அறம் ஒரு பதிவு

அறம் வாங்க  

அறம் மின்னூல் வாங்க

ஜெயமோகன் எழுதிய நூறு நாற்காலிகள் வாசித்தபோது என் இளமையில் நிகழ்ந்த சில அனுபவங்கள் நினைவுக்கு வந்தன.

எங்கள் வீட்டுக்கு ஒரு வயதான பெண்மணி பிச்சையெடுக்க வந்துகொண்டிருந்தார். அவரை அனைவரும் நாயாடி என்று அழைத்தனர். வேறு பெயர் அவருக்கு இருந்ததாக தெரியவில்லை. எனக்கு அன்று ஆறே ஏழோ வயது. அந்த பெண்மணிக்கு பணம் கொடுப்பது என் வேலை. அடிக்கடி பழைய ஆடைகளும் அளிப்போம். அவருடைய மகனின் குழந்தைக்கு என் வயதுதான். என்னை காணும்போது பிரியமாக விரியும் அவர் முகத்தை நினைவுகூர்கிறேன்.

ஆனால் என்னை ஆச்சரியப்படுத்திய ஒரு நிகழ்வுண்டு. பிச்சை அளிக்கப்பட்டதும் ‘நாசமாகப்போக; என்று சாபமிட்டுக்கொண்டு அவர் திரும்பிச் செல்வார். என் அம்மாவிடம் அதைப்பற்றி கேட்டேன். அது அவர்களின் நம்பிக்கை என்றார். கொடுக்கும் கையை சாபமிட்டு அவர்கள் நம் பாவத்தையும் வாங்கிக்கொள்கிறார்களாம்.

எம் இளம் உள்ளத்தில் அது அன்று உவக்காப இல்லை. அப்படிச் சொல்லவேண்டாம் என்று நான் அவரிடம் சொன்னேன். அவர் பொருட்படுத்தவில்லை. பலமுறை சொன்னபின் அவர் என்னிடம் ஒரு சமரசத்திற்கு வந்தார். நன்றாக இரு என வாழ்த்திய பின் உரக்க நாசமாகப்போகட்டும் என சொல்வார்

காலம் கடந்தபோது அவரை காணமாலாயிற்று. ஒரு உயர்சாதிக்குடும்பத்தில் அதன் எல்லா நன்மைகளையும் அடைந்து வளர்ந்த நான் அவரை மறந்தேன். இந்நாவலில் அவரை காண்பது வரை

ஐஏஸ் அதிகாரியான தர்மபாலன் என்னும் காப்பனின் அன்னைதான் அந்த பெண்மணி. இந்திய ஜனநாயகத்தின் அதிகாரசிம்மாசனத்தில் மகன் அமரும்போதுகூட தன் வழக்கமான பிச்சையெடுக்கும் வாழ்க்கையில் இருந்து உளவிடுதலை அடையமுடியாதவர். அவரை கட்டியிருக்கும் சங்கிலிகள் அரசின் கட்டுப்பாட்டிலுள்ளவை அல்ல. அவர்ணனை ஏளனம் செய்யும் ஆதிக்கசாதி அழுக்கு மறுபக்கம் அடிமைத்தனத்தை ஏற்றுக்கொள்ளும் கீழாளரின் பிரக்ஞையை உருவாக்குகிறது. ஆண்டுகணக்காக நீண்ட ஒரு வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்ள முடியாத வயோதிக அன்னை. மறுபக்கம் தன் மகனையும் கணவனையும் அந்த இருளுக்குள் தள்ளிவிடலாகாது என நினைக்கும் மனைவி. இரண்டு எல்லைகள் நடுவே தத்தளிக்கிறான் தர்மபாலன்.நம் ஆரியபாரதம் உருவாக்கிய பலியாடுகள்

தன் முன் நியாயம் ஒரு பக்கமும் நாயாடி மறுபக்கமும் இருந்தால் நாயாடிக்கே சாதகமாக இருப்பேன், ஏனென்றால் பிறப்பாலேயே நாயாடி அநீதிக்கிரையானவன் என்று சொல்லும் அந்த இளம் ஐஏஸ் அதிகாரியில் இருந்து மிகவும் பின்தங்கிவிடுகிறான் காப்பன். நம் நடுத்தரவர்க்க வாழ்க்கையின் பகுதிகளல்லவா சமரசங்கள்.

ஆனால் எங்கும் தாழ்ந்தவன் தாழ்ந்தவனே. அதிகாரம் தாளில் மட்டுமே. சாதியாதிக்கம் ஆட்சிசெய்யும் அரசுப்பதவிகளில் தான் இப்போதும் மேலாளரைக் கண்டால் வழிவிலகிச்செல்லவேண்டிய அடியாளன்தான் என காப்பன் புரிந்துகொள்கிறான். தெருவில் பிச்சையெடுத்து அனாதையாக இறக்கும் அம்மா இறுதிமூச்சுடன் சொல்கிறாள். ‘காப்பா களசம் வேண்டாம்லே…கசேரயில் இருக்காதே”

என் நினைவுகளிலுள்ள் அந்த பழைய நாயாடி பெண்மணியும் ஏதாவது அரசு மருத்துமவனையில் அனாதையாக இறந்திருப்பாரா? என்னைப்போன்ற ’கொடையாளி’களின் பாவங்களை பெற்றுக்கொண்டு?

நந்தகுமார்

மலையாளத்தில் இருந்து. இணைப்பு 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 06, 2023 10:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.