பயணியின் நிழல்

மார்க்கோ போலோவின் பயணநூலை விடவும் அது எழுதப்பட்டதன் பின்னுள்ள கதை அல்லது உண்மை வியப்பளிக்கிறது. கால்வினோ அதிலிருந்தே தனது புலப்படாத நகரங்கள் என்ற நாவலை எழுதியிருக்கிறார்.

அதில் வரும் மன்னர் குப்ளாய்கான் கற்பனையான நகரங்களை விவரிக்கத் துவங்குகிறார். அதுவும் போலோவின் உண்மை அனுபவங்களும் ஒன்றாக இணைகின்றன. இந்த இணைவு போன்றதே போலோவின் பயண நூல் எழுதப்பட்ட வரலாறும்

போலோவின் நிழலாக அந்த நூலின் பின்னால் இருப்பவர் இத்தாலிய எழுத்தாளரான ரஸ்டிகெல்லோ டா பிசா. வீரசாகசக் கதைகளை எழுதும் அவரும் போலோவும் இணைந்தே பயணநூலை எழுதியிருக்கிறார்கள். இன்றும் ரஸ்டிகெல்லோ குரலற்ற நிழலைப் போலவே கருதப்படுகிறார்.

மார்க்கோ போலோவின் பயணங்கள் என்ற புத்தகம் அவரது வாழ்நாளில் 1298-1299-இல் வெளியிடப்பட்டது. அதன்பிறகு பல்வேறு மறுபதிப்புகள். பல்வேறு ஆய்வாளர்கள் சரிபார்த்து உருவாக்கிய பதிப்புகள், மொழிபெயர்ப்புகள் என நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்புகள் வெளியாகியுள்ளன.

டாக்டர் ஃபிரான்சஸ் வுட் எழுதிய 1998ல் எழுதிய ‘ மார்கோ போலோ சீனாவுக்குச் சென்றாரா?’ என்ற புத்தகம் எழுப்பிய அலை இன்றும் தொடர்கிறது. அவர் “அதிகாரப்பூர்வ அல்லது அதிகாரப்பூர்வமற்ற, மங்கோலிய அல்லது சீன ஆவணங்களில் போலோவைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை” என்கிறார்.

12 ஆம் நூற்றாண்டில், ஆசியாவைப் பற்றிய ஐரோப்பாவின் அறிவு குறைவாக இருந்தது, அதனைப் போக்குவதற்காக உருவாக்கபட்ட புனைவு நிரம்பிய பயணநூல் என்கிறார் ஃபிரான்சஸ் வுட்

மார்க்கோ போலோ பற்றிய இணையத் தொடரில் அவர் மிகப்பெரிய ராஜதந்திரியாக, போர்வீரனாக, படைத்தளபதியாகச் சித்தரிக்கபடுகிறார். மன்னர் குப்ளாய்கானிற்காகச் சண்டையிடுகிறார். இன்னொரு திரைப்படத்தில் மார்க்கோ போலோ தந்திரசாலியான வணிகராக, சூழ்ச்சிக்காரனாகச் சித்தரிக்கபடுகிறார். புதிது புதிதாக மார்க்கோ போலோ பற்றிய புத்தகங்கள், திரைப்படங்கள் வந்தபடியே இருக்கின்றன. அத்துடன் மார்க்கோ போலோவின் பாதையில் மறுபயணம் மேற்கொள்ளும் ஆவணப்படத் தொடர்களும் வெளியாகின்றன.

தமிழிலும் மார்க்கோ போலோவின் பயணநூல் வெளியாகியுள்ளது. அந்த நூலின் சிறப்பு அதில் இடம் பெற்றுள்ள துல்லியமான விவரிப்பு மற்றும் அரிய நிகழ்வுகள். வழித்தடங்கள். அவை பயணியின் கண்களாலும் வணிகரின் பார்வையாலும் எழுதப்பட்டிருக்கின்றன.

அதன் வரலாற்றுத் துல்லியம் குறித்து இன்று நிறையக் கேள்விகள் எழுகின்றன. பயணி எப்போதும் தான் கண்டதையும் கேட்டதையும் இணைத்தே எழுதுவான். ஆய்வாளர்கள் பயணம் செய்யும் போது மட்டுமே தகவல்களைப் பரிசோதனை செய்வார்கள். சாட்சியங்களைச் சேகரிப்பார்கள். பயணி ஒரு புனைவெழுத்தாளரைப் போலவே நடந்து கொள்வான். சில கற்பனை செய்திகள், விவரிப்புகள்,கவித்துவ வெளிப்பாடு உண்மைக்குப் பரிமளம் தரக்கூடியது எனப் பயணி எண்ணுகிறான்.

போலோவின் பயணத்திற்கான அடிப்படைக் காரணம் வணிகம். அதற்காகவே இவ்வளவு நீண்ட பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். அவரது பயண அனுபவங்கள் எழுதப்படுவதற்கான காரணமாகவும் வணிகமே இருந்திருக்கக் கூடும். ஆனால் எழுதப்பட்டுள்ள நூலில் வணிகர்களுக்கான செய்திகளும் வழிகாட்டுதலும் மிகக் குறைவாகவே உள்ளன. சாகச நாவலைப் போலவே பயணம் எழுதப்பட்டிருக்கிறது.

மார்க்கோ போலோவின் நீண்ட பயணத்தை வாசிக்கும் போது எனக்கு மூன்று வியப்புகள் ஏற்படுகின்றன. இத்தனை மாறுபட்ட நிலப்பரப்புகளில், வேறுபட்ட பருவ காலங்களில் பயணிக்கும் போதும் அவர் மோசமான உடல்நலப் பாதிப்பை அடையவில்லை. உறுதியான உடல் கொண்டிருக்கிறார். இரண்டாவது பல்வேறு மொழி பேசுகிறவர்களைச் சந்தித்துக் கடந்த போதும் மொழிப்பிரச்சனை அவரைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. மூன்றாவது பல்வேறு சிக்கல்களைப் பிரச்சனைகளைச் சந்தித்து, பேசி சமாளித்து மீளும் அவரது புத்திசாலித்தனம்.

சாலையைத் தனது நிரந்தர இருப்பிடமாகக் கருதியிருக்கிறார் மார்க்கோ போலோ. துறவிகளும் வணிகர்களும் பயணத்தில் நிரந்தர ஆர்வம் கொண்டவர்கள். இயல்பிலே பிடிவாதமானவர்கள். எதையும் துணிந்து செய்து பார்க்கிறவர்கள். அந்த வரிசையில் தான் போலோவும் வருகிறார்

மார்க்கோ போலோ தனது பயண அனுபவங்களைத் தானே எழுதவில்லை. அவர் சிறையில் இருந்த நாட்களில் சக கைதியான இத்தாலிய எழுத்தாளர் ரஸ்டிகெல்லோ டா பிசாவிடம் தனது நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார். அவரே இதனை எழுதி நூல் வடிவில் உருவாக்கினார் என்கிறார்கள். அது நிஜம் என்றால் மார்கோ போலோவின் நினைவாற்றல் வியப்பளிக்கிறது.

பல்வேறு காலங்களில். பல்வேறு நிலப்பரப்பில் தான் கண்ட காட்சிகளை, நடந்த நிகழ்வுகளை எப்படி இவ்வளவு துல்லியமாக ஒருவர் நினைவு வைத்துக் கொள்ள முடியும். ஒருவேளை ஏதேனும் டயரிக்குறிப்புகள் வைத்திருந்தாரா, அல்லது எழுதிய பிறகு இந்தத் தகவல்கள் சரிபார்க்கபட்டு, திருத்தம் செய்யப்பட்டு நூல் வடிவம் கொண்டதா.

மாறவர்ம சுந்தர பாண்டியன் காலத்தில் மார்க்கோ போலோ தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார். தமிழகத்தில் தான் கண்ட காட்சிகளைப் பதிவு செய்திருக்கிறார். அதில் சில தகவல் பிழைகள், கேள்விப்பட்ட செய்திகள், மிகைகூறல் இருப்பதை மறுக்கமுடியாது. மார்க்கோ போலோவின் பயணங்கள் என்ற நூலின் இரண்டாம் தொகுதி, மூன்றாம் புத்தகத்தில், இந்தியா மற்றும் இலங்கையில் அவர் மேற்கொண்ட பயணங்கள் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

எனக்கு மார்க்கோ போலோவை விடவும் அவரது நினைவுகளை எழுதிய ரஸ்டிகெல்லோ தான் கவனத்திற்குரியவர். அவர் எந்த கடற் பயணத்தையும் மேற்கொள்ளவில்லை. 1284 ஆம் ஆண்டில், ஜெனோவா குடியரசுக்கும் பைசா குடியரசுக்கும் இடையே நடந்த போரில் ரஸ்டிகெல்லோ பிடிபட்டுச் சிறையில் அடைக்கபட்டிருக்கிறார்.

அந்தச் சிறையில் கைதியாக இருந்த மார்க்கோ போலோவுடன் நட்பு கொண்டிருக்கிறார். ரஸ்டிகெல்லோ எழுத்தாளர் என்பதால் அவரிடம் தனது பயண அனுபவங்களைப் போலோ பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

சிறையில் ஒருவர் புத்தகம் எழுதுகிறார் என்பதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. ஆனால் ஒருவருக்காக இன்னொருவர் புத்தகம் எழுதினார் என்பது புதுமையானது.. அதனைச் சிறை எப்படி அனுமதிக்கிறது. அப்படி எழுதிய பிரதிகளைச் சிறை அதிகாரிகள் சோதனை செய்தார்களா, எப்படி அதை வெளியே எடுத்துவர அனுமதித்தார்கள். இது அக்கால நடைமுறை சாத்தியம் தானா.

தனது பயணத்தை நூலாக எழுத வேண்டும் என்ற எண்ணம் போலோவிற்கு ஏன் ஏற்பட்டது. முன்பே அப்படி ஒரு நூலை எழுதுவதற்கான சாத்தியங்கள் அவருக்கு நிறைய இருந்தன. ஏன் அப்படியான முயற்சியை அப்போது மேற்கொள்ளவில்லை.

சிறையில் இருந்த போது அப்படி ஒரு ஆசை வந்திருந்தாலும் அதை எப்படிச் சாத்தியமாக்கினார். தினமும் குறிப்பிட்ட மணி நேரம் தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டாரா. அந்த நினைவுகளை ரஸ்டிகெல்லோ எதில் குறித்து வைத்துக் கொண்டார். எப்படி அதனை நூலாக எழுதினார்.

அந்தப் பணி முழுவதும் சிறையிலே நடைபெற்றதா. அல்லது விடுதலையான பின்பு ரஸ்டிகெல்லோ மேற்கொண்டாரா. இந்தக் கேள்விளுக்கான முழுமையான விடை கிடைக்கவில்லை.

ஆனால் மார்க்கோ போலோவின் பயண நூல் ஒரு நாவலைப் போலவே சுவாரஸ்யமாகத் துவங்குகிறது.

“இது புதிர்களின் மாபெரும் புத்தகம்; மேலும், அதை எழுதியவரின் நம்பகத்தன்மையின் மீது நமக்குள்ள நம்பிக்கையால், ஒவ்வொரு புதிருக்கும் ஒரு தீர்வு உண்டு என்று நாம் உறுதியாக நம்புகிறோம். “என முன்னுரையில் கூறப்படுகிறது

மார்க்கோ போலோவின் புத்தகத்தின் முதல் பகுதி யுலிஸஸ், தனது இருபது வருட அலைச்சலுக்குப் பிறகு, சொந்த ஊரான இத்தாக்காவிற்குத் திரும்பியபோது நடைபெற்ற நிகழ்வுகளின் மறுவடிவம் போலவே சித்தரிக்கபடுகிறது

பல ஆண்டுகளாகப் பயணம் செய்து வீடு திரும்பி போலோ சகோதரர்களை யாரும் அடையாளம் கண்டுகொள்ளவில்லை பல ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் இறந்துவிட்டதாக உறவினர்கள் நம்பிக் கொண்டிருந்தார்கள், மேலும் போலோவும் தங்கள் வெனிசிய மொழியை ஏறக்குறைய மறந்திருந்ததால், அவர்களின் குரலிலும் உச்சரிப்பிலும் விவரிக்க முடியாத மாற்றம் இருந்தது. ஆகவே அவர்களை எவரும் நம்பவில்லை

வெனிஸ் திரும்பிய போலோ சகோதரர்கள் தங்கள் இல்லத்திற்குச் சென்றனர்; ஆள் அடையாளம் தெரியாத காரணத்தால் அவர்களுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

அந்த வீட்டில் இருந்தவர்களிடம் தாங்கள் யார் என்பதைப் புரிய வைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. தாங்கள் சிறுவயதில் கேட்ட கதை ஒன்றைச் சாட்சியமாக விவரிக்கிறார்கள். அக்கதை தான் அவர்கள் யாரென அடையாளப்படுத்துகிறது.

அவர்கள் அணிந்திருந்த, கந்தலான ஆடைகளை மாற்றிக் கொண்டு பழைய ஆடைகளைக் கூர்மையான கத்தியால் கிழிக்கத் தொடங்குகிறார்கள். அந்த உடைக்குள் மாணிக்கங்கள்,மரகதங்கள். நீலக்கற்கள், வைரங்கள் போன்ற மிக மதிப்புமிக்க கற்கள் மறைத்து வைக்கபட்டிருந்தன. கந்தல் ஆடை என்பதால் யாரும் அதனைச் சந்தேகம் கொள்ளவில்லை

இந்தத் துவக்கக் காட்சிகள் ரஸ்டிகெல்லோவின் நாவலைப் போலவே எழுதப்பட்டிருக்கின்றன. இதிகாசக் காட்சி ஒன்றின் மறுவடிவம் என்பதால் இதனை வாசகர்கள் எளிதாக ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் எழுதப்பட்டிருக்கக் கூடும்

“ஆர்தரின் சாகசங்கள்” என்றொரு நூலை ரஸ்டிகெல்லோ முன்னதாக எழுதியிருக்கிறார். அது பரவலான வரவேற்பை பெற்ற புத்தகம். ஆகவே அவருக்கு இந்த முயற்சி ஒரு புனைவு செயல்பாடாக இருந்திருக்கக் கூடும். போலோவின் காலத்தில் பயண நூல்களுக்குப் பெரிய வாசக வரவேற்பு கிடையாது. அந்தக் காலகட்டத்தில் ரொமாண்டிக் நாவல்களும், வரலாற்று புதினங்களுமே விரும்பி வாசிக்கபட்டன. சீனா மற்றும் இந்தியா குறித்த விசித்திர கற்பனையும் தகவல்களும் நிரம்பியிருந்த அந்தக் காலகட்டத்தில் இப்படியான ஒரு நூலின் தேவை எழுந்திருப்பது இயல்பே.

“ஒரு சாதாரணச் சிறுவன் தனது தந்தையால் வீட்டிலிருந்து பிரிக்கப்பட்டு, அறியப்படாத ஒரு நிலப்பரப்பிற்குக் கொண்டு செல்லப்படுகிறான். அங்கே அவன் ஒரு பேரரசனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறான். வியக்கத்தக்க வகையில், அவர் அவனுக்கு வழிகாட்டியாகிறார், அதன் விளைவாக அவன் பெரும் செல்வத்தை அடைகிறான். என்ற விசித்திரமான தேவதை கதையைச் சொல்கிறது இந்த நூல்” என்கிறார் ஜான் மேன். அவரது மார்க்கோ போலோவின் பயணங்கள் குறித்த ஆய்வு நூலில் உள்ள தகவல்பிழைகள் மற்றும் நம்பகத்தன்மை குறித்து விரிவாக எழுதியிருக்கிறார்.

ரஸ்டிகெல்லோவின் உதவியோடு இந்த நூல் சிறையில் எழுதப்பட்டது என்பதே கூடப் மார்க்கோ போலோ உருவாக்கிய கதையாகவும் இருக்கக் கூடும்.

ரஸ்டிகெல்லோவிற்குப் பதிலாக இதனை ஒரு பெண் எழுதியிருக்கவும் கூடும். அவளைப் போலோ எங்கே எப்போது சந்தித்தார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அதற்கான சாத்தியங்களை நூலில் காண முடிகிறது.

அப்படி ஒரு இடைவெளியிலிருந்தே இதாலோ கால்வினோ தனது புனைவை உருவாக்குகிறார். Invisible Cities நாவல் ஒரு சதுரங்க விளையாட்டு. அதில் போலோவும் குப்ளாயும் எதிரெதிராக அமர்ந்து காய்களை நகர்த்துகிறார்கள். சதுரங்கப் பலகையில் உள்ள அரசர் எந்த நிலப்பரப்பிற்கும் சொந்தமானவரில்லை. அந்த வீரர்களும் அப்படியே. நினைவுகள் என்பதே கண்ணுக்குப் புலப்படாத நகரங்கள் என்று சொல்வேன். அந்த வகையில் இந்த நாவல் நினைவிற்கும் புனைவிற்குமான சதுரங்க ஆட்டத்தை வெளிப்படுத்துகிறது

புனைவெழுத்தாளன் வரலாற்றை இப்படித் தான் கலைத்துப் போட முடியும். மறுஉருவாக்கம் செய்ய முடியும்

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 07, 2026 01:01
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.