தமிழுடன் இசை!
பெரியசாமி தூரன் தமிழிசை முன்னோடிகளில் ஒருவர். அவர் நினைவாக வழங்கப்பட்டு வரும் தமிழ்விக்கி- தூரன் விருது இந்த ஆண்டு வெ.வேதாசலம் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. வரும் ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நிகழும் விழாவில் வழக்கம்போல நாதஸ்வர இசை நிகழ்வு உள்ளது. தூரனின் தமிழிசைப் பங்களிப்பைப் போற்றும் முகமாக தொடர்ச்சியாக தமிழ்ப்பண்பாட்டின் முதன்மையான இசைக்கருவியான நாதஸ்வரத்தை முன்வைத்து வருகிறோம்.
இந்த ஆண்டு
சிறப்பு நாதஸ்வரம் மயிலை எம்.கார்த்திகேயன், கோளேரி ஜி. வினோத்குமார் சிறப்பு தவில் அடையார் ஜி. சிலம்பரசன், கும்முடிப்பூண்டி ஆர்.ஜீவாஆகியோரின் இசைநிகழ்வு நடைபெறுகிறது.
பொதுவாக நாம் மரபிசை நிகழ்வுகளில் மிகக்குறைவாகவே கலந்துகொள்கிறோம். புதிய தலைமுறையினருக்கு மரபிசை அறிமுகமும் மிகக்குறைவு. இன்றைய போட்டிமிக்க படிப்புமுறை அந்தவகையான கலைப்பயிற்சிகளுக்கு உகந்ததாக இல்லை. ஓர் அகவைக்குப் பின்னரே நமக்கு கலை- இலக்கிய நாட்டம் உருவாகிறது. அந்தவகையினரை முன்னில்கண்டுதான் இந்நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
மரபிசை அறிமுகம் அல்லது இசைநிகழ்வுகளில் கலந்துகொண்ட அனுபவம் இல்லாமல் நாதஸ்வர இசையைக் கேட்பது கடினம். நமக்கு நாதஸ்வர இசை வெறும் மங்கல இசை என்ற எண்ணமும் உள்ளது. திருமணம் போன்ற விழாக்களில் நாதஸ்வர இசையை வெறும் சூழலோசையாகவே நாம் கேட்கிறோம்- உண்மையில் பெரும்பாலும் தவிர்த்துவிடுகிறோம். பலசமயம் திருமண நிகழ்வுகளில் எளிய சினிமாப்பாடல்களே இசைக்கப்படுகின்றன. அத்துடன் அவை மிகுந்த ஓசையுடன் இருப்பதனால் நம்மால் அமர்ந்து கேட்க முடிவதுமில்லை.
இந்த விழாவில் நாதஸ்வரம் மங்கலச் சூழலுக்கான இசையாக முன்வைக்கப்படவில்லை. இங்கே நிகழவிருப்பது ஓர் இசையரங்கு. அவையினர் முன் இரண்டு மணிநேரம் நாதஸ்வர இசை நிகழ்த்தப்படும். ஒலிப்பெருக்கி ஏதுமின்றி அவையினரின் செவிகளுக்கு உகந்த முறையில் அமையும். தூரன் அவர்களின் கீர்த்தனைகளும், இசைவிரிவாக்கமும் நிகழ்த்தப்படும்.
இந்நிகழ்வை இசையறிமுகமும், இசைநிகழ்வு அனுபவமும் இல்லாதவர்கள் ரசிப்பது எப்படி? அதற்குத்தான் வாசிக்கப்படும் பாடல்களை முன்னரே அறிமுகம் செய்கிறோம். இந்தப் பாடல்களை முன்னரே சிலமுறை கேட்டால் நம் செவிக்கு அவை பழகிவிடுகின்றன. கருவியிசையைப் பொறுத்தவரை அந்தப் பாடல் நமக்கு தெரியும் என்றால் கருவியின் இசையொலி பாடலின் சொற்களாக நம் செவிகளுக்குக் கேட்கத் தொடங்கும். அது ஓர் அரிய அனுபவம். நம்மால் மிக எளிதாக இசைக்குள் செல்லமுடியும்.
தமிழகத்தின் முதன்மையடையாளங்களில் ஒன்று நாதஸ்வர இசை. நாதஸ்வரக் கலைஞர்களை அறிந்துவைத்திருப்பது, முக்கியமானவர்களை உரியமுறையில் கௌரவிப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அந்த இசையை கேட்கும்படி நம் செவிகளைப் பழக்குவது. நம் வழித்தோன்றல்களுக்கு அறிமுகம் செய்வது. இல்லையேல் இன்னொரு தலைமுறைக்குள் நாம் இந்த மாபெரும் மரபை, நமக்கு மட்டுமே உரிய தனி அழகியலை இழந்துவிடுவோம். இந்நிகழ்வு சில இளம் நண்பர்களுக்காவது செவிகள் திறக்கவேண்டும் என்னும் நோக்கம் கொண்டது.
இசைக்குள் நுழைவது மிக எளிது. அடிப்படையான சில தயாரிப்புகளைச் செய்துவிட்டு செவிகளை ஒப்படைத்து அரங்கில் அமர்ந்திருந்தாலே போதும். நாம் உள்ளே நுழைந்துவிடுவோம். நம் வாழ்நாள் முழுக்க நீளும் ஓர் உலகம் நமக்காக உருவாகத் தொடங்கிவிடும். இசையின் வழியாக நாம் பண்பாட்டின் எல்லா நுண்ணிய பக்கங்களுக்குள்ளும் நம்மையறியாமலேயே நுழைந்துவிடுவோம். நாதஸ்வர இசைதான் நம் ஆலயக்கோபுரங்கள், நம்மைச்சூழ்ந்திருக்கும் மலைகள், நம் நிலம், நம் ஆறுகள்.
நல்வரவு
ஜெ
வணக்கம் ஜெ,
பெரியசாமி தூரன் விருது-2025 விழாவில் நாம் ஒருங்கிணைத்து உள்ள சிறப்பு நாதஸ்வர தவில் இசை நிகழ்ச்சியில் வாசிக்க இருக்கும் கீர்த்தனைகள் விபரம். இசை குழுவினர் குறித்த தகவல்கள் தனி மின்னஞ்சலில் அனுப்பி உள்ளேன்.
– யோகேஸ்வரன் ராமநாதன் (இசை ஒருங்கிணைப்பாளர்)
நிகழ்வுமுறை :
அ): முதல் கீர்த்தனை முதல் கடைசி மங்களம் வாசிப்பது வரை இரண்டு மணி நேரம் கச்சேரி முழுமைக்கும், பெரியசாமி தூரன் அவர்களின் கீர்த்தனைகள் மட்டுமே வாசிக்கப்படும்.
ஆ) : இவ்வருடத்திற்கான பாடல் பட்டியல் கடந்த இருவருடங்களில் இசைக்கப்படாத புது பாடல்களை கொண்டது.
[பார்க்க
இ): கீர்த்தனைகளின் பட்டியல், ராகம், அந்த பாடலுக்கான யூடியூப் லிங்க் மூன்றையும் கீழே தொகுத்து அளித்துள்ளோம்.
ஈ): ராக ஆலாபனை : முதன்மை ராக ஆலாபனை ”தோடி” ராகத்தில் அமைக்கப்பட்டு இருக்கும்.
உ): ராகமாலிகை : ராகமாலிகையில் வாசிக்கப்பட இருக்கும் ராகங்கள்: 1.நீலாம்பரி, 2.ரஞ்சனி, 3.சஹானா, 4.சௌராஷ்டகம், 5.மத்யமாவதி
கீர்த்தனைகள்
பட்டியல்
:
1. கீர்த்தனை: மங்கள விநாயகனே. ராகம் : ராமப்ரியா. தாளம் : மிஸ்ர சாபு
[MS Subbulakshmi-Mangala Vinayakane-Ramapriya-misra chapu-Periasamy Thooran]
2. கீர்த்தனை: தில்லையில் ஆடும். ராகம் : இந்தோளம். தாளம் : ஆதி
[Periyasamy Thooran Compositions | Natarajar Songs. 17 நிமிடம் 45 வினாடி முதல்…]
3. கீர்த்தனை: ஸாமகான ப்ரியே. ராகம் : ஆனந்தபைரவி. தாளம் : ஆதி
[sAmagAna priyE – Anandabhairavi – ML Vasanthakumari]
4. கீர்த்தனை: ஆதி சங்கரர் பாதம். ராகம் : பூர்விகல்யாணி. தாளம் : மிஸ்ர சாபு
[TV Sankaranarayanan – Adi shankarar pAdam – pUrvikalyANi – periyasAmy tUran – YouTube]
5. கீர்த்தனை: அப்பா உன்னை மறவேனே. ராகம் : பிலஹரி. தாளம் : ஆதி
6): முதன்மை ராக ஆலாபனை. ராகம் : தோடி.
[தொடர்ந்து ஸ்வர குறைப்பு மற்றும் தனி ஆவர்த்தனம்]
கீர்த்தனை: ஆடும் பெருமானே. தாளம்:ஆதி
(Aadum Perumane || Prema Rangarajan || Periasamy Throoran)
7. கிளிக்கண்ணி[காவடிசிந்து]: தெய்வ குழந்தை
[ தெய்வ குழந்தை பேரை–பெரியசாமி தூரன் பாடல்– Daiva kuzhandai perai – Shri Periyasami Thooran song ]
8. கீர்த்தனை: தொட்டு தொட்டு பேச வறான். ராகம் : பெஹக். தாளம் : ஆதி
[ Thottu Thottu – Anubhavam | Bombay S.Jayashri – Carnatic Vocal | Behag – Adi Classical Song ]
9. கும்மி பாட்டு: சின்ன குழந்தையை
[Samarpanam Album by Periyasami Thooran.12 நிமிடம் 55 வினாடி முதல்…]
10.ராகமாலிகா: 1.நீலாம்பரி, 2.ரஞ்சனி, 3.சஹானா, 4.சௌராஷ்டகம், 5.மத்யமாவதி
Attachments area
Preview YouTube video sAmagAna priyE – Anandabhairavi – ML Vasanthakumari
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
