“எம்பாவாய்“ வாசிப்பில் உருவாகும் உறவு
.
பேராசிரியர் சாமி . பொ.
விருதுநகர்

நன்மதி எனும் அரிதானப் பெயர் கொண்ட ஒரு பெண்மணியின் மகள் தனது அம்மாவைப் பற்றி கூறுவது போல எழுதப் பட்ட கதைதான் “எம்பாவாய் “. 2014ல் வெளியான சிறுகதை. அவளது வீடு சிறுகதைத் தொகுப்பில் உள்ளது,

சிறுகதையின் தலைப்பைப் பார்த்தவுடன் நம் அனைவருக்குமே ஸ்ரீ ஆண்டாள் எழுதிய திருப்பாவைதான் நினைவுக்கு வரும். இந்தக் கதைக்கும் ஸ்ரீ ஆண்டாளுக்கும் இடையே என்ன தொடர்பு இருக்கிறது என்னும் எண்ணத்துடன் கதையினை வாசிக்க ஆரம்பித்தேன்.
ஆம் கதைக் களம் ஸ்ரீ வில்லிபுத்தூரில்தான் அமைக்கப் பட்டுள்ளது.
*கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள், இந்தப் பேதை நன்மதி சமையல் கட்டை ஆண்டாள்.*
சிறு வயதிலேயே திருமணமாகி மூன்று குழந்தைகளின் தாயாகி காபி தூள் வணிகம் செய்யும் கண்டிப்பான கணவர், மாமனார் மற்றும் கொழுந்தனாருக்கு பணிவிடை செய்தே தனது காலத்தை களிப்பவள் நன்மதி. அவளிடம் இருந்த தீராத வாசிப்பு பழக்கம் அவளை எவ்வாறு வசீகரித்தது என்பதனைத்தான் இந்தக் கதை பேசுகிறது.
நன்மதி தனது ஓய்வு நேரங்களில் எல்லாம் வாசிக்கத் தவறுவது இல்லை. அவள் வீட்டை விட்டு வெளியில் செல்ல ஆயிரம் முட்டுக் கட்டைகள் இருந்த போதிலும் அவள் வீட்டுக்குள் வந்த புத்தகங்கள் வழியே இந்த உலகை வலம் வந்து கொண்டிருந்தாள் என்பதுதான் ஆறுதலான உண்மை. வாசிப்பில் ஆர்வமுள்ள நன்மதிக்கு புதுமை எழுத்தாளர் வாகினி சுப்பிரமணியம், அவரது நாவல்கள் மூலம் அறிமுகமாகிறார்.
அவரது எழுத்து வாசிப்பவருக்கு அருகிலிருந்து கதை சொல்லுவது போல இருக்கும். மனதில் தோன்றுவதை எழுத்துக்களாக மாற்றும் வல்லமை பெற்றவர் அவர். எழுதுகிற பெண்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று அடிக்கடி தனக்குத்தானே சொல்லிக்கொண்டு வாகினி சுப்ரமணியம் அவர்களை தோழியாக பாவித்துக் கொண்டு தனது குடும்பச் சூழலில் வாழ்ந்து கொண்டிருந்தாள் நன்மதி.
இந்தத் தருணத்தில் நன்மதிக்கு, வாகினி சுப்பிரமணியம் அவர்கள் ஸ்ரீ வில்லிபுத்தூரில் உள்ள இலக்கியக் கழகத்தின் முத்தமிழ் விழாவில் சிறப்புரை நிகழ்த்த வரும் விவரம் தெரிய வருகிறது. எப்படியாவது அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு வாகினி சுப்பிரமணியம் அவர்களின் பேச்சை நேரில் கேட்டு விட வேண்டும் எனும் தவிப்பில் இருந்த நன்மதி அந்த நாளில் எப்படி வீட்டின் தடைகளை சமாளித்து கூட்டத்திற்கு சென்று வந்தார், வாகினி சுப்பிரமணியம் அவர்களை எவ்வாறு சந்தித்தார் பின்னர் இருவரும் ஒருவருக்கொருவர் *எம்பாவாயாக* எவ்வாறு மாறினார்கள் என்பதனை கதை கண் முன்னே நடப்பதைப் போல அருமையாக எழுதியிருக்கிறார் எஸ் ரா.
அவர்களின் சந்திப்பின் போது குடும்ப வேலைப் பளு மற்றும் கட்டுப்பாடுகளில் கட்டுண்டு கிடக்கும் தன்னை விட வாகினி சுப்பிரமணியம் எழுத்து மட்டுமே தன் உலகம் என எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறாள் என்பதைப் பார்த்து வியந்து போகிறாள் நன்மதி. அவர்கள் சந்திப்பு நடக்கும் அந்த அரை நாளில், தனது அன்பு வாசகியின் பாசத்திற்கு அடி பணிந்து அதே சமயம் அந்த வீட்டில் நிலவும் பெண்ணடிமைத் தனத்தையும் சாடுகிறார் வாகினி சுப்ரமணியம்.
இருவரும் கோவில் வரை சென்று விடை பெறும் அந்த சில நேரத்திற்குள் வாகினி சுப்ரமணியம் எவ்வளவு சுதந்திரமானவள் என்பதனையும் தனது முடிவுகளை தானே எடுக்கும் உரிமை உள்ளவள் என்பதனையும் மேலும் நன்மதி எதையும் சுயமாக முடிவு எடுக்க முடியாத அடிமையாக இருக்கிறாள் என்பதையும் கதைப் போக்கில் நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
கதை வாசிப்பின் மூலம் ஒரு கதாசிரியரை கற்பனை செய்து வைத்திருந்த ஒரு வாசகி நேரில் தான் கற்பனை செய்து வைத்திருந்த பாத்திரமாக அவரைப் பார்த்து ஒரே நாளில் இருவரும் தோழிகளாக மாறுவது சிறப்பு. இரண்டு வாரத்திற்குப் பின்னர் வாகினி சுப்ரமணியம் நன்மதிக்கு பரிசுடன் ஒரு கடிதம் அனுப்புகிறார். அதனைத் தனது வீட்டின் கண்டிப்புத் தன்மை காரணமாக காப்பாற்ற இயலாமல் போன நன்மதி தனது நிலையினை தன் எழுத்தாளர் தோழிக்கு ஒரு கடிதமாக எழுதுகிறாள். அதில் “நான் இருக்கும் குடும்பச் சூழலில் உனக்கு கடிதம் எழுத முடியாது. நீயும் எனக்கு கடிதம் எழுத வேண்டாம். முடிந்தால் உனது ஒரு நாவலில் என்னை ஒரு கதா பாத்திரமாக மாற்றி விடு” என எழுதி அனுப்பி விடுகிறாள். இந்த வரிகளை வாசிக்கும் போது எனது கண்கள் பனிப்பதைத் தவிர்க்க முடியவில்லை.
நன்மதி எழுதிய இந்த ஒரு பக்கக் கடிதத்தை வாகினி சுப்ரமணியம் 1976 ல் தான் தொகுத்த காலத்தின் குரல் எனும் தொகுப்பில் பிரசுரித்து அதன் ஆங்கில மொழி பெயர்பை தானே எழுதி இருக்கிறார். இந்த விஷயத்தை தன் மகள் மூலமாக அறிந்த இந்த கதை சொல்லி, இப்போது வாகினி சுப்பிரமணியத்தின் எந்த நாவலில் மறைந்த தனது அம்மா கதா பாத்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று தேடுவது போல கதை முடிகிறது.
இயல்பாக நிறைய இல்லங்களில் நடக்கும் சொல்ல முடியாத வன்மத்தை இந்த அளவுக்கு நாகரீகமாக எஸ் ரா தவிர எவராலும் சொல்ல முடியாது.
இந்த எம்பாவாய் கதை எஸ் ரா அவர்களின் அவளது வீடு சிறு கதைத் தொகுப்பில் வெளியான கதையாகும். இந்தத் தொகுப்பை எனது மனைவியின் சென்ற பிறந்ததினப் பரிசாக வழங்கினேன். அவர் இந்தக் கதையினை வாசித்து விட்டு என்னிடம் பின் வருமாறு கூறினார்
*”இந்த எம்பாவாய் எழுதப் போராடும் பெண்ணும், வாசிக்கவே போராடும் பெண்ணும் தோழியரானக் கதை”*.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 676 followers

