01
பகல் தரித்து
இரவு கிளைத்த
பூமியில்
சிறகுலர்த்தும்
பறவைகள்
வந்தமர்ந்த
யுகமரத்தில்
தாம் புசித்தும்
தீராமல்
ஒட்டியிருந்த
கனியை
அலகு கூட்டி
உண்ண
வளர்கிறது
அம்புலி.
02
யானைகள் கனவில் வருகிறதென
சொன்ன ஆச்சியை
காட்டுக்கு அழைத்துச் சென்றேன்.
முதுமரத்தின் சுள்ளிகளைப் பொறுக்கி
யானைகளின் தந்தம் என்றாள்.
அடிவேரைத் தொட்டு
யானைகளின் கால்களைப் பார் குளிர்கிறதென்றாள்
மரத்தை யானை என்றாள்
ஆச்சியை காடென்றோம்
03
இரவில் ஓலம் கேட்கும்
செவிகள் எனது.
தண்ணீரைத் திறந்தால் குழாயில்
பெருகி வழிகிறது.
வெளிச்சத்தைப் போட்டால்
அறையெங்கும் பரவுகிறது.
மின் விசிறியைச் சுற்ற விட்டால்
வெளியெங்கும் அலைகிறது
என் தலையில் வழிவது
அற்பம் அற்பம் அற்பம்
ஓலம் வழிவது அற்பம்.
The post அம்புலி first appeared on அகரமுதல்வன்.
Published on January 02, 2024 10:30