வெண்முகிலில் வாழ்தல், கடலூர் சீனு

வெண்முகில் நகரம் மின்னூல் வாங்க 

வெண்முரசு நாவல்கள் வாங்க 

இனிய ஜெயம்

கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக வெண்முகில் நகரத்தில் வாழ்ந்தோம். இறுதி பகுதி குறித்து ஆஞ்சேநேய ஜெயந்தி அன்று உரையாடினோம்.  உண்மையில் இந்த நாவல் திரௌபதி நீராடி, தொய்யில் எழுதி, அணிபூண்டு அன்னையை திரும்பிக் கூட பார்க்காமல் நகர்வலம் சென்று, சுயவரம் காணும் போதே துவங்கி விடுகிறது. அஸ்தினாபுரி அரியணையில் துரியனும் கர்ணனும் வாளேந்தி பக்கம் நிற்க அவள் அமர்வது வரை வந்து முழுமை கொள்ளும் நாவல் இது.

இன்று திருப்பூர் சென்னை என்று இரண்டு இடங்களில் இருந்து உங்கள் வாசகிகள் அழைத்து வெண்முரசு முற்றோதல் இன்றுடன் நிறைவு கண்டதை சொன்னார்கள். இருவருக்குமே இலக்கியம் புதிது. எந்த தயக்கமும் தடையும் இன்றி தினமும் வாசித்து (சந்தேக நிவர்த்திக்கு கடலூர் சீனு) முடித்திருக்கிறார்.

இந்த நாவலின் இறுதி பகுதிகளை பேசிய அமிர்த வல்லி அவர்களுக்கும் இலக்கிய முன் வாசிப்பு என ஏதும் இல்லை. தமிழை பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை இரண்டாம் மொழியாக  கற்ற அளவு மட்டுமே தொடர்பு கொண்டவர். இறுதி அத்யாய உளவியல் நுட்பங்கள் உணர்வுகள் அனைத்தையும் தேர்ந்த ரசனையுடன் தொட்டு விரித்து உரையாடினார்.   (வாசகருக்கான மாலை சிற்றுண்டியும் அவரே கொண்டு வந்து விட்டார்).

அம்பை பித்து கொண்டு திரிந்த நாட்களை விவாதித்தது எங்கோ போன ஜென்ம நினைவு போல இருக்க, இதோ அஸ்தினாபுரி துறைமுகத்தில் நூறு மணப்பெண்கள் நகர் நுழைய காத்து நிற்கின்றனர். நீர்ச் சுடரில் ஒவ்வொருவராக விழுந்து மாயப்போகும் கங்கை.

இந்த நாவல் நேற்று வாசித்து முடித்தாலும், இதோ இக்கணம் வரை திருதா கொண்ட துயரம் உள்ளே உறுத்திக்கொண்டே இருக்கிறது. விழியற்றவன் அறியும் உண்மை என்ற ஒன்று உண்டு. பிரத்யட்சமோ அனுமானமோ ஊகமோ வழி என அமைந்த உண்மை அல்ல அது. ‘நான் அறிவேன்’ எனும் நிலையில் உள்ளே அமைத்த முற்ற முழுதான உண்மை. எல்லாவற்றையும் அவன் அந்தக கண் கொண்டு பார்த்து விட்டான். இனி அவன் பார்த்த காட்சி அவன் நிகர் வாழ்வில் வந்து சேரும் வரை அவன் காத்திருக்க வேண்டும். வெறுமனே காத்திருக்க மட்டுமே அவனால் முடியும். எதையுமே அவனால் மாற்ற முடியாது. எத்தனை பெரிய துயர்.

நாங்கள் இங்கே இப்போது இந்த உணர்வில் கிடக்கிறோம். உங்களைக் கேட்டால் இது எல்லாம் நான் என்றோ கண்டு முடித்து கடந்த கனவு என்று பதில் சொல்வீர்கள். இன்னும் நெடுந்தொலைவு உள்ளது நாங்கள் முதலாவிண் காண. இடையே உள்ளது யுகம் யுகம் என்று நீளும் நூறு நூறு வாழ்வு.

கடலூர் சீனு

வெண்முகில் நகரம்- சுரேஷ் பிரதீப் வெண்முகில்நகரம் மையம் வெண்முகில்நகரம் – வாசிப்பு
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 10, 2023 10:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.