தன்னை மறந்த புலி

கியூபாவைச் சேர்ந்த எழுத்தாளரான விர்ஜிலியோ பினேரா பெலிசாரியோ என்றொரு சிறுகதை எழுதியிருக்கிறார். இது பணக்காரப் பெண்ணை மணந்து கொண்ட ஒரு புலியைப் பற்றியது. கதையில் புலி மனிதனைப் போலத் தனக்கென ஒரு பெயர் கொண்டிருக்கிறது. அப் பெயர் தான் பெலிசாரியோ.

பணக்கார வீட்டின் மருமகனான அப் புலிக்கு ஒரு உதவியாளர் இருக்கிறார். புலி தட்டச்சு இயந்திரத்தின் முன் அமர்ந்து பாரசீக மன்னருக்கு அவரது விருந்தில் கலந்து கொள்ள முடியாத நிலை குறித்து ஒரு கடிதம் எழுதுகிறது. தனது கடிதம் எப்படி உள்ளது என உதவியாளரிடம் அபிப்ராயம் கேட்கிறது. அவர்களுக்கு இடையோன உரையாடலில் அப்புலி தான் வங்காளத்தைச் சேர்ந்தவன் என்றும் தனது பெற்றோர்கள் இங்கிலாந்து மன்னருக்காக வங்காள மகாராஜா ஏற்பாடு செய்திருந்த ஒரு வேட்டையின்போது கொல்லப்பட்டு விட்டார்கள் என்றும் நினைவு கொள்கிறது

இரண்டு வயதில் ஹவானா கொண்டுவரப்பட்ட அந்தப் புலிக்குத் தற்போது பத்து வயது நடந்து கொண்டிருக்கிறது. ஹவானா பல்கலைக்கழகத்தில் தனது கல்வியை முடித்த பெலிசாரியோ, அதிர்ஷ்டவசமாக, பெனிட்டோ என்ற பணக்காரனின் மகளான நடாலியாவை திருமணம் செய்து கொள்கிறது. மாமனாரின் சொத்துகளை அனுபவிக்கிறது

ஒரு நாள் பெலிசாரியோ தன் மனைவியுடன் ஒரு விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறது. அங்கே புலி உருவம் கொண்டிருந்த போது அன்பான தந்தையைப் போலக் குழந்தைகளைத் தன் மீது அமர அனுமதிக்கிறது. ஒரு கனிவான தந்தையின் பிம்பமாகத் திகழ்வதைப் பலரும் பாராட்டுகிறார்கள்.

புலியின் மனைவி அதனிடம் புலியின் தன்மைகள் எதுவுமில்லை என்று பாராட்டுவதுடன். புலி குறித்த வில்லியம் பிளேக்கின் கவிதையைச் சொல்லி அதனைப் புகழ்கிறாள். புலியும் அதனை ரசிக்கிறது

ஆனாலும் அப்புலி மனிதனைப் போல நடிப்பதாகப் பலரும் பயந்தார்கள். தனது கொடூரத்தை மறைக்கவே அப்படி நடந்து கொள்கிறது என்று சந்தேகப்பட்டார்கள்

இதனைப் பரிசோதனை செய்து பார்க்கும்படி நடாலியாவை பலரும் கேட்டுக் கொண்டார்கள். அவள் அதற்குச் சம்மதிக்கவில்லை, புலியின் அணைப்பின் போது திடீரென ஒரு நாள் குரூரமாகிவிடும் என்ற அச்சம் அனைவருக்கும் இருந்தது.

ஆனால், அப்படியான பயங்கர நிகழ்வு எதுவும் ஒருபோதும் நிகழவில்லை. பெலிசாரியோ முதுமை காரணமாகவே இறந்தது போனது. புலிகளுக்குரிய அதிகபட்ச ஆயுட்காலமான 19 ஆண்டுகளை அடைந்திருந்தது.

அப்புலி இறக்கும் தருவாயில் பாதிரியார் அதற்குச் சிறப்புப் பிரார்த்தனை செய்த போது திடீரெனக் கொடூரமான கர்ஜனையை வெளிப்படுத்தியது. அச்செய்கை தன் உண்மையான இயல்புக்கு திரும்ப முயன்று தோற்றது போலிருந்தது

பின்பு தனது கடைசி மூச்சை புலி விட்டிருந்தது

எனக் கதை முடிகிறது. வங்கப்புலியின் நகர வாழ்க்கையைச் சொல்லும் இக்கதை மிருக இயல்பு குறித்த மனிதர்களின் சந்தேகம் மாறாதது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. வங்கப்புலியின் வாழ்க்கை நிஜத்தில் சந்தோஷமாக இருந்ததா என்ற கேள்வியை எழுப்புகிறது. கதையில் வரும் பெலிசாரோ தான் புலி என்பதை முற்றிலும் மறந்துவிட்டிருந்ததா அல்லது தனது அடையாளத்தை கடைசி வரை மறைத்துக் கொள்கிறதா என்ற வினாவையும் எழுப்புகிறது.

அந்நிய மண்ணில் வாழும் போது இப்படித் தனது இயல்பை துறந்து வேறு ஒன்றாக வாழ வேண்டியது வரும் என்பதை நினைவூட்டுகிறார் விர்ஜிலியா. கதையின் முடிவு தான் கதையை சிறப்பாக்குகிறது. சந்தேகத்தை வளரவிட்டு அதனை இயல்பாகத் துண்டிக்கிறார் விர்ஜிலியா.

இந்திய நாட்டுப்புறக்கதையில் இது போன்ற புலியின் மாற்றுவடிவம் இடம் பெற்றுள்ளது. அதை விர்ஜிலியா அறிந்திருக்கிறாரா எனத் தெரியவில்லை. ஆனால் இந்த வங்கப்புலியை அவர் போர்ஹெஸின் கதையிலிருந்து நிச்சயம் அறிந்திருக்கக் கூடும்

••

இக்கதை Cold Tales தொகுப்பிலுள்ளது.

.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 20, 2026 09:47
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.