வார்த்தைகளின் இல்லம்

The Book of Embraces எட்வர்டோ கலியானோவின் முத்தொகுதிகளில் ஒன்று

இந்த நூல் லத்தீன் அமெரிக்க நாடுகளின் வரலாற்றை மையமாகக் கொண்டது. ஆய்வாளர்கள் வரலாற்றை உயரிய கோபுரமாகக் கட்ட முயலும் போது படைப்பாளிகள் அவற்றை நீருற்று போலவோ, பனி உருகியோடுவது போலவே மாற்ற முயலுகிறார்கள்.

வரலாற்றின் சிறுதுண்டுகளையே எடுவர்டோ கலியானோ உருவாக்குகிறார். கூழாங்கல்லைப் போன்ற அழகிய உருவம் கொண்ட அந்தச் சிறுகுறிப்புகள். குறுங்கதைகள், அசாதரண நிகழ்வுகள் வசீகரமாக விளங்குகின்றன. கலைடாஸ்கோப்பினுள் உடைந்த கண்ணாடித்துண்டுகள் ஒன்று சேர்ந்து புதிய உருவத்தை உருவாக்கிக் காட்டுவது போன்ற எழுத்து வகையது.

கலியானோவின் பெரும்பான்மை குறிப்புகள் பண்பாடு சார்ந்தவை. அதிலும் கவிதை, கதைசொல்வது, புத்தகவாசிப்பு, சர்வாதிகாரம் சார்ந்த நிகழ்வுகள் குறித்தவை.

வார்த்தைகளின் இல்லம் என்ற குறிப்பில் கவிஞர்களின் வருகைக்காக வார்த்தைகள் காத்துகிடப்பதைப் பற்றி எழுதுகிறார். அது ஒரு நாடகம் போலவே விவரிக்கபடுகிறது.

கவிஞர்கள் வார்த்தைகளின் இல்லத்திற்குள் நுழைகிறார்கள். அங்கே கண்ணாடிக் குடுவைகளில் வார்த்தைகள் அடைக்கபட்டிருக்கின்றன. அந்த வார்த்தைகளின் தங்களின் வாசனை. நிறம் மற்றும் தனித்துவத்தைச் சொல்லி கவிஞனை அழைக்கின்றன. கவிஞனின் வசமாகிவிடத் துடிக்கின்றன. கவிஞர்களோ தங்களுக்குத் தெரியாத வார்த்தைகளையும், இழந்த வார்த்தைகளையும் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்கிறார் கலியானோ.

வார்த்தைகள் ஏன் கவிஞர்களிடம் அடைக்கலமாக விரும்புகின்றன. கவிஞர்கள் ஒரு சொல்லை ஒளியாக மாற்றுகிறார்கள். நிரந்தரமாக்கி விடுகிறார்கள். சொல் புதிய பொலிவு பெறுகிறது. சொல் நடனமாடுகிறது.

கதையாசிரியர்கள் தனிச்சொற்களின் மீது அதிகக் கவனம் கொள்வதில்லை. அவர்கள் பொம்மலாட்டக்கலைஞர்களைப் போல மனிதர்களைக் கதாபாத்திரமாக்குகிறார்கள். உணர்ச்சிகளே அவர்களின் உப்பு. நினைவுகளின் வழியே ஒரு கதையைச் சொல்ல முயலுகிறார்கள். வார்த்தைகளின் இல்லத்திற்குப் பதிலாக அவர்கள் நினைவின் இல்லத்திற்குச் செல்கிறார்கள். அங்கே மறக்கமுடியாத பல்வேறு நினைவுகள் மிதந்து கொண்டிருப்பதைக் காணுகிறார்கள். மேகங்களைக் காணுகிறவன் தானே கற்பன செய்து கொள்வதைப் போல இந்த நினைவுகளைக் காணும் போது எதையோ தானாகக் கற்பனை செய்து கொள்ளகிறார்கள். நினைவுகளின் புத்துருவாக்கம் கதையாகிறது.

இன்னொரு குறிப்பில் இஸ்லா நெக்ரா தீவில் கவிஞர் பாப்லோ நெரூதாவிற்குச் சொந்தமான வீடு அருங்காட்சியமாக மாற்றப்பட்டிருப்பதையும் மூடப்பட்டுள்ள அந்த வீட்டைச் சுற்றி ஒரு மர வேலியில் பலரும் ஆணியால் எழுதியிருப்பதையும் குறிப்பிடுகிறார்.

நெரூதா இறந்த பிறகும் அவருடன் உரையாடுவதை மக்கள் நிறுத்திக் கொள்ளவில்லை என்கிறார். தங்கள் ஆதர்சக் கவிஞனிடம் வாசகர்கள் எதையோ தெரிவிக்க விரும்புகிறார்கள். காதலைக் கொண்டாடும் அவனிடம் தங்களின் காதலைச் சொல்கிறார்கள். அந்த இடத்தில் கலியானோ மனதிற்குள்ளாகவே உரையாடல் ஒன்றை நெரூதாவோடு நிகழ்த்துகிறார்

புத்தகம் படிக்கும் பெண்ணின் மனதில் அந்தப் புத்தகம் தாவரம் என வளர்ந்து கொண்டேயிருப்பதாக இன்னொரு குறிப்பில் வருகிறது. முதன்முறையாகக் கடலைக் காணச் செல்லும் சிறுவன் தனது தந்தையிடம் கடலைப் பார்த்து வியந்து எனக்குக் கடலைப் பார்ப்பதற்கு உதவுகள் எனக் கேட்பது அழகான தருணம். உலகைக் காண்பதற்குக் கவிஞர்களே உதவுகிறார்கள். நாம் கண்ணால் காணும் காட்சிகள் கவிதையின் வழியே விசித்திரமான தோற்றம் கொள்கின்றன.

மனிதனின் குரலை எந்தச் சர்வாதிகாரத்தாலும் தடுக்க முடியாது. வாய் பேசுவது மறுக்கப்படும்போது, கைகள் அல்லது கண்கள் பேசத் துவங்கிவிடுகின்றன என்றும் கலியானோ. குறிப்பிடுகிறார். கதை சொல்லி தனது சொற்களால் மட்டுமின்றி முழு உடலாலும் கதைசொல்லத் துவங்குகிறான் என்கிறார்

அவர் கலீசியாவுக்குச் சென்றபோது நண்பர்கள் மறதியின் நதியைக் காண அழைத்துச் செல்கிறார்கள் . முன்னொரு காலத்தில், ரோமானிய படைவீரர்கள் இந்த நதிக்கரையில் வந்து நின்றார்கள். அவர்கள் ஒருபோதும் நதியைக் கடக்கவில்லை, ஏனென்றால் மறதி நதியைக் கடப்பவர் தான் யார் அல்லது எங்கிருந்து வருகிறார் என்பது தெரியாமல் போய்விடுவார்கள். நதியைக் கடந்துவிட்டால் அவர்கள் ரோமானிய வீரர்கள் இல்லை. யுத்தம் செய்ய இயலாது.

மறதியின் நதியைப் போலவே நினைவின் நதியொன்றும் உலகில் இருக்கிறது. அதைக் கடந்தவர்கள் தங்கள் நினைவை மட்டுமின்றி உலகின் நினைவையும் தனதாக்கிக் கொள்கிறார்கள். அந்த நதியைக் கடந்து வந்தவர் தான் கலியானோ

••.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 14, 2026 19:07
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.