நாட்டு நடப்பைக் குறித்து கரிசனம் பகிர கரோல்பாக்கிலிருந்து தில்லிக் குளிரில் வந்த கிழவர்கள்

வாழ்ந்து போதீரே – நான்காம் அரசூர் நாவல் – சிறு பகுதி அதிலிருந்து

இன்னும் கொஞ்சம் உறங்கினால் என்ன? எட்டு மணி தானே ஆகிறது? ஒரு டோஸ் காப்பி. கூடவே கிளாஸ்கோ பிஸ்கட்டும் தோய்த்துச் சாப்பிட.

 

தெரசாவோடு கிடந்த போது ப்ளாஸ்கில் இருந்து காப்பியும் அதில் கிளாஸ்கோ பிஸ்கட்டைத் தோய்த்து அவள் வாயிலிட்டு, எச்சில் கூழாக்கிப் பகிர்ந்ததும் நினைவு வர, தலையைக் குனிந்து கொண்டான்.

 

அது எல்லாம் எதுக்கு? அது வேறே நாள். வேறே உலகம். இப்போ, தில்லியிலே குளிர்காலம். ஞாயிற்றுக்கிழமை. காலைப் பொழுது. வெளியே போய் வந்தால் என்ன? புதுசாக வாங்கி நிறுத்தி இருக்கும் இந்துஸ்தான் காரிலும் சவாரி செய்த மாதிரி இருக்கும். தனியாகப் போவானேன்? குடும்ப சகிதம்.

 

வசந்தியைக் கேட்டான்.

 

ஒழுங்கா ஓட்டக் கத்துண்டாச்சா?

 

அவள் குழந்தையை மடியில் வைத்தபடி விசாரணை செய்தாள்.

 

லைசன்ஸ் வச்சிருக்கேனாக்கும்.

 

கார் ஓட்டவா, ஸ்கூட்டர் ஓட்டவா?

 

சகலமானதிலேயும் ஆரோகணிச்சு சுகமா ஓட்டத் தான். வந்தா புரியும்.

 

அதென்ன காவாலித் தனமான பேச்சு?

 

நான் சாதாரணமாத்தானே சொன்னேன்.

 

போய் தில்ஷித் கவுர் கிட்டே சொல்லுங்கோ.

 

அவ எதுக்கு? நீ ஒருத்தி போறாதா?

 

அவளோடு சேர்ந்து சிரித்தான். குழந்தை தலையில் செல்லமாக முட்டி அதன் கன்னத்தில் முத்தமிட்டாள் வசந்தி.

 

இவளைப் பிடிச்சுக்குங்கோ. குண்டியிலே எல்லாம் ஈஷி வச்சிண்டிருக்கா. வாசனையா குட்டியம்மாவுக்குக் குளிச்சு விட்டுட்டு புடவையை மாத்திண்டு கிளம்பிடறேன். அரை மணி நேரம் எதேஷ்டம்.

 

அவள் சொன்னபடிக்கு வந்து ரதி மாதிரி ஒய்யாரமாக காரில் சவாரி செய்யத் தயாராக நிற்க சங்கரன் பங்கரையாக, பாஷாண்டியாகத் தினசரி பேப்பர் கிராஸ்வேர்டில் மூழ்கி இருந்தான்.

 

விரட்டி சட்டையும் கால் சராயும் தரிச்சு வரச் சொன்னாள் வசந்தி. அவள் கண்ணை உருட்டி மிரட்டுவதாக போக்குக் காட்ட குழந்தை ஓவென்று சிரித்தது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 09, 2024 22:11
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.