அம்பை – ஜோ ஒரு விளக்கம்

ஜோ டி குரூஸ் பற்றி நான் எழுதிய குறிப்பில் அம்பை பற்றி ஒரு குறிப்பு இருந்தது. அம்பை ஜோ டி குரூஸுக்கு அவர் இந்துத்துவா என்று தெரியாமல் விருதளித்தமைக்கு வருந்துவதாக சொல்லியிருக்கிறார் என்றும், அரசு விருதுகளைக் கைப்பற்றியிருக்கும் இடதுசாரிகள் இலக்கியத்தை அரசியலால் அளவிட்டு எழுத்தாளர்களை அணிசேர்க்க விருதுகளைப் பயன்படுத்துவதற்கு அதுவே ஆதாரம் என்றும் சொல்லியிருந்தேன்.


நான் ஃபேஸ்புக் பார்ப்பதில்லை. அதை நான் எழுத நான் நம்பும் ஒரு நண்பர் சொன்னதுதான் ஆதாரம். ஆனால் என்னை வேறு சிலர் கூப்பிட்டு அம்பை அவ்வாறு சொல்லவில்லை என்றும் ஜோ டி குரூஸுக்கு விருது கொடுத்ததைப்பற்றி மாற்றுக்கருத்து இல்லை என சொல்லியிருப்பதாகவும் குறிப்பிட்டனர். ஆகவே அம்பை பற்றிய என் வரிகளை திரும்பப்பெற்றுக்கொண்டு வருத்தமும் தெரிவித்தேன்


ஆனால் அந்த நண்பரிடம் அவர் சொன்னதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டேன். ஸ்கிரீன் ஷாட் எடுத்து அம்பை சொன்னதை அவர் எனக்கு அனுப்பியிருந்தார். அம்பை மிகத்தெளிவாகவே சொல்கிறார்.ஜோ டி குரூஸுக்கு சாகித்ய அக்காதமி விருது அளித்த நடுவர் குழுவில் அவர் இருந்ததாகவும், ஜோ டி குரூஸ் ஓர் இந்துத்துவா ஆதரவாளர் என்று கேள்விப்பட்டதால் அவரிடமே தொலைபேசியில் அழைத்துப்பேசியதாகவும், ஜோ அவர் இந்துத்துவ அமைப்பு எதிலும் இல்லை என உறுதியளித்தார் என்றும் சொல்கிறார்.இப்போது அவர் மோடிக்கு ஆதரவு அளித்ததைக் கண்டு வருத்தம் கொண்டிருப்பதாகவும் குறிப்பிடுகிறார்


அதாவது நான் சொன்னதைத்தான் அம்பை சொல்லியிருக்கிறார். விருதுக்கு நூலின் தரம் அல்ல அளவுகோல். அந்த ஆசிரியன் இடதுசாரிக் கருத்துக்களுக்கு எந்த அளவுக்கு விசுவாசமாக இருக்கிறான் என்பது மட்டும்தான். அதை அவனிடமே கூப்பிட்டு கேட்டபின்னர் அவன் ‘விசுவாசத்துடன்’ இல்லை என்பதனால் வருத்தம் தெரிவிக்கிறார்


சாகித்ய அக்காதமி என்பது அம்பை சொந்தப்பணத்தில் அளிக்கும் விருது என்றால் இதை ஏற்கலாம். இலக்கிய மதிப்பீடுகளின் அடிப்படையில் அளிக்கப்படும் ஒரு விருது அது. மத்திய அரசின் நிதியால் அளிக்கப்ப்டுவது. அதில் தங்கள் சொந்த அரசியல் ‘அஜெண்டா’க்களை இடதுசாரிகள் கலக்கிறார்கள், விருதுக்குழுக்களைக் கைப்பற்றிவைத்து பேரம்பேசுகிறார்கள், அவற்றுக்குப்பதிலாக விசுவாசத்தைக் கோருகிறார்கள் என்பதே நான் சொன்னது. அம்பை ஃபேஸ்புக்கில் சொல்லியிருப்பதற்கு மேலாக எந்த ஆதாரமும் அதற்குத்தேவை இல்லை. ஆம், நான் முன்னால் சொன்னதே சரியானது


அம்பை என் குறிப்பைக் கண்டபின்னர் விருது கொடுத்ததற்கு தான் வருந்தவில்லை, அது தரமான படைப்புதான் என்று தன் நிலைபாட்டை கொஞ்சம் சாதுரியமாக மாற்றிக்கொண்டிருக்கிறார், அவவளவுதான். அதைத்தான் நண்பர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அவர்கள் அம்பை சொன்ன முதல் கூற்றை வாசிக்கவில்லை


ஆகவே என் வருத்தத்துக்கு காரணம் இல்லை. அம்பை பற்றி நான் சொன்னதே சரியானது.


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 17, 2014 06:12
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.