ஐந்து நெருப்பு[ சிறுகதை]

முத்து மிகத்தொலைவில் சைக்கிள் மணியோசையைக் கேட்டான். செங்காட்டில் பெரும்பாலும் எல்லாருமே சைக்கிளில்தான் நடமாடிக்கொண்டிருந்தார்கள் என்றாலும் அந்த ஓசையை அவனால் தனியாகவே உணரமுடிந்தது, அது போஸ்ட்மேன் ஞானப்பனின் சைக்கிள் மணி.

அவன் கவைக்கோலை தோளில் சாய்த்து அவர் வருவதை எட்டிப்பார்த்தான். காய்ந்த உடைமுட்களை குவியலாகப் போட்டு அமைக்கப்பட்டிருந்த வேலிக்கு நடுவே செம்மண் புழுதி குமுறிக்கிடந்த பாதையில் மிகமெல்ல ஞானப்பன் வந்துகொண்டிருந்தார். அந்தப்பாதையில் சைக்கிள் எத்தனை மிதித்தாலும் முன்னகராது. சண்டி எருமைபோல அடம்பிடித்துத்தான் முன்னகரும்

ஞானப்பன் அவனை நோக்கித்தான் வந்தார். அவன் நெஞ்சு படபடத்தது, ஆனால் முகம் மலர்ந்துவிட்டது. அவன் வேலியோரமாகச் சென்றான். ஞானப்பன் அவன் அருகே வந்து சைக்கிளை காலூன்றி நிறுத்தி “ஏலே, இங்க மாயாண்டிக்க வீடு எது?” என்றார்

முத்து உள்ளம் குன்றினான். ஒருசில கணங்கள் தேவைப்பட்டன அந்த தணிவுநிலையில் இருந்து மீண்டு வர. “மாயாண்டிக்க வீடு ஊருக்கு உள்ளேல்லா?” என்றான்.

“ஆமா, அது தெரியாதா? அங்க வட்டிக்காரனுக வந்திருதானுகன்னு இங்க தோட்டத்திலே எங்கிணயோ குடும்பத்தோட வந்து தங்கியிருக்கானாம். அவனுக்க தோட்டம் ஏதுண்ணு தெரியல்ல.”

“என்ன சங்கதி?”

“சர்க்காரு லெட்டர். அவனுக்க பய மாணிக்கம் சர்க்காரிலே பாஸ்போர்ட்டோ என்னமோ கேட்டிருக்கான் போல. அது வந்திருக்கு… போஸ்டாபீஸிலே இருக்கு. அவன் வந்தா போஸ்ட்மாஸ்டர் ஆளைப் பாத்துட்டு குடுப்பாரு… ஒரு வாரம் இருக்கும். ஆளு வரல்லேன்னா திரும்ப போயிரும்” என்றார் ஞானப்பன்

“அய்யோ… அந்தா அந்த முக்குலே திரும்பினா நாலுபனை ஒருகொத்தா நிக்குததுதான் அவங்க தோட்டம்… பாத்தா தெரியும்” என்றான் முத்து. “குடிசைய பள்ளத்திலே போட்டிருப்பாங்க, வளியிலே நின்னா தெரியாது. போஸ்ட்மேனாக்கும்னு சொல்லி விளிச்சா மாணிக்கம் வந்திருவான்.”

“செரிடே…” என்றான். பையில் இருந்து பீடியும் தீப்பெட்டியும் எடுத்து பற்றவைத்துக்கொண்டு “ஆனா ஒண்ணு கேட்டுக்க. இதை தோட்டம்னு சொல்லாதே கேட்டியா? நான் நல்ல பச்சைத்தோட்டங்கள் உள்ள மண்ணிலே இருந்து வந்தவனாக்கும். இங்க வெளையுதது ஒடைமுள்ளு மட்டும்தான். முள்ளுக்கு முள்வேலி போட்டிருக்கிறத இந்த மண்ணுக்கு வந்தபிறகுதான் பாத்தேன். முள்ளை வெள்ளாமை செய்து விப்பானுகன்னு இங்க வந்தபிறகுகூட கொஞ்சநாள் நம்பல்ல… ஆனா முள்ளுக்காட தோட்டம்னு சொல்லுததா இந்நா இப்பகூட நம்பமுடியல்ல” என்றார்

“அதுக்கென்ன, கும்பிக்கு சோறுபோட்டா எல்லாமே வெள்ளாமைதான்” என்றான் முத்து. “நமக்கு லெட்டர் ஒண்ணுமில்லியா அண்ணாச்சி?”

“இல்லியே, இருந்தா குடுப்பேன்லா?” என்றபின் அவன் முக வாட்டத்தைக் கண்டு “வேலைக்கு போட்டிருந்தியோ?” என்றார்.

“ஆமா” என்றான்.

“சும்மா எளுதிபோட்டுட்டே இருந்தா என்னன்னு வரும்? இப்ப காசு இல்லாம வேலை இல்லை. இந்தா இந்த ஈடி போஸ்ட்மேன் வேலை. கண்காணா ஊரிலே இந்த முள்ளுக்காட்டிலே தீமாதிரி வெயிலிலே அலையுதேன்… இதுக்கு குடுத்திருக்கு ஒரு லெச்சம் ரூபா லஞ்சம்”

அவன் கண்கள் கலங்கிவிட்டன.

“செரிடே மக்கா. கடவுள் இருக்காரு. ஒரு வளிகாட்டுவாரு. கவலைப்படாதே என்ன?” என்றபின் அவர் பீடியை ஆழ இழுத்து “வாறேன்டே” என்று மிதித்துச் சென்றார். அவர் முழங்கால் ஆழத்துச் சேற்றை மிதிப்பதுபோல தெரிந்தது.

கவைக்கோலுடன் முத்து மீண்டும் முள்காட்டுக்குள் வந்தான். எட்டுநாட்களுக்கு முன்னால் அவனே வந்து உடைமுள்ளை கீழிருந்து வெட்டி சுருட்டிப் போட்டிருந்தான். அவை காய்ந்து துருப்பிடித்த இரும்பாலானது போன்ற முட்குவியல்களாக கிடந்தன. அவன் கவைக்கோலால் அவற்றை கவ்வி உந்தி எழுப்பி சுழற்றி சுழற்றி கொண்டுசென்று பெரிய உருளைகளாக ஆக்கினான். அவற்றை கவைக்கோலால் அழுத்தி அறைந்து இறுக்கினான். அதன்பின்னர் அங்கே கொண்டு போடப்பட்டிருந்த பனைநாரால் அவற்றை சுழற்றிக் கட்டினான்.

செங்காட்டுக்கு முதலில் வருபவர்கள் அந்த முள்காடுகளை கண்டு திகைப்படைவதை அவன் கண்டிருக்கிறான். முள்வேலிபோட்ட பெரிய தோட்டங்கள். நடுவே லாரிப்பாதை. உள்ளே ஏதோ தோப்பு இருப்பதாக நினைப்பார்கள். உள்ளே வெறும் உடைமுள்தான் என்று தெரிந்ததும் “உடைமுள்ளா அண்ணாச்சி?” என்பர்கள் “அதுக்கா இந்த வேலி..”

“முள்ளா இருந்தாலும் வெள்ளாமை வெள்ளாமைதானே? அதுக்கு எல்லையும் காவலும் வேணும்லா?” என்று ஒருமுறை சாத்தூரான் சொன்னார். “இந்த மண்ணிலே முள்ளும் பனையும் மட்டும்தான் வெளையும். பனையிலே கள்ளெடுக்க சர்க்கார் சம்மதிக்காது. அக்கானி எடுத்து காய்ச்சலாம்னா கள்ளெறக்குதோம்னு சொல்லி டாஸ்மாக் காரன் ஆளுவச்சு அடிப்பான். வேற என்ன செய்ய? வாளணும்ல?”

போஸ்ட்மேன் ஞானப்பன் ஆரல்வாய்மொழிக்கு அந்தப்பக்கமிருந்து வந்தவன். அவனுக்கு அப்போதும் திகைப்பு மாறவில்லை. “இருந்தாலும் உடைமுள்ளப்போயி…” என்றான்.

“ஏம்வே, நடாம தண்ணிவிடாம அறுவடை மட்டுமே பண்ணுத ஒரு வெள்ளாமை வேற உண்டா?” என்றார் சாத்தூரான் “இதுலே ஒரு பெரிய விசயம் என்னாக்க களை பறிக்கவேண்டாம்… ஏன்னா களையைத்தான் வெள்ளாமையே செய்யுதோம்.”

“இத கொண்டுட்டுப்போயி என்ன செய்யுதான்?” என்றான் ஞானப்பன்.

“காயித ஆலை இருக்குல்லா, அதுக்கு வாங்குதானுக. ஒரு லாரி லோடுக்கு ரெண்டாயிரம் ரூவா. ஆனா நாம ஏத்தி விடணும்.”

“ஏன் அண்ணாச்சி, இதைப்பாத்தா மரம் மாதிரியே இல்லியே. ஒரு பச்சை எலையக் காணும். எங்கூர்லே உடைமுள்ளுகூட பச்சைத்தளிரும் பூவுமாட்டுல்லா இருக்கும்? இது என்னமோ இரும்புல செய்து குவிச்சுப்போட்டது மாதிரி இருக்கு” என்றான் ஞானப்பன்.

“இங்கயும் பச்சை வரும்… மார்களி மாசம் வந்து பாரு… அது உடைமுள்ளு சமையுத சீசனாக்கும்”

மேலே வெயில் எரிந்துகொண்டிருந்தது. மண் கொதித்து அனல் கிளம்பியது. செக்கச்சிவந்த நிலமே மாபெரும் அனல்பரப்பு போல ஆகியது. அந்த மண்ணில் பிறக்காதவர்களால் அங்கே அரைமணிநேரம் நிற்க முடியாது. மூன்றடுக்கு லாரிடயர் செருப்பு போடாமல் அங்கே நடமாடமுடியாது. செருப்பின் அடிப்பகுதி உருகி தரையில் ஒட்டும்.

அவன் பனையின் அருகே சென்று அமர்ந்தான். பனையன்றி அங்கே நிழல்மரம் ஏதுமில்லை. பனைநிழல் நீளமான கரிய கோடு. அதற்குள் பதமாக உடலை வைத்துக்கொண்டு நிற்கவேண்டும். காற்றில் அனல் வீசி காதுமடல்கள் எரிந்தன.

அவனைச்சூழ்ந்து உலர்ந்த உடைமுள் குவிந்து கிடந்தது. பதினேழு ஏக்கர், சாத்தூரானுக்குச் சொந்தமானது. முள்செறிந்ததுமே வெட்டவேண்டும். ஜூனில் ஒரு சிறிய மழை அடிக்கும். அதில் வெட்டிய வேரிலிருந்து முளைத்துவிடும். பிறகு மழை வேண்டாம். செப்டெம்பர் முதல் டிசம்பருக்குள் ஒரு இரண்டு மழை. வளர்ந்து தலைக்குமேலே போய்விடும். உடைமுள் ஒரு பூதம். மாடன்போல கருப்பு போல. அதற்கு எதுவுமே தேவையில்லை.

அந்த தோட்டத்து முள்ளை முழுக்க அவன்தான் வெட்டினான். நான்குநாட்களாக தனியாக வந்து வேலை செய்து கொண்டிருந்தான். நீண்ட கைப்பிடி கொண்ட அரிவாளால் முள்ளை வெட்டவும் சுருட்டி மலர்த்தவும் முள்ளிலேயே பிறந்து வளர்ந்தவர்களால்தான் முடியும். எப்படி எண்ணி எண்ணி செய்தாலும் ஒவ்வொரு நாளும் நூறு முள்ளாவது கையிலும் காலிலும் உடலிலும் குத்திச் செல்லாமல் இருக்காது. வேறு ஊர்களில் இருந்து அங்கே வேலை செய்ய எவரும் வரமுடியாது. அங்கிருப்பவர்களே ஒவ்வொரு நாளும் கிளம்பிச் சென்று கொண்டிருப்பார்கள்

நிழலைப் பார்த்தபோது மணி பன்னிரண்டு ஆகியிருக்கும் என்று தெரிந்தது. நான்கு மணிக்கெல்லாம் லாரி வந்து விடும். அவன் பனை அடியில் இருந்த மண்கலத்தில் இருந்து தகரப்போணியால் தண்ணீரை அள்ளி குடித்துவிட்டு மீண்டும் கவைக்கோலை கையில் எடுத்து முள்ளை உருட்ட ஆரம்பித்தான்.

மாகாளி ஒருமுறை சொன்னான் “வண்டு பீய உருட்டுத மாதிரில்லா நாம முள்ளை உருட்டுதோம்.”

முத்து “ஆமா பீயத்தின்னு வாளணும்னு அதுக்கு உத்தரவு” என்றான் “இது நம்ம சோறாக்கும்.”

“எனக்க சோறு இங்க இல்ல… கெளம்பீரணும். எங்கிணயாம் போயி பரோட்டா போடலாம். ஏல மார்க்கெட்டிலே மூட்ட சுமந்தாக்கூட இதவிட மானமா பொளைக்கலாம். இது தீயிலே நின்று கரியாகுத வாழ்க்கைல்லா?”

“ஊரிலே எப்டியெப்டியோ வாளுதாக. கொல்லுதாக, சாவுதாக, கயவாளித்தனம் பண்ணுதாக… அவுசாரித்தனம் செய்து வாளுதானுக” என்றான் முத்து.

“ஆமா, அதில என்ன செய்தாலும் சோறு உண்டு. இதிலே வெந்தெரிஞ்சு கடைசியிலே சங்கும் வயிறும் சேந்து எரியுதே.”

மாகாளி மெட்ராஸில் பரோட்டாக் கடையில் வேலை பார்க்கிறான். அதற்கு பிறகு ஒருமுறை ஊருக்கு வந்தான். நன்றாக நிறம் வந்து மினுமினுவென்றிருந்தான். ஆளே வேறு மாதிரி தெரிந்தான். அங்கே பார்த்த சினிமாக்களைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தான்.

“ஏல, நீ நல்லா வெளுத்து செவந்து போய்ட்டியே” என்றான் முத்து.

“லே, அங்க பரோட்டா அடுப்பு பக்கத்திலே நிக்குதேன். ஆனா இந்த மண்ணுலே நிக்குததிலே நூறிலே ஒரு பங்கு சூடு அங்க இல்ல பாத்துக்க. இந்த செங்காடு ஒரு சூளை மாதிரி. சுட்டுக் கரியாக்கிப்போடும்… எப்டியாவது ஓடிரு…. அத்துக்கிட்டு எங்கிட்டாவது போயிரு… அம்பிடுதான் நான் சொல்வேன்.”

முத்து புகைமணத்தை உணர்ந்தான். புகையா? எங்கே? மூக்கை தூக்கிப் பார்த்தான். காற்று சுழன்று சுழன்று வீசியதனால் எந்த திசையில் இருந்து புகைமணம் வருகிறது என்று அவனால் காணமுடியவில்லை. செங்காட்டில் பொதுவாக தீ மூட்டுவதில்லை, அதிலும் கோடைகாலத்தில். பீடியைக்கூட கைபொத்தி பற்றவைத்து இழுத்து மணலில் மூடி அணைப்பாகள். எல்லாமே காய்ந்து கிடக்கும் நிலம்.

ஆனால் சிலசமயம் வெறுமே உடைமுள்ளே பற்றிக்கொள்ளும். காற்றில் உலர்ந்த உடைமுள் மண்ணிலோ கல்லிலோ உரசி தீப்பிடிக்கும். ஒன்றுடன் ஒன்று உரசி தீப்பிடிப்பதுண்டு. பனைமட்டை கருக்குகளும் உரசிக்கொண்டு தீப்பிடிக்கும்.

“இங்க மண்ணிலயும் கல்லிலயும் தீ நிறைஞ்சிருக்கு. வானத்திலே இருந்து தீ மழை விளுது. இந்த செடியெல்லாம் ஒரு சின்ன சத்தியத்துக்க பிடிப்பிலேயாக்கும் தீப்பிடிக்காம நின்னுட்டிருக்கு” என்று சாத்தூரான் சொல்வார்.

சட்டென்று அவன் புகையை கண்டான். உள்ளம் உறைந்து போய் பார்த்தபடி நின்றான். தீக்கு வெளிச்சமே இல்லை. பழைய சிவப்புநிற துணியை உதறுவதுபோலிருந்தது. அது எரிந்தபடி அணுகி வருவது உடைமுள் காட்டுக்குள் செம்மரியாட்டுக்கூட்டம் வருவதுபோல ஓசை எழுப்பியது.

அவன் பதறி மறுபக்கம் ஓட முயன்றபோதுதான் அங்கிருந்தும் தீ வருவதைக் கண்டான். தீ பெரிய நண்டு இரண்டு கைகளையும் விரித்து அணைக்க வருவதுபோல சூழ்ந்து வந்தது. அவன் ஓடுவதற்கு ஒருவழிதான். அங்கே அவன் வெட்டிக் குவித்திட்ட உடைமுள் சுள்ளிகள் ஆளுயரத்திற்கு, இருபதடி அகலத்திற்கு கோட்டைபோல் கிடந்தன.

அவன் தீயை தாவிக்கடந்து விடலாமா என்று பார்க்க ஒருபக்கம் போனான். ஆனால் தீ உறுமத்தொடங்கியிருந்தது. விறகுகள் வெடித்து தெறித்தன. எரிய எரிய மேலும் விறகை உண்டு அது பெரிதாகியது. அவனை விட உயரத்தில் தீக்கொழுந்துகள் எரிந்தன.

அவன் மறு எல்லைக்கு ஓடினான். அங்கு மேலும் வேகத்துடன் தீ வந்தது. அணைதிறந்த வெள்ளம் வருவதுபோல. ஒளியே இல்லாமல் கலங்கல் மழைநீர் போலத்தான் தெரிந்தது. அத்தனை விரைவாக அது அணுகிவிடும் என்று எண்ணியிருக்கவில்லை.

அவன் கவைக்கோலை எடுத்துக்கொண்டு ஓடினான். அதை ஓங்கி ஊன்றி எம்பித்தாவினான். ஆனால் கோல் சற்றே சாய்ந்ததனால் அவன் மேலே எழுந்து நேராக முள்ளுக்குள் சென்று விழுந்தான். தீயில் விழுந்ததுபோலத்தான் இருந்தது. உடலெல்லாம் பற்றி எரிய அவன் முள்ளில் கிடந்து துடித்தான். முள் மேலேயே நீந்தி தவழ்ந்து முள்ளில் மிதித்து எம்பிக்குதித்து அப்பால் செம்மண்ணில் விழுந்தான்.

புரண்டு எழுந்தபோது உடலெங்கும் முள் தைத்திருந்தது. அவனால் நிற்க முடியவில்லை. தள்ளாடி தள்ளாடி விழுந்தான். முள் தைத்த ரத்தம் மீது செம்மண்ணும் உடைமுள்ளின் சிறிய இலைச்சருகுகளும் ஒட்டியிருந்தன.

தீ மிகப்பெரிய உறுமலுடன் தன்னைத்தானே வான்நோக்கி உதறியபடி அலையடித்து பொங்கி எழுந்து வந்தது. அதன் ஓசை மிகப்பெரிய உறுமல் போல ஒலித்தது. அவன் தள்ளாடி நடந்து அருகே கிடந்த கழியை எடுத்து ஊன்றியபடி வெளியே சென்றான். சாலையில் இறங்கி செம்மண் புழுதியினூடாக நொண்டி நொண்டி நடந்தான்.

இரண்டு மூன்று இடத்தில் விழுந்து எழுந்து மீண்டும் விழுந்து அவன் குடிசையைச் சென்றடைந்தான். குடிசையில் யாருமில்லை. அவன் திண்ணையில் அமர்ந்தான். அமர முடியவில்லை. அங்கே நிறைய முள்கள் தைத்திருந்தன. உடலில் எந்தப்பகுதியையும் மண்ணில் வைக்க முடியவில்லை.

அவன் கண்களிலிருந்து கண்ணீர் பெருகிக்கொண்டே இருந்தது. பனம்படல் கதவை திறந்து குடிசைக்குள் நுழைந்தான். நிமிர்ந்து நின்றால் தலை இடிக்கும் பனையோலைக்கூரை. இருட்டு. அது ஒரு பெரிய முட்குவியல் என்று தோன்றியது, எந்த கணமும் பற்றிக்கொள்ளக்கூடியது

அவன் பானையிலிருந்து தண்ணீர் மொண்டு குடித்தபின் திரும்பி வந்தான். திண்ணையில் கையை ஊன்றியபடி முதுகை வளைத்து அசையாமல் நின்றான். உடல் முழுக்க தீப்புண்கள் பட்டதுபோல வலிகள் பரவியிருந்தன. தனித்தனியான வலிகள். ஒவ்வொன்றாக எண்ணிப்பார்க்கமுடியும் போல

எவ்வளவு நேரமாகியது என்று தெரியவில்லை. காலடி ஓசை கேட்டது. அவனால் திரும்ப முடியவில்லை “எட்டீ, கோமதியாட்டீ?”

கோமதிதான். அவள் அருகே ஓடிவந்து “அண்ணே, என்ன அண்ணே” என்றாள்.

“முள்ளிலே விளுந்துபோட்டேண்டீ…” என்றான் முத்து “எனக்க புட்டத்திலே இருக்க முள்ளையெல்லாம் பிடுங்கி எடுடீ”

“அய்யோ அண்ணே!”

“லுங்கிய களட்டு…. ஜட்டியை தாத்து முள்ளை பிடுங்குடீ”

அவள் அவன் ஜட்டியை தாழ்த்தினாள் “அப்டியே முள்ளா இருக்கு…அய்யோ”

“ஒண்ணொண்ணா எடு… என்னால உக்கார முடியாது… எடுடி”

அவள் முட்களை பிடுங்கி பிடுங்கி எடுத்தாள். முள்ளால் ஆழமாக குத்துவதுபோல வலித்தது. “ஆ, யம்மா யம்மா” என்று அவன் கூச்சலிட்டுக்கொண்டே இருந்தான்.

“அவ்வளவும் முள்ளு அண்ணா.”

“எல்லாத்தையும் எடு.”

அவள் “இன்னும் சின்ன முள்ளு நிறைய இருக்கு…” என்றாள்.

அவன் திரும்பி கையூன்றி அமர்ந்தான். மெல்ல உடலை நிமிர்த்திக்கொண்டான். முதுகெல்லாம் முள் தைத்திருந்தது. சாய முடியாது. “போயி அம்மாவ கூட்டிட்டுவாடி… ஓடு”

அவள் திரும்பி ஓடினாள். அவன் கண்களை மூடிக்கொண்டான். கண்களுக்குள் தீயின் அலைகள் தெரிந்துகொண்டிருந்தன.

அம்மா ஓடிவரும் ஓசை கேட்டுத்தான் அவன் நிலையுணர்ந்தான். அதற்குள் சற்றே தூங்கிவிட்டிருந்தான். அம்மா ஓடிவந்தபடியே “அய்யோ எம் மக்கா! எம் மக்கா!” என்று கூவினாள்.

அவனைக் கண்டதும் “என்னலே ஆச்சு? ஏலே என்னலே ஆச்சு?” என்று அவள் அலறினாள்.

சும்மா கெடந்து சலம்பாதே… முள்ளைப்பிடுங்கு.

“அய்யோ எம்பிடு முள்ளு… யம்மா. ”

“பிடுங்குன்னா…”

அவளும் கோமதியும் முட்களை பிடுங்க தொடங்கினார்கள்.

“ஏலே ரத்தம் வருதுலே.”

“நீ முள்ளை பிடுங்கு முதல்ல.”

அவள் அவன் முட்களை பிடுங்கும்போதே கண்ணீர் விட்டாள். மூக்கை உறிஞ்சும் ஓசை கேட்டுக்கொண்டே இருந்தது.

“ஏலே, எம்மக்கா, என்னலே ஆச்சு?”

அவன் ஒன்றும் சொல்லவில்லை.

“இதுக்காலே நீ பன்னெண்டாம் கிளாஸு வரை படிச்சே? வேண்டாம்லே. எங்கியாம் போயி வேலை பாரு… என்ன வேலைன்னாலும் செரி.”

“போனா வட்டிக்கு பைசா குடுத்தவன் விட்டிருவானா?”

“அவன் கடனை அடைக்கலாம்ல?”

“எங்க அடைக்குதது? இங்க இருந்தா கண்ணெதிருலே இருக்கோம்னு இருக்கும். கெளம்பிப்போனா அவனுக உன்னை வந்து பிடிப்பானுக. போன தடவை வந்தப்ப குட்டிய வீட்டுவேலைக்கு விடுன்னு ராமசாமி கேட்டாரு.”

“பரோட்டா கடைக்கு போறானுகளே.”

“போலாம், அதான் பேசினோம்ல? பேச்சியப்பன் என்ன சொன்னாரு? ரெண்டுவருசம் படுக்க எடமும் திங்கச்சோறும் மாசம் ஆயிரம் ரூவாயும்… போருமா? வட்டியும்கட்டி வச்சு பொளைப்பியா நீ? பரோட்டா மாஸ்டர் ஆகுறதுக்கு மூணுவருசமாவது ஆகும். அதுவரை பைசாவ கண்ணிலே பாக்கமுடியாது.”

“பின்ன என்னலே செய்ய?” என்றாள் அம்மா “அய்யோ எங்க பாத்தாலும் முள்ளா இருக்கே…யம்மா”

அவன் ஒன்றும் சொல்லவில்லை.. வலியை பல்லைக் கடித்தபடி பொறுத்துக்கொண்டு கிடந்தான். ஆனால் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது.

கோமதி பொறுமையாக முள்ளை பொறுக்கிக் கொண்டிருந்தாள்.

“இவ போன சென்மத்திலே கோளியாக்கும்” என்று முத்து சொன்னான்.

“போ” என்றாள் கோமதி.

அம்மா அந்த வேடிக்கைப் பேச்சால் கொஞ்சம் ஆசுவாசமானாள். “முள்ளை பொறுக்கி எடுடி… சின்னமுள்ளெல்லாம் ஊக்கு வச்சு எடுத்திரு… வேப்பெண்ணை இருக்கு. கொஞ்சம் மஞ்சளை சேத்து சூடு பண்ணி மேலாப்ல போட்டா செரியாயிரும்” என்று எழுந்து சென்றாள்.

கோமதி அவனிடம் மெல்ல “கறிவைக்க வைச்ச கோளி மாதிரி இருப்பே” என்றாள்

“அடி பின்னீருவேன்… “என்று அவன் சிரித்தான்.

அம்மா வேப்பெண்ணையை பூசிவிட்டாள். முதலில் கொஞ்சம் எரிந்தாலும் மெல்ல இதமாக அது உடலில் படர்ந்தது. பாயில் எண்ணை பரவியபோது அதில் முதுகை வைத்து படுக்க முடிந்தது.

“கஞ்சி குடிக்குதியாலே?”

“வேண்டாம்” என்று அவன் சொன்னான். தூக்கம் சொக்கிக்கொண்டு வந்தது. குடிலுக்குள் இருக்கும் இருட்டில் படுத்தாலே அவனுக்கு தூக்கம் வந்து அழுத்தும்.

அவன் தூங்கிக்கொண்டிருக்கும்போதே கோமதி மெல்ல ஊக்கால் முட்களை எடுத்துக்கொண்டிருந்தாள். அவன் அவளுடைய கையையும் ஊக்குமுனை உடலில் குத்துவதையும் உணர்ந்துகொண்டிருந்தான்.

“அம்பிடு முள்ளு… முள்ளு முள்ளா இருக்கு.”

“ஒண்ணொண்ணா எடு” என்று அம்மா சொன்னாள் “அவன் தலையெளுத்து இந்தமாதிரி…” பின்னர் நீண்ட பெருமூச்சுடன் “அவரு கண்ட சொப்பனமெல்லாம் நினைச்சா…” என்றாள். பின்னர் தானாகவே விசும்பி விசும்பி அழத்தொடங்கினாள்.

மாலையில் அம்மா அவனை மெல்லத் தூக்கி அமரச்செய்து அலுமினியக் கோப்பையில் கொஞ்சம் சாராயத்தை ஊட்டினாள்.

“என்ன இது?”

“கொஞ்சம்போல நாட்டுச் சாராயம்லே… சண்முகண்ணாச்சிகிட்ட வாங்கிட்டு வந்தேன். குடிச்சுட்டு சாப்பிடு… உறங்கி எந்திரிச்சா செரியாயிரும்.”

அவன் அந்த கசப்பை ஒரே மூச்சில் விழுங்கி உடலை உலுக்கிக் கொண்டான். அம்மா அவனுக்கு அகப்பையால் கஞ்சி ஊட்டினாள். முக்கால்வாசி குடிப்பதற்குள் அவனுக்கு குமட்டியது.

“அப்டியே படுத்துக்க” என்றாள் அம்மா

அவன் மணலில் ஆழ்ந்து ஆழ்ந்து புதைந்துகொண்டே சென்றான். மணலுக்குள் முட்கள் நிறைந்திருந்தன. அவை அவன் உடலுக்குள் நுழைந்தன. முட்கள் புழுக்கள் போல நெளிந்து நெளிந்து அவனை துளைத்தன.

நள்ளிரவில் விழித்துக்கொண்டபோது உடல் ஓய்ந்து கைகால்கள் செயலற்று கிடந்தன. ஆனால் நல்ல தாகம். அவன் கையூன்றி எழுந்து அமர்ந்தான். அருகே அம்மா செம்பில் நீர் வைத்திருந்தாள். அதை முழுக்க குடித்தான்.

மெல்ல நடந்து வெளியே சென்று குட்டைப்பனை அடியில் சிறுநீர் கழித்தான். பனை காற்றில் சீறிக்கொண்டிருந்தது. வானத்தில் ஒரு பெரிய நட்சத்திரம் நின்றது

காற்றில் இருந்த இளம்குளிர் அவன் உடலை சற்றே ஆறுதல்கொள்ளச் செய்தது. அவன் பனையைப்பிடித்தபடி சற்றுநேரம் நின்றான். ஆனால் மீண்டும் தூக்கம் வந்து இமைகள் சரிந்தன

அவன் தள்ளாட்டத்துடன் நடந்து வந்து படுத்துக்கொண்டான். உடலெங்கும் ஒரு வெம்மை பரவியிருந்தது. பல இடங்களில் சிறுபூச்சிகள் கடித்து ஊர்வதுபோல தோன்றியது. சில இடங்களில் ஊசிகள் போல உள்ளே இறங்கியது. சில இடங்களில் தேள்கடிகள். ஆனால் உடல் பாயில் படிந்து கண்கள் மூடின.

முற்றத்தில் யாரோ கூச்சலிடுவதைக் கேட்டு அவன் விழித்துக்கொண்டான். சாத்தூரானின் குரல். அவன் கையை ஊன்றி எழுந்து நின்றான். உடலெங்கும் மஞ்சளும் எண்ணையும் கலந்த பூச்சு. ஜட்டி மட்டும் போட்டிருந்தான். லுங்கி அப்பால் கிடந்தது.

அவன் அதை எடுத்து சுற்றிக்கொண்டு வெளியே சென்றான். சாத்தூரான் கூச்சலிட்டார். “தீய வச்சு கொளுத்திட்டு வந்திருக்கான்… மொத்தக்காடும் தீயாப்போச்சு… நல்லவேளை நேரா மேலே பொட்டலுக்கு போச்சு. அங்க மணலிலே அணைஞ்சுட்டுது… இல்லேன்னா இந்நேரம் போலீஸு புடிச்சிருக்கும் உன் மகனை”

“அவன் என்ன செய்வான்?

“என்ன செய்வான்னு எனக்கு தெரியாது. போனது எனக்க மொதலாக்கும்… எண்ணி பைசாவ வைக்கச் சொல்லு உனக்க மகனை”

“உடையோரே பைசா இருந்தா நாங்க ஏன் இங்க இருக்கோம்?”

“அது உனக்க பாடு… நான் விடமாட்டேன்… நான் இதுக்கு கணக்கு பேசி வாங்குவேன்”

“ஒடையோரே” என்று அம்மா கைகூப்பி அழுதாள்

அவன் வெளியே வந்து “நான் தீய வைக்கல்ல… அங்க போயி பாருங்க தீயி நம்ம தோட்டத்திலே வந்த தடம் தெரியும்… யாரு பாத்தாலும் தெரியும்”

“எந்ததடமும் வேண்டாம்லே… நீ பிடிச்ச பீடிதான்… ஏலே எனக்க பைசாவை எண்ணி வை… எண்ணி வைலே ஐயாயிரம் ரூபா”

“ஐயாயிரம் பைசா இருந்தா எடுத்திட்டு போங்க”

“நான் வாங்குதேன். பைசாக்கணக்கை நான் எண்ணி எண்ணி வாங்குதேன்… வெளையாட்டா? நெறைகாட்ட கொளுத்திவிட்டுட்டு பேச்சு பேசுதியா?”

அவர் டிவிஎஸ்50 ஐ கிளப்பிக்கொண்டு சென்றார். அம்மா கைகூப்பியபடி நின்றிருந்தாள். அவள் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது.

அவன் களைத்துப்போய் திண்ணையில் அமர்ந்தாள். அம்மா சட்டென்று திரும்பிப்பார்த்து “ஏலே எந்திரி… உடம்ப களுவிட்டு வேட்டிய கட்டு… சட்டைய போடு”

“எங்க போறம்?

“கெளம்புலே”

“டாக்டரை ஒண்ணும் பாக்கவேண்டாம்… செரியாப்போவும்”

“சொல்லுறத செய்லே” என்று அம்மா கூச்சலிட்டாள். மெலிந்து கருமையாகி உடைமுள் சுள்ளி போலவே இருப்பாள். அப்படியே பற்றி எரிந்துவிடுவாள் என்று தோன்றியது.

அவன் எழுந்து கொல்லைப்பக்கம் சென்றான். பல்தேய்த்துக் கொண்டிருக்கும்போதே அம்மா அலுமினிய குண்டானில் வெந்நீருடன் வந்தாள். பச்சைத்தண்ணீர் கலந்து அருகே வைத்தாள்.

அவன் அந்த நீரை எடுத்து உடல்மேல் விட்டுக்கொண்டான். வெந்நீர் ரணங்களின்மேல் பட்டபோது உடல் எரிந்து மெய்சிலிர்ப்பு வந்தது. ஆனால் நாலைந்து குவளை விட்டுக்கொண்டபோது மெல்ல உடல் குளிரத்தொடங்கியது. தோளிலும் முதுகிலும் தசைகள் துடித்துக்கொண்டிருந்தன

அம்மா வெளியே வந்து முகம் கழுவினாள். உள்ளே போய் அவளுக்கிருந்த ஒரே கிழியாத சேலையை உடுத்திக்கொண்டாள். கோமதியும் வெளியே வந்து முகம் கழுவினாள்.

அவன் குளித்து விட்டு சென்றபோது அம்மா “துண்ட வச்சு துடைக்காதே… ஒத்திக்கோ” என்று உள்ளிருந்து சொன்னாள்

அவன் வீட்டுக்குள் சென்றபோது அம்மா காக்கி பாண்டும் நீலச் சட்டையும் எடுத்து வைத்திருந்தாள்.

“வெள்ளைச்சட்டைய எடு” என்றான் “காக்கி பாண்டுக்கு நீலச்சட்டையா?”

“எல்லாம் போரும்… வெள்ளைச்சட்டை போட்டாக்க ரத்தம் பட்டிரும்”

“அப்ப நீல பாண்ட எடு”

“அது ரொம்ப சின்னதுலே… பாத்தேன்”

அவன் ஒன்றும் சொல்லவில்லை. காக்கிபாண்ட் கூட சின்னதுதான். சந்தையில் இரண்டாம் விலைக்கு வாங்கியது. ஆனால் கீழே இறக்கிப் போட்டுக்கொள்ளலாம். இடுப்பு நல்ல அகலமானது.

அவன் பாண்டையும் சட்டையையும் போட்டுக்கொண்டான். அம்மா பழைய சோற்றில் உப்பு போட்டு போணியில் கொண்டுவந்து வைத்தாள். “குடிச்சுக்க… அங்க போக நேரமாவும்.”

“எங்க போறம்?”

அம்மா ஒன்றும் சொல்லவில்லை. அவள் சொல்ல மாட்டாள் என்று தெரிந்தது.

அவள் படலை இழுத்து மூடிவெளியே வருவதுவரை கோமதி தலையைச் சீவிக்கொண்டிருந்தாள்.

“என்னடி அங்க சிங்காரிக்கே? போதும் வா” என்றாள் அம்மா.

“சிக்கு” என்றாள் கோமதி.

“காட்டிலே கெடந்தா முடி அப்டித்தான் இருக்கும்… எண்ணை வச்சியா?”

“இருந்த எண்ணைய அவனுக்கு பூசிவிட்டே.”

முத்து “அப்ப என்மேலே தலைய வச்சு தேச்சிருக்கலாம்ல?” என்றான்.

“போடா.”

அம்மா முன்னால் சென்றுவிட்டாள். அவர்கள் இருவரும் சேர்ந்து நடந்து பின்னால் சென்றார்கள். கோமதி ரகசியமாக “எங்க போறம்?” என்றாள்.

“தெரியல்ல” என்றான் “கேட்டா கடிக்க வாறா.”

முப்பது இ பஸ் வருவதற்காக காத்து நின்றார்கள். சாமியப்பா சைக்கிளில் போகும் வழியில் “என்ன குட்டி, பிள்ளைகளோட ஊர விட்டு ஓடுதியோ? கடன்காரன் அங்க தேடிவருவான்லா?” என்றார்.

அம்மா பல்லை மட்டும் கடித்தாள்.

பஸ் வந்தது. கூட்டமே இல்லை. அவர்கள் அமர்ந்துகொள்ள இடம் கிடைத்தது. சன்னலோரம் கோமதி பாய்ந்து அமர்ந்தாள். அவனுக்கும் அப்படி கூட்டமில்லாத பஸ்ஸில் சாலையோரம் பார்த்துக்கொண்டு போவது பிடித்திருந்தது. பஸ்ஸில் இருந்து பார்த்தால் உடைகாடுகூட அழகாகத்தான் இருக்கிறது.

பஸ் ஸ்டாண்டில் இறங்கி ராதாபுரம் போகிற பஸ்ஸில் ஏறினார்கள். சமூகரெங்கபுரம் தாண்டியதுமே அம்மா எழுந்துகொண்டாள்.

“எய்யா, சீலாத்திகொளம் எங்க எறங்கணும்?”

“அடுத்த ஸ்டாப்பு” என்றார் கண்டக்டர்.

சீலாத்திக்குளத்தில் அவரே விசில் அடித்து “சீலாத்திக்குளம்!” என்றார்.

அவர்கள் இறங்கியதும் “இங்க ஆரு?” என்றான்.

“இங்க ஒரு ஆளு உண்டு… வாங்க” என்று அம்மா சொன்னாள்.

ஊருக்குள் செல்லும் வழியின் இருபக்கமும் காகிதமும் பிளாஸ்டிக்கும் குப்பை மலைகளாக குவிந்திருந்தன. உடைமுள் புதர்களில் பிளாஸ்டிக் உறைகளும் பழைய துணிகளும் சிக்கி காற்றில் அதிர்ந்து கொண்டிருந்தன. ஊருக்குள் செல்லும் பாதை நடுவே சிமிண்ட் போட்டிருந்தார்கள் போல. அது உடைந்து மீண்டும் மண்சாலையாக ஆகியிருந்தது.

எதிரே வந்த கிழவரிடம் “எய்யா, இசக்கியப்பன் வீடு ஏது?”

“ஆரு, பாம்பேக்காரரா?”

“ஆமா.”

“அந்தா புதிய மஞ்சபெயிண்டு வீடு… பைக்கு நிக்குதுல்லா?” என்றார்.

அந்த வீடு கட்டி முடியவில்லை. ஒருபக்கம் செங்கல் தெரிந்தது. ஆனால் முன்பக்கம் மஞ்சள் டிஸ்டெம்பர் அடித்து புதிய பெட்டி போல தெரிந்தது. சற்று பெரிய வீடுதான். வீட்டின் நிலைவாயில் முகப்பில் செவ்வந்தி ஆரம் போடப்பட்டிருந்தது. இரண்டுநாள் பழைய ஆரம். மாவிலைத் தோரணம் காய்ந்திருந்தது. நிலைகள்மேல் குங்குமமும் சந்தனமும் கலந்து பொட்டு போட்டிருந்தனர்.

அம்மா முற்றத்தில் நின்று “அய்யா…அய்யா!” என்றாள்.

“ஆரு” என்றபடி உள்ளிருந்து தடிமனான பெண் வந்தாள். நீலநிறத்தில் புதிய பாலிஸ்டர் புடவை கட்டி பூ வைத்திருந்தாள். “ஆரு?”

“நான் லெச்சுமி…நடுவாக்குறிச்சி லெச்சுமி”

அவள் முகம் மாறியது. “வாங்க” என்று மெல்ல சொன்னாள்.

“அவுக இருக்காகளா?” என்று கேட்டபடி அம்மா படி ஏறினாள் “வாங்க…வாலே” என்றாள்.

அவர்கள் செருப்பை முற்றத்திலேயே கழற்றிவிட்டு உள்ளே நுழைந்தார்கள். கூடத்தில் நாலைந்து பிளாஸ்டிக் செயர்கள் போடப்பட்டிருந்தன. தரையில் மொசைக் போட்டிருந்தது. அதில் உள்ளே ஈரம் காயாததுபோல குளுமை இருந்தது. அந்த அறையில் சுண்ணாம்பு வாசனை நிறைந்திருந்தது. மேலே ஒரு ஃபேன் சுற்றியது. ஒரு கலர் டிவி ஓடிக்கொண்டிருந்தது.

“அவுகள பாக்கணும்” என்று அம்மா சொன்னாள்.

“எதுக்கு?”

அம்மா ஒன்றும் சொல்லவில்லை.

“உறங்குதாக… விளிக்கேன்.”

அவள் உள்ளே செல்ல அம்மா கைகளை மார்பின்மேல் கும்பிடுவதுபோல வைத்தபடி நின்றாள்.

உள்ளே என்னவோ பேச்சுக்குரல்கள் கேட்டன. ஒரு பையன் வெளியே வந்து அவர்களை பார்த்தான். கோமதியின் வயது இருக்கும். அவர்களை மாறிமாறி பார்த்தபின் உள்ளே சென்றான்.

சுடிதார் போட்ட ஒரு பெண் வெளியே இருந்து உள்ளே வந்தாள். கையில் இருந்த ராணி வார இதழை பிளாஸ்டிக் நாற்காலிமேல் போட்டுவிட்டு அவர்களை பார்த்து “ஆரு?” என்றாள்.

“அவுகளை பாக்கணும்” என்றாள் அம்மா.

அவள் “சொல்லுதேன்” என்று உள்ளே போனாள். அவள் மாந்தளிர் நிறச் சுடிதார் அணிந்திருந்தாள். தலைமயிரை தளர்வாக கோதி பின்னால் சரித்திருந்தாள். அவள்முன் அப்படி பழைய சட்டையுடன் நிற்க முத்து கூசினான்.

கோமதி ரகசியமாக “மாம்பழக்கலர் சுடிதார்ணே” என்றாள்.

“ம்” என்றான் முத்து

உள்ளிருந்து சற்றே தொப்பை போட்ட கருப்பான உயரமான ஒருவர் வெளியே வந்தார். கண்களைச் சுருக்கியபடி அம்மாவைப் பார்த்தார். அம்மா வந்திருப்பது அவருக்குத் தெரிந்திருந்தது, ஆனாலும் நேரில் பார்த்தது அவருக்கு அதிர்ச்சியை அளித்ததை காணமுடிந்தது.

அம்மா “நான் லெச்சுமியாக்கும். நடுவாக்குறிச்சி லெச்சுமி” என்றாள்.

“ம்” என்றபடி அவர் நாற்காலியில் அமர்ந்தார்.

“பாக்கணும்னு வந்தேன். இது எனக்க மகன், இது மக. லே கும்பிடுலே.”

முத்து கும்பிட்டான். கோமதி அவன் பின் மறைந்து நின்றாள்.

“நீ இப்ப நடுவாக்குறிச்சியிலேயா இருக்கே?”

“அங்க என்ன இருக்கு? இவனுக்க அப்பன் கூட செங்காட்டுக்கு போயாச்சு… கருவாக்குளத்துக்கு பக்கத்திலே காட்டிலே குடிசை… பனையேறி ஒருமாதிரி  தேறிவாற நேரத்திலே…”

அம்மாவால் பேசமுடியவில்லை. அவர் “ம்” என்றார்.

“இப்ப நடுத்தெருவிலே நிக்கேன்… ஆஸ்பத்திரிச்செலவுக்கு வாங்கின கடன் அந்தால வட்டியோட வளர்ந்துபோச்சு. மூணாளும் கூலிவேலை செய்தாலும் வாளமுடியல்ல.”

அவர் அசைந்து அமர்ந்தார். அந்தப்பக்கமாக பார்த்தார். அங்கே அவர் மனைவி வாசலுக்கு அப்பால் நின்றிருந்தாள்.

“என் பய பன்னிரண்டாம் கிளாஸ் பாஸாக்கும்… கரையேத்தி விடணும்… கைபிடிச்சு கூட்டிட்டு போகணும். எனக்கு ஆருமில்லை… எனக்கு வேற  ஆருமில்லை தொணை”

“நான் வேணுமானா…”

“இவனையும் பாம்பேய்க்கு கூட்டிட்டு போங்க… எங்கியாம் சேத்துவிடுங்க”

“பாம்பேயிலே நான் பரோட்டா கடையாக்கும்.”

“அதிலே வச்சுகிடுங்க…” என்று அம்மா சொன்னாள் “இங்க பரோட்டாக்கடைக்கு போலாம்னா மூணுவருசம் ஒண்ணும் குடுக்க மாட்டாக… வீட்டுக்கு அவன் மாசம் ஒரு நாலாயிரம் ரூபா அனுப்பணும்… இல்லேன்னா கடன்காரனுக என்னையும் என் மகளையும் கொன்னுபோடுவானுக.”

அவர் அமைதியிழந்தார். எழுந்து அசைந்து அமர்ந்து “நீ நினைக்கிற மாதிரி இல்ல… பாம்பேயிலே ரொம்ப கஷ்டமாக்கும்” என்றார்.

“இங்க படுத கஷ்டம் அதுக்கும் மேலே.”

“நான் சொல்லுகத கேளு… இங்க நான்—”

அம்மா சட்டென்று அவன் சட்டையை பிடித்து மேலே தூக்கினாள் “பாருங்க…. இந்த உடம்ப பாருங்க… முள்ளு. அம்பிடும் முள்ளு… நார்நாரா கிளிஞ்சிருக்கு உடம்பு. புலியடிச்ச மாதிரி… அடிச்சது அந்த மண்ணு. அந்த மண்ணாக்கும் புலி. அது என் பிள்ளைய கொன்னு தின்னிரும்… என் பயல காப்பாத்துங்க.”

அவர் திகைப்புடன் அவன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 15, 2022 11:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.