இசைரசனை வகுப்பு – கடிதம்

அன்புள்ள ஜெ,

நீங்கள் நலம் என நம்புகிறேன்.

கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு நடநத பீத்தோவன் இசை ரசனை முகாமிற்கு பின்பு உற்சாகமாக உணர்கிறேன். உள்ளம் இசையை முணுமுணுத்துக்கொண்டே, ததும்பிக்கொண்டே இருக்கிறது. வெளி உலகில் என்ன நடந்தாலும் எனக்கான அந்தரங்க உலகத்தில் இசையில் திளைத்துக்கொண்டிருக்கும் அனுபவம் புதுமையாக இருக்கிறது. இசை இதற்கு முன்பும் என்னை ஆட்கொண்டது உண்டு. ஆனால் மூன்று நாட்கள் பீத்தோவனின் சிம்பொனி இசை கேட்பதற்காகவே கூடி, அதன் வரலாற்று பின்புலத்தை, காலகட்டங்களை, இசை உருமாறி வந்த நுணுக்கங்களை, வெவ்வேறு ஒளி அடையாளத்தை, வாத்தியங்களின் வித்தியாசத்தை, அர்த்த சாத்தியக்கூறுகளை அஜிதன் கூறிய பின்பு, பீத்தோவன் இசைக்குள் மூழ்கிப்போனேன். அறிய பொக்கிஷம் ஒன்று கிடைத்தது போலவும், அதை என்னிடம் இருந்து இனி ஒரு போதும் யாரும் பிரிக்க முடியாதென்றும், எனக்கு கிடைத்தது போல என் நண்பர்களுக்கும் கிடைத்து, நாங்கள் அனைவரும் அந்த ஆனந்தத்தில் ஒன்றாக உள்ளோம் என்ற எண்ணம் சிலிர்க்க வைக்கிறது. உண்மையாகவே இத்தனை ஆனந்தமானதா இசை என்பது? எனக்குள் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.

சில நாட்களாக நீடித்து வந்திருந்த ஜலதோஷம், வெள்ளி மாலை முதல் காய்ச்சலாக ஆனது. காய்ச்சலில் ஏற்படும் குளிர் தரும் நடுக்கமும், இசையின் பரவசமும் கலந்து புதுவித அனுபவத்தை அளித்தது. அன்றைய நாளின் கடைசி பகுதியான ஆறாவது சிம்பொனியை நான் ஷால்வையை தலையில் சுற்றிக்கொண்டு கேட்டு முடித்து, உறங்கும் போது, இசையும் கனவினுள் ஊடு பாவாக அலைந்து கொண்டிருப்பதை எண்ணி மகிழ்ந்தேன்.

சனி அன்று எழுந்த போதே தலைவலியும், காய்ச்சலும் கூடியிருந்தது, சால்வையை மீண்டும் சுற்றி கொண்டு அமர்ந்து விட்டேன். மூன்றாவது சிம்பொனி இரோய்க்கா அல்லது ஹீரோயிக் சிம்பொனி. அதில் உள்ள பியூனெரல் மார்ச் பகுதி வீரனின் மறைவு, மக்களின் துக்கம், என மனதை உருக்கக்கூடியதாக இருந்தது. அதன் பின் வந்த உற்சாகமான பகுதிகளில் பறவைகளும், இயற்கையும் அம்மக்களை ஆற்றுப்படுத்தியது வெடித்துக்கொண்டிருந்த தலைவலிக்கு இதமாக இருந்தது. ஆனாலும் இன்னர் டர்மொய்ல் கூடியிருந்தது. மதிய இடைவேளையில் மனிதனை ஆற்றுப்படுத்தும் இயற்கையின் இசையை வருடியபடியே தூங்கச்சென்றேன். காய்ச்சலுக்கே உரிய கொடுங் கனவு. நினைவில் இருப்பது இது தான், ஏதோ ஓர் அறையில் ஒரு பாதிரியார் தலைகீழாக விழுந்து கிடக்கிறார், அவரது வாய்க்கு அடியில் ரத்தம் தேங்கி இருந்தது. என் மொத்த ஆற்றலையும் கொண்டு Father என அலறுகிறேன். எங்கள் இருவருக்கும் உள்ள இடைவெளியில் சிம்பொனியில் கேட்ட குருவியின் இசை பறந்து சென்றது. நான் அந்த ஓசையுடன் சென்று மீண்டும் வந்து அவரை பார்க்கையில் அவர் அப்படி உறங்கி கொண்டிருந்தார் என்று உணர்ந்தேன், ரத்தம் கழுத்தில் கட்டும் ஸ்கார்ப் ஆக உருமாறியிருந்தது. நான் முழித்துக்கொண்டேன். கனவுகளிலும் உடன் நிற்கும் துணையாக, இனிமையாகும் மாயமாக இசையை உணர்ந்தேன்.

சனி மாலை ஏழாம் சிம்பொனியை தவறவிட்ட வருத்தம் இருந்தாலும், அந்த பறவையின் இசையை மீட்டிக்கொண்டே இருந்தேன். இரவு, உணவு அளிக்கும் அம்மா கஞ்சி வைத்து தந்தார்கள், ஆவி பிடிக்க வெந்நீரும், அதில் மஞ்சளும் கற்பூர துளசி இலையும் போட்டு கொடுத்து, பக்கத்திலே அமர்ந்து கவனித்தார்கள். இயற்கையின் கருணை, இவர்கள் வடிவில் என்னை நலமடைய செய்தாக உணர்ந்தேன். அப்பாவின் கதகதப்பும் என்னை ஆற்று படுத்தி அடுத்த நாள் ஒன்பதாவது சிம்பொனி கேட்பதற்கு முழுமையாக தயார் ஆனேன்.

ஞாயிறு காலை குஷியாக தயார் ஆனேன். ஒன்பதாவது சிம்பொனி எங்கள் அனைவரையும் ஆட்கொண்டது. இசையில் இறையை கண்டுகொண்ட பரவசம். நாங்கள் பார்த்த காணொளி, பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டதன் பொருட்டு ஒருங்கமைக்கப்பட்ட கொண்டாட்ட நிகழ்ச்சி. அந்த ஒற்றுமையின், விடுதலையின், தூய ஆனந்தத்தின், அனைவரும் கேளிர் என்ற மனநிலை ஒன்பதாவது சிம்பொனிக்கு கூடுதல் அர்த்தமும் உணர்ச்சியும் சேர்ப்பதாக இருந்தது. முடிந்து வெளிவந்த பொது, எங்கள் அனைவரின் முகங்களிலும் joy குடியேறியிருந்தது. மனத்திலும், உதடுகளிலும், முணுமுணுத்துக்கொண்டே இருந்தோம்.

பிறகு நண்பர்கள் சேர்ந்து மடம் சென்று வந்தோம், ஓடையின் ஓசையை கேட்டு சில நேரம் அமர்ந்திருந்து கிளம்பினோம். வரும் வழியில் ஜெயண்ட் மலபார் ஸ்குரிலை பார்த்தோம். வழி முழுக்க நாங்கள் சுவாசிக்கும் காற்றாக அதே கோர்வை ஊடுருவிக்கொண்டே இருந்தது. இரவு 11.50க்கு தான் ரயில் எனக்கு. 10.30 மணிக்கு நண்பர்களை தழுவி விடை பெற்று, ப்ளெட்போர்மில் இசையுடன் கை கோர்த்து அமர்ந்திருந்தேன்.

12 மணிக்கு ரயில் ஏறி, கண் மூடியதிலிருந்து, என் கனவுக்குள் வண்ணங்கள் நிரம்பியிருந்தது. தூரத்தில் தெரிந்த மயில் மேக்ரோ ஜூம் லென்ஸில் பார்ப்பது போல், மிக அருகில் காண முடிந்தது. அதன் பீலியின் பல வண்ணங்கள் தத்ரூபமாக தெரிந்தது. பார்க்க பார்க்கவே அது பல நூறாக பெருகி, ஒரு மாபெரும் பூவாக மாறியது. பின்பு அந்த பூ, பல பூக்களாக சிதறி, ஒவ்வொன்றும் ஜூம் செய்யப்பட்டு, அதன் இதழ்கள், மகரந்தம் அருகில் தெரிந்தது. என் உள்ளம் அத்தனை அழகை, அத்தனை வண்ணங்களை கண்டு பூரித்து போய் இருந்தது. ஒரு போதும் என் கனவில் இத்தனை துல்லியமான இயற்கை காட்சிகள் வந்ததில்லை என்று சொல்லும் மனம். ode to joy யின் இசையின் தாலாட்டாலும். மீண்டும் காட்சிகள், புள் வெளிகள், வயல் வரப்புகள் வெவ்வேறு பச்சைகளாக, நியான் பச்சையாக கூட. அதிலிருந்து, ஒரு மலர் இளஞ்சிவப்பு நிறத்தில் தோன்றி, சிவப்பும் ஊதாவும் கலந்ததாக வளர்ந்து வானை சென்று தொட்டது. அங்கிருந்து வாணவேடிக்கைகள் போல் மலர்கள் பொங்கி வழிந்தன. அதிகாலை மூன்று மணிக்கு முழித்துக்கொண்டேன், அத்தனை புத்துணர்ச்சியுடன் பிரகாசத்துடன் இருப்பதாக உணர்ந்தேன். என்ன நடந்ததென்று தெரியவில்லை. அது ஒரு தரிசனம் தான். எனக்குள் எங்கோயிருந்த ஊற்று திறந்ததுபோல். அந்த சின்ன திறப்பிலிருந்து ஒளி என்னை ஆட்கொண்டது போல். மனம் ஆனந்தத்தில் பொங்கி வழிகிறது. இசையின் கருணைக்கு முன்பு தலை வணங்குகிறேன்.

அஜிதனுக்கு நன்றி, அஜிதனை விட சிறப்பாக இசையை இன்னொருவர் அறிமுகப்படுத்த முடியாதென்றே தோன்றுகிறது. அஜிதன் ஆழ்ந்து சென்று தொட்ட உச்சங்களை பிறர்க்கு சேர்க்கவேண்டும் என்ற தீவிர விழைவும் ஆசையும், அஜிதனும் சைதன்யாவும் எடுத்துக்கொண்ட மெனக்கெடல்கள் மூலம் தெரிந்தது. ப்ரோச்சுரில் துவங்கி, பிபிடி, காணொளிகள் அனைத்தும் தரமாக இருந்தது.  இந்த இசையை ஏன் பிறர்க்கும் அறிமுகப்படுத்த எண்ணுகிறான் என்றும் உணர முடிந்தது. அஜிதன் மேலும் வெவ்வேறு இசை ரசனை முகாம்கள் நடத்த வெண்டும் என்று விரும்புகிறேன்.

நன்றி,

நிக்கிதா

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 02, 2022 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.