இணையமும் இலக்கியமும்

 

அன்புள்ள ஜெ,

இன்றைய இணையச்சூழல் பற்றி இளங்கோ கிருஷ்ணன் எழுதிய குறிப்பு இது. இத்தனைச் சுருக்கமாக, தீவிரமாக முகநூலிலேயே இதை எழுதியிருப்பது ஆச்சரியமானது

சங்கர் ராம்

அன்புள்ள சங்கர்

நான் எழுதியதும் இதையே. பார்க்க வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு

ஜெ

*

இலக்கியம் தொடர்பாக ஏதாவது சர்ச்சை எழுகிறபோதும், இலக்கியவாதிகள் தொடர்பாய் ஏதாவது குற்றச்சாட்டு எழுகிறபோதும் ஒரு கும்பலே அடிக்கத் தயாராய் இருக்கிறது. “ஓ இந்த இலக்கியவாதிகளே இப்படித்தான். இலக்கியமே இப்படித்தான்..” என்று கூச்சல்கள் எழுகின்றன.

உண்மையில் இந்தக் குற்றச்சாட்டை கூவுவது ஒரு கூட்டம் அல்ல. வெவ்வேறு வகையான கும்பலைச் சேர்ந்த மனிதர்கள். ஏதாவது ஒரு கட்சி மற்றும் சித்தாந்த பின்புலத்தில் இயங்கியபடி, அவர்களின் சித்தாந்தத்தை கோட்பாட்டை மட்டுமே இலக்கியம் வாந்தி எடுக்க வேண்டும் என்றும் கருதுவோர்.

ஒரு கவிதை நூலோ, சிறுகதை நூலோ மொக்கையாக எழுதிவிட்டு, தன்னை யாரும் கவனிக்கவில்லை என்றதும் பொங்கல் வைக்கும் அரைகுறைகள்.

ஏதாவது ஒரு பெரிய மனுஷனுக்கு அல்லது ஒரு குழுவுக்கு Bully யாக செயல்படும் அடியாள் கூட்டம்.

வயிற்றுப் பிழைப்புக்காக என்.ஜி.ஓ வைத்துக்கொண்டு சமூக சேவகர், சமூகக் களப்பாணியாளர் என்று கருதிக்கொண்டு உலவும் கூட்டம்.

முகநூல் தோன்றிய காலத்திலேயே உருவாகி மெல்ல வளர்ந்து இன்று மாபெரும் முகநூல் ஜோம்பிகளாக உருவாகியிருக்கும் பொச்செரிச்சல் கூட்டம்.

முன்னால் இலக்கியவாதிகள், எதிர் இலக்கியவாதிகள், எதிர் அறிவுத்தரப்பினர், இலக்கிய வெறுப்பாளர்கள், இலக்கிய மறுப்பாளர்கள், இலக்கியம் அறியாதவர்கள் என்றொரு கூட்டம்…

இப்படி தனித் தனி க்ரூப்பை சேர்ந்த ஆட்கள் எந்த ஒரு விவகாரம் வரும்போது பொங்கிக்கொண்டு வருவார்கள். இவர்கள் யாருக்குமே தமிழ் இலக்கியம் குறித்தோ, அதன் அறிவார்த்தம் குறித்தோ, அதன் உள்ளார்ந்த விழுமியங்கள், அது முன்வைக்கும் அழகியல் சிந்தனைகள், அதன் தத்துவார்த்த மனநிலைகள், அதன் வரலாற்றுப் பின்புலங்கள் குறித்தோ பெரும்பாலும் அறிதல் இருப்பதில்லை. இருந்தாலும் அதன் மீது எந்த மரியாதையும் இல்லை.

கலை என்பதை தன்னளவிலான முழுமையான அறிதல் முறை என்பதை நம்புபவன் நான். கலையின் வழியே வாழ்வை சமூகத்தை அறிவதற்கு தத்துவம் எவ்வாறு பயன்படுகிறது அல்லது உதவுகிறது என்கிற விஷயத்தையும் கவனிப்பவன். அதனாலாயே கலைஞன் என்பவன் தனித்துவமானவன் என்பதும் என் புரிதல்.

ஒளியும் இருளும் மயங்கிக் கிடக்கும் ஒரு பாதை அது. மனித குலத்துக்கு மேன்மையைக் கொண்டு வரும் மிகச் சிறந்த விஷயங்களை கொண்டு வந்து சேர்க்கும் அறிவார்ந்த மனதுக்கு, அதைச் செய்யும்போது எவ்வளவு நுட்பம் உண்டோ அதே நுட்பம்தான் அந்த மனதில் கபடம் இயங்கும் போதும் நிகழும். இது ஓர் அடிப்படை.

இங்கு இது ஓராயிரம் முறைச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனாலும் கலைஞன் என்றால் அடிப்போம் என்று எப்போதும் ஒரு கும்பல் வக்கறிக்கிறது. என்ன காரணம். கலைஞர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம், புகழ், விருதுகள், மீடியா வெளிச்சம் உள்ளிட்டவை உருவாக்கும் பொச்செரிச்சல். அது மட்டுமே தூய உண்மையான காரணம்.

மற்றொன்று அன்றாடத்தின் சலிப்பும் அதில் ஈடுபடும்போது அவர்கள் செய்யும் மலினங்களும் தங்களை தீண்டிவிடக்கூடாது என்பதில் இருக்கும் கவனம். அதை உதறிக்கொண்டு மேல் எழுந்து செல்ல, அன்றாடத்தின் கபடம் தங்கள் மீது கவிழ்க்கும் குற்றவுணர்விலிருந்து வெளியேற அவர்களுக்கு ஒரு அவுட்லெட் தேவைப்படுகிறது. ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பது போல் இருக்கவே இருக்கான் இலக்கியவாதி போட்டு பிளடா ராசா என்று ஆர்ப்பரித்து வருகிறார்கள்.

இலக்கியவாதிகள் எல்லோருமே யோக்கியர்கள் என்று நான் சொல்ல மாட்டேன். ”நான் யோக்கியன்” என்று சொல்லவே எனக்கு நடுங்கும். அதுதான் என் சுபாவம். ஆனால், இலக்கியவாதியை அடிக்கிறேன் என இங்கு இரண்டாயிரம் ஆண்டுகளாக உருவாக்கி வைத்திருக்கும் ஒரு மாபெரும் அறிவு மரபை இழிவு செய்யாதீர்கள். இலக்கியவாதிகள் செய்யும் தவறுக்கு இலக்கியம் என்ன செய்யும். கம்பனும், வள்ளுவனும், வால்மீகியும் காளிதாசனும் தஸ்தாயெவ்ஸ்கியும் டால்ஸ்டாயும் இலக்கியவாதிகள்தான். உங்கள் மகத்துவமான கண்களுக்கு அவர்கள் எல்லாம் தெரியவில்லையா என்று கேட்கிறேன். நான் இலக்கியவாதிகள் என்று சொல்லும்போது அவர்களை மனதில் வைத்துத்தான் சொல்கிறேன். அப்படிச் சொல்ல வேண்டும் என்றுதான் கோவை ஞானி எங்களுக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறார்.

இந்தப் பதிவைப் படிக்கும்போது உங்களுக்கு கோபம் வந்தால் உட்கார்ந்து யோசியுங்கள். கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டேன். மனது ஆறவில்லை. தகிப்பாய் இருக்கிறது.

இளங்கோ கிருஷ்ணன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 17, 2023 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.