புகைப்பட நினைவுகள்

லியோ டால்ஸ்டாயின் வண்ணப்புகைப்படத்தை எடுத்தவர் புகைப்படக்கலைஞர் செர்ஜி ப்ரோகுடின்-கோர்ஸ்கி (Prokudin-Gorsky). தனது வாழ்வில் டால்ஸ்டாய் எடுத்துக் கொண்ட ஒரே வண்ணப்புகைப்படம் இதுவே.

ப்ரோகுடின்-கோர்ஸ்கி ஜெர்மனிக்குச் சென்று வண்ணப்புகைப்படக்கலையைக் கற்று வந்தவர். ரஷ்யாவின் வண்ணப்புகைப்படக்கலை முன்னோடியாகக் கொண்டாடப்படுகிறார்.

டால்ஸ்டாயின் மனைவியான சோபியா புகைப்படக்கலையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவர் கோடாக் பெல்லோஸ் பிளேட் கேமிரா ஒன்றை விலைக்கு வாங்கித் தனது குடும்பத்தினர் மற்றும் பண்ணை வாழ்க்கையைப் புகைப்படங்கள் எடுத்திருக்கிறார். அவரது நாட்குறிப்பும் புகைப்படங்களும் இணைந்ததாக Song Without Words என்ற நூல் வெளியாகியுள்ளது. அதில் அவர் எடுத்த சிறந்த புகைப்படங்களைக் காண முடிகிறது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகைப்படங்களை எடுத்த சோபியா முறையாகப் புகைப்படக்கலை பயிலாதவர். புகைப்படங்களை டெவலப் செய்வதற்கும் தானாகக் கற்றுக் கொண்டிருக்கிறார். தனது வீட்டின் மாடிப்படி அடியில் சிறியதொரு இருட்டறையை உருவாக்கி அதில் தான் எடுத்த கறுப்பு வெள்ளை புகைப்படங்களைப் பிரிண்ட் போட்டு ஆல்பமாக உருவாக்கியிருக்கிறார். இந்த அனுபவங்களைப் பற்றித் தனது நாட்குறிப்பில் குறிப்பிடுகிறார்.

ஓவியம், சிற்பம்.புகைப்படக்கலை, இசை என அனைத்திலும் சோபியா தேர்ந்து விளங்கியிருக்கிறார். டால்ஸ்டாயின் முதல் உருவச்சிலை இவர் உருவாக்கியதே.

வண்ணப்புகைப்படக்கலை ஐரோப்பாவில் புகழ்பெறத் துவங்கிய போது புகைப்படக்கலையில் ஆர்வம் கொண்டிருந்த வேதியல் அறிஞரான ப்ரோகுடின்-கோர்ஸ்கி அதனைக் கற்றுக் கொள்ள விரும்பி ஜெர்மன் சென்றார். அங்கே ஆறுவார காலப்பயிற்சி எடுத்துக் கொண்டு நாடு திரும்பினார்.

பத்து ஆண்டுகள் ரஷ்யா முழுவதும் பயணம் செய்து தேசத்தின் பல்வேறு வகையான வாழ்க்கையை, நிலக்காட்சிகளைப் புகைப்படம் எடுத்திருக்கிறார். இந்தப் பணிக்காகச் சிறப்பு ரயில் பெட்டி ஒன்று உருவாக்கபட்டிருந்தது. அதில் தனது டார்க் ரூமை கோர்ஸ்கி உருவாக்கியிருந்தார். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வண்ணப்புகைப்படங்களை எடுத்திருக்கிறார்

தனது வண்ணப்புகைப்படக்கலையைப் பிரபலமாக்குவதற்காகவே அவர் லியோ டால்ஸ்டாயை புகைப்படம் எடுத்திருக்கிறார். இந்தப் புகைப்படம் 1908ல் எடுக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள வண்ணங்களின் அடர்த்தி மற்றும் கேமிரா கோணம். டால்ஸ்டாய் அமர்ந்துள்ள விதம். வசீகரமான பழைய பிரம்பு நாற்காலி. அவரது தோல் காலணிகள். யோசனை படிந்த முகம். என அந்த தோற்றம் புகைப்படத்தைத் தனித்துவமானதாக்குகிறது.

இந்த வண்ணப் புகைப்படம் எடுக்கபட்ட போது டால்ஸ்டாய் தனது பிரதான நாவல்களை எழுதி வெளியிட்டு புகழின் உச்சியில் இருந்தார். டால்ஸ்டாய் மற்றும் அவரது குடும்பத்தினரை வண்ணப் புகைப்படம் எடுப்பதற்காக இரண்டு நாட்கள் தேவை என்று அனுமதி கேட்டு கோர்ஸ்கி ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்,

அதனை டால்ஸ்டாய் ஏற்றுக் கொண்ட பின்பு அவரது பண்ணையான யாஸ்னாயா போலியானாவில் வந்து தங்கி புகைப்படங்கள் எடுத்திருக்கிறார். இந்தப் புகைப்பட வரிசையில் டால்ஸ்டாயின் பண்ணை மற்றும் அங்கு நடைபெற்ற விவசாயப் பணிகளும் இடம் பெற்றுள்ளன. 1908 ல் ஒரு ரஷ்ய இதழின் அட்டையில் இந்தப் புகைப்படம் வெளியாகியுள்ளது.

புரோகுடின்-கோர்ஸ்கி எந்தக் கேமராவைப் பயன்படுத்திப் புகைப்படங்களை எடுத்தார் என்பது தெரியவில்லை என்கிறார்கள்

ஜார் மன்னரின் புகைப்படக் கலைஞராக இருந்த கோர்ஸ்கி 1918-ல் ரஷ்யாவை விட்டு வெளியேறி, நார்வே மற்றும் இங்கிலாந்துக்குச் சென்று, பின்னர்ப் பிரான்சில் குடியேறினார். அங்கு அவர் 1944-ல் காலமானார்.

அவர் எடுத்த வண்ணப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் காணக் கிடைக்கின்றன.

நன்றி

https://www.openculture.com/

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 20, 2026 01:44
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.