இரு குறும்படங்கள்

பெருமதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ், லக்கி லூக், ஆர்ச்சி, டெக்ஸ் வில்லர், கிட் ஆர்டின், வாரமலர் என்று ஏழு வயதில் தொடங்கிய எனது வாசிப்பு பன்னிரெண்டாவது வயதில் பொன்னியின் செல்வனுக்கு வந்து சேர்ந்தது. பின்னர் க்ரைம் நாவல், சுஜாதா வழியாக பயணித்து ஏழு வருடங்களுக்கு முன்பு தான் இரவு நாவல் மூலம் உங்களைக் கண்டடைந்தேன். அதற்குப் பின் அறம், ரப்பர், விஷ்ணுபுரம், வெண்முரசு, பல சிறுகதைகள் வழியாக தங்களை வாசிக்கிறேன். முயற்சிக்கிறேன் என்றும் சொல்லலாம். ஏனென்றால், தங்களுக்கு வரும் வாசகர் கடிதங்களைப் படிக்கும் பொழுது, நான் வாசிப்பில் இன்னும் நிறைய தேற வேண்டியது இருக்கிறது என்று தோன்றுகிறது.

ஆசிரியர், வாசகர் உறவு நேரடித் தொடர்பில் இருக்கத் தேவையில்லை என்றுதான் நினைத்திருந்தேன். உங்கள் வாசகர் வட்டம், இலக்கிய சந்திப்பு போன்றவை ஆச்சரியம், ஆர்வம் அளிக்கிறது. சில பதிவுகள் கட்டுரைகளில் அந்த உரையாடலுக்கான தேவையையும் விளக்கியுள்ளீர்கள்.

பல நாள் தயக்கத்திற்குப் பின் இந்த அறிமுகக் கடிதம் எழுத துணிவு வந்தது. தயக்கதிற்குக் காரணம் உங்களுக்கு எழுதுமளவிற்கு இலக்கிய வாசிப்புத் தகுதி இல்லை என்ற உணர்வு. துணிவிற்குக் காரணம், ஒரு வார காலமாக நடந்து வரும் புனைவுக் களியாட்டு. ஒரு திரைப்படவிழா கொண்டாட்ட மன நிலையை அளித்தது. யா தேவி சிறுகதைகள் முதலே இது ஆரம்பித்து விட்டது போல் இருக்கிறது. திரைப்படவிழாவிற்கு வரும் இயக்குனர்களை சந்தித்து பேசும் வாய்ப்பு மற்றும் அனுபவம், இரண்டு நிமிட அறிமுகம், கைகுலுக்கல், படம் அருமை போல் சம்பிரதாயமாக இருப்பினும் ஒரு திருப்தி கிடைக்கும். அதே போல் இந்த முதல் கடிதம் ஒரு மன நிறைவை அளிக்கிறது. பதில் கிடைத்தால் பெரும் மகிழ்ச்சி.

நான் ஒரு முயற்சிக்கும் திரை இயக்குனர் என்ற முறையில், புனைவு என்ற அளவுகோலில், எனது இரண்டு குறும்படங்களின் இணைப்பை அனுப்புகிறேன். உங்களுக்கு நேரமிருந்தால், விருப்பமிருந்தால் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி

மதன் ஜெகநாதன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 16, 2023 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.