18 ஜனவரி 2023 மாலை 5 மணி முதல் சென்னை புத்தகக் கண்காட்சியில் விஷ்ணுபுரம் பதிப்பகம் கடையில் இருக்க எண்ணியுள்ளேன் ( எண் 115, 116 ) மாலை 5 மணிமுதல் இருப்பேன். நூல்கள் வாங்கவும் கையெழுத்து பெறவும் விரும்புபவர்களை, நண்பர்களைச் சந்திக்க விரும்புகிறேன்.
புத்தகக் கண்காட்சியில் நான்கு மணிநேரம் நின்றிருப்பதென்பது இத்தனை உவகையை அளிக்கும் என்று பிறரால் நம்ப முடியாது. இது எழுத்தாளரின் நாள். நம் எழுத்துக்கள் வழியாகவே நம்மை வந்தடைபவர்களை நாம் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். நம் நூல்கள் விற்றுக்கொண்டே இருக்கின்றன. தமிழில் எழுதும் எந்த எழுத்தாளருக்கும் அச்சிட்டு அடுக்கப்பட்டுள்ள நூல்கள் ஒருவகையான திகைப்பையே அளிக்கும். எவரேனும் வாசிக்கிறார்களா? இவை வீணான பொருட்களா? புத்தகக் கண்காட்சி அதற்கு கண்கூடான ஒரு பதிலை அளிக்கிறது. இதோ என் வாசகர்கள் என்று காட்டுகிறது. இருபது வயதுகூட ஆகாத இளைஞர்களை வாசகர்களாகக் காண்கையில் அடுத்த தலைமுறையினரிடம் சென்றடைந்துவிட்டோம் என்னும் பெருமிதத்தை அளிக்கிறது
Published on January 17, 2023 10:36