அதிகார எந்திரத்தில் பிழியப்படும் கண்ணாயிரம் பெருமாள் -கணேஷ் பாபு

சென்னையின் அரசு நூலகம் ஒன்றிற்கு சமீபத்தில் சென்றிருந்தேன். புத்தக அடுக்குகளை மேய்ந்துகொண்டிருந்தபோது, அந்தச் சூழலின் மௌனத்தைக் கலைத்தது ஒரு பெண்குரல். உண்மையைச் சொல்வதாக இருந்தால், அது பெண்ணின் குரல் அல்ல, அதிகாரத்தின் குரல். ஒரு பெண் நூலகர் தனக்குக் கீழிருந்த வயதான அட்டெண்டர் ஒருவரைத் தரக்குறைவாக ஏசிக்கொண்டிருந்தார். “எத்தன தடவ சொன்னாலும் உனக்கெல்லாம் அறிவே வராதாய்யா, புத்தகத்த ஒழுங்கா கட்டக்கூடக் தெரியாதா, இதையெல்லாமா இந்த வயசுல ஒனக்குச் சொல்லிக்குடுப்பாங்க”. அந்தப் பெண்ணுக்கு அவரது மகள் வயதுதான் இருக்கும். அவ்வளவு விகாரமான ஒரு பெண்ணை நான் பார்த்ததேயில்லை. அந்த விகாரத்தை அவள் தன் தாய் தந்தையிடமிருந்து பெற்ற மரபணுக்களின் வாயிலாக அடையப்பெறவில்லை என்பது மட்டும் தெரிந்தது. அந்தப் பெண்ணின் எதிரே இருந்த வயதான அட்டெண்டர் கிட்டத்தட்ட அசடு வழிந்து கொண்டிருந்தார். சிரித்தபடி, சாரி மேடம், இதோ இப்ப சரி பண்ணிடுறேன்” என்றபடி மீண்டும் பழைய புத்தகங்களை அடுக்கிக் கட்ட ஆரம்பித்தார். ஆளரவமற்ற அந்த நூலகத்தில் என்னைத் தவிர பெரியவர் அடைந்த அவமானத்தைக் கவனிக்க நேர்ந்தவர் வேறு எவரும் இல்லை என்றாலும், எனக்கு அந்த இடத்தில் அதற்கு மேல் நிற்க முடியவில்லை. என்னெதிரே இருப்பவை புத்தக அடுக்குகள்தாமா? அந்த இடம் உண்மையில் நூலகம்தானா? நெருப்பின் நாவுகளுக்கு அப்பால் தெரியும் காட்சியைப் போல என்முன் இருந்த புத்தக அடுக்குகள் உருகியபடி காற்றில் மிதந்து செல்வது போல இருந்தது. நூலகத்திலிருந்து வெளியே நடந்து வருகையில் தோன்றியது, இந்தப் பெரியவரைப் போல இன்னொருவரை நமக்குத் தெரியுமே. சட்டென  நினைவில் எழுந்து வந்தார் கண்ணாயிரம் பெருமாள்.

சாருவின் ராஸ லீலா நாவலின் முதல் பாகமாக “கண்ணாயிரம் பெருமாளின் நாற்பது கதைகளும் சில பின்குறிப்புகளும்” இடம்பெறுகின்றன. பல வகையிலும் முக்கியமான நாவல் இது.

ஒரு அரசாங்க அலுவலகத்தைக் (குறிப்பாக, தபால்துறை அலுவலகம்) கதைக் களமாகக் கொண்டு, அதன் சகல வித இயக்கங்களையும் விரிவாக விவரிக்கும் நாவல் இதற்கு முன் தமிழில் வந்ததில்லை. நீல பத்மநாபனின் “ஃபைல்கள்” போன்ற சிறிய நாவல்கள் இதற்கு முன் வந்திருந்தாலும் அவற்றின் பேசுதளம் என்பது பிறிதொன்றாகவே இருக்கிறது. ராஸ லீலாவைப் போல இத்தனை விரிவாக அரசாங்க அலுவலகங்கள் அவற்றில் இடம்பெறவில்லை.அதிகாரிகள் என்பவர்கள் பொதுமக்களாகிய நாம் நினைத்துக்கொண்டிருப்பது போல அல்ல. அவர்களில் பெரும்பாலானவர்கள், கனவான்கள் தோற்றத்தில் இருக்கும் சைத்தான்கள். அவர்களால் நிரம்பிய அலுவலகங்கள் என்பவை காரியாலயங்கள் அல்ல, வதைமுகாம்கள் என்பதை உணர்த்தும் நாவல் இது.தீண்டாமையின் பிறிதொரு வடிவம் அரசு அலுவலகங்களில் நீக்கமற நிறைந்துள்ளது என்பதை இந்த நாவல் காட்டுகிறது. சாதி அடுக்குகளுக்குப் பதிலாக உத்தியோக அடுக்குகள். அவ்வளவே. மற்றபடி எதுவும் மாறவில்லை.

தமிழ் நவீன இலக்கியத்தில் கண்ணாயிரம் பெருமாள் மறக்க முடியாத கதாபாத்திரம். காரணம், இந்த நாவலை வாசிக்கையில் அவனது வியர்வையும், ரத்தமும், கண்ணீரும் ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் வழிந்து நம் விரல்களை ஈரப்படுத்துவது போலிருக்கும். கண்ணாயிரம் பெருமாளை வாசிக்கையில், ஒவ்வொரு வாசகனுக்கும், அவர் விவரிக்கும் சம்பவங்கள் எவையும்  கற்பனையில்லை, எல்லாமே முழுமுற்றான உண்மை என்பது தெரிந்துவிடுகிறது. இன்னும் சொல்லப்போனால், அச்சம்பவங்கள் யாவும் மெய்யா, பொய்யா என்பதைக் காட்டிலும், அவற்றை ஜீரணிக்க முடிகிறதா என்பதே முக்கியமான வினாவாக எழுந்து நிற்கிறது. வாசிக்கக் கூட முடியாத அனுபவங்களை ஒருவர் வருடக்கணக்காக அனுபவித்துக் கொண்டிருந்திருக்கிறார் என்பதை யோசித்துப் பார்க்கவும் இயலவில்லை. கண்ணாயிரம் பெருமாளைப் போல எத்தனையோ மனிதர்கள், அவரது சக ஊழியர்களாக அதிகாரத்தின் முன் கூனிக்குறுகி அவமானப்பட்டு நாட்களைக் கழித்திருக்கின்றனர் என்றபோதும், நுண்ணுணர்வுள்ள எழுத்தாளனான கண்ணாயிரம் பெருமாள் எப்படி இத்தனை வருடங்களை அந்த வதைமுகாமில் கழித்தார் என்பது உண்மையில் வியப்பளிக்கக் கூடியது. அவருக்கு எப்படி பைத்தியம் பிடிக்காமல் இருந்தது என்பது அதனினும் வியப்பூட்டக்கூடியது.

சிறைத்துறையில் பணியைத் துவக்கும் கண்ணாயிரம் பெருமாளுக்கு அலுவலகமே நரகமாக இருக்கிறது. சிறை கண்காளிப்பாளர் செய்யும் அட்டூழியங்களுக்கு முன்னர் ஹிட்லர் தோற்றுவிடுவான். ரவுண்ட்ஸ் செல்லும்போது தன் எதிரே வந்த கைதியை அடித்து நொறுக்குபவன், தனக்குக் கீழ் பணியாற்றும் பெண்களிடம் பாலியல் வக்கிரம் புரிபவன் என சிறைக் கண்காளிப்பாளன் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சைக்கோவாக வலம் வருகிறான்.

அரசு அலுவலர்களுக்கு சனி ஞாயிறுகளில் வேலையிருக்காது. அவர்கள் ஓய்வில் இருப்பார்கள் என என்னைப் போன்று தனியார்த் துறையில் பணிபுரிபவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், சனி ஞாயிறுகளிலும் அரசு ஊழியர்கள், மேலதிகாரிகளால் பணிக்கு வரவழைக்கப்பட்டு பிழிந்தெடுக்கப்படுகிறார்கள். ஒரு கட்டத்தில், ஊழியர்களுக்கு அதுவே வழக்கமாகிப் போய்விடுகிறது. ஞாயிற்றுக் கிழமை ஒரு ஊழியர் பணிக்கு வரத் தயக்கம் காட்டினால் அவர் தன்னுடைய மேலதிகாரியால் கட்டம் கட்டப்படுகிறார். கண்ணாயிரம் பெருமாளும் கட்டம் கட்டப்படுகிறார். ஆனால், அவர்மீது நடவடிக்கை பாய்வதற்கு முன், டில்லிக்கு மாற்றலாகிச் சென்றுவிடுகிறார். பல வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் தமிழ்நாட்டுக்கு மாற்றலாகி வருகிறார். இம்முறை அவர் வேலை செய்யவிருப்பது தபால் துறையில். (கண்ணாயிரம் பெருமாளின் டில்லி அலுவலக அனுபவங்கள் நாவலில் அதிகம் இடம்பெறவில்லை. சாரு இவற்றை வேறெந்த நாவலிலாவது விரிவாக எழுதியிருக்கிறாரா எனத் தெரியவில்லை.)

சிறைத் துறைதான் கொடூரமானது. தபால் துறை சாத்வீகமானது என்ற வாசகனின் எண்ணத்தை உடைத்துப் போட்டுவிடுகிறது கண்ணாயிரம் பெருமாளின் தபால்த்துறை அனுபவங்கள். சிறைக் கண்காணிப்பாளரைக் காட்டிலும் கொடூர சைக்கோக்கள் இங்குதான் இருக்கிறார்கள். தவறு செய்து விட்ட ஊழியரின் மனைவியை படுக்கைக்கு அழைத்து வரச்செய்யும் மேலதிகாரி, முதிய ஊழியர் ஒருவரை தரக்குறைவாக ஒருமையில் ஏசி, கழுத்தைப் பிடித்து வெளியேற்றி, இரவு வரை அலுவலக வாசலில் காத்திருக்க வைக்கும் இன்னொரு மேலதிகாரி. அதிகாரியுடைய மனைவிக்கு, பெங்களூரில் இருந்து பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் மூலமாகச் சென்னைக்கு வரவழைக்கப்படும் தண்ணீர் பாட்டில். பிடிக்காத ஊழியருக்கு DIES-NON மற்றும் R.T (Rotational Transfer) கொடுப்பது என மனச்சிதைவுற்ற அதிகாரிகளின் கூடாரமாக இருக்கிறது அலுவலகம். அலுவலகத்தைக் குறிக்கையில் Mental asylum என்ற வார்த்தையையே அதிகம் பயன்படுத்துகிறார் பெருமாள்.

அதிகாரிகளின் இன்னொரு முகமும் நாவலில் வருகிறது. தொழிற்சங்க ஊழியர் வந்து மிரட்டியதும் அதுவரை அடாவடித்தனமாக நடந்து கொண்ட மேலதிகாரி சட்டென கண்ணாயிரம் பெருமாளிடம் குழைந்து பேசுவது, கல்கத்தாவில் வேலை செய்யப் பிடிக்காத அதிகாரி மீண்டும் பெருமாளிடம் வந்து கெஞ்சி கடிதம் டைப் செய்யச் சொல்லுவது,போன்ற காட்சிகளைச் சொல்லலாம். அதன் மறுபக்கமாக, கீழ்நிலை ஊழியர்கள் மேலதிகாரியிடம் செல்வாக்கைப் பெறுவதற்காக செய்யும் தந்திரங்களும் (மேலதிகாரியின் மனைவிக்கு வேலைக்காரனாகவே மாறிவிடுவது, மேலதிகாரியின் ஷூ லேஸைக் கட்டி விடுவது) நாவலில் இடம்பெறுகின்றன.

நாவல் இன்னொரு செய்தியையும் சொல்கிறது. அதிகார போதை என்பது பால் பேதமற்றது. மேலதிகாரியாக ஒரு பெண் வந்தால் நிலைமை மாறிவிடும் என்று நினைத்தால், அதைக் காட்டிலும் பிழை வேறொன்றில்லை. இந்த நாவலிலும் இந்திராணி என்ற பெண் அதிகாரி வருகிறார். பணியில் சேர்ந்த முதல் நாளே நான்கு கடைநிலை ஊழியர்களை சஸ்பெண்ட் செய்துவிட்டுத்தான் தன் அலுவல்களைத் துவங்குகிறார். முக்கிய வேலையாக இருக்கும்போது தன்னைப் பிறர் தொந்தரவு செய்துவிடக்கூடாது என்பதற்காக, தன்னுடைய அறைக்கதவுக்கு வெளியே சிவப்பு விளக்கை எரியச் செய்பவர், பல சமயங்களில் அதை அணைக்க மறந்து, முகத்துக்கு பவுடர் போட்டு அலங்கரித்துக் கொண்டிருக்கிறார். இதனால், முக்கியக் கோப்புகளில் அவரிடம் கையெழுத்து வாங்க முடியாமல் அவரது அறைக்கு வெளியில் கீழ்நிலை ஊழியர்கள் மணிக்கணக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஸ்டெனோக்களுக்கு அப்போது சங்கம் துவக்கவில்லை என்பதால், அவர்கள் பெரிதும் ஆதரவற்ற நிலையிலேயே இருக்கிறார்கள். அந்தப் பெண் அதிகாரியின் செருப்பை வைப்பதற்கு தேக்கு மரத்தாலான பளபளக்கும் பலகை இருக்கிறது. ஆனால், ஊழியர்கள் பயன்படுத்தும் கழிவறை நரகமாக இருக்கிறது. கழிவறைக் கதவுக்குத் தாழ்பாள் இல்லை. அசுத்தமாக இருக்கிறது. அதில் மலம் கழிப்பது என்பதே ஒரு சாதனைதான்.

நாவலில் கண்ணாயிரம் பெருமாள் விவரிக்கும் அந்தக் கழிவறை என்பது வெறுமனே கழிவறை மட்டுமல்ல. அது அரசாங்க அலுவலகத்தின் குறியீடு. எந்த முன்னேற்றமும் இல்லாத, தேங்கிப் புழுத்துப் போன, நாற்றமெடுக்கும் அரசாங்க அலுவலகத்திற்கு இதற்கிணையான வேறொரு குறியீட்டைப் பயன்படுத்தவே முடியாது. கண்ணாயிரம் பெருமாளுக்கு அடிக்கடி ஒரு கனவு வருகிறது. அந்தக் கனவில் அவர் மீது லாரி நிறைய மலம் கொட்டப்படுகிறது. ஒவ்வொரு முறையும் இக்கனவினால் வேதனையுற்று, அலறியபடியே உறக்கத்திலிருந்து எழுந்து கொள்கிறார். கனவுகளை விளக்கும் இணையதளங்களில் தேடினால், கனவில் மலம் வருவது என்பது மனதிலுள்ள அழுத்தங்களிலிருந்து விடுபடுதலைக் குறிக்கிறது என்று போட்டிருக்கிறார்கள். உண்மையில் பெருமாள், தன் பால்யத்தின் துர்நினைவுகளின் அழுத்தங்களிலிருந்து இத்தனை ஆண்டுகளாக இன்னும் விடுபடவில்லை, ஒருவேளை விடுபடவே முடியாது என்பதைத்தான் அக்கனவுகள் உணர்த்துகின்றன என்றும் தோன்றுகிறது.

இந்த நாவலில் மாறிமாறி தகவல்களும் அனுபவங்களும் அதைச் சார்ந்த மனப்பதிவுகளும் வந்துகொண்டேயிருக்கின்றன.   கண்ணாயிரம் பெருமாளின் அலுவலக வாழ்க்கையும் தனி வாழ்க்கையும் இணைக்கோடுகளாகவும், சில இடங்களில் ஒன்றுக்கொன்று முயங்கிபடியும் வந்து கொண்டிருக்கின்றன. தாய்லாந்து பெண்கள், பெருமாளின் பெண் தோழிகள், பெண் தோழிகளுடனான பெருமாளின் நேரடி மற்றும் இணைய உரையாடல்கள், உறவும் பிணக்கும் என வேறொரு உலகமும் நாவலில் விரிவாக இடம்பெறுகின்றன. ஆனாலும், என்னைப் பாதித்தது அவரது அலுவலக அனுபவங்கள்தாம் என்பதால் அதைக் குறித்துத்தான் எழுத வருகிறது.

சாரு பாலியலை மட்டும் விரிவாக எழுதக்கூடிய எழுத்தாளர் அல்ல. அதற்கு தஞ்சை பிரகாஷ் போன்ற எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். தஞ்சை பிரகாஷ் போன்றவர்களிடமிருந்து சாருவைப் பிரித்துக் காட்டும் கூறு என்பது சாருவால் தனிமனிதனின் ஆன்மிகத்தையும் பாலியல் அளவிற்கே சுவாரஸ்யமாகச் சொல்லமுடியும் என்பதே. இந்த ஆன்மிகம் என்பது கடவுள், பக்தி, தியானம் போன்றவற்றைத் தாண்டிய ஆன்மிகம். தன்னை உணர்தல் என்பதையும், தன்னை எவ்வாறாக உணர்கிறேன் என்பதையும் தொடர்ந்து முன்வைத்துக்கொண்டே இருத்தல். அதே சமயம், தீவிர தத்துவ விவாதங்களுக்குள் அவர் செல்வதில்லை. அது தன் ஏரியா அல்ல என்பதையும் வெளிப்படையாக தெரிவித்து விடுகிறார். இந்த நாவலிலேயே அத்தகைய இடங்களையெல்லாம், “அது தன் சிந்தனை வட்டத்திற்கு வெளியே இருப்பது” என்று சொல்லியபடியே கண்ணாயிரம் பெருமாள் கடந்து செல்வதைக் காணலாம்.

ஒருபக்கம் தாய்லாந்து பெண்ணுடனான சம்போகம், மறுபக்கம், அறுவை சிகிச்சை முடிந்த பலவீனமான தேகத்தோடு பாபாவை நினைத்துக் கொண்டிருத்தல் என இந்த இரு எல்லைகளுக்கிடையேயான ஒரு படைப்பாளியின் உலகத்தை விரிவாகப் பதிவு செய்த நாவல் இது. சூன்யத்தில் இருந்து பிறந்து மீண்டும் சூன்யத்திற்கே திரும்பும் பயணம். ஒரு சார்வாகனின் வீரியத்துடன் இன்பத்தையே நாடிச் செல்லும் பயணம், மறு எல்லையில், விருட்சத்தின் கிளையில் தன் உடல் பாகங்களைத் தனித்தனியே துண்டித்து மீண்டும் இணைக்கும் ஒரு கண்ட யோகியின் பாதங்களில் நிறைவுறுகிறது.

கணேஷ் பாபு – தமிழ் விக்கி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 15, 2022 10:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.