தொப்பி அணிந்த டால்ஸ்டாய்.

ஜி.கோபி

மண்டியிடுங்கள் தந்தையே நாவல் குறித்த வாசிப்பனுபவம்

••

மண்டியிடுங்கள் தந்தையே நாவல் திறந்த வேகத்தில் வாசித்து முடித்துவிடக் கூடிய எளிய சுவாரசியமான புத்தகம். ஆனாலும் இரண்டு நாட்கள் தொடர்ந்து வாசித்தேன். ரஷ்யவில் யஸ்யானா போல்யானா பண்ணைக்குச் சென்று டால்ஸ்டோயை பார்த்து உடன் பழகியது போல இருந்தது. அந்தப் பண்ணையின் மீதுள்ள ஒரு மணற் குன்றின் மீது நின்று கொண்டு அங்குள்ள விவசாயிகளோடு தொப்பி அணிந்த படி டால்ஸ்டோய் வேலை பார்த்துக் கொண்டிருப்பதை நான் பார்த்தேன். எந்த நேரமும் உற்சாகமாகச் சுற்றியலையும் அனைவரையும் நேசிக்கும் முட்டாள் டிமிட்ரியையும் முரட்டுத்தனம் கொண்ட திமோபியையும் வெகுவாக ரசித்தேன்.

உண்மையில் அகன்ஷியா மற்றும் திமோபிக்காக நான் வருந்துகிறேன். நதியில் போட்ட இலையைப் போல அவன் வாழ்க்கை அலைக் கழிக்கப் படுகிறது. தந்தை டால்ஸ்டாயின் மீது ஏற்பட்ட உறவின் கசப்பும் கடந்த காலத்தில் அவர் செய்த குற்றத்தினால் ஏற்பட்ட வெறுப்பின் காரணமாகப் பண்ணையை விட்டு வெளியேறிப் போகும் திமோபியை என்றும் மறக்கவே முடியாது. ஆனால் பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பி வரும் அவன் முற்றிலும் புதிய மனிதனாக இருக்கிறான்.

நேர்த்தியாக உடையணிந்து கொண்டு பண்ணை தொழிலாளர்களுடனும் அனைவருடனும் உற்சாகமாகப் பழகுகிறான். புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தவனாக நிறையப் பயண அனுபவங்களையும் நினைவுகளையும் கொண்டவனாகயிருக்கிறான். அதிலும் குறிப்பாகப் பால்சாக்கின் புத்தகங்களை எடுத்து தனது தாயிடம் கொடுப்பதாக ஒரு குறிப்பு வந்தது . உருமாறிய திமொபியை நான் வெகுவாக ரசித்தேன். ஏதோவொரு தருணத்தில் பயணங்களும் வாசிப்பும் எழுத்தும் மனிதனை மிகுமுக்கியமாக உருமாற்றமென்பது முற்றிலும் உண்மைதான்.

நீண்டகாலம் வாழ்ந்த நெடும் முதியவரான டால்ஸ்டாயை வாசிக்கும் போது மலையைப் போல நிசப்தமானவராகயிருந்தார். புத்தகத்தை வாசித்த முடித்த பின்னரவில் கூடப் புத்தகத்தின் அட்டைப் படத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் அமைதியான முரட்டுச் சிங்கத்தைப் போல டால்ஸ்டாய் தோற்றமளித்தார். நரைத்த தாடிகளுக்குள் அவரது கண்களின் அன்பையும் பரிவையும் ஆறாத நினைவுகளின் வலியை உணர முடிந்தது. நாவலின் இறுதி பகுதியில் அகன்சியாவின் சமாதிக்கு போய்விட்டு நன்றி சொல்கிறார் டால்ஸ்டாய். உண்மையில் அது அவருடைய காதலின் நினைவுச் சின்னம் அதுதான். அந்தக் கணத்தில் அவர் தனது ஒட்டு மொத்த தவறுகளுக்கும் மனம் திருந்தி வருந்ததியிருப்பார். அதைத் தொலைவில் இருந்து பார்க்கும் திமோபி மனதினுள் ஆசுவாசமடைகிறான். தனது தந்தையான டால்ஸ்டாய் மீதிருந்த இத்தனை ஆண்டுகள் கசப்பு குரோதமும் வடிந்து அமைதியடைகிறான்.

ரஷ்யாவில் ஏற்பட்ட பஞ்சத்தில் டால்ஸ்டாய் ஆற்றிய தொண்டு மிக முக்கியமான பொறுப்பான செயல் அதே போலவே பல்கலைகழகத்திலிருந்து டால்ஸ்டாயினைப் பேட்டி எடுக்க வந்த மாணவர்களோடு அவர் உரையாடும் அத்தியாயம் நான் விரும்பி வாசித்த ஒன்று. அதில் டால்ஸ்டாய் இலக்கிய ஆளுமையும் மேதைமையும் அழகாக வெளிப்பட்டிருந்தது. மாபெரும் எழுத்தாளரான இதே டால்ஸ்டாய் தான் இளமை காலத்தில் சூதாடியாக இராணுவ வீரனாகப் பெண்களை மயக்குபவராக இருந்திருக்கிறார். மேலும் இதே லெவ் டால்ஸ்டாய்தான் விவசாயியாக எளிமையும் ஞ்சானமும் கொண்ட முதிய தந்தையாக அனைவரையும் நேசித்துப் போதனை செய்பவராகயிருக்கிறார்.

நெடிய மலைக்குப் பல பக்கங்கள் உண்டு. எந்தப் பக்கத்திலிருந்து ஏறினாலும் மலையுச்சியில் நாம் அடையும் அனுபவம் நிகரில்லாதவொன்று. டால்ஸ்டாய் அந்த மலையைப் போலப் பல முகங்களைக் கொண்டவர். ஆனால் மலையின் நிசப்தம் பல நினைவுகளையும் கடந்த கால வாழ்வின் துயரங்களையும் கொண்டதேன எவரும் அறிய மாட்டார்கள்.

பனியும் பசுமையின் வயல் வெளிகளும் பழங்காலக் கிராம வீடுகளையும் கொண்ட அவரது பண்ணை மனதில் மிதந்த படியே இருந்தது. நீதிக்கதைளையும் அன்னா கரீனா போன்ற நவீன நாவலையும் எழுதிய டால்ஸ்டாய் ஒரு எளிய விவசாயியாக ராணுவ வீரனாக எழுத்தாளனாகவும் வாழ்ந்திருக்கிறார் என்பது ஆச்சர்யமாக யிருக்கிறது.

டால்ஸ்டாய் எந்தப் பெண்ணையும் கட்டாயப் படுத்தியோ வன்புணர்வுக்கோ உட்படுத்தவில்லை. அவரோடு பழகிய பெண்கள் அவரை விரும்பி நேசித்தார்கள் என்று ஒரு குறிப்பு வருகிறது. திடமான மனிதராகக் கருணையும் கொண்ட அவரை அனைவரும் விரும்பினார்கள். நாவலில் ஒரு பட்டாம்பூச்சியைப் போலப் பண்ணைக்குள் அலையும் முட்டாள் டிமிட்ரி மறக்கவே முடியாத கதாபாத்திரம். அவர் மரணமடையும் நேரத்திலும் சிரித்துக்கொண்டே மடிந்தான் என்பது ஆச்சர்யமாக இருந்தது. இந்தக் கசடுக்களும் போலிதனமுமான வாழ்வில் முட்டாள் டிமிட்ரி போன்றவர்கள் மட்டுமே நம்மைச் சந்தோசப் படுத்துகிறார்கள். நல்ல நண்பர்களாகயிருக்கிறார்கள். முட்டாள் டிமிட்ரி குழந்தையைப் போன்றவர். அவரை நான் அளவுகடந்து ரசித்து வாசித்தேன். டால்ஸ்டாயின் கடந்தகால வாழ்க்கையில் எஞ்சிய நினைவுகளுமாகவே திமோபியும் அகன்சியாவும் இருக்கிறார்கள்.

டால்ஸ்டாயை ஒரு போதும் அகன்ஷியா வெறுக்க வில்லை. பெண்களின் அன்பையும் மனதையும் எவராலும் புரிந்துகொள்ள முடியாது என்பது உண்மைதான். அதே நேரத்தில் தந்தை இல்லாத திமோபியின் வேதனையையும் உணர முடிந்துது. அழைக்கழிப்பின் வாழ்க்கை அவனுடையது. பண்ணயின் வேலையாட்கள் டால்ஸ்டாயின் சொந்த வாழ்க்கையை நாவல் பேசும் அதே நேரத்தில் அவருடைய பிறந்தநாள் இரவு விருந்தும், கொண்டாட்டம் நிறைந்த இரவும் சர்க்கஸ் உலகத்திற்குள் போய் வந்த அனுபவத்தைத் தந்தது. ரஷ்யாவின் பனிபெய்யும் இரவை கற்பனை செய்து பார்த்தேன்.

இந்தப் புத்தகத்தின் மூலம் டால்ஸ்டாயின் வாஞ்ச்சையையும் அன்பையும் அவருடைய போதனைகளையும் உணர முடிந்தது.

டால்ஸ்டாய்- சோபியா உறவு பல உண்மைகளைச் சொல்கிறது. திருமணமான அன்று சோபியாவிடம் தனது கடந்தகாலத் தவறுகள் நிறைந்த நினைவுகளின் டைரியை கொடுக்கிறார். காந்தியும் கூடத் தனது வாழ்நாளில் ரகசியமாகப் புகை பிடித்தாகவும் அதனால் ஏற்பட்ட குற்றஉணர்வினால் மன்னிக்குமாறும் அவரது தந்தைக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். செய்த தவறுக்கான தண்டனை மனதார அதை ஒப்புக்கொண்டு திருந்தி வாழ்வதில் தான் உள்ளது. மகாபாரத்தில் கூடக் குந்தியின் கடந்த கால உண்மை வெளிப்படும் போது அன்னை மீது கோபப்பட்டு யுதிஷ்டிரன் எதை மறைக்கப்படுகிறதோ அதைப் பாவம் என்பார்கள் என்று உரைக்கிறான்.

டால்ஸ்டாய் பற்றி எழுதப் பட்ட இந்த நாவல் அந்த உண்மையைத்தான் எளிமையாகப் பேசுகிறது. ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் உண்மையாக நடந்து கொள்வதுதான் நல்ல உறவின் அடையாளம். ஆனால் ஒரே படுக்கையில் படுத்திருந்தாலும் யாரும் ஒரே கனவை காண்பதில்லை என்று சொல்லும் டால்ஸ்டாய் சக மனிதனையும் ஆணையும் பெண்ணை யும் அவரவர் சரி தவறுகளோடு ஏற்றுக் கொள்ளவும் புரிந்து கொள்ளவும் வேண்டும் என்று அழுத்தமாகப் பதிவு செய்கிறார். தமிழில் எளிமையாக டால்ஸ்டாய்பற்றிப் புத்தகம் எழுதி நல்ல வாசிப்பனுபவத்தையும் டால்ஸ்டாயின் படைப்புகளையும் புரிந்து கொள்ள உதவி செய்த எழுத்தாளர் எஸ். ராவிற்கு அளவுகடந்த அன்பும் நன்றியும்

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 29, 2023 21:50
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.