பிறப்பின் பின்னால்

அகோதா கிறிஸ்டோஃப் ஒரு ஹங்கேரிய எழுத்தாளர். இவரது The Illiterate, என்ற கட்டுரை நூல் வாசிப்பின் மீதான அவரது ஆர்வம் மற்றும் எழுத துவங்கிய நாட்கள் பற்றியது.

I read. It is like a disease என்ற நூலின் முதல் வரி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வாசிப்பில் ஆர்வம் கொண்ட அனைவருக்கும் பொருந்தக்கூடிய வரியது.

இதில் அவர் சிறுவயதில் கையில் கிடைத்த எல்லாவற்றையும் படித்த நாட்களைப் பற்றி எழுதியிருக்கிறார். அப்போது அவர் மீது வீட்டில் வைக்கபட்ட குற்றசாட்டு வேறு வேலைகள் எதையும் செய்யாமல் படித்துக் கொண்டிருக்கிறாள் என்பதே.

புத்தகம் படிப்பது என்பது உதவாத விஷயம். வீட்டு வேலைகளில் இருந்து தப்பிக்கும் வழி என்று அவரது குடும்பத்தினர் நினைத்தார்கள். அந்த எண்ணம் இன்றைக்கும் பல குடும்பங்களில் உள்ளது.

புத்தகம் படிப்பது போலவே கதை சொல்வதிலும் அவருக்கு ஆர்வம் அதிகம். அவர்கள் வீட்டிற்குப் பாட்டி வரும் நாட்களில் அவள் பாட்டியை கதை சொல்ல விடமாட்டாள். தான் சொல்லும் கதைகளைக் கேட்கும்படி வற்புறுத்துவாள். மனதில் இருக்கும் கதை சொல்லும் போது எப்படி எல்லாம் வளர்ச்சி அடைகிறது என்பது அவளுக்கு வியப்பாக இருக்கும்.

எனது கிராமத்தில் பல வீடுகளில் இப்படிச் சிறுவர்கள் பெரியவர்களுக்குக் கதை சொல்வதைக் கண்டிருக்கிறேன். சில வீடுகளில் சிறுவர்களைப் பயமுறுத்த உன்னைத் தவிட்டுக்கு வாங்கினோம். நீ எங்கள் வீட்டில் பிறக்கவில்லை என்று பயமுறுத்துவார்கள். இதை உண்மை என நம்பிய பையன் அல்லது பெண் அழுவதைக் கண்டிருக்கிறேன். இதே போன்ற நிகழ்வு ஒன்றை கிறிஸ்டோப் எழுதியிருக்கிறார்.

நம் பிறப்பின் பின்னால் ஒரு ரகசியமிருக்கிறது என்று யாரோ சொல்ல ஆரம்பித்தால் உடனே நாம் நம்பிவிடுகிறோம். அது இன்றும் மாறவேயில்லை. இது தான் கதையின் ஆதாரப்புள்ளி என்கிறார் அகோதா

பிரிவுத்துயர் தான் அவரை எழுத வைக்கிறது. பிரிவை தாங்க முடியாத போது மனம் கடந்த கால நினைவுகளை மீட்டெடுக்கிறது. அந்த மீட்சியின் வடிவமாகவே எழுத்து உருவாகிறது.

எழுதுவதை ஆரம்பிப்பது எளிது. ஆனால் தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருப்பது தான் உண்மையான சவால். விடாப்பிடியாத. எழுத்தின் மீது முழு நம்பிக்கை கொண்டு தீவிரமாக எழுதிக் கொண்டேயிருப்பது முக்கியமானது. பலநேரங்களில் எழுத்து அங்கீகரிக்கப்படுவதில் தாமதம் தடை ஏற்படும். ஆனால் அதைத் தாங்கிக் கொண்டு தொடர்ந்து தீவிரமாக எழுத்தில் செயல்படுகிறவர்களே வெற்றியடைகிறார்கள் என்கிறார் அகோதா கிறிஸ்டோஃப்

இது அவரது அனுபவத்தின் பாடம். எழுத்தின் மீது ஆர்வம் கொள்ளும் இளையோருக்கான உண்மையான அறிவுரை.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 18, 2024 08:19
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.