பெரும் மூலதனங்களைக் குவித்துக்கொண்டு, புது பெருச்சாளி பழைய பெருச்சாளியை மிரட்டுகிறது. இன்றைக்கு உலக அளவில் அந்நிய முதலீட்டில் முதலாவது நாடாக சீனா இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
G7 நாடுகள் மூலதனங்களை ஆற்றில் போடலாமா? கடலில் கொட்டலாமா? என அலைந்துகொண்டிருக்க, நவீன தொழில் நுட்பம் சார்ந்த உலகச் சந்தையின் விலையையும், மேற்கத்திய மற்றும் அமெரிக்க தொழிற்சாலைகளின் தலைவிதிகளையும் தீர்மானிப்பவையாக இன்றைக்கு சிய நாடுகள், அதிலும் புற்றீசல்போல உலகச்சந்தையை மொய்க்கும் டூப்ளிகேட் சீனப்பொருட்களோடு விலையில் போட்டியிட இயலாமல் மேற்கத்திய தொழில்கள் முடங்கிவருகின்றன. மக்களின் வாங்கும் சக்தி குறைந்திருக்கிறது. விலைவாசி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 30லிருந்து 40 சதவீதம் கூடியிருக்கிறது. உணவுப்பொருட்களை யாசகமாகப் பெற தொண்டு நிறுனங்களில் வாசலில் காத்துக்கிடக்கும் மக்களின் எண்ணிக்கை சமீபகாலங்களில் மேற்கத்திய நாடுகளில் அதிகரித்து வருகிறது.
சரி.. அமெரிக்க மற்றும் மேற்கத்திய முதலாளித்துவ கொள்ளையர் திறந்த றாவது கதவைப்பற்றி சொல்லலையே. அது வேறொன்றுமில்லை, குறைந்த ஊதியத்தில் இந்தியா மற்றும் சீனா உடபட உலக நாடுகளில் கிடைக்கும் மனித சக்திகளால் ஓரளவு இலாபம் பார்ப்பது.ஆனாலும்…ம். உலகமயமாக்கல் சொப்பனத்திற் கண்ட அரிசி சோற்றுக்காகாதென்றுதான் நினைக்கிறேன். ——————————————————————————————————————————
நன்றி: யுகமாயினி
August 16, 2023
யாம் மெய்யாய்க் கண்டவற்றுள் -2 (2008)
Liberte? -Oui, Egalite? – Oui, Fraternite?…….
செவ்வியொன்றிற்கு எமெ செசேர் அளித்தப் பதிலைத்தான் மேலே குறிப்பிட்டிருக்கிறேன். பிரான்சு நாட்டில் சுதந்திரமும் சமத்துவமும் இருக்கிறதென்றாவது ஓரளவு திருப்திபட்டுக்கொள்ளலாம் ( அவர் Oui- ஆம்- என்று சொல்லியிருந்தாலும் அதனை உச்சரித்தவிதமும், பார்வையில் தெறித்த எரிச்சலும் வேறாக இருந்தது) ஆனால் சகோதரத்துவம் என்ற சொல்லுக்கான பொருள் இங்கே கேள்விக்குறியாக இருக்கிறது என்பதுதான் அவர் சொல்ல வந்ததற்கான பொருள். எமெ செசேர் சமகால பிரெஞ்சு கவிஞர்களில் மிகமுக்கியமானவர், மிகை யதார்த்தவாதி, கவிஞர் ஆந்த்ரே பிரெத்தோனுக்கு நெருங்கிய நண்பர். Negritude என்ற சொல்லைப் படைத்தவர். உலகெங்குமுள்ள கறுப்பினமக்களின் ஏகோபித்த சுதந்திரமூச்சு. கடந்த ஏப்ரல் மாதம் 17ந்தேதி பிரான்சு நாட்டிற்குச் சொந்தமான கடல்கடந்த பிரதேசங்களில் ஒன்றான மர்த்தினிக் பிரதேசத்தில் -அவர் பிறந்த இடத்தில் உயிர் பிரிந்தபோது, பிரான்சு நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் அமைச்சர்கள், எதிர்கட்சி பிரமுகர்கள், படைப்பாளிகள், பிறதுறை சாரந்த விற்பன்னர்கள்ளென பலரும் கண்ணீர் சிந்தினர், நாடுமுழுக்க துக்கம் அனுசரிக்கப்பட்டது. வழக்கம்போல சிந்திய கண்ணீரில் முதலைகளுக்கும்(எங்குதானில்லை) பங்குண்டு- யார் மனிதர் எவை முதலையென்பது பரம்பொருள் அறிந்த ரகசியம் – ஆமென்.
நாகரீகத்திலும் பண்பாட்டிலும் வளர்ந்திருப்பதாக மனித இனம் மார்தட்டிக்கொள்ளும் இந்த நூற்றாண்டிலும், ஆதிக்கமும், அதிகாரமும்- திக்கற்ற பல மனித சமூகங்களின் மண்ணோடும், உணர்வோடும் இசைந்த வாழ்வியல் நெறிகளை, விழுமியங்களை ஓசையிடாமல் அழித்துவருகின்றன என்பது உலகமறிந்த உண்மை. அவை காப்பாற்றப்படவேண்டுமெனக் குரல் எழுப்புகிறவர்களும் இல்லாமலில்லை. கவிஞர் எமெ செசேர், ஒடுக்கப்பட்டவரினம், தம் மரபுகள் குறித்ததான மதிப்பீட்டில் நியாயமான அணுகுமுறையை வற்புறுத்தியவர். ஆக அவரது கவிதை, மற்றும் அரசியல் பங்களிப்பென்பது அவர் பிறந்த மண் சார்ந்தது, அதன் பண்பாட்டு உணர்வுகளால் வடிவமைக்கப்பட்டது. ‘நான் ஒரு கறுப்பன், கறுப்பன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்கிறேன்’, என்றவர்.
“எனது நீக்ரோகுணம் ஒரு பாறையோ அல்லது பகற்பொழுதின் கூக்குரலைக் காதில் வாங்காதவொரு ஜடமோஅல்ல எனது நீக்ரோகுணம் குருட்டு பூமியில் விழுகிற அமில மழையுமல்ல எனது நீக்ரோ குணம் உயர்ந்த கோபுரமுமல்ல பெரிய தேவாலயமுமல்ல அது பூமியின் செங்குருதியிற் தோயும் அது வானில் கஞ்சாப்புகையில் மூழ்கும் பொறுமையினாலுற்ற பொல்லாங்குகளை இனங் கண்டிடும்…” (Le cahier d’un retour au pays natal) எனத் தொடரும் இக்கவிதை அவரது மிக முக்கியமான படைப்புகளிலொன்று.
எமெ செசேரைக் கூடுதலாகத் தெரிந்துகொள்ள அவர் பிறந்த மர்த்தினீக் பிரதேசத்தினைப் புரிந்துகொள்ளவேண்டும். மர்த்தினீக் பிரான்சு நாட்டிற்குச் சொந்தமான நான்கு கடல்கடந்த பிரதேசங்களில் ஒன்று, இதர பிரதேசங்கள்: குவாதுலூப், பிரெஞ்சு கயானா, ரெயூனியோன். இவற்றை நேற்றுவரை DOM-TOM(1) என்று அழைத்து வந்தவர்கள் சமீபகாலமாக DOM-ROM (2)ou DROM என்றழைக்கிறார்கள். பெயரிலும், அரசியல் சட்டத்திலும் கொண்டுவந்த மாற்றங்கள், அம்மண்ணின் பூர்விகக் குடிகளின் வாழ்க்கையில் ஒளியேற்றியதா என்றால் இல்லை. இங்கே வருடமுழுக்க சூரியனுண்டு மக்களின் வாழ்க்கையில்தான் சூரியனில்லை. மேற்குறிப்பிட்ட நான்கு பிரதேசங்களும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின்கீழ் காலனிகளாக இருந்தவை, பிற காலனி நாடுகள் விடுதலை அடைந்தபோதும், கறுப்பின மக்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட இப்பிரதேசங்களை விடுவிக்காமல் பிரான்சு அரசு சொந்தமாக்கிக்கொண்டதற்கு முக்கிய காரணம் பூளோக ரீதியிலான அவற்றின் அமைப்பு. பிரதான பிரதேசத்திற்கு(Metropole)(3) அரசியல், பொருளாதாரம், ராணுவம் என பல முனைகளிலும் இலாபத்தை ஈட்டித் தருகிறது. குறிப்பாக அட்லாண்டிக், பசிபிக், இந்தியபெருங்கடலென்று சிதறிக்கிடக்கிற பல்லாயிரக்கணக்கான மைல்களைக்கொண்ட கடற்கரைப் பிரதேசங்களைப் பயன்படுத்திக்கொண்டு அணு ஆயுத சோதனைகள் நடத்தவும், வலிமை மிக்க கடற்படையை அமைத்துக்கொள்ளவும், உலக நாடுகளின் அரசியலை அருகிலிருந்து மோப்பம் பிடிக்கவும் முடிகிறது.
பொருளாதார இலாபங்களும் கொஞ்ச நஞ்சமல்ல. உலகில் சுற்றுலாத் துறையை மட்டும் நம்பி ஜீவிக்கிற நாடுகள் பல. அவற்றிற்குப் போட்டியாக இருக்கும் இப்பிரதேசங்கள்(DROM), பிரான்சு நாட்டுக்கு கொடுப்பது அதிகம், கொள்வது குறைவு. உலகமெங்கும் சுதந்திரம் சுதந்திரம் என்ற குரல் கேட்கிறதே, இங்கே என்னவாயிற்று என்ற சந்தேகம் எழலாம், “வெள்ளைக்காரனே தேவலாம்”, என்று சொல்ல இந்தியாவிற் கேட்கிறேன். அப்படியான மன நிலையிற்தான் இவர்களைப் பிரெஞ்சு அரசாங்கம் வைத்திருக்கிறது. நிறைய பிரெஞ்சுக்காரர்களை அதாவது வெள்ளைத்தோல் மனிதர்கள் இப்பிரதேசங்களில் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்- பெரும் முதலாளிகள் இவர்கள்தான், ஓய்வு நேரங்களில் அவர்கள் அரசியலும் பார்க்கிறார்கள், உள்ளூர் மக்கள் அவர்களுக்குத் தொண்டர்களாக இருக்கிறார்கள். ஒன்றிரண்டு உள்ளூர் தலைவர்களும் உண்டு. தீமிதிக்கிற காவடி எடுக்கிற இந்திய வம்சாவளியினரையும் சேர்த்து பல்வேறு இனத்தவர்கள் கலந்து வாழ்கிறார்கள், உணர்வால், பண்பாட்டால் வேறுபட்ட மக்களை மேய்க்கச் சுலபமாக முடிகிறது. உதாரணமாக பிரெஞ்சுக் கயானாவில் தென் அமெரிக்காவிலுள்ள அத்தனை இனத்தவர்களும் இருக்கிறார்கள், ரெயூனியனை எடுத்துக்கொண்டால் ஆப்ரிக்கர்கள், வெள்ளையர்கள், சீனர்கள், வட இந்தியர்கள், தமிழர்கள், இந்திய முஸ்லீம்கள்- பிறபகுதிகளிலும் அதுதான் நிலைமை, கூடுதலாக வியட்நாம், இந்தோனேசியா, மடகாஸ்கர் மக்களையும் சேர்த்துக்கொள்ளலாம். தவிர பிரான்சு அரசு நிர்வாகப் பிரதேசங்களையும் தந்திரமாக கலைத்துப் போட்டு ஆள்கிறது. ஆப்ரிக்க இனத்தவரான பூர்வீகமக்களுக்குக் குடியும் கூத்தும் வேண்டும், தங்குதடையின்றி கிடைக்கிறது, இப்பிரதேசங்களுக்கு அதிகச் சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறதென்பதெல்லாம் கண்துடைப்பே. பிரான்சிலுள்ள இதரப் பகுதிகளோடு ஒப்பிடுகிறபோது இங்குள்ள அவலம் விளங்கும்: ஐம்பது விழுக்காட்டிற்குக் கூடுதலான மக்கள் வறுமையில் இருக்கிறார்கள். மருத்துவ அடையாள அட்டையான -Carte Vitalஐ – மர்த்தினீக் வாசி அறிந்ததில்லை. பிராதான பிரதேசத்தில் ஏழைகளுக்கான மருத்துவச் செலவு(Couverture Medicale Sociale) முழுக்க முழுக்க அரசு சார்ந்தது, இப்பிரதேச மக்களுக்கு பட்டைநாமம். பிரெஞ்சு மெட்ரோபோலில் (Mainland) குறைந்த பட்ச தனி நபர் ஊதியம் 1300 யூரோ என்றால், இங்கே 600 யூரோ…உணவுப் பொருட்களுக்கான விலைகள் சராசரி Dom-Tom வாசியால் தொடமுடியாதவை. எல்லாவற்றிற்கும் மேலாக இப்பிரதேசங்களைச் சேர்ந்தமக்கள் அரசியல் சாசனப்படி பிரெஞ்சு குடிமக்கள், ஆனால் மெட்ரோபோலுக்கு அதாவது பிரதான பிரான்சு நாட்டுக்குள் நுழைகிறபோது அவர்களும் வேறு நாடுகளிலிருந்து பிரான்சுக்குப் பிழைக்கவந்த மக்கள்போலவே நடத்தப்படுகிறவர்கள்.
பிரெஞ்சு காற்பந்தாட்ட முன்னணி வீரர்களில் ஒருவரான லிலியாம் துராம் ஒரு முறை சொன்னது, ” எங்கள் பிரதேசத்தில் இருக்கிறபோது பிரெஞ்சுக் காரன் என்ற நினைவுடன் இருந்தேன், ஆனால் மெட்ரோபோலுக்கு வந்ததும் அந்நியனாக உணருகுகிறேன்”.
நன்றி: யுகமாயினி
——————————————————————————————————-1. Departement d’outre-mer – Territoire d’outre-mer.2. Depaartment Region d’outre-mer2. Metropole – Mainland
August 13, 2023
யாம் மெய்யாய் கண்டவற்றுள்-1
திராவிடர்களுக்கும் ஆப்ரிக்க மக்களுக்கும் உள்ள உறவு தெரிஞ்சதுதான், அதை நாம மறந்தாலும் அவங்க மறக்கமாட்டாங்கண்ணு நினைக்கிறேன், மூட்டை மூட்டையா டாலரை சுமந்து முதுகு கூன்போட்டுவிட்டது கொஞ்சம் இறக்கிவைக்கணும் பங்காளி, உன்னுடைய வங்கிக் கணக்கைக் கொடு என்று கேட்டு, வாரத்துக்கு நாலு மின்னஞ்சலையாவது அனுப்பிவைக்கிறார்கள். எல்லாக் கடிதங்களிலும் பொதுவாக ஒரு விஷயமிருக்கும், கடிதம் எழுதுகிறவன் கற்பனையா உருவாக்கின வங்கியிலே, மில்லியன் கணக்கிலே டாலரை வச்சிட்டு வாரிசில்லாம ஒருத்தன் செத்துபோனதாகவும், தனித்து உண்ணல் தகாது என்றுணர்ந்த ஆப்ரிக்க நண்பர், உலகிலுள்ள கோடானுகோடியான மனிதன் முதல் கிருமி ஈறாக உள்ள ஜீவராசிகளில் நம்மைக் கண்டுபிடித்து(இளிச்சவாயனாக இருக்ககூடுமென்ற நம்பிக்கையில்), பகுத்துண்ண விரும்புவதாகவும், நம்ம அக்கவுண்ட் நெம்பரைக் கொடுத்தா பணமடையைத் திறந்து விடுவதாகவும் சத்தியம் செய்திருப்பார். இந்திய வம்சாவளியிலே வந்த நமக்கு இராமயனச் சகோதரர்களைக் காட்டிலும், மகாபாரதக் கௌரவர்களைத்தான் அனுபவத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறோம், இந்த லட்சணத்தில் ஆப்ரிக்க பங்காளி தானதருமம் செய்ய முன்வந்தால் சந்தேகம் வரத்தானே செய்யும். அதிலும் அவர்கள் கற்பனையில் உதிக்கிற வங்கி ஒரு சுவிஸ் வங்கி அல்லது மேற்கத்திய வங்கியாக இருந்தாலும் ஓரளவு நம்பலாம். ப்ரிக்க கண்டத்தின் கடன்களில் ஐம்பது சதவீதத்திற்கு மேற்பட்டத் தொகையை, அந்நாடுகளின் தலைவர்கள்- சர்வாதிகாரிகள்- தங்கள் பெயரிலும், உறவினர்கள் பெயரிலும் வெளிநாட்டுவங்கிகளில் போட்டுவைத்துள்ளதாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கைத் தெரிவிக்கிறது. இதற்கு மேற்கத்திய நாடுகளும் உடந்தை. அவர்கள் நாட்டில் (மேற்கத்திய) விலை போகாதப்பொருட்களையெல்லாம், மூன்றாம் உலக நாடுகள் தலையில் கட்டுகிறபோது சம்பந்தப்பட்டத் தலைவர்களையும் கவனிப்பது ஊரறிந்த ரகசியம். இந்தியா போன்ற நாடுகளில் நெல்லுக்கிறைத்த நீர் புல்லுக்கும் போய்ச்சேருகிறதென்றால், ஆப்ரிக்க நாடுகளில் இறைக்கிற நீரெல்ல்லாம் புல்லுக்கு மட்டுமே பாய்கிற கொடுமையுண்டு. இங்கிலாந்து தனது நேற்றைய காலனி நாடுகளைக் குறித்து என்ன அபிப்ராயம் வைத்திருக்கிறதோ, பிரான்சைப் பொறுத்தவரை இன்றைக்கும் அவை காலனி நாடுகள்தான். பிரெஞ்சுக்காரர்களுடைய காலனி திக்கம் என்பது பதினேழாம் நூற்றாண்டில் ரம்பித்து இருபதாம் நூற்றாண்டின் மத்திய பகுதிவரை நீடித்திருந்தது எனலாம். காலனிய நிலப்பரப்பில் பிரிட்டன் மற்றும் ஸ்பெயினுக்கு அடுத்து மூன்றாவது இடத்தையே பிரான்சு பெற்றிருந்தது. பதினேழாம் நூற்றாண்டில் வட அமெரிக்காவிலும், ஆசியாவிலும் தனது காலனி திக்கத்திற்கு வேரூன்றிய போதிலும், பிரெஞ்சுகாரர்கள் பெருமைகொள்ள முடிந்தது பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் ரம்பம்வரை காலனி திக்கத்தின்கீழ் கொண்டுவந்த தென்கிழக்கு சிய நாடுகள், வட ப்ரிக்க நாடுகள் மற்றும் மத்திய ப்ரிக்க நாடுகளால். இன்றைய தேதிவரை குறிப்பாக மத்திய ப்ரிக்க நாடுகளைச்(மோரிட்டேனியா, செனெகல், மாலி, சாடு(Chad)…)சேர்ந்த மக்கள், பிரெஞ்சுக்காரர்களென்றால் முகம் சுளிப்பவர்கள் னால் அவர்களின் த¨லைவர்கள் பிரெஞ்சு நிர்வாகத்திற்கு அடிபணிகிறவர்கள் என்பதற்கு சமீபத்திய உதாரணத்தைச் சொல்கிறேன்.
‘L’Arch de Zoe’ என்பது பிரான்சில் 2004ல் தொடங்கப்பட்ட தொண்டு நிறுவனம், நோக்கம் சுனாமியில் பாதிக்கப்பட்ட சிறுவர்களைத் தத்தெடுத்து, அவர்களது கடந்தகாலப் பண்பாட்டிற்குப் பாதகமின்றி வளர்த்து எதிர்காலத்திற்கு உத்தரவாதமளிப்பது. முதற்கட்டமாக சுமத்ராவிற்கு அருகில் Banda Aceh என்ற கிராமத்திற்கருகே ஒரு புணர்வாழ்வு இல்லம் அமைப்பது என்றெல்லாம் அறிவித்து அதை நடைமுறைப் படுத்தவும் முனைந்தார்கள். இந்தோனேசியாவிலிருந்து சுனாமியால் பாதிக்கபட்டிருந்த ஓர் அநாதைச் சிறுவனைப் பாரீஸ¤க்கு அழைத்துவந்து அவன் கால்களுக்குச் செய்யவேண்டிய அறுவைச் சிகிச்சையைச் செய்து செய்தித்தாளிலும் தொலைக்காட்சிகளிலும் இடம்பிடிக்க தொண்டு நிறுவனத்தின் மதிப்பு பிரெஞ்சு மக்களிடையே ஓங்கியே இருந்தது. இந்நிலையில் ஏப்ரல்(2007) 24ந்தேதியிட்ட தொண்டு நிறுவனத்தின் அறிக்கை டார்·பர்(1) உள்நாட்டுப்போரை, ஐக்கிய நாட்டுச் சபை அலட்சியம் செய்து, பல்லாயிரக் கணக்கானவர்கள் படுகொலைக்கு காரணமாகிவிட்டதென்று குற்றம் சாட்டியது. தொடர்ந்து, அநாதையாக்கப்பட்ட பத்தாயிரம் சிறுவர்களை அங்கிருந்து வெளியேற்றி, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்யப் போவதாகவும், தத்தெடுக்க விரும்பும் குடும்பங்கள் தங்களோடு தொடர்பு கொள்ளவேண்டுமென்றும் அறிவித்தது. பலர் தொண்டு நிறுவனத்தின் போக்கே தவறு என்றார்கள், பல சட்ட சிக்கல்கள் இருப்பதாகத் தெரிவித்தார்கள், பிரெஞ்சு அரசாங்கமும் தமது 14-6- 2007 அறிக்கையில் Arche de Zoe தொண்டு நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிடாமல், அதன் நடவடிக்கைகள் அரசின் சட்டதிட்டங்களுக்கு ஒத்ததல்ல என்று அறிவித்தது. னால் அடுத்தமாதமே- ஜூலையில் வெளியிடப்பட்ட மற்றொரு அறிக்கையில், மனித உரிமை மற்றும் வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் Rama Yade டார்·பர் அநாதைச் சிறுவர்களுக்கு உதவ விரும்பும் தொண்டு நிறுவனங்கள் தங்கள் திட்டத்தைத் தெரிவித்தால், அரசு பரிசீலிக்குமென அறிவித்தார், அதன்படி று தொண்டு நிறுவனங்கள் தங்கள் திட்டங்களை முன் வைத்தன, அவற்றுள் Arche de Zoe ஒன்று. பிரெஞ்சு அரசாங்கத்தின் தரப்பில் கஸ்டு 3,2007 அன்று மற்றொரு அறிக்கை. இம்முறை தொண்டு நிறுவனத்திற்கு நம்பி இறங்கும் குடும்பங்கள் எச்சரிக்கப்பட்டனர்: டார்·பர் களத்தில் இருக்கும் இதர அரசு சாரா நிறுவனங்கள் தொண்டு நிறுவனத்திற்கு தரவாக இல்லை என்பதோடு, பிரச்சினைக்குறிய பிள்ளைகள் அநாதைகளா இல்லையா என்பதையும் உறுதிசெய்ய முடியவில்லை என்றும், சூடான் நாட்டுச் சட்டமும் தத்து எடுப்பதற்கு தரவாக இல்லையென்பதால் இவ்விஷயத்தில் மிகவும் கவனமாக நடந்துகொள்வது அவசியமென்றும் வற்புறுத்தியது. தொண்டு நிறுவனம் ரம்பத்தில் பணத்தைப் பற்றி பிரஸ்தாபிக்கவில்லையென்றபோதிலும் 300 குடும்பங்கள் தலா 2400 யூரோவை, குழந்தையொன்றிற்கு டார்·பிலிருந்து வெளியிற்கொண்டுவரும் செலவுக்கென கொடுத்திருந்தார்கள், (தற்போதைய தகவலின்படி கிட்டத்தட்ட 550000யூரோவை தொண்டு நிறுவனம் வசூல் செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது)
2007 அக்டோபர் மாதம் 24ந்தேதி, திட்டமிட்டபடி தத்தெடுத்தக் குழைந்தைகளுக்காக ஒரு சில குடும்பங்கள் பிரெஞ்சு விமான தளமொன்றில் காத்திருக்க, கடைசியில் ஏமாற்றத்தில் முடிந்தது. சூடான், சாடு பார்டர் எல்லையில் தொண்டு நிறுவனத்தினைச் சார்ந்தவர்களும் அவர்களுக்கு உதவிய மற்ற ஐரோப்பியர்கள், உள்ளூர் ஆட்கள்நான்குபேர் ஆக மொத்தம் பதினேழுபேரை சாடு அரசாங்கம் கைது செய்தது. அவர்கள் விமானத்தில் கடத்த முயன்றதாகச் சொல்லப்பட்ட சிறுவர் சிறுமியர் எண்ணிக்கை 103. இப்பிரச்சினையில் முக்கியமாகத் தெரிந்து கொள்ளவேண்டியது பிரெஞ்சு தொண்டு நிறுவனம் சொல்வதுபோன்று உண்மையிலேயே அவர்களுடைய நோக்கம் அநாதைச் சிறுவர்களுக்குப் புணர்வாழ்வு கொடுப்பதா? அல்லது உள்நாட்டுப்போரால் பாதிக்கபட்டிருக்கும் டார்·பர் பக்கம் உலக நாடுகளின் கவனத்தைத் திருப்புவதா என்ற கேள்விகள் எழுகின்றன. ஏனெனில் இரண்டுமே உண்மையில்லை, கடத்தப்படவிருந்த சிறுவர்கள் அநாதைகள் இல்லை. குழந்தைகளின் ஏழைப் பெற்றோர்களிடம் உங்கள் குழந்தைகளை ஐரோப்பாவிற்குச் கொண்டு சென்று நன்கு வளர்க்க விரும்புகிறோம், பிறகு திரும்ப அனுப்பிவிடுவோம் என்றெல்லாம் சை வார்த்தைகளைக் கூறி மயக்கியிருக்கிறார்கள். தவிர அக்குழந்தைகள் பிரச்சினைக்குறிய டார்·பூர் பிரதேசத்துக் குழந்தைகளும் அல்ல அதன் எல்லையிலுள்ள சாடு நாட்டைச் சேர்ந்த கிராமத்தின் குழந்தைகள்.
வேறு சில சந்தேகங்களும் எழுகின்றன அதாவது ஏன் அக்குழந்தைகள் சிறுவர் விபச்சாரத்திற்காகவோ அல்லது மனித உறுப்புகளுக்காகவோ(தொண்டு நிறுவனத்தின் தலைவர் ஒரு மருத்துவர்), கடத்தப்பட்டிருக்கக்கூடாது? அனைத்துக்கும் மேலாக இன்றைய தேதியில் ஐரோப்பிய நாடுகளில் தத்தெடுப்பதென்பது இலாபகரமான தொழில் அல்லது வியாபாரம். இத்தனைச் சந்தேகங்கள் இருப்பதால் தொண்டு நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் தண்டிக்கப்படத்தானே வேண்டும் அதுதானில்லை. சாடு அரசாங்கம் தொண்டு நிறுவனத்தினரை கைது செய்த போது அனைத்துத் தரப்பினரும் அவர்கள் தண்டிக்கப்படக்கூடியவர்கள் என்றே நினைத்தனர். ஆனால் நடந்தது வேறு. இங்கேதான் நான் ரம்பத்தில் குறிப்பிட்டதுபோல ஆப்ரிக்க நாடுகளுக்கேயுரிய பிரச்சினைகள் மூக்கை நுழைக்கின்றன. 1960ம் ண்டுவரை சாடு பிரெஞ்சு காலனியாக இருந்தது. தற்போதைய அதிபர் பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பதே பிரெஞ்சு அரசாங்கத்தின் தயவில். எதிர்ப்பாளர்கள் எப்பொழுதெல்லாம் அதிபருக்கு எதிராக கலவரம் செய்து, ஆட்சியைக் கவிழ்க்க நினைக்கிறார்களோ அப்போதேல்லாம் பிரெஞ்சு அரசாங்கம் தனது படையை அனுப்பி அதிபரைக் காப்பாற்றி வருகிறது. எனவே Arche de Zoe அமைப்பாளர்கள் சாடில் தீர்ப்பு கூறப்பட்டு அங்கே தண்டனையை அனுபவிக்காமல் பிரெஞ்சு சிறைக்குக் கொண்டுவரப்பட்டு, கடைசியில் சாடு அதிபர் கருணையுடன் மன்னிப்பு வழங்க இன்றைக்குச் சுதந்திர பறவைகள். கடைசியில் முத்தாய்ப்பாக ஒரு செய்தி குழந்தைகளைக் கடத்த Arche de Zoe தொண்டு நிறுவனத்திற்கு(?) உதவிய விமானம் பிரெஞ்சு அரசாங்கத்திற்குச் சொந்தமானது.
—————————————————————————————————————————–1. மேற்கு சூடானைச் சேர்ந்த பல்வேறு பழங்குடிகளைச் சேர்ந்த பிரதேசம், பலகாரணங்களை முன்னிட்டு 2003லிருந்து அவர்களுக்குள் யுத்தம் நடந்துவருகிறது, அவர்களில் ஒரு பிரிவினருக்கு சூடான் அரசாங்கத்தின் தரவு இருந்துவருகிறது, விளைவு, எண்ணற்றமக்கள் இடம்பெயர்ந்துள்ளார்கள், உயிரிழப்பும் அதிகம். http://en.wikipedia.org/wiki/War_in_Darfur
இடுகையிட்டது Nagarathinam krishna நேரம் பிற்பகல் 9:48
Nagarathinam Krishna's Blog
- Nagarathinam Krishna's profile
- 3 followers

