முடிவில்லாப் போராட்டம்

நீதி மறுக்கப்பட்ட ஒருவனின் போராட்டத்தை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக விவரிக்கிறது Ghodwa. 2021ல் வெளியான துனிசியப்படம். துனியப்புரட்சிக்குப் பிந்திய அரசியல் சூழலை விவரிக்கும் இப்படத்தை இயக்கியவர் தாஃபர் எல்’அபிதீன். இவரே முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்

அதிகாரத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராடிவரும் வழக்கறிஞரான ஹபீப் தீவிரமான மனச்சிதைவுக்கு உள்ளாகியிருக்கிறார். புரட்சிக்கு முந்திய அரசின் மோசமாக வன்கொடுமையால் அவரைப் போலப் பலரும் பாதிக்கப்பட்டார்கள். சிறையில் அடைக்கப்பட்டார்கள். புரட்சி அரசாங்கம் உருவானதும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹபீப் நம்பினார். ஆனால் புரட்சி அரசாங்கம் அது போன்ற நீதி விசாரணை எதையும் மேற்கொள்ளவில்லை. ஆகவே நீதி கேட்டு அரசிடம் மன்றாடுகிறார் ஹபீப். இன்னமும் புரட்சி நடைபெறவில்லை. இனிமேல் தான் நடைபெறப்போகிறது என்று நம்புகிறார்.இந்த கற்பனை உலகில் சஞ்சரிக்கிறார்

மனைவியைப் பிரிந்து வாழும் ஹபீப் உடன் தற்காலிகமாக வந்து தங்குகிறான் அவரது மகன் அகமது. பள்ளி மாணவனாக அவன் பரிச்சை எழுதுவதற்காகத் தந்தையின் வீட்டில் தங்கியிருக்கிறான். இந்த நாட்களில் தந்தையின் குழப்பங்களைப் புரிந்து கொள்வதுடன் அவர் மீது மிகுந்த அன்பு காட்டுகிறான். தந்தை வெளியே செல்ல வேண்டாம் என்று தடுக்கிறான். ஆனால் ஹபீப் தொடர்ந்து பல்வேறு வகைகளில் போராடுகிறார். அடி உதை வாங்குகிறார். அவரை அதிகாரத்திலிருப்பவர்கள் விஷம் கொடுத்துக் கொன்றுவிடுவார்கள் என்று பயப்படுகிறார்.

தந்தையின் மீது அக்கறை கொண்ட அகமது பரிட்சை நடுவிலும் அவர் எங்கே சென்றிருப்பார் என்பதைப் பற்றியே நினைக்கிறான். கவலைப்படுகிறான். அடிபட்டுத் திரும்பும் தந்தையைக் குளிக்க வைக்கும் காட்சி மிகவும் உணர்ச்சிப்பூர்வமானது

உண்மை நிகழ்வுகளை மையமாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

ஒரு காட்சியில் புரட்சி அரசாங்கத்தின் அதிபரிடம் நேரடியாக ஹபீப் முறையிடுகிறான். அவனது கோரிக்கையை அவர் ஏற்க மறுக்கிறார். அத்தோடு காவலாளிகளை ஏவி உதைத்து வெளியே தூக்கி எறிகிறார். இதற்காகத் தானா தானும் தோழர்களும் சிறைக்குச் சென்றோம். துயர்களை அனுபவித்தோம் என்று ஹபீப் புலம்புகிறான்.

துனிசியப் புரட்சிக்குப் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, இன்னும் சமூக நீதியைத் தேடிக்கொண்டிருக்கும் ஹபீப் வழியாக மறைக்கப்பட்ட நீதியின் குரலை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

அகமது உடனான ஹபீப்பின் உறவு மிகவும் அழகாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சில காட்சிகளில் மகன் தந்தையைப் போலப் பொறுப்பாக நடந்து கொள்கிறான். முடிவில் அவன் தந்தையின் லட்சியத்தை உயர்த்திப் பிடிக்க ஆரம்பிக்கிறான்.

ஒரு காட்சியில் ஹபீப்பை தேடிப் பிரிந்து போன மனைவி அவனது வீட்டிற்கு வருகிறாள். வீட்டின் அலங்கோல நிலையைக் காணுகிறாள். தண்ணீர் குழாய் வெடித்து வீடு முழுவதும் தண்ணீர் நிரம்பியிருக்கிறது. ஹபீப் தன் மகன் வருவதற்கு முன்பு வீட்டைச் சரி செய்ய முற்படுகிறான். அவன் இன்றும் கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறான் எனச் சண்டையிடும் மனைவி சுவரொட்டிகளைக் கிழித்து எறிகிறாள். ஹபீப் தனது லட்சியம் தோற்றுப்போய்விட்டதை ஏற்க மறுக்கிறான்.

படத்தில் ஹபீப் காஃப்காவின் நாவலைத் திரும்பத் திரும்பப் படிக்கிறான். ஒருவகையில் அவன் தான் விசாரணை நாவலில் வரும் ஜோசப் கே. படம் முழுவதும் காஃப்காவின் மனநிலையை ஹபீப் பிரதிபலிக்கிறான்.

அரசியலை மையப்படுத்திய படத்தைத் தந்தை மகன் உறவின் வழியே பேச முயன்றிருப்பது பாராட்டிற்குரியது. இயக்குநரின் முதற்படமிது. மிகுந்த அக்கறையுடன் கலை நேர்த்தியுடன் உருவாக்கியிருக்கிறார்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 28, 2023 23:24
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.