தங்கப்புத்தகம், கடிதம்

தங்கப்புத்தகம் வாங்க

அன்புள்ள ஜெ

தங்கப்புத்தகம் தொகுப்பை ஒரு நண்பர் அளித்து இன்றுதான் வாசித்து முடித்தேன். எங்கெங்கோ சுழற்றிச் சுழற்றி கொண்டுசென்று பலவகையான கனவுகளையும் தரிசனங்களையும் அளித்த அற்புதமான கதைகள் இவை.

இந்தக்கதைகளை படிக்கும்போது ஒன்று தோன்றியது. தமிழில் நவீன இலக்கியத்தை 40 ஆண்டுகளாக நான் வாசிக்கிறேன். ஆங்கிலத்திலும் வாசிக்கிறேன். நான் இந்த விஷயத்தை பலபேரிடம் பேசியதுமுண்டு. தமிழ் நவீன இலக்கியத்தை யதார்த்தவாதம் என்று சுருக்கிவிட்டார்கள். ஆசிரியன் அவனுக்குத் தெரிந்த வாழ்க்கையை எழுதினால்தான் நம்பகமாக இருக்கும் என்று ஒரு கருத்து வேரூன்றிவிட்டது. அதை உருவாக்கியவர்கள் ஆரம்பகால யதார்த்தவாத எழுத்தாளர்கள். அதை அவர்கள் இங்கே இருந்த வணிக எழுத்துக்கு எதிராக உருவாக்கினார்கள். கொஞ்சம் கற்பனை கலந்தால்கூட அதை உடனே வணிக எழுத்து பட்டியலில் சேர்த்துவிட்டார்கள். ஆனால்  அவர்களுக்கு அப்போதே வாசிக்கக்கிடைத்த உலக இலக்கியமெல்லாம் அப்படி இல்லையே என்ற கேள்வி அவர்களுக்கு எழவே இல்லை.

இந்தக்காரணத்தால் தமிழிலே ஒரு நல்ல இலக்கியச் சரித்திரநாவல் அக்காலத்திலே வரவே இல்லை. ஒரு நல்ல ஃபேண்டஸி வரவில்லை. எல்லாமே அன்றாடவாழ்க்கை சார்ந்த எழுத்துக்கள். ஆகவே இளமைப்பருவ வாழ்க்கை அல்லது நடுப்பருவ காதல். அவ்வளவுதான் எழுதப்பட்டிருக்கிறது. இன்றைக்கு வாசிக்கும்போது நவீனத் தமிழிலக்கியம் போல சலிப்பூட்டும் விஷயமே இல்லை என தோன்றுகிறது. Fun கிடையாது. அபூர்வமாக ஒன்றுமே கிடையாது. கண்டடையவோ பயணம்செய்யவோ ஒன்றுமே இல்லை. பெரும்பாலும் சலிப்பூட்டும் ஒற்றைப்படையான சுயசரிதைகள்.

திகில்கதை, பேய்க்கதை எல்லாமே இலக்கியத்தின் வகைகள்தான். அவற்றை வரலாற்றின் ஆழத்தையும், மனுஷமனசின் ஆழத்தையும் சொல்ல ஓர் எழுத்தாளன் பயன்படுத்தினால் அது உயர்ந்த எழுத்து தான். அந்த இயல்பு கொண்ட எழுத்து அபூர்வமாகவே இருக்கிறது. கொஞ்சநாள் முன்னால் இணையத்தில் ஸ்ரீவேணுகோபாலன் எழுதிய திருவரங்கன் உலா பற்றி படித்தேன். அந்நாவல் ஒரு பொழுதுபோக்கு நாவலுக்குரிய பாஷையில் எழுதப்பட்டது. அதன் பிரச்சினை அதுதான். ஆனால் அந்த தீம் எவ்வளவு பெரிய இலக்கிய படைப்புக்குரியது. அதை ஏன் நவீன இலக்கியவாதி எழுதவில்லை?

தங்கப்புத்தகம் வாசிக்கும்போது அதைத்தான் நினைத்துக்கொண்டேன். அவ்வளவு அற்புதமான கதைகள். அவை அளிக்கும் ஒரு supernatural தரிசனம் யதார்த்தவாதக் கதைகளில் அமையாது. எதையோ தேடிப்போவதும் கண்டுபிடிப்பதும் நழுவிப்போவதுமாக மனுஷனின் அந்த ancient play அந்தக்கதைகளில் அற்புதமாக வந்திருக்கிறது.

ஆனந்த் பார்த்தசாரதி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 18, 2022 10:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.