என் பாதங்களில் படரும் கடல்

தமயந்தியின் கவிதைகள் வாழ்வின் சுவடுகளை ஈரப்படுத்தும் தவிப்புக்களாலானவை. கவிதை நெடுக நிழலளிக்கும் ஓரிடத்தை எல்லோர்க்குமாய் கேட்கும் வாஞ்சை ஓயாத அலையாக ஒலிக்கிறது. கசப்பின் தறியில் நெய்யப்பட்ட மறக்க இயலாத தழும்புகள், தாகம் கொண்டு வாய்பிளந்து தத்தளித்து பெருக்கும் கண்ணீர் இத்தொகுப்பில் நிறையவே ஓடுகிறது. தமிழ்க் கவிதை வெளியில் தமயந்தி தன்னுடைய புனைவுகளின் வழியாக அறியப்பட்டவர். ஹெப்சிபாவிற்கு பின்னாக எழுதவந்த அவர் பிராந்தியத்தைச் சேர்ந்தவருள் தமயந்தி குறிப்பிடத்தகுந்தவர். அவரது நிழலிரவு நாவல் முக்கிய பேசு பொருளை மையமாக கொண்டது. இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் ஆவேசமான பெண் மனத்தின் வெளிப்பாடு. சுகந்தி சுப்ரமணியனின் “அறை” என்கிற கவிதையை கவிதை வாசகர்கள் அறியாமல் இருக்க வாய்ப்பில்லை. தமயந்தியின் கவிதைகள் சுகந்தி சுப்ரமணியன் அவர்களின் நீட்சியாலும் அளவிடப்படக்கூடியவை. ஆனால் வெறுமென இக்கவிதைகள் கொந்தளிப்பை உள்ளடக்கி இருக்கின்றன என்றும் சொல்ல முடியாது.

தனித்துப் பறக்கும்

எல்லா இறகிற்கும் தெரியும்

ஒரு பறவையின் பாரம்.

என்ற கவிதை உணர்த்துவது பறவையின் பாரத்தை அல்ல. என் வாசிப்பில் இதுவொரு தியானச் செறிவு. பறவையின் பாரம் தெரிந்த இறகு என்பதே ஒரு சிறந்த விசாரம். இந்த மொத்த தொகுப்பிலும் தனித்துப் பறக்கும் ஒரு இறகின் அசைவை என்னால் உணர முடிகிறது. அது தமயந்தி என்கிற பறவையின் பாரமறிந்தது என்பதே என் துணிபு. கவிஞர்களே  மொழிக்கு இறகையும் பறவையையும் தனிமையையும் அளிக்க வல்லவர்கள். தமயந்திக்கு வாழ்த்துக்கள்.

The post என் பாதங்களில் படரும் கடல் first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 10, 2024 05:30
No comments have been added yet.


அகரமுதல்வன்'s Blog

அகரமுதல்வன்
அகரமுதல்வன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow அகரமுதல்வன்'s blog with rss.