சலிப்பு நிறமற்றது

செகாவின் சிறுகதைகளில் சலிப்பு ஒரு முக்கியக் கருப்பொருள். சலிப்புற்ற கதாபாத்திரங்களின் மனஉணர்வுகளை, செயல்களைத் துல்லியமாக எழுதியிருக்கிறார்.

சலிப்பை எழுதுவது எளிதானதில்லை. அது எழுதுவதற்கான கருப்பொருளுமில்லை. அப்படியே எழுதினாலும் அது வாசிப்பிற்கு விருப்பமானதாகயிருக்காது. சலிப்பை இவ்வளவு சுவாரஸ்யமான விஷயமாகச் செகாவால் மட்டுமே மாற்ற முடிகிறது

தனது மாறாத இடம் மற்றும் இருப்பு குறித்து ஆணிகள் சலிப்படைவதில்லை. மாறாகத் தான் உறுதியின் துணைவன் என்பதாகத் தன்னை உணருகின்றன. இயற்கையில் சலிப்பு என்பதேயில்லை. ஒரே செயல் நாம் அறியாத பலநூறு நுண்மாற்றங்களுடன் நடந்தேறுகிறது.

மனிதர்கள் சலிப்படைவதற்கு முக்கியக் காரணம் பழக்கம். புதிய விஷயங்களைச் செய்யும் போதும் புதிய கனவுகளை நோக்கி நடைபோடும் போதும் நாம் முனைந்து செய்ய வேண்டியிருக்கிறது. தோல்வி தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது. தனது அன்றாடத்தை மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டிருப்பதைப் போன்ற ஒரு பாவனை உள்ளது. அதை உணரும் தருணங்களில் தான் சலிப்பு ஏற்படுகிறது. ஒருவகையில் சலிப்புத் தன்னை அறிந்து கொள்வதற்கான துவக்கப்புள்ளி. சலிப்பின் போது ஒருவர் உலகை குற்றம் சொல்ல ஆரம்பிக்கிறார். உலகிற்கும் தனக்குமான இடைவெளியை அதிகமாக்குகிறார். புதிய உறவுகள் இல்லாதவர்களே சலிப்புற்றவர்களாக நடந்து கொள்கிறார்கள். சிறார்கள் சலிப்படைவதில்லை. காரணம் அவர்களுக்கு ஒரே விஷயம் திரும்பத் திரும்ப நடக்கும் போது, செய்யப்படும் போது வேடிக்கையானதாக மாறிவிடுகிறது. தன்னைப் பற்றிய மதிப்பீட்டினை சிறார்கள் உருவாக்கிக் கொள்வதில்லை. அதிலிருந்து தனது ஆளுமையை முடிவு செய்து கொள்வதில்லை.

செகாவ் மருத்துவராகவும் இருந்தவர் என்பதால் சலிப்பின் உடல் மற்றும் மனவெளிப்பாடுகளை நன்கு அறிந்திருக்கிறார். சலிப்பின் பின்னால் இயங்குவது சமூகக் கட்டுபாடுகள். பண்பாட்டுத் தடைகள். காரணமற்ற அச்சங்கள். மற்றும் வரம்புகள் என்பதை உணர்ந்திருக்கிறார்.

சலிப்பு எதனால் உருவாகிறது என்பதைப் பற்றிச் செகாவின் கதை விவரிப்பதில்லை. மாறாக மாற்றங்களை விரும்பாத, அதே நேரம் மாற்றங்கள் தேவை என நினைக்கிறவர்களையே கதாபாத்திரங்களாக எழுதுகிறார். துயரத்திற்கு, மகிழ்ச்சிக்கு தெய்வம் இருப்பது போலச் சலிப்பிற்கு தெய்வம் எதுவுமில்லை.

பொருட்களின் மீது தூசிபடிவது போலச் சலிப்பு நம் மீது இயல்பாகப் படிந்துவிடுகிறது. சலிப்புடன் வாழ்வதைப் பலரும் ஏற்றுக் கொண்டுவிடுகிறார்கள்.

செகாவ் சிறுகதை ஒன்றில் வரும் பெலிகோவ் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடக்கூடாது என நினைப்பவர். அதே நேரம் புதிய உறவுகள் தேவை என்றும் ஆசைப்படுகிறவர். இந்த இரட்டைநிலையைச் செகாவ் கவனப்படுத்துகிறார். காதலிக்க விரும்பும் ஒருவன் எப்படிச் சலிப்பான மனநிலையில் இருக்க முடியும் எனக் கேட்கிறார். உலகை தன்கட்டுபாட்டிற்குள் வைத்திருக்க விரும்புகிறவர்களே சலிப்பானவர்கள் என்று கேலி செய்கிறார்.

சலிப்பை கதையாக்கும் போது ஒரே நிகழ்வு திரும்பத் திரும்ப எழுதப்பட்டுவிடும் அபாயமிருக்கிறது. ஆனால் செகாவிடம் அப்படி நடப்பதில்லை. நுண்விவரிப்பு மற்றும் கதாபாத்திரத்தின் இயல்பை மீறிய செயல்கள் வழியாகச் சலிப்பை ரசிக்க வைக்கிறார். இந்தியாவில் சலிப்பு தனிநபர் அனுபவமாக உணரப்படுவதில்லை. பொது அனுபவமாக உணரப்படுகிறது. சலிப்புற்றவர்கள் அதிகமாக இருப்பதும் ஒரு காரணம். சலித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறவர்கள் இந்தியாவில் அதிகம். ரஷ்ய வாழ்க்கையில் அதிகாரம் சலிப்பை மாற்றிவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. புதிய மகிழ்ச்சிகளை நாடுவதன் வழியே சலிப்பிலிருந்து மீண்டுவிடலாம் எனச் செகாவின் கதாபாத்திரங்கள் முனைகிறார்கள்.,

A Boring Story என்றொரு சிறுகதையைச் செகாவ் எழுதியிருக்கிறார். இந்தக் கதை ஒரு வயதான பேராசிரியரைப் பற்றியது. சலிப்பான தனது வாழ்க்கையை அவரே கதையில் விவரிக்கிறார்.

ரஷ்யாவில் ஓய்வுபெற்ற பேராசிரியர் நிகோலாய் ஸ்டெபனோவிச் வசிக்கிறார். அவரிடம் ஏராளமான பதக்கங்கள் உள்ளன. அவற்றை அலங்காரமாக அணிந்துகொள்கிறார். அவருடைய நண்பர்கள் பலரும் வசதியானவர்கள். கடந்த இருபத்தைந்து அல்லது முப்பது ஆண்டுகளாக, அவருடன் பழக்கம் இல்லாத ஒரு புகழ்பெற்ற அறிஞர் கூட இருந்ததில்லை. இப்போதெல்லாம் அவர் நட்பு கொள்ள யாருமில்லை; ஆனால் அவருக்குத் திடீரென வாழ்க்கை சலிப்புற்றதாகிவிடுகிறது.

அவரது மனைவி மகள் நண்பர்கள் வேறு உலகில் வாழ்வது போலவும் அந்த உலகில் தனக்கு இடமில்லை என்பதாகவும் உணருகிறார். முன்பு தான் அப்படியான சலிப்பை அடைந்ததில்லை. உற்சாகமாக இருந்தேன் எனவும் நினைவு கொள்கிறார்.

அப்படியானால் அவர் ஏன் சலிப்பை அடைந்தார். சலிப்போடு வாழ்கிறார். சிலருக்கு திடீரென உலகம் தேவையற்றதாகி விடும். தனக்கான இடம். தனக்கான அறை. தனக்கான உணவு. மட்டுமே போதும் என்ற மனநிலைக்கு வந்துவிடுவார்கள். அவர்கள் அறியாமலே சிறிய வட்டத்தை உருவாக்கிக் கொண்டு அதற்குள் வாழ ஆரம்பித்துவிடுவார்கள். தரையில் வாழ்ந்த ஒரு தவளை கிணற்றை உருவாக்கிக் கொண்டது போன்ற நிலையது.

சலிப்பை ஆண்கள் எதிர்கொள்ளும் விதமும், பெண்கள் எதிர்கொள்ளும் விதமும் வேறுவேறு. அதைச் செகாவிடம் தெளிவாகக் காண முடிகிறது. அவரது கதையில் பெண்கள் சலிப்பை உணரும் போதெல்லாம் வெளியேறி செயல்பட ஆரம்பித்துவிடுகிறார்கள். புதிய காதலை உருவாக்குகிறார்கள். தன்விருப்பத்தின் பாதையில் நடந்து கொள்கிறார்கள். அதே நேரம் அவர்கள் அதிக மத ஈடுபாடு கொள்வதில்லை. இந்தியப் பெண் சலிப்பை அதிகம் உணரும் போதெல்லாம் சமயத்திற்குள் அடைக்கலமாகி விடுகிறாள்.

சலிப்புற்ற ஆண்கள் தனது செயல்பாட்டினை ஆராய்கிறார்கள். தவறாக மதிப்பிடுகிறார்கள். சலிப்பான கதையில் செகாவ் சித்தரிக்கும் கதாபாத்திரத்தின் உயர்வடிவமே டால்ஸ்டாயின் இவான் இலியேவிச். அதில் டால்ஸ்டாய் மரணத்தின் முன்பாகத் தனது சலிப்புற்ற வாழ்க்கையை இவான் இலியேவிச் அடையாளம் காணுவதாகச் சொல்கிறார். அங்கே தினசரி வாழ்வின் சலிப்பிலிருந்து விடுபட்ட பணியாளர் கதாபாத்திரம் மீட்சியின் வழியைக் காட்டுகிறார். திறந்த மனதுடன் நேசிப்பதன் வழியே சலிப்பிலிருந்து விடுபட முடியும் என்பதே டால்ஸ்டாயின் வழி.

அங்கிள் வான்யா நாடகத்திலும். மூன்று சகோதரிகள் நாடகத்திலும் கூடச் சலிப்பு தொடர்ந்து பேசப்படுகிறது. நாம் தொடர்ந்து, சலிப்பைப் பற்றிப் புலம்புகிறோம்,. நாம் நிகழ்காலத்தில் வாழத் தொடங்க வேண்டுமானால், முதலில் நமது கடந்த காலத்தை மீட்டெடுத்து, பின்னர் அதை என்றென்றைக்குமாக முடித்துவிட வேண்டும். நமது கடந்த காலத்தை மீட்டெடுப்பதற்கான ஒரே வழி, துன்பப்படுவதன் மூலமும், அசாதாரணமான உழைப்பிற்கும், உறுதியான மற்றும் முடிவற்ற உழைப்பிற்கும் நம்மை அர்ப்பணிப்பதன் மூலமும்தான் என்று தி செர்ரி ஆர்ச்சர்ட் நாடகத்தில் செகாவ் குறிப்பிடுகிறார்.

மனிதர்கள் அர்த்தத்திற்கு அடிமையாக இருக்கிறார்கள். நம் அனைவருக்கும் ஒரு பெரும் சிக்கல் உள்ளது: நம் வாழ்விற்கு ஏதேனும் உயர்ந்த அர்த்தம் இருக்க வேண்டும். நம்மால் சும்மா வாழ முடியாது. அர்த்தம். அர்த்தமின்மை என்பது பொதுவில் சலிப்பானது. நாம் சலிப்பை விவரிக்கலாம் உருவகமாக ஒன்றை அடையாளப்படுத்தலாம். ஆனால் அதிலிருந்து முற்றாக விடுபட முடியாது என்றும் செகாவ் குறிப்பிடுகிறார்.

சூழலின் சலிப்பும் இருப்பின் சலிப்பும் ஒன்றல்ல. ஆனால் இரண்டும் ஒன்றையொன்று பாதிக்கவும் பகிர்ந்து கொள்ளவும் கூடியது. பழைய காலத்தின் சலிப்பு வேறு. நவீன காலத்தின் சலிப்பு வேறு. அந்தக் காலத்தில் சலிப்புற்றவர்களின் ஒரே மீட்சியாகப் பயணமிருந்தது. செகாவ் தனது பயணங்களின் வழியே இதைப் பற்றித் தொடர்ந்து எழுதியிருக்கிறார். யால்டாவிலிருந்து மாஸ்கோவிற்குப் போவது என்பது சலிப்பிலிருந்து விடுபடும் வழியே, வளர்ந்து பெருகியுள்ள நவீன தொழில்நுட்பமே இன்று சலிப்பை அதிகப்படுத்துகிறது. சலிப்பு வணிகத்திற்காக முக்கியத் தூண்டுதல். சலிப்பு புதிய உணவுகளை, உடைகளை, இடங்களை நோக்கி நம்மைக் கொண்டு செல்கிறது. சலிப்பை உருவாக்குவதில் செய்திகளுக்கு முக்கியப் பங்கிருக்கிறது.

செகாவ் சலிப்படைவதை கண்டு அஞ்சினார் , மனதளவில் சலிப்பை பெரிதும் வெறுத்தார்; அதைச் சோம்பலின் அடையாயமாகக் கருதினார் அதிசெயல்பாடு உள்ளவர்கள், மிகக் குறைந்த சலிப்புக் கொண்டவர்கள் என்று நம்பினார். அது உண்மையே. தீவிரமான செயல்பாடு சலிப்பை ஏற்படுத்துவதில்லை.

வழக்கத்திற்கு மாறாக ஏதாவது செய்ய வேண்டிய தேவையை எப்போதும் சலிப்பே உருவாக்குகிறது. மகிழ்ச்சியின்மையைச் சலிப்பே ஏற்படுத்துகிறது. கோன்சரோவின் நாவலில் வரும் ஒப்லோமோவ் போன்ற சலிப்புற்ற மனிதர்களாக உலகமே மாறிக் கொண்டுவருகிறது என்பது அவரைத் தொந்தரவு செய்தது.

செக்கோவின் கதாபாத்திரங்கள் ஒரு புதிய வாழ்க்கைக்கான ஏக்கம் கொண்டிருக்கிறார்கள். அதை நோக்கி செல்ல முனைகிறார்கள். ஆனால் கடந்தகாலம் அவர்களைத் தடுத்து நிறுத்துகிறது. ஒவ்வொரு மனிதனும் இருவேறு மனநிலைகளின் உருவங்களே. ஆசையும் மறுப்பும் ஒருவனிடமே வெளிப்படுகிறது. அதிகம் காதலிக்கிறவனே அதிகம் வெறுப்பவனாகவும் மாறுகிறான் எனச் செகாவ்வின் கதைகளில் காணுகிறோம்

காசநோய் தீவிரமாகி தனது மரணத்திற்காகக் காத்திருந்த செகாவ் பேடன்பேடனில் சலிப்பை முழுமையாக உணர்ந்தார். அதிலிருந்து விடுபடக் கடைசியாக ஒரு கோப்பை ஷாம்பெயின் வேண்டுமென்று கேட்டார்.

தனது படைப்பின் வழியாக நீங்கள் எவ்வளவு மோசமான, சலிப்பான வாழ்க்கையை வாழ்கிறீர்கள். என உலகை நோக்கி செகாவ் தொடர்ந்து கேள்வி எழுப்பினார். சலிப்பிலிருந்து விடுபடுவது என்பது பொழுதுபோக்கை நாடுவதோ, குடிப்பதோ, வம்பு பேச்சுகளில் ஈடுபடுவதோயில்லை என உணர்ந்திருந்தார். ரசனை இழப்பதன் வழியாகவே ஒருவன் சலிப்புற ஆரம்பிக்கிறான் என்றார் செகாவ். அது முக்கியமானது

“படைப்பாற்றல் என்பது சலிப்பை அடிப்படையாகக் கொண்டது என்பது உங்களுக்குத் தெரியுமா? அது பலருக்குத் தெரியாது என்கிறார் கவிஞர் அன்னா அக்மதேவா.

செகாவ் இதனை நன்கு அறிந்திருந்தார். சலிப்பிலிருந்தே தனது புகழ்பெற்ற கதைகளை உருவாக்கினார்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 09, 2026 01:36
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.