குயிங் மிங் திருவிழாவின் போது

மாங்குடி மருதன் எழுதிய மதுரைக்காஞ்சியை மிக நீண்ட ஒற்றை ஓவியமாக யாரேனும் வரைந்திருந்தால் எப்படியிருக்கும் என யோசித்திருக்கிறேன்.

அப்படியான ஒரு ஓவியம் தான் ALONG THE RIVER DURING THE QINGMING FESTIVAL. பனிரெண்டாம் நூற்றாண்டில் வரையப்பட்ட இந்த ஓவியம் சீனாவின் தலைசிறந்த பத்து ஓவியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பெய்ஜிங்கில் உள்ள அரண்மனை அருங்காட்சியகத்தில் இந்த ஓவியம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

நிலப்பரப்பை வரைவது சீன ஓவியத்தின் மிக உயர்ந்த கலைவடிவமாகக் கருதப்படுகிறது. , மிகத் துல்லியமாக விவரங்களை வரையறுக்கும் கோடுகள் மற்றும் தூரிகையின் பயன்பாடு இதன் சிறப்பாகும். இந்த வகை ஓவியத்தை மௌனமான கவிதை என்று சொல்கிறார்கள்.

இது போன்ற சுருள் ஓவியங்களைத் தோக்கியோ அருங்காட்சியகத்தில் கண்டிருக்கிறேன். சுவற்றில் மாட்டப்பட்டுள்ள ஓவியங்களை ரசிப்பது போலச் சுருள் ஓவியங்களை ரசிக்க முடியாது. அதற்குக் கூடுதல் நேரமும் கவனமும் பொறுமையும் தேவைப்படுகிறது. ஓவியத்தினைப் புரிந்து கொள்வதற்கான கையேடு ஒன்றையும் தருகிறார்கள். அதன் உதவியோடு நாம் நிதானமாகப் பார்வையிட்டால் ஓவியத்தின் சிறப்பை புரிந்து கொள்ளலாம்.

கிங்மிங் திருவிழாவின் போது ஆற்றங்கரையில் காணப்படும் காட்சிகளை ஓவியர் ஜாங் செதுவான் சுருள் ஓவியமாக வரைந்திருக்கிறார். மடக்குவிசிறி போல அடுக்கடுக்காக விரியக்கூடியது இந்த ஓவியம்.

12ஆம் நூற்றாண்டில் வரையப்பட்ட இந்த ஓவியம் அதன் துல்லியமான சித்தரிப்பு மற்றும் பிரம்மாண்டமான காட்சிப்படுத்துதலுக்காகப் புகழ் பெற்றுள்ளது.

இன்றுள்ள சினிமா தொழில்நுட்ப வசதியால் சிங்கிள் ஷாட்டில் முழுபடத்தையும் உருவாக்க முடிகிறது. அது போன்ற ஒரு பாணியே இந்தத் தொடர் சுருள் ஓவியம். தலைநகரான பியான்ஜிங்கில் வசித்த மக்களின் அன்றாட வாழ்க்கையையும் நிலப்பரப்பையும் ஓவியம் மிக அழகாகச் சித்தரிக்கிறது

அந்தக் காலகட்ட ஆடைகள் மற்றும் வாகனங்கள். ஆற்றங்கரை நெடுகிலும் காணப்படும் பல்வேறு மக்களின் தோற்றம் மற்றும் செயல்பாடுகள். பாலங்கள், அகழிகள் மற்றும் பாதைகள், வீடுகள் போன்றவற்றை ஜாங் செதுவான் சிறப்பாக வரைந்திருக்கிறார், கயிறுகள் மற்றும் கொக்கிகள் கட்டும் விதம் கூடத் தெளிவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது

இந்தச் சுருள் ஓவியம் 10.03 அங்குல உயரமும் 17.22 அடி அகலமும் கொண்டது. இது பட்டுத் துணியில் ஒரே வண்ணமுடைய மையில் வரையப்பட்டிருக்கிறது, இதில் சித்தரிக்கப்பட்டுள்ள நகரம் கைஃபெங், அந்த நகரத்தின் தெருக்கள், வீடுகள் மிகத் துல்லியமாகச் வரையப்பட்டுள்ளன

Zhang Zeduan .

இந்த ஓவியம் சாங் வம்ச சீனாவின் நகர்ப்புற வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை விளக்குவதற்கும் சீனாவின் செழிப்பான வணிக நடவடிக்கையின் சாட்சியமாகவும் கருதப்படுகிறது.

இந்த ஓவியத்தில் 1695 மனிதர்கள், 28 படகுகள், 60 க்கும் மேற்பட்ட கால்நடைகள் 30 கட்டிடங்கள், 20 வாகனங்கள், 9 நாற்காலிகள் மற்றும் 170 மரங்கள், இரண்டு பாலங்கள் இருப்பதாகச் சொல்கிறார். பேராசிரியர் வலேரி ஹேன்சன்.

ஓவியம் ஐந்து பெரிய பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள்ளது. . முதலாவது அமைதியான இயற்கைக்காட்சிகளைக் கொண்டுள்ளது, அதைத் தொடர்ந்து வானவில் பாலத்தை மையமாகக் கொண்ட ஒரு பகுதி, அது சந்தைக் காட்சியுடன் காணப்படுகிறது. மூன்றாவது பகுதி நகர வாயிலுக்கு அருகில் காணப்படும் பரபரப்பான செயல்பாட்டை விவரிக்கிறது, நான்காவது பகுதியில் ஆற்றின் இருபுறமும் இயற்கைக்காட்சிகளுடன் காணப்படுகிறது. அதில் ஒரு பெரிய மரப்பாலம் ஒன்றும் சித்தரிக்கபடுகிறது. கடைசிப் பகுதியில் ஏரியின் அழகிய நீர்பரப்பு சித்தரிக்கப்பட்டுள்ளது.

“கிங்மிங் திருவிழா” என்பது கல்லறை துடைக்கும் திருநாளாகக் கருதப்படுகிறது. ” இந்த விழாவின் போது குடும்ப உறுப்பினர்கள் தங்கள் மூதாதையர்களின் கல்லறைகளைத் துடைப்பதன் மூலம் அவர்களுக்கான மரியாதையைச் செய்கிறார்கள். மூதாதையர் வழிபாடு எப்போதுமே சீன நாகரிகத்தின் தனித்துவமிக்க அங்கமாக இருந்து வருகிறது,

நகரவாழ்வின் உன்னதங்களாகக் கட்டிடங்கள் சித்தரிக்கபட்டுள்ளன. குறிப்பாக இரண்டு மாடி உள்ள வீடுகள். அதன் அழகான முகப்புகள். இன்றிருப்பது போலக் கட்டிடங்களின் முன்பகுதியில் கடைகள் செயல்படுகின்றன. பின்பகுதி குடியிருப்பாகப் பயன்படுத்தபட்டிருக்கிறது. குடியிருப்புக் கட்டிடங்கள் நாற்கரமாக உள்ளன. கடைகளுக்கான அடையாளமாகக் கொடிகள், சின்னங்கள் காணப்படுகின்றன.

இதில் அதிகாரிகள், விவசாயிகள், வணிகர்கள், மருத்துவர்கள், மந்திரவாதிகள், துறவிகள், தாவோயிஸ்டுகள், காவல் வீரர்கள், பெண்கள், குழந்தைகள், படகோட்டிகள், மரம் வெட்டுபவர்கள், தண்ணீர் சுமப்பவர்கள் எனப் பலரும் காணப்படுகிறார்கள். .வானவில் பாலத்தின் மீதும் ஆற்றங்கரையோரங்களிலும் உள்ள மக்கள் படகை நோக்கிக் கூச்சலிட்டுச் சைகை செய்கிறார்கள். ஆற்றில் மீன்பிடி படகுகள் மற்றும் பயணிகளை ஏற்றிச் செல்லும் படகுகள் நிரம்பியுள்ளன, வீதியில் சிறுவர்கள் ஒடியாடுகிறார்கள். கோவேறு கழுதைகள் மற்றும் பிற கால்நடைகள் காணப்படுகின்றன. குடிப்பது, அரட்டை அடிப்பது, படகுகளைத் தள்ளுவது போன்ற செயல்கள் நேர்த்தியாக வரையப்பட்டிருக்கின்றன. சிலர் மூடுபல்லக்கினைச் சுமந்து செல்கிறார்கள். கடைகளின் முன் எரியும் விளக்குகள். வணிகர்களின் கூச்சல், கடந்து செல்லும் ஒட்டகங்கள் என அந்தக் காலத்தினைக் கேமிராவில் பதிவு செய்து ஆவணப்படுத்தியிருப்பது போலத் துல்லியமாக வரைந்திருக்கிறார் ஜாங் செதுவான்

Along the River during the Qingming Festival ஓவியத்தின் Animated Version இணையத்தில் காணக்கிடைக்கிறது. அதில் திருவிழாக் காட்சிகள் நம் கண்முன்னே விரிகின்றன. உறைந்து போன மனிதர்கள் இயக்கம் கொள்கிறார்கள். படகுகள் நீரில் அசைகின்றன. குடையோடு நதிக் கரை நோக்கி மக்கள் நடக்கிறார்கள். 800 ஆண்டுகளைக் கடந்த இந்த ஓவியம் நிகரற்ற கலைப்படைப்பாக மட்டுமின்றி முக்கியமான வரலாற்று சின்னமாகவும் கொண்டாடப்படுகிறது.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 21, 2024 03:06
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.