யானைகளின் காவலன்
தி ரூட்ஸ் ஆஃப் ஹெவன் என்பது 1958 ஆம் ஆண்டு வெளியான ஜான் ஹுஸ்டன் இயக்கிய திரைப்படம்,

1956 ஆம் ஆண்டு ரோமெய்ன் கேரி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள ஃபோர்ட் லாமியில் யானைகள் வேட்டையாடப்படுவதற்கு எதிராகப் போராடும் மோரல் என்ற கதாபாத்திரத்தின் வாழ்வினை படம் விவரிக்கிறது. சுற்றுப்புறச்சூழல் குறித்த இன்றைய விழிப்புணர்வும், இயக்கங்களும் உருவாவதற்கு முன்பு எழுதப்பட்ட நாவல் இது. உயரிய இலக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறது.
நாஜிகளின் வதைமுகாமில் அடைப்பட்டிருந்த பல்மருத்துவரான மோரல் தன்னைச் சுற்றிலும் நடக்கும் சாவினால் மனம் துவண்டுவிடாமல் இருக்கக் காட்டில் யானைகள் சுதந்திரமாகச் சுற்றித்திரிவது போலக் கற்பனை செய்து கொள்கிறார். இந்தக் கற்பனை அவருக்கு உயிர்வாழ்வதன் மீதான பிடிப்பை உருவாக்குகிறது.

யூதமுகாமிலிருந்து தப்பி வெளியே வரும் அவர் ஆப்பிரிக்காவில் ஆண்டிற்கு முப்பதாயிரத்திற்கும் மேலாக யானைகள் கொல்லப்படுவதை அறிந்து அதனைத் தடுத்து நிறுத்தவும, யானைகளைப் பாதுகாப்பதற்கான இயக்கம் ஒன்றை உருவாக்கவும் முனைகிறார். இதற்கு ஆட்சியாளர்களின் ஆதரவு கிடைக்கவில்லை. ஆகவே தானே போராடத் துவங்குகிறார்.
படத்தின் ஆரம்பக் காட்சியில் யானைகளை காக்கும் விண்ணப்பம் ஒன்றில் கையெழுத்து போடும் படி இரவு விடுதியில் வேண்டுகோள் விடுக்கிறார். இருவர் மட்டுமே கையெழுத்து போடுகிறார்கள். அதில் ஒருவர் இரவு விடுதியை நடத்தும் மின்னா. மற்றவர் பிரிட்டீஷ் இராணுவ அதிகாரி மேஜர் ஃபோர்சைத். மற்றவர்கள் அவரைக் கேலி செய்கிறார்கள். யானைகளை கொல்வது இன்பமான வேடிக்கை, பொழுதுபோக்கு என்கிறார்கள். காலனிய ஆட்சியாளர்களின் விருப்பத்திற்குரிய வேட்டைகளில் ஒன்று யானையைக் கொல்வதாகும். ஆகவே அதனை தடுத்து நிறுத்த மோரல் போராடுகிறார்.
வறுமை தொழுநோய் மற்றும் ஏழ்மையில் வாழும் ஆப்பிரிக்க மக்களைக் காப்பாற்றுவதே தங்களின் முதன்மையான நோக்கம்.எனக் கூறும் உள்ளூர் பாதிரியார் மோரலின் மனுவில் கையெழுத்திட மறுக்கிறார். இதனால் ஏமாற்றமடைந்த மோரல், ” இது அரசியலுடன் எந்தத் தொடர்பும் இல்லாத விஷயம் – இது மனிதாபிமானத்தின் அடையாளம் ” என்று தனது கவலையைத் தெரிவிக்கிறார்

ஆட்சியாளர்கள் அவரது கோரிக்கையை ஏற்பதில்லை. மாறாக யானை வேட்டையை நடத்துபவர்களுடன் ரகசிய பேரம் செய்து கொள்கிறார்கள். இதனைத் தடுத்து நிறுத்த மோரல் தானே துப்பாக்கி ஏந்துகிறார். போராளி குழுவினை உருவாக்குகிறார். யானை வேட்டையில் ஈடுபடுகிறவர்களைத் தண்டிக்கிறார். வேட்டைக்கு வருகிறவர்களை அழித்தொழிக்கிறார். தந்த கிடங்குகளை தீவைத்துஎரிக்கிறார். இதற்கு அரசு எதிர்ப்பு அரசியல் போராட்டக்குழுவினர்கள் ஆதரவு தருகிறார்கள்.
மோரலை தீவிரவாதியாக அரசு சித்தரிக்கிறது. அவரோ யானைகளைக் காப்பதற்காக எதையும் செய்யத் தயராக இருப்பதாக அறிவிக்கிறார். உடன் இருந்தவர்களின் துரோகம் மற்றும் சூழ்ச்சி காரணமாக முடிவில் மோரல் வீழ்ச்சியடைகிறார். யானைகளைக் காப்பாற்றுவதற்காக அவர் எடுத்த முன்னெடுப்புகளும் அதற்கான அவரது களச்செயல்பாடுகளும் படத்தின் முக்கியப் பகுதியாக விவரிக்கபடுகின்றன
சிறந்த இலக்கியங்களைத் திரைப்படமாக்கும் ஜான் ஹுஸ்டன் இந்தப் படத்தின் திரைக்கதையைச் சரியாக உருவாக்கவில்லை. ஆகவே படம் தோல்வியடைந்தது என்கிறார்கள். நாவலையும் திரைப்படத்தையும் ஒப்பிடும் போது அந்த இடைவெளியை நன்றாக உணர முடிகிறது

ஆப்பிரிக்க யானைகளைப் பாதுகாப்பதில் வெளிப்படும் மோரலின் உறுதியான அர்ப்பணிப்பு நாஜி வதை முகாம்களில் அவர் உயிர்வாழ்ந்த நாட்களில் அடைந்த துயரத்திலிருந்து உருவாகிறது,
அவர் தனது சக மனிதர்களை வெறுக்கிறார். காரணம் வதைமுகாமில் கண்ட மனிதவிரோத செயல்கள் ஒடுக்குமுறைகளே.
. மனிதன் சக உயிர்களுடன் இணைந்து வாழ வேண்டியவன். அவற்றை அழிக்கும் உரிமை அவனுக்குக் கிடையாது என மோரல் உரத்த குரலில் சொல்கிறார். யானைகள் மந்தையாக உலவுகிற காட்சி சுதந்திரத்தின் அடையாளம். அவற்றை வேட்டையாடுவது அராஜகம் மற்றும் முழுமையான சுயநலம் என்றும் வாதிடுகிறார்.
போராளியாக வாழும் குழுக்களும் முடிவில் ஆயுதம் வாங்க யானைகளை வேட்டையாடுகின்றன. இந்த அவலத்தையும் படம் வெளிப்படையாக முன்வைக்கிறது.
மோரல் தனது பக்க நியாயத்தை வெளிப்படுத்த நாளிதழ் ஒன்றின் அலுவலகத்தைத் துப்பாக்கி முனையில் முற்றுகையிட்டு தனது அறிக்கையை வெளியிடச் செய்கிறார். வேட்டையாடுகிறவர்களை அவர் தண்டிக்கும் விதம். மற்றும் மக்கள் சக்தியை ஒன்றிணைத்து அவர் போராட்டம் நடத்தும் முறை, மக்களைத் திரட்டி ஊர்வலமாக அழைத்து வரும் காட்சி போன்றவை சிறப்பாக உருவாக்கபட்டுள்ளன.
மிருகக்காட்சி சாலைக்காகவும் தந்தங்களுக்காகவும் யானைகள் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்த போராடும் மோரல் மெல்ல யானையாகவே உருமாறுகிறார். மூர்க்கம் கொள்கிறார்.
யூதவதைமுகாமில் அதிகம் பாதிக்கபட்டது பெண்களே எனக்கூறும் மின்னா மோரலின் செயல்களுக்கு உறுதுணை செய்வதுடன் அவருட்ன் இணைந்து பயணிக்கிறார்
மோரலுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக வரும் ராணுவ அதிகாரியிடமே தங்களுக்குப் போராடுவதற்கு ஆயுதங்கள் வழங்குகள் என மோரல் கேட்கிறான். மோரலின் நியாயத்தை அவர் புரிந்து கொள்கிறார்.
மோரலின் கடைசியுத்தம் உணர்ச்சிப்பூர்வமானது. அவனது கூட்டாளிகளின் மரணத்தைக் கண்முன்னே காணுகிறான். போராட்டம் தோற்கடிக்கபடுகிறது. ஆனால் அது முடிவடைவதில்லை.
ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நட்சத்திரமான எர்ல் பிளைன் இதில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
யூதவதைமுகாமில் இருந்த நாட்களில் மோரல் எதிர்கொள்ளும் அனுபவங்கள் நாவலில் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. படத்தில் அவை சரியாக வெளிப்படவில்லை. ஆகவே மோரலின் நியாங்களும் அவனது உறுதியான மனநிலையும் ஆழமாகப் படத்தில் சித்தரிக்கப்படவில்லை
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 675 followers

