நீரறியா அன்னங்கள்

புதிய சிறுகதை. பிப்ரவரி 24, 2026

டர்க்கி டவலால் அன்னம் செய்வது அவளது வேலை.

ஜேசி டவர்ஸ் ஹோட்டலில் அறுபத்து நான்கு அறைகளிருந்தன. அதில் ஆடம்பர அறைகள் எட்டு. அந்த அறைகளுக்கு மட்டும் வெண்ணிற டர்க்கி டவலால் அன்னம் செய்து வைக்க வேண்டியது ராஜதிலகத்தின் வேலை.

ஜோடி அன்னங்கள் செய்து இதய வடிவில் படுக்கையில் வைக்க வேண்டும். அறையில் தங்குகிறவர்களில் குழந்தைகள் இருப்பார்கள் எனில் அவர்களுக்கெனக் குட்டியானை அல்லது முயலை டவலில் செய்து வைப்பது வழக்கம்.

டர்க்கி டவலை குறுக்கே மடித்து அன்னம் செய்யும் போது ராஜதிலகம் சிறுமியைப் போல மகிழ்ச்சி அடைவாள். மடிப்பதற்கு முன் துண்டை முழுவதுமாக உலர்த்த வேண்டும். சற்று ஈரமான துண்டாக இருந்தாலும் கூட அன்னத்தைச் சோம்பலாகவும் சோகமாகவும் காட்டிவிடும்.

அறையில் தங்க வருகிறவர்கள் கதவை திறந்து உள்ளே வந்தவுடன் இந்த அன்னங்களைப் பார்த்து எப்படி அதிசயப்பார்கள் எனக் கற்பனை செய்து கொள்வாள். நீரறியாத அந்த அன்னங்களை ஒன்றிரண்டு பேர் அரிதாகப் பாராட்டியிருக்கிறார்கள். மற்றவர்கள் அன்னங்களைப் பொருட்படுத்தியதில்லை.

சிலரோ குளியல் துண்டினை ஏன் இப்படி அலங்காரப்படுத்தியிருக்கிறார்கள் என்று எரிச்சல் அடைவார்கள். ரிசப்ஷனைத் தொடர்பு கொண்டு இப்படி மடிக்காத டவல் வேண்டும் என்று கேட்டு வாங்குவார்கள். அப்போதெல்லாம் ராஜதிலகம் வருத்தமடைவாள். ஆனால் அதனை வெளியே காட்டிக் கொள்ள மாட்டாள்.

ராஜதிலகத்திற்கு முப்பத்திரெண்டு வயது நடந்து கொண்டிருந்தது. ஆடம்பரத்தை விட, தனக்குப் பொருத்தமான, நேர்த்தியான ஆடைகளைத் தேர்ந்தெடுத்து அணிந்து கொள்வாள். ஒரு நாளில் நாலைந்து முறை முகம் கழுவிக் கொள்வாள். சிறிய ஸ்டிக்கர் பொட்டுகளை விரும்பி வைத்துக் கொள்வாள். அழகு சாதனப்பொருட்கள் எதையும் பயன்படுத்தமாட்டாள். காலில் உள்ள பித்தவெடிப்பை மறைப்பது அவளது வழக்கம். அதைப் பற்றிய குற்றவுணர்வும் அவளுக்குண்டு. ஹோட்டலில் பணியாளர்கள் பூவைத்துக் கொள்ளக்கூடாது என்ற நிபந்தனை இருந்தது. ஆகவே பூ வைத்துக் கொள்ள மாட்டாள்.

ஹோட்டலின் அறைகளைச் சுத்தம் செய்வதற்கு ஆறு பணியாளர்கள் இருந்தார்கள். அவர்கள் சுத்தம் செய்தபின்பு இது போல டவல் அன்னம், ஆப்பிள் பழத்தை வெட்டிச் சிற்பம் செய்வது, போன்ற அலங்கார வேலைகளை அவள் செய்ய வேண்டும். இது மட்டும் அவளது வேலையில்லை. சரியாகச் செயல்படாத லிப்டில் அதிக மணமுள்ள வாசனை திரவியம் அடிப்பது, டைனிங் மேஜையில் குறுக்கெழுத்து விளையாடும் காகிதங்களை வைப்பது, வரவேற்பறையிலுள்ள பிளாஸ்டிக் பூக்களின் மீது தண்ணீர் தெளித்து நிஜப்பூக்கள் போலத் தோற்றம் தரச் செய்வது, அறைக்கண்ணாடியில் தூசி படிந்திருக்கிறதா என விரலால் தொட்டுச் சரிபார்ப்பது, எனப் பல்வேறு பணிகளும் அவளுக்கு இருந்தன.

ஹோட்டலுக்கு வரும் விருந்தினர்களை மகிழ்ச்சிப்படுத்தவும், எல்லாமும் அங்கே நேர்த்தியாக, தூய்மையாக இருப்பது போல நம்ப வைப்பதுமே அவளது வேலை. உண்மையில் அது ஒரு நாடகம். தான் ஒரு நடிகை. கச்சிதமாகத் தனது நாடகத்தை நிகழ்த்துவதாக உணர்ந்தாள்.

வாடிக்கையாளர்கள் ஹோட்டல் அறையைக் காலி செய்துவிட்டு வெளியேறியதும் தூய்மை செய்பவர்கள் அறையில் வீசி எறியப்பட்ட ஈரத்துண்டுகளைச் சேகரிப்பார்கள். ஒருவர் கூட அந்தத் துண்டுகளை அதற்கென உள்ள இரும்புக்கம்பியில் காயப்போட்டிருப்பதில்லை. அறைகளை விட்டு வெளியேறும் சலிப்பின் அடையாளம் போலப் பலரும் ஈரத்துண்டினை தரையில் சுருட்டி வீசியிருந்தார்கள். வீடு தராத எதையோ அறை தந்துவிடும் என நம்பி ஏமாந்தவர்களின் மனநிலையைப் போலிருந்தன அந்த ஈரத்துண்டுகள்.

ஹோட்டல் அறைக்கு வந்தவுடன் பலரது நடவடிக்கைகளும் மாறிவிடுவதை ராஜதிலகம் கண்டிருக்கிறாள். வீட்டில் வெளிப்படுத்த முடியாத கோபத்தை, எரிச்சலை வெளிப்படுத்துகிறார்கள். தங்கள் வயதை மறந்து நடந்து கொள்கிறார்கள்.

ஒருமுறை அவள் செய்து வைத்த டவல் அன்னம் ஒன்றிலிருந்த தலைமயிர் ஒன்றினை கண்டுபிடித்த பெண் ரிசப்ஷனில் புகார் அளித்தாள். அந்தத் தலைமயிர் தன்னுடையதில்லை. தனக்கு அவ்வளவு நீளமான தலைமுடியில்லை என ராஜதிலகம் விளக்கம் அளித்தாள். ஆனால் அந்தப் பெண் நம்பவில்லை. ராஜதிலகத்தைக் கண்ணாடி முன்பாக நிற்க வைத்து டவலில் கிடந்த தலைமயிரை அவளது தலையில் வைத்து அளந்து பார்த்தாள். ராஜதிலகத்திற்கு அவமானமாக இருந்தது.

“ வேற டவல் தர்றேன் மேடம் “ என்று அமைதியான குரலில் சொன்னாள்

“ இந்தக் கண்றாவி எல்லாம் எனக்குப் பிடிக்காது. எடுத்துட்டு போயிடு“ என டவல் அன்னங்களை அந்தப் பெண் வீசி எறிந்த காட்சி அவளது மனதில் உறைந்து போயிருக்கிறது.

டவலில் அன்னம் செய்வதற்கு ராஜதிலகம் தானாகவே கற்றுக் கொண்டாள். சிறுவயது முதலே இப்படிப் பூத்தையல், ஒயர்கூடை பின்னுவது. மண்பொம்மை செய்வது. ஒட்டுத்துணியால் சுருக்குப்பை தைப்பது, காலி பவுடர் டப்பாவை அலங்காரப் பொருளாக்குவது எனக் கலைப்பொருட்கள் செய்வதில் ஆர்வம் கொண்டிருந்தாள்.

பத்தாம் வகுப்பு படிக்கும் போது அவள் செய்திருந்த சுழலும் தீக்குச்சி மங்கை முதல்பரிசு பெற்றது. தீக்குச்சியில் அழகான பெண்ணைச் செய்து அதைச் சுழலும் படியாகச் செய்திருந்தாள். அதுவும் சுற்றிலும் வண்ணக் கண்ணாடிகள் வைத்து. அதனைச் செய்வதற்கு ஐந்து நாட்கள் ஆனது.

வீட்டுவேலைகளைப் போட்டுவிட்டு இப்படித் தீக்குச்சி பொம்மை செய்கிறாளே என அம்மா திட்டியதை அவள் கண்டுகொள்ளவேயில்லை.

தீக்குச்சி மங்கையை ஜாக்கிரதையாகப் பள்ளிக்குக் கொண்டு சென்றாள். மற்ற மாணவிகள் எவரிடமும் இல்லாத திறமை தனக்கு மட்டுமே இருப்பதாக நம்பினாள். முதல்பரிசாக ஒரு சில்வர் டிபன்பாக்ஸ் கொடுத்தார்கள். அந்த டிபன்பாக்ஸிற்கும் ராஜதிலகம் இளஞ்சிவப்புத் துணியில் உறை செய்து போட்டுக் கொண்டாள்

கலைப்பொருட்கள் செய்வதில் காட்டிய ஈடுபாட்டினை படிப்பில் காட்ட முடியவில்லை. பனிரெண்டாம் வகுப்பில் 731 மதிப்பெண் மட்டுமே பெற்றிருந்தாள். ஆகவே உள்ளூர் பெண்கள் கல்லூரியில் தாவரவியல் படிப்பதற்குச் சீட் கிடைத்தது.

கல்லூரி படிக்கும் நாட்களில் தனது ஜாக்கெட்டுகளைத் தானே தைத்துக் கொண்டாள். தனது ஹேண்ட்பேக்கை தானே உருவாக்கிக் கொண்டாள். காபி மக்குகளில் ஓவியம் வரைந்து விற்று பணமும் சம்பாதித்தாள்.

தனக்கு விருப்பமான கைவினைப்பொருட்களைச் செய்துவிற்கும் சிறிய கடை ஒன்றை துவங்கி நடத்த வேண்டும் எனக் கனவு கண்டாள். ஆனால் அவளது வீட்டில் யாரும் அதை விரும்பவில்லை. டிகிரி முடித்த உடனே திருமணம் செய்து கொடுத்து விட்டார்கள். புதிய நகரம். புதிய வசிப்பிடம். அவளுக்குக் குழப்பமாக இருந்தது. அதுவும் கணவன் இல்லாத பகலில் மூடிய வீட்டிற்குள் அடைந்தேயிருப்பது கஷ்டமாக இருந்தது. அதன்பிறகு பல்பொருள் அங்காடி ஒன்றில் வேலைக்குப் போகத் துவங்கினாள். அங்கிருந்த நாட்களில் அறிமுகமான சரோஜினி மூலமாக ஜேசி டவர்ஸில் வேலை கிடைத்தது.

அவளது கணவன் உத்ராபதி எக்ஸ்ரே சென்டரில் வேலை செய்து வந்தான். ஆகவே ஞாயிற்றுகிழமை கூட விடுப்புக் கிடையாது. அவசர வேலை எனச் சில நாட்கள் பின்னிரவில் கூட மருத்துவமனையிலிருந்து அழைப்பார்கள்.

திருமணத் தினத்தன்று அவள் அணிந்திருந்த பஞ்சாரா பாணி ராஜஸ்தானி செருப்பைக் கூட அவளே தான் தயாரித்தாள். உத்ராபதி அதைப் பாராட்டவில்லை. அவள் ஆசையாக அதைப்பற்றிக் கேட்டபோது “ ஜிகுஜிகுனு என்னமோ ராணி போடுற செருப்பு மாதிரி இருக்கு.. இதைப் போட்டுட்டு வெளியே போயிராதே“ என்றான்.

வீட்டில் அவளது கலைத்திறனை யாரும் பாராட்டியதில்லை ஆகவே உத்ராபதி கேலி செய்ததை அவள் பொருட்படுத்தவில்லை. பாராட்டியிருந்தால் அவனுக்கும் கோலாபுரி அலங்கார செருப்பு ஒன்றை வாங்கித் தர நினைத்திருந்தாள். அந்த அவசியமில்லாமல் போய்விட்டது.

ராஜதிலகத்தின் அப்பா கோவில் பிரசாதக் கடையில் வேலை செய்து வந்தார். மாலை நேரம் மட்டுமே திறக்கும் கடையது. வருமானம் குறைவு. ஆறு பேர் கொண்ட குடும்பத்தில் அவள் கடைசிப் பெண். ஆகவே விரும்பிய எதுவும் அவளுக்குக் கிடைக்கவில்லை. அவளது அக்காவும் அண்ணன்களும் திருமணமாகி ஆளுக்கு ஒரு ஊர் போய்விட்டார்கள். அப்பா இன்றைக்கும் கோவில் பணியாளராகவே இருந்தார். பாவம் அம்மா முப்பது வருஷமாக ஒற்றைத் தலைவலியில் துடித்துக் கொண்டிருக்கிறாள்.

வீட்டுச்சுவரில் மாட்டப்பட்டிருந்த அப்பா அம்மாவின் திருமணப் புகைப்படத்தில் காணும் அம்மாவின் அழகு எங்கே மறைந்து போனது எனத் தெரியவில்லை. பிள்ளைகளான அவர்கள் தான் அந்த அழகை கரைத்துப் போகச் செய்தார்கள். சமீபமாகத் தானும் அம்மாவைப் போலவே மாறிக் கொண்டிருப்பதாக ராஜதிலகம் உணர்ந்தாள்.

அவளுக்குச் சிறுவயது முதலே ஈரத் துணிகள் கொடியில் காய்ந்து கொண்டிருப்பதை வேடிக்கை பார்ப்பது பிடிக்கும். காற்றில் துணிகள் நடனமாடிக் கொண்டிருப்பது போலவே உணருவாள். துணிகள் காய்ந்து கொண்டிருப்பது நமது வருத்தங்கள். கவலைகள் அகன்று போவதன் அடையாளம் போல நினைப்பாள்.

மனிதர்களைத் தவிர வேறு ஏதாவது ஜீவராசி ஆடை அணிந்து கொள்கிறதா என்ன. ஆனால் உலரும் ஆடைகளைக் குருவிகள் வேடிக்கை பார்க்கின்றன. காகங்கள் சட்டை அணிந்து கொள்ள ஆசைப்படுவதைப் போலக் கொடியில் அமர்ந்து வெறித்துப் பார்க்கின்றன. பூனைக்குட்டியொன்று கொடியில் காயப்பட்ட சேலையை இழுத்துப் போட்டு அதற்குள் சுருண்டு கொள்வதில் சந்தோஷம் அடைகிறது.

புதிதாக வீடு கட்டினால் அதில் நாலைந்து பெரிய கொடிகளைக் கட்டி வரிசை வரிசையாகத் துணிகளைக் காயப் போட வேண்டும் என மனதிற்குள் விரும்பினாள். சில நேரங்களில் இப்படி எந்தப் பெண்ணாவது ஆசைப்படுவாளா என அவளுக்கே தோன்றும். அதை நினைத்து வெட்கப்படவும் செய்தாள்.

பள்ளி நாட்களில் அம்மாவிற்கு உதவியாகத் துணி காயப்போடுவாள். பிளாஸ்டிக் வாளியில் உள்ள ஈரத்துணிகளைத் தூக்கமுடியாமல் தூக்கிக் கொண்டு போய்க் காயப்போட வேண்டும். ஈரத்துணிகள் முரட்டுத்தனமான மனிதர்களைப் போன்றவை. அவற்றைக் கையாளுவது எளிதில்லை. கொடியில் ஈரமான பேண்டை போட்டுவிட்டு அது நழுவ முயலும் போது ஒழுங்கா இருடா எனத் திட்டுவாள். அப்பாவின் சட்டை காயும் போது அப்பாவை போல விறைப்பாக இருப்பதாகத் தோன்றும். கர்சீப்களைக் காயப்போடும் போது அவை சிறகுகள் போலவே அசைந்து கொள்ளும்.

அவர்கள் செக்கடித் தெருவில் குடியிருந்த போது பக்கத்துவீட்டு மாடியில் தான் துணி காயப்போட வேண்டும். அவர்கள் வீட்டில் காயப்போட இடம் கிடையாது. அந்த வீட்டின் படிகளில் ஈரத்துணிகள் கொண்ட வாளியை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு நடப்பாள்.

வீட்டு உரிமையாளர்களின் துணி காயாத கயிற்றுக் கொடியில் காயப்போட வேண்டும். அப்படிப் போட்டாலும் காற்றின் வேகத்தில் ஈரம் அவர்கள் துணியில் தெறித்துவிட்டால் அந்த வீட்டம்மாள் சண்டைக்கு வந்துவிடுவாள். ஒருமுறை அவர்கள் காயப்போட்டிருந்த துணிகளை அப்படியே அள்ளி தெருவில் வீசி எறிந்திருக்கிறாள். மனிதர்களின் கோபம் எப்படி வெளிப்படும், அப்போது எப்படி நடந்து கொள்வார்கள் என்பது புதிரானதே.

ராஜதிலகத்தைப் பொறுத்தவரை உடைகளில் அதை அணிபவரின் சுபாவம் படிந்துவிடுகிறது. அவர்கள் ஆசைகளும் படிந்துவிடுகிறதோ என்னவோ. காய்ந்த உடைகளை மாலையில் எடுத்து வரும் போது பகல் முழுவதும் ஒன்றோடு ஒன்று சப்தமாகப் பேசிக் கொண்டிருந்த உடைகள் மாலையில் மௌனமாகிவிட்டதைப் போல உணருவாள்.

தனது உடைகள் ஒவ்வொன்றுக்கும் அவள் ரகசியமான பெயர் ஒன்றை வைத்திருந்தாள். மரபீரோவில் அடுக்கி வைக்கபட்டிருந்த உடைகளில் ஒன்றை அணிவதற்காகக் கையில் எடுக்கும் போது அந்த ரகசியப் பெயர் சொல்லியே அழைப்பாள். துவைக்கும் போது அந்தப் பெயர் சொல்லியே திட்டுவாள். வெயில் முற்றிய நாட்களில் துணிகள் வேகமாகக் காய்ந்துவிடும். அது போன்ற நேரங்களில் காய்ந்த சேலையை முகத்தில் போட்டுக் கொண்டு வானைப் பார்த்தபடியிருப்பாள். அப்படி நிற்கும் போது தான் அழகாக இருப்பதாக அவளுக்குத் தோன்றும்.

“ இந்தக் கிறுக்குதனங்களை எல்லாம் போகிற வீட்டில் வைத்துக் கொள்ளதே. அப்புறம் உன் பாடு திண்டாட்டம் தான்“ என அம்மா பலமுறை திட்டியிருக்கிறாள்

இவை கிறுக்குதனங்கள் தானா. இவற்றைத் தொடருவதால் என்ன ஆகிவிடப்போகிறது என நினைத்திருக்கிறாள். ஆனால் கல்யாணத்திற்குப் பிறகு அவள் துணி காயப்போட்டபடி கொடியின் அருகிலே நிற்பதைக் கண்ட கணவன் “ ஈரத்துணியைக் கொஞ்சிட்டு இருக்கியா“ எனத் திட்டியிருக்கிறாள்.

அவளது இரண்டு பிள்ளைகளும் கூட அவள் துணிகளை மடிக்கும் அழகைக் கேலி செய்திருக்கிறார்கள். ஆனாலும் எவர் வீட்டிலாவது துணி காய்ந்து கொண்டிருப்பதைக் கண்டால் அதனை நின்று வேடிக்கை பார்க்கும் பழக்கம் அவளை விடவில்லை. உடைகள் அவளிடம் எதையோ சொல்கின்றன போலும்.

புதிய உடைகள் வாங்கி வந்தவுடன் அவற்றைத் தண்ணீரில் நனைத்து விடுவாள். “ உடுத்தி அழுக்கான பின்பும் நனைக்க வேண்டியது தானே“ எனக் கணவன் கோவித்துக் கொண்டிருக்கிறான்

“ நனைச்சி காயப்போட்டு அப்புறம் தான் நாம போட்டுகிடணும். அப்போ தான் அது நம்ம டிரஸ். புது டிரஸ் மொடமொடனு நம்ம உடம்புல ஒட்டாது. நனைச்சிட்டா அடங்கிப் போயிடும்“ என்பாள்.

“ உன் கோட்டித்தனத்தை எங்க போய்ச் சொல்றது“ எனக் கணவன் சலித்துக் கொள்வான்.

எல்லாவற்றுக்கும் காரணம் இருக்க வேண்டுமா என்ன. சில செயல்கள் நமக்குப் பிடித்திருக்கின்றன. அது போதாதா.

••

ஜேசி டவர்ஸில் காலை எட்டு மணிக்கு வேலைக்கு வர வேண்டும். அதுவும் திருமண நிகழ்வுகள் நடைபெறும் நாட்களில் காலை ஆறரை மணிக்கே ஹோட்டலுக்கு வந்துவிட வேண்டும். இரவு ஒன்பது வரை வேலையிருக்கும். சிரமம் பாராமல் வேலை செய்தாலும் பூர்ணிமாவிடமிருந்து பாராட்டினைப் பெற முடியாது.

பூர்ணிமா அந்த ஹோட்டலின் மேனேஜராக இருந்தாள். முப்பத்தைந்து வயதிருக்கும். அடர்த்தியான கூந்தல். அதை தளர்வாக விட்டிருப்பாள்.. ஆள்காட்டி விரலுக்கு மட்டும் நெயில் பாலிஷ் போட்டிருப்பாள். இறுக்கமான முகம். நாள் முழுவதும் சிடுசிடுவென யாரையாவது திட்டிக் கொண்டேயிருப்பாள். எதற்காகவும் எவரையும் பாராட்டியதேயில்லை. அவளது அறையில் இருந்தபடியே கேமிரா மானிட்டர்கள் மூலம் பணியாளர்களின் செயல்களைக் கண்காணித்துக் கொண்டிருப்பாள். அவளது கண்ணிலிருந்து எதுவும் தப்பிவிட முடியாது.

டர்க்கி அன்னங்களைச் செய்து படுக்கையின் நடுவில் வைத்துவிட்டு ராஜதிலகம் ரிசப்ஷனுக்கு வரும்வரை காத்திருந்துவிட்டு வந்தவுடனே எந்தெந்த அறையில் அன்னம் படுக்கையின் நடுவில் வைக்கப்படவில்லை என்று திட்டுவதுடன் அதை உடனே சரிசெய்து வா என்று துரத்திவிடுவாள்.

தான் சரியான இடத்தில் தான் வைத்திருக்கிறோம் என்று தெரிந்தாலும் ராஜதிலகம் திரும்ப அந்த அறைகளுக்குச் சென்று அன்னங்களைச் சரி செய்து வைப்பாள்.

இந்த முறை அன்னம் சரியாக வைக்கபட்டிருக்கும் ஆனால் அதன் கழுத்து சரியாகவரவில்லை என்று திட்டுவாள். இது போலப் பிளாஸ்டிக் பூக்களின் மீது தெளிக்கப்பட்ட நீர்துளி சீராகயில்லை எனச் சுட்டிக்காட்டுவாள். இல்லாத குறைகளைக் கண்டுபிடித்து அதற்காகத் திட்டிக் கொண்டேயிருக்கிறாளே என ராஜதிலகத்திற்கு ஆத்திரமாக வரும்.

தன்னை ஏன் பூர்ணிமா வெறுக்கிறாள். தேவையற்று சிடுசிடுக்கிறாள் என ராஜதிலகத்திற்குப் புரியவேயில்லை. பூர்ணிமாவை ஹோட்டலில் யாருக்கும் பிடிக்காது. அவளது கெடுபிடியாலே பணியாளர்கள் ஒடிவிடுகிறார்கள்.

பூர்ணிமாவின் கணவர் யாரென யாருக்கும் தெரியாது. அவள் எழில்நகரில் வசிக்கிறாள் என்பது மட்டுமே தெரியும். ஹோண்டாசிட்டி காரை ஒட்டிக் கொண்டு வருவாள். அவளுக்குக் குழந்தைகள் இருக்கிறதா, உறவினர் யாரேனும் உண்டா எதுவும் யாருக்கும் தெரியாது. அவள் ஹோட்டல் சின்னமுதலாளியோடு நெருக்கமாக இருக்கிறாள் என்று பணியாளர்கள் பேசிக் கொண்டார்கள்.

அதை நிஜமாக்குவது போலச் சின்ன முதலாளி பிரபுவோடு அவள் காரில் வெளியே போவதும் உண்டு. அது அவளது தனிப்பட்ட விஷயம். ஆனால் எதற்காக வேலை செய்கிறவர்களைத் திட்டிக் கொண்டேயிருக்கிறாள். சம்பளத்தைப் பிடித்துக் கொள்கிறாள். அகம்பாவமாக நடந்து கொள்கிறாள் என ராஜ திலகத்திற்குப் புரியாது.

பூர்ணிமா முகத்திற்குப் பொருந்தாத கண்ணாடி அணிந்திருக்கிறாள். யாரிடமும் சொல்லாத போதும் கவலைகள் அவளது கண்களின் அடியில் படிந்திருப்பது தெரிந்தது. ஏன் இப்படித் தனது வயதை அதிகப்படுத்திக் காட்டிக் கொள்கிறாள். ஈரத்துணிகள் தன் இயல்பை மீறி கனமாகிவிடுவதைப் போலத் தான் அவளும் நடந்து கொள்கிறாளோ என ராஜதிலகத்திற்குத் தோன்றியது

••

வெள்ளிக்கிழமையன்று அந்த ஹோட்டலுக்கு டெல்லியிலிருந்து வந்திருந்த பேராசிரியர் ராஜப்பா டவல் அன்னங்களை ரசித்துவிட்டு ரிசப்சனுக்குப் போன் செய்து அவளைத் தனது அறைக்கு வரச் சொல்லியிருந்தார்.

கூச்சத்துடன் ராஜதிலகம் அவரைக் காணச் சென்றாள்

ராஜப்பாவிற்கு எழுபது வயதைக் கடந்த தோற்றம். வெள்ளை குர்தா அணிந்திருந்தார். நரைத்த குறுந்தாடி. பெரிய புருவங்கள், வெள்ளை விழுந்த உதடு. தெற்கத்திய முகம். தங்கபிரேம் கொண்ட மூக்குகண்ணாடி.

“உன் பேரு என்னம்மா“

“ராஜதிலகம்“

“யுனிக் நேம்.. இந்த அன்னங்களை ரொம்ப அழகா செய்திருக்கீங்க.. இதை டவலா யூஸ் பண்ண மனசு வரலை.. இதை எப்படிச் செய்றீங்க. எனக்குச் செய்துகாட்ட முடியுமா“

“ரொம்பச் சிம்பிள் சார்“ என அவள் அந்த அன்னங்களைக் கலைத்து டவலாக்கினாள். மீண்டும் அவர் முன்பாகவே மடித்து அன்னங்களாக உருமாற்றினாள்.

“வொண்டர்புல்.. இப்போ இது வெறும் துண்டில்லே. கலைப்பொருள். சின்னஞ்சின்ன விஷயங்கள் எவ்வளவு அழகா மாறிடுது பாருங்க. யார்கிட்ட இதைக் கத்துகிட்டீங்க“

“நானா கத்துகிட்டேன் சார்“

“வெரிகுட். படுக்கையில ஏன் அன்னங்கள் செய்து வைக்குறாங்க தெரியுமா“

“அது லவ் சிம்பள் சார்“ என்றாள்

அது மட்டுமில்லை. இதுக்குப் பின்னாடி நிறையக் கதையிருக்கு. நீ ஸ்கூல்ல படிச்சிருப்பியே.. கிரீக்ஸ் அவங்க தான் இப்படித் துணியில் அன்னம் செய்து வச்சவங்க.. இந்த அன்னங்களுக்குக் கண் வைக்ககூடாதுனு அவங்க நம்பிக்கை “

“நான் எப்பவும் கண்வச்சதில்லை சார்“

“இந்த அன்னங்களுக்குக் கண்வச்சிட்டா அது ரூம்ல தங்க வர்ற கெஸ்டை விரட்டி அடிச்சிருமாம். அவங்க உடல்நலத்தைப் பாதிச்சிரும்னு ஒரு பயம் இருக்கு“

“நிஜமாவா சார்“

“அப்படி சொல்றாங்க. நான் நிறைய நாடுகளுக்குப் போயிருக்கேன். ஹோட்டல் ரூம்ஸ் பற்றி இப்படி நிறைய நம்பிக்கை, பயம் இருக்கு..உங்க ஹோட்டல்ல ஏதாவது தற்கொலை நடந்திருக்கா“

“இல்லை சார்“

“எல்லா ஹோட்டல்லயும் ஒரு சூசைட் ஸ்டோரி இருக்கும். அதை வெளியே சொல்லமாட்டாங்க“. என அவர் சிரித்தார். பிறகு அவளிடம் டிரஸ்ஸிங் டேபிள் அடியில் பென்சிலால் விஜயராணி என எழுதப்பட்டிருந்தைக் காட்டினார்

“யாரோ ஒரு ஸ்கூல் பொண்ணு தான் இதுக்கு அடியில் எழுதியிருக்கணும்.

இதுக்குப் பின்னாடி ஒரு கதை ஒளிஞ்சிட்டு இருக்கு பாத்தியா . “

“சாரி சார். ரூம் கிளீன் பண்ணுறவங்க கவனிக்கலை. நான் இப்போ துடைச்சிருறேன்“ என்றாள்

“வேண்டாம் இருக்கட்டும். கண்ணுக்குத் தெரியாத துணை

இருக்கிறது நல்லது தான்“ எனச் சிரித்தார். பிறகு அவர் தனது பெட்டியை திறந்து ஜப்பானிய புளிப்பு மிட்டாய் ஒன்றை வெளியே எடுத்து அவளிடம் நீட்டினார்

“உனக்கு என்ன கொடுக்கிறதுனு தெரியலை. இது தான் என்கிட்ட இருக்கு“.

“இருக்கட்டும் சார். நான் கிளம்புறேன்“ என மகிழ்ச்சியோடு அவள் மாடிப்படிகளில் இறங்கிப் போனாள். அந்தப் பெயரைப் போல அவரிடமும் சொல்லப்படாத கதையிருக்கிறது. தன்னிடம் சொல்லாமல் எதையோ மறைக்கிறார். மனிதர்களின் தோற்றத்திற்கும் அவர்களின் மனத்துயருக்குமான இடைவெளி பெரியது. அதை எப்படியாவது மறைத்துக் கொள்ள முயன்று தோற்கிறார்கள் என நினைத்துக் கொண்டாள்.

அன்று மதியம் இரண்டு மணிக்கு மேனேஜர் பூர்ணிமா அவளை அழைத்திருந்தாள்

“106 ரூம்ல என்ன செய்துகிட்டு இருந்தே“

“கெஸ்ட் கூப்பிட்டாரு மேடம் அதான் போயிருந்தேன். “

“அந்த ஆள் கூப்பிட்டா நீ ஏன் போனே.. அதுவும் பத்து நிமிஷம் கதை அடிச்சிட்டு நிக்குறே“.

“கெஸ்ட் நான் செஞ்ச அன்னங்களைப் பாராட்டினார் மேடம். அது தப்பா“

“தப்பு தான். கெஸ்ட் இதுக்குத் தான் கூப்பிட்டாருனு நான் நம்ப மாட்டேன். உனக்கு ஏதாவது பணம் குடுத்தாரா“

“இல்லை மேடம்“

“அந்த ஆள் எதையோ நீட்டுனதே மானிட்டர்ல பார்த்தேன். “

“அது புளிப்பு மிட்டாய் மேடம்“

“நீ என்ன ஸ்கூல் ஸ்டூடண்டா… புளிப்பு மிட்டாய் சாப்பிட“

“நான் வாங்கலை மேடம்“

“கெஸ்ட் கூப்பிட்டா நீ என்கிட்ட தானே சொல்லியிருக்கணும். ஏன் சொல்லலை. “

“சாரி மேடம். “

“முதல்ல பாராட்ட கூப்பிடுவான். அப்புறம் படுக்கக் கூப்பிடுவான். போயிடுவியா“ எனக்கேட்டாள் பூர்ணிமா

“ஏன் மேடம் இப்படிப் பேசுறீங்க. நான் அந்த மாதிரி பொண்ணு இல்லை உங்களுக்குப் பிடிக்கலைன்னா. நான் வேலையில இருந்து நின்னுகிடுறேன்“

“நின்னுக்கோ.. நீ நின்னுட்டேனு நாளைல இருந்து ஹோட்டலுக்கு யாரும் வராம போயிருவாங்களா. நாங்க இழுத்து மூடிட்டு போயிருவமா. “

“நான் வேலையவிட்டு நின்னுகிடுறேன். என் சம்பளத்தைக் குடுத்துருங்க“ என்றாள் ராஜதிலகம்

“நீ சொன்னா உடனே நான் செஞ்சிரணுமா. நீ வேலையை விட்டு போகவும் முடியாது. உனக்குச் சம்பளமும் கிடையாது. உன் மேல நான் போலீஸ் கம்ப்ளெயிண்ட் குடுக்க முடியும் தெரிஞ்சிக்கோ“.

அதைக் கேட்டதும் ராஜதிலகத்திற்கு அழுகையாக வந்தது. தன்னை அறியாமல் விம்மினாள். ஏன் இப்படி அவதூறு பேசுகிறாள் என நினைத்தபடி “நான் பண்ணினது தப்பு தான் மேடம்“ என்றாள்.

“தெரிஞ்சா சரி.. போ. போயி வேலைய பாரு“ எனச் சப்தமாகச் சொல்லியபடி அறையில் இருந்த மானிட்டரில் யாரோ லிப்ட் முன்னால் நின்று அரட்டையடிப்பதைக் கண்டாள். மறுநிமிஷம் அந்தத் தளத்தின் பணியாளரை போனில் அழைத்தாள் பூர்ணிமா

ராஜதிலகம் படிவழியாக ஏறி மொட்டைமாடிக்குப் போனாள். வெயிலேறி இருந்தது கிழிந்த மெத்தைகள், தலையணைகள் ஒரு பக்கமாகக் குவித்துப் போட்டிருந்தார்கள். ஏதோ ஒரு கல்யாணத்திற்காகச் செய்த வெல்வெட் குஷன் ஒன்று கிழிந்து கிடந்தது. யாரோ குடித்துப் போட்ட சிகரெட் துண்டுகள், பழைய நாளிதழ்கள் கிடந்தன. . தன்னை அவள் காரணமின்றித் திட்டியதை நினைத்து அழுதாள். தேவையற்ற திறமைகளை வளர்த்துக் கொண்டுவிட்டோமோ எனத் தன்மீதே அவளுக்குக் கோபம் வந்தது. நீண்ட நேரம் வெயிலில் நின்று கொண்டேயிருந்தாள்.

வேலையை விட்டுவிடலாம் என்று மனதிற்குள் தோன்றியது. வேறு வேலை ஏதாவது தேடிக் கொள்ளலாம். ஆனால் இந்தச் சம்பளம் கிடைக்காது. பரவாயில்லை இன்னொரு முறை பூர்ணிமா முன்னால் நின்று அசிங்கப்படக் கூடாது என்று முடிவு செய்து கொண்டாள்.

வேலையை விட்டு நிற்பதாக யாரிடமும் அவள் சொல்லிக் கொள்ளவில்லை. ரிசப்ஷனில் இருந்த நிர்மலா அவள் வெளியேறிப் போவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

நடக்க நடக்க அந்த வீதி தெரியாத இடமாக மாறியது. தன் வயதை ஒத்த பெண்கள் என்ன செய்கிறார்கள் எனக் கடைகளைப் பார்த்தபடியே நடந்தாள்.

இனிமேல் டவல் அன்னங்கள் செய்ய வேண்டிய அவசியமிருக்காது. அதை எல்லாம் மறந்துவிட வேண்டியது தான் என நினைத்தபடியே அவள் நிதானமாக வீட்டை நோக்கி நடந்தாள். மணிக்கூண்டைக் கடக்கும் போது ஒரு ஆள் இதய வடிவ பலூன்கள் விற்பதைக் கண்டாள். அந்தப் பலூன்காரனிடம் சிவப்பு பலூன் ஒன்றை வாங்கினாள்.

இதய வடிவ பலூனை கையில் வைத்து பார்த்துக் கொண்டேயிருந்தாள். பின்பு தனது ஹேர்பின்னை எடுத்துப் பலூனை உடைத்தாள். பலூன் வெடித்துச் சுருங்கிப் போனது

பலூன்காரன் ஆதங்கமாகக் கேட்டான்

“என்னக்கா பலூன் உடைஞ்சிருச்சா. வேற தரவா“

“இல்லை.. வேணும்னு தான் உடைச்சேன்“ என்றபடி அவள் அறுபட்ட நாவைப் போலச் சுருங்கிய பலூனைச் சாலையில் வீசி எறிந்தபடி வீட்டை நோக்கி நடந்தாள்.

அப்படியும் அவளது ஆற்றாமை குறையவில்லை

•••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 24, 2026 01:13
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.