ஓர் இந்திய ஆன்மீக அனுபவம்
அவள்
வன்முறை, குரூரம், கலை- கடிதம்
அவள், கடிதங்கள்
வன்முறை, குரூரம், கலை- ‘அவள்’ கடிதங்கள்.
அன்புள்ள அஜிதன், அவள் ‘ வாசித்தேன். Al kissa, மைத்ரி, மரு பூமி எழுதிய நீங்கள் தான் அவளையும் எழுதியிருக்கிறீர்கள். இவ்வகை எழுத்து பாணி எனக்கு மிக நெருக்கமானது இணக்கமானதும் கூட. கனவின் நிமித்தமும் பிழைப்பின் நிர்பந்தத்தாலும் சென்னையில் சில ஆண்டுகள் வசித்தஅல்லது உழன்ற நான் உங்களுடைய அவளை பெருநகரத்தின் ஏதோ ஒரு இடத்தில் சந்தித்துள்ளேன், மிக நெருக்கமாக அவளைஅவளின் அகத்தை ஊடுருவியிருக்கிறேன்.தமிழ்ச் சிறுகதைகளின் அலுப்பூட்டும் சொல் முறையைத் தவிர்த்துவிட்டு மிக சுதந்திரமாகக் கதையைக் கையாண்ட விதம்தான் என்னைக் கவர்ந்திருந்தது ( இது மேலை நாட்டு பாணி என்று சிலர் வைக்கின்ற விமர்சனத்தை நான் புறக்கணிக்கின்றேன் )புதுமைப்பித்தன் இன்றிருந்தால் அவளை இப்படித்தான்வார்த்திருப்பார். தமிழின் சமகால எழுத்துகளில் இல்லாத அளவுக்கு கூவம் ஆறு உங்களிடம் கலைப் பட்டிருக்கிறது. வாசிக்கும்போதே இந்தக் கதை ஆங்கிலத்திலும் பிற இந்திய மொழிகளிலும்ஆக்கம் செய்யப்பட வேண்டிய அவசியம் உணர்ந்தேன். வாழ்த்துகள் அஜி..நிறைய சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. Major Surgery செய்து கொண்ட கையால் இவ்வளவுதான் இயன்றது. ஒரு வேண்டுகோள்…எதிர்காலத்தில் யாராவது சென்னைக் கதைகள் தொகுக்கிறேன்..என்று அவளை கேட்டால், மறுத்து விடுங்கள். இதன் தனித்துவம் தனித்தே இருக்கட்டும். சமரசம் செய்துகொள்ள வேண்டாம். மீண்டும் வாழ்த்துகள்.அன்புடன்கீரனூர் ஜாகிர்ராஜா
அன்புள்ள ஜெயமோகன்,
அவள் கதை பற்றிய பாராட்டு விமர்சனம் இரண்டையும் படித்தேன். பாராட்டுக்கள் அந்தக் கதையின் நுணுக்கமான சித்தரிப்பு அளித்த ஆழமான உணர்ச்சிகரமான பாதிப்புகள் சார்ந்து இருந்தன. அந்தக் கதையில் கூவம் மௌனமான படிமமாக இருந்ததையும் சொல்லியிருந்தார்கள். அந்தக்கதை குரூர அழகியல் கொண்டது, அந்த வகையான கதைகள் இந்தக் காலகட்டத்தின் அழகியல் என்றும் சொல்லியிருந்தார்கள். அது உண்மைதான். ஆனால் ஒரு வலுவான அரசியல் இல்லாத இடத்தில் கலை ஃபாஸிசத்தின் பக்கம்தான் போகும் என்பதற்குச் சரியான உதாரணம் இந்த ஆண்டு விஷ்ணுபுரம் விருது பெறும் ரமேஷ் பிரேதன். அவருடைய கதைகள் எல்லாமே அறம் அற்றவை, அடிப்படையில் நசிவை முன்வைக்கும் ஃபாஸிசம். அதே வரிசையில் வரும் கதை இது. இதிலும் உள்ளது ஃபாசிசம்தான். அந்தக் கொலை ஒரு குற்றம். அதை மறைமுகமாக ரசிக்கத்தக்கதாக ஆக்குவதும் ஃபாசிசம்தான். உலகம் முழுக்க இன்றைய கலையில் பெரும்பகுதி ஃபாசிசம்தான். ஆப்ரிக்காவில் பஞ்சத்தில் மக்கள் சாகிறார்கள். காசாவில் கொல்லப்படுகிறார்கள். ஒருவன் மலத்தை சிற்பமாக செதுக்கி வைக்கிறான் என்றால் அவன் ஒரு ஃபாசிஸ்டு என்று மட்டுமே சொல்லமுடியும்.
மா.அறவேந்தன்.
Published on September 24, 2025 11:31